LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, June 10, 2025

விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விலகியிருந்து பார்க்கக்

கிடைக்கும் வெற்றி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல்,
ஒரு கணத்தில் உடைந்த கண்ணாடியை
மீண்டும் ஒன்றாக்கிவிடும் புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை
வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம், ஆங்காரப் புழுதிப்புயல் –
இன்னும் ஏராளமானவற்றோடு
வெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக்கொண்டவாறு சிலபலர்…..
பெற்றெடுத்த பிள்ளையாய்த் தத்தெடுத்து
முத்தம் கொடுக்க
அல்லது குற்றேவல்காரராய் பாவித்து
எத்தித் தள்ள.
இவர்களுடைய குரல்வளைகளிலிருந்தெல்லாம் இடையறாது துருத்திக்கொண்டு வெளிக்கிளம்பும்கால்களின் வளைநகங்கள் கத்தியைக் காட்டிலும் கூர்மையானதும்,
கொடிய விடந்தோய்ந்ததுமாய்….
வரலாற்றுச் சின்னமொன்றின் வயிற்றுப்பகுதியில்படிந்திருக்கும் சில ஒட்டுண்ணிகள்,
வெவ்வேறு ஊடகங்களில் வாகாய்த் தெரியும்படியாக……
.
அன்புமழையில் குளிப்பாட்டுவதாய்
ஜன்னியில் தள்ளிப் பிதற்றச் செய்து
சுரவேக உளறல்களையெல்லாம் பொன்மொழிக்கையேடுகளாக்கி
பெரிய பெரிய அச்சுருக்களில் சமூக வெளிகளெங்கும்
அமோகமாய் அப்பளம் சுட்டு வடை பொரித்து
வெற்றியாளருக்கு
நெட்டி முறித்து திருஷ்டி கழித்து
காலின் கீழ் குழிபறிப்பவைகளுமாக
விறுவிறுவென இயங்கிக்கொண்டிருக்கின்றன வேறு சில.
வருடாவருடம் தண்ணித்துறை மார்க்கெட் கடையில்
கதை கட்டுரை கவிதைப் போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கான
பரிசுகளைத் தயாரிக்கச் சொல்லி முன்பணம் கொடுக்கச் செல்லும் நேரம்
சின்னதும் பெரியதுமாய் அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்பைகளின்
மங்கிக்கொண்டே போகும் தங்கமுலாம்…….
விற்பனையாகாமலே தங்கிவிட்ட விதவிதமான வடிவங்களிலான
பதக்கங்கள் ஷீல்டுகளைப் பார்க்கநேரும் தருணங்களில்
பெறக் கிடைக்கும் போதிமரத்தடி வாசத்தில்
வீசும் தென்றலினூடாய் வெகுதொலைவில்
செல்ஃபி சகிதம் சுற்றுமுற்றும் பார்த்தபடியே
வெற்றியாளர்களைச் சேர்த்தணைத்து இன்னும் இறுக்கமாய்ப்பற்றிக்கொள்வதில்
முற்றிலுமாய்த் தம்மை யிழந்து
மும்முரமாய், மூழ்கிக்கொண்டிருப்பவர்கள்
மங்கலாய்த் தெரிகிறார்கள்.

SHAKESPEARE SAYS......

 SHAKESPEARE SAYS.....













Wednesday, June 4, 2025

THUGLIFE அல்லாத சாதா வாழ்க்கையிலிருந்து சில கேள்விகள்

 THUGLIFE அல்லாத

சாதா வாழ்க்கையிலிருந்து

சில கேள்விகள்

கேள்வி - 1



நினைப்புதான் வாய்வார்த்தையாக வெளிவருகிற தென்றாலும் நினைப்பு வார்த்தையென்றான பின் அதன் பொருள்பெயர்ப்பு கேட்பவர்களுக்கானதாகி விடுகிறதல்லவா?

