LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 2, 2022

AMAZON - KINDLE DIRECT PUBLISHING இல் என் சமீபத்திய நான்கு கவிதைத்தொகுப்புகளை ( கிண்டில் மின் நூல் வடிவில்)

. AMAZON - KINDLE DIRECT PUBLISHING இல் என் சமீபத்திய நான்கு கவிதைத்தொகுப்புகளை

( கிண்டில் மின் நூல் வடிவில்)

1. உள்வெளி

2. எதிர்வினை


3. வரியிடைவரிகள்

4. குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு

ஒரு நடிகையின் விடுதலை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு நடிகையின் விடுதலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன
குட்டைப்பாவாடை
அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு
அடிக்கடி கீழ்ப்பகுதியை
இழுத்துவிட்டுக்கொண்டாள்
அப்படிச் செய்யாதே என்று அம்மா
அடிக்காத குறையாய் கண்களால்
உருட்டி மிரட்டினாள்.
அந்தப் பிரமுகர் சிறுமியை இழுத்து
மடியில் அமர்த்திக்கொண்டு
மார்போடணைத்தது
சிறுமிக்கு அறவே பிடிக்கவில்லை
அழுகையழுகையாய் வந்தது.
அவளுக்குக் கூச்ச சுபாவம் என்று
மகளின் அழுகையை மிகப்பிழையாய்
தெரிந்தே பொருள்பெயர்த்தாள் அம்மா.
அத்தனையோரமாய் மாராப்பை ஒதுக்கிக்
கொள்ளச் சொன்னது
ஆறா அவமானமாய் மனதை அழுத்தியது
அந்த வளரிளம்பெண்ணுக்கு.
அந்த நடிகையைப் பார் என்றார் அம்மா
அவளும்தானே பாவம் என்றாள் மகள்.
”அந்த ஊரில் நடந்ததைக் கேள்விப்பட்டாயல்லவா
அம்மணமாய்க் கிடந்தாள் அந்தப் பெண்”
”அய்யோ எத்தனை அவமானப்பட்டிருப்பாள் அவள்
அய்யோ.... அய்யய்யோ...”
_ ஆற்றமாட்டாமல் அழத்தொடங்கினாள் மகள்.
அவசர அவசரமாய் அந்தக் கேவலைப்
படம்பிடித்துக்கொள்ளும்படி இயக்குனரிடம்
பணிவாய் வாய்மேல் கையைக் குவித்தபடி
ஆலோசனை வழங்கிய அம்மா
பின்னாளில் க்ளைமாக்ஸ்’ காட்சிக்கு உதவும்
என்றதை
அங்கிருந்த அனைவருமே சிலாகித்தார்கள்.
சாராயமல்லவா மனிதர்களை சீர்கெடுக்கிறது
என்று சுட்டிக்காட்டிய அம்மாவிடம்
சீமைச்சரக்குகளை விட்டுவிட்டாயே அம்மா
என்று மகள் வேடிக்கையாகவா சொன்னாள்?
'அத்தனை நெருக்கமாக நடிக்கமாட்டேன்' என்று
அடம்பிடித்த மகளிடம்
'படுக்கையறைக் காட்சியல்லவா, புரிந்துகொள்'
என்றாள் அம்மா.
பழகிய அழுகிய வாடை மனதில் குமட்ட,
ஒரு நாள் உண்மையான காதல் கிட்டும்போது
உடல்நெருக்கம் மரத்துப்போயிருக்குமோ என்ற
வருத்தம் முட்டியது மகