தேடித்தேடி இளைத்தேனே……
இக்கணம் என் முன் வந்து
வரமருள்வேன் கேள் என்றால்
தரச்சொல்லிக் கேட்பேன் _
தன் மனதிற்குள் தினந்தினம் பல்கிப்பெருகி
விரிந்துகொண்டேபோகும்
திக்குத்தெரியாத காட்டில் ஒரு
ஏழைக் கவியென்றாலும்
உண்மைக் கவி
தன்னந்தனியாய் அலைந்தபடி
இல்லாத கடற்கரையில் இறைந்துகிடக்கும்
கிளிஞ்சல்களை
குனிந்து எடுத்து வானம் நோக்கி உயர்த்தி
அழகுபார்க்கும் நேரம்
அவர் கண்களில் மினுங்கும் மகிழ்ச்சித்துணுக்குகள்
ஒவ்வொன்றும்
அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த
புராதனப் பொருட்களாய்
மிகப்பெரிய பொருளீட்டித்தரவேண்டும்
அவர்க்கு.

No comments:
Post a Comment