இன்னொரு வகையில் பார்த்தால், வார்த்தைகள் வழியாக எண்ணத்தைக் கட்டுடைத்துக் காணவும் வழியுண்டல்லவா?

கேள்வி - 2

THUGLIFE அல்லாத சாதா வாழ்க்கையிலிருந்து
கேள்வி - 2
அன்பு ஒருபோதும் மன்னிப்புகோராதா?
(LOVE NEVER APOLOGIZES) ?
இது என்ன புதுக்கதை?
ஒருவேளை THUGLIFE வாழ்வுக்கோட்பாடுகள் சாமானியர்களுக்குப் புரியாதோ என்னவோ. நமக்குத் தெரிந்ததெல்லாம் -
அன்பே சிவம்
*
கேள்வி - 3, 4, 5.......
சர்வம் THUGLIFE மயம்!


வெகுஜனப் பத்திரிகையாளர்கள் முதல் நவீன தமிழ் எழுத்தாளர்கள் வரை THUGLIFE படம் குறித்த ஆய்வலசல்களில் மும்முர மாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் களே - ஏன்?

அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்காரம் பற்றியெல்லாம் இப்படி அகல்விரிவான ஆய்வல சல்கள் நடக்கவில்லையே - ஏன்?

பிரம்மாண்ட மேடையில் அரங்கேற்றப்பட்ட THUGLIFE பாடல்களெல்லாம் திரு. ரஹ்மானின் முந்தைய சில பாடல்களின் அப்பட்டக் கலவையாய். ஆனால், அதைப் பொருட்படுத்தா மல் ஏராளம் பேர் அந்தப் பாடல்களை ஓஹோ வெனப் புகழ்கிறார்களே - ஏன்?

படத்தின் ட்ரெயிலரைப் பார்க்கும்போது அது நாயகன்’ படத்தின் நீட்சியாகவே தெரிகிறது. 40 வருடங்களுக்கு முன்பு ஹாலிவுட் படங்களில் படபடபடவென்று ’மெஷின் கன்’களை வைத்துச் சுட்டுக்கொண்டிருப்பவர்களை இவர்கள் இந்தியா விலும் தமிழகத்திலும் உருவாக்கி அயல்நாட்டுக் கும் ஏற்றுமதி செய்து காசு பார்க்கிறார்கள். அரைத்த மாவையே அரைத்து கோடிகளில் சம்பா திக்கும் திறன் பாராட்டுக்குரியதாவது ஏன்?

THUG - THUGLIFE - 

ROMANTICISING VIOLENCE  

IN THE NAME OF ART?

Meaning of THUG in English a man who acts violently, especially to commit a crime: Some thugs smashed his windows. Synonyms. goon (CRIMINAL) mainly US informal. hoodlum old-fashioned

*

"THUG LIFE" is a term that originated in hip-hop culture, popularized by Tupac Shakur, and refers to a determined and resilient attitude to succeed despite facing adversity, particularly in the context of marginalized communities. It's not necessarily about violence or crime, but rather a philosophy of self-reliance and fighting for what one believes in. Some interpretations of "thug life" also include the idea of overcoming obstacles and building oneself up from nothing. 

மேற்கண்ட எந்த அர்த்தத்தை எடுத்துக்கொண்டா லும் -

வன்முறையை, சட்டமீறலை ROMANTICIZE செய் யும் வழக்கம் திரைத்துறையைப் பீடித்திருப்பது ஏன்?



தேடித்தேடி இளைத்தேனே…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தேடித்தேடி இளைத்தேனே……

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மூக்குத்தியம்மனோ நெத்திச்சுட்டி அம்மனோ
இக்கணம் என் முன் வந்து
வரமருள்வேன் கேள் என்றால்
தரச்சொல்லிக் கேட்பேன் _
தன் மனதிற்குள் தினந்தினம் பல்கிப்பெருகி
விரிந்துகொண்டேபோகும்
திக்குத்தெரியாத காட்டில் ஒரு
ஏழைக் கவியென்றாலும்
உண்மைக் கவி
தன்னந்தனியாய் அலைந்தபடி
இல்லாத கடற்கரையில் இறைந்துகிடக்கும்
கிளிஞ்சல்களை
குனிந்து எடுத்து வானம் நோக்கி உயர்த்தி
அழகுபார்க்கும் நேரம்
அவர் கண்களில் மினுங்கும் மகிழ்ச்சித்துணுக்குகள்
ஒவ்வொன்றும்
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த
புராதனப் பொருட்களாய்
மிகப்பெரிய பொருளீட்டித்தரவேண்டும்
அவர்க்கு.

அடிவருடிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவருடிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவர் சொன்னார் அப்படி
இவர் சொன்னார் இப்படி
எப்படி சொல்லியிருக்கிறார் பார்த்தாயா
என்னமாய் சுட்டிக்காட்டியிருக்கிறார் கேட்டாயா
கேட்பாயா மாட்டாயா
கேட்டால் உய்வாய்
கேட்காவிட்டால் உன்னுடையது பொய்வாய்
என்று சந்நதம் வந்தாற்போல்
நாலாந்தர விளம்பரப் பாடலாய்
ஆலாய்ப் பறந்தபடி
இன்னுமின்னுமாய் ’ஜய்ஞ்ஜக்’ தாளம் தட்டிக்கொண்டேயிருந்தவரிடம்
Silly’ ஆக இருந்தாலும் பரவாயில்லை
சுயமாய் உங்களுக்கே ஏதாவது தோன்றி
நீங்களாக ஏதாவது சொல்லும் நாளில்
சொல்லியனுப்புங்கள்
சாக்லேட் வாங்கி வந்து நான் செவிமடுக்கிறேன்
சண்டைபிடிக்கிறேன்
அல்லது சிலாகிக்கிறேன்
என்று சுருக்கமாக விடைபெற்றுக்கொண்டு
என் வழியே நடக்க ஆரம்பிக்கிறேன்
என் சீடரும் குருவுமாகிய நான்.

வியாபாரம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வியாபாரம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கமர்கட் வண்டிக்காரர் முதல்
கருப்பு வெல்வெட்டாய் ஜொலிக்கும் இறக்குமதிக் கார்காரர் வரை
தினமும் கடைதிறக்கத் தவறாத சந்தை யிது.
அவரவர் சக்திக்கேற்ப கடைக்கான அலங்கார விளக்குகளும்
விற்பனைப் பொருட்களும்.
‘அத்தனையும் தரமானவை’ என்ற வாசகம் தவறாமல் இடம்பெற்றிருக்கும்
சின்னதும் பெரியதுமான எழுத்துகளில்.
சமயங்களில் அதே பொருளைத்தரும் வேறு வேறு சொற்களைக்கொண்ட வாசகங்கள் இருக்க வழியுண்டு.
சில கடைக்காரர்கள் முந்தைய இரவு பார்த்த மெகா தொடரின் தாக்கத்தில்
ரகசியமாக தெருமுனை பில்லி சூனிய ஆசாமியிடம் சென்று
குறைந்தபட்சம் 500 ரூபாய் தண்டம் அழுது
தகடு வாங்கிவந்து
தன் கடையிலிருந்து ஐந்தாவதாக இருக்கும் கடையில்
எப்படியாவது கொண்டுபோய்வைத்துவிடுகிறார்கள்.
அவர் அப்படிச் செய்வதை பின்னோடு சென்று பார்ப்பதே
வேலையாக இருப்பவர்கள்
அடுத்த நாளே அதை தவறாமல் அம்பலப்படுத்திவிடுகிறார்கள்.
பொருள் வாங்கக் கடைவாசலில்
கூட்டங்கூடியிருப்பதாய்
நாளுங்காணும் மாயத்தோற்றம் நிஜமாகும் நாட்கள்
நிறைவாழ்வுத்தருணங்கள்.
அவற்றையும் போலச் செய்து போலி செய்து
பலரும் காண வாகான இடத்தில்
‘பச்சக்’ என்று போஸ்டர் ஒட்டி
பெருமைகொண்டு பிரமையிலுழல்வாரும் உண்டு.
மெய்யாகவே தரமான பண்டங்களை விற்கும் கடைகளுக்கு
அவ்வப்போது தாமே தயாரித்த அளவுகோல்களையும்
தரநிர்ணயங்களையும் கொண்டுவந்து
உருட்டி மிரட்டுவதாய் ஒரு பார்வை பார்த்து
ஒரு கூழைக்கும்பிடோ சிறிய பெரிய மாமூலோ
கிடைக்காத கோபத்தில்
சில்லறை வியாபாரம் என்றால் பொறுத்துக்கொள்ளலாம்
ஆனால் இப்படி சில்லறைத்தனமான வியாபாரம் செய்தால்?’
இல்லாத ஆன்மா வேசத்துடன்
அங்கலாய்த்து
அங்கே இங்கே சில மொட்டைக் கடுதாசிகள் அனுப்பி
மேற்படி நல்ல கடைகளை செல்லாக் கடைகளாக மாற்றும்
பிரயத்தனமே தம் மூலதனமாகக் கொண்ட
மொத்த வியாபாரிகளும் கைசுத்தமானவர்களே
அவரவர் செய்யும் கலப்படங்களில்.
அலப்பறைகளுக்கப்பால்
கருமமே கண்ணாய் வியாபாரம் செய்பவர்களுக்கு
செய்யும் தொழிலே தெய்வம்.

ஊருக்கு இளைத்தவர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஊருக்கு இளைத்தவர்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவ்வப்போது சிலர் விலகிச் செல்வர்;
சிலர் விலக்கப்படுவர்;
சிலர் புதிதாகச் சேருவார்கள்;
சிலர் சேர்க்கப்படுவார்கள்.
என்றபோதும் _
உண்மையாகவே ஊருக்கு இளைத்தவர்கள்
என்று
எப்போதுமே சிலர் உண்டு.
இந்தப் பிரிவில்
இளைத்தவர்கள் என்ற பெயரில்
கொழுத்தவர்கள் சிலரும்
இடம்பிடித்துக்கொள்வார்கள்.
பின்
உண்மையான இளைத்தவர்களை
கொழுத்தவர்களாக்கிக் காட்டுவதற்காக
சளைக்காமல் களைக்காமல்
உத்திகளை வகுப்பார்கள்.
சித்தரிப்பார்கள் சில
இறந்தகாலங்களை.
எனில்,
உண்மையான ஊருக்கு இளைத்தவர்கள்
எகத்தாளத்திற்கும் எட்டியுதைத்தலுக்கும் வாகான
இளைத்தவர்களாகவே _
ஒருகாலத்தில் ’ஜோல்னாப்பை’யர்களாகக் காண்பிக்கப்பட்ட படைப்பாளிகள்
இன்றும் ஜோல்னாப்பையர்களாகவே இருப்பதுபோல்.

நானொரு முட்டாளுங்க….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நானொரு முட்டாளுங்க…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில்
சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும்
வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல்
பலநேரமும்…….
மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில்
தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே
அதிகம் என்றால்
புள்ளிவிவரங்களைக் கொண்டுவா என்பவர்கள்
தமிழ்நாடே எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும்தான்
திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.
.விரும்பும்வகையில் வாக்கியங்களை
வெட்டித்தட்டி
இட்டுக்கட்டிச் செய்யப்படும் ’எடிட்டிங்’ வேலைகளில்
எகிறும் ’டிஆர்பி’ ரேட்டிங்குகள்.
அது பொய்யில்லையா என்றால்
வாய்மை எனப்படுவது யாதெனில்
என்று வள்ளுவரை அந்தரத்தில்
தொங்கவிடுவார்கள்…..
பேருக்கு இரண்டு மூன்று தலைகள்
உருண்டால்தான் என்ன?
தன் காரணமாக என்றால் தியாகம் எனவும்
தன்னிகரற்ற வீரம் என்றும்
இன்னொருவர் காரணமெனில்
இரக்கங்கெட்ட கொலையென்றும்
வானத் தாரகைகளையும் சாட்சிக்கு அழைத்து
சத்தியம் செய்ய முடியாதா என்ன?
விண்மீன்கள் வரவில்லையெனில்
ஏலியன்கள் விழுங்கிவிட்டதாகச்
சொல்லிவிட்டால் போயிற்று.
பரபரப்பாக இங்கே எதையாவது
சொல்லிவிடத் தெரியவேண்டும்.
பொய்யா மெய்யா என்று
நாக்கு மேலே பல்லப் போட்டு கேட்கத்
துணிபவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.
பட்டென்று பொட்டிலொரு தட்டுதட்டினால்
போதும்.
ஏகவேலையிருப்பதாய்,
எக்குத்தப்பான கேள்விகளுக்கு பதிலளித்து
நேரத்தை விரயம் செய்யப் பிடிக்கவில்லை
யென்பதாய் , எத்தனைக்கெத்தனை
கிராக்கி காட்டிக்கொள்கிறோமோ
அத்தனைக்கத்தனை அறிவுசாலியாகப்
பகுக்கப்படும் சாத்தியப்பாடு அதிகம்.
அப்படியும் எவரேனும் தர்க்கித்தால்
அவர் சாதியைச் சொல்லி வசைபாடினால்
முடிந்தது விவகாரம்.
முடிந்துவிடுவதில்லை அதிகாரத்தின் உறவு _
அரியணையோடு மட்டும்.
எட்டும் வரை பட்டறிவு பார்த்ததில்
ஒரே சாதியென்றாலும் முதலாளியும் சேவகரும்
சமமாய் அமர்ந்துகொள்ள முடிவது
சினிமாத் தியேட்டரில் மட்டுமே.
அதாவது வேறு வேறு வரிசையிலுள்ள
இருக்கைகளில்.
வர்க்கம் என்ற சொல் வெறும் இன்னொரு கெட்டவார்த்தையாக்கப்பட்டுவிட்டது.
வெளியே சொன்னால்
”மரியாதை கெட்டவன்
மனிதர்களை மதிக்கத் தெரியாதவன்
நீயென்ன பெரிய இவனா
நாயாண்டி பேயாண்டி
‘க்ரா’ப்பாண்டி ’டூப்’பாண்டி
நக்கிப்பிழைப்பவன், பொய்யைக்
கக்கிக்கொண்டிருப்பவன்
நயத்தக்க வார்த்தைகள் இவை
நான் பேசும் விதத்தில் பேசினால்
நாண்டுகிட்டு சாவாய் நீ
யிருந்துதான் ஆகப்போவதென்ன?” _
யென ஆரம்பித்துப்
பண்பாளர்களாய்த் தம்மைத்தாம்
முரசறைந்து பிரகடனப்படுத்திக்
கொள்கிறவர்களிடமிருந்து
கிளம்பும் நரகல் நச்சு நாராசச் சொற்கள்
காறித்துப்பிக்கொண்டேயிருக்கும்.
விளம்பி மாளாது;
வித்தகமும் போதாது……
குரல்வளைக்கு வெளியே
தெறித்துவிட்டது கையளவு…..
அதுவும்கூடக் குத்தம்;
வாய்மூடிக்கொண்டிருப்பதே உத்தமம்
என்பீர்களெனில்
அப்படியே ஆகட்டும் –
தங்கள் சித்தம்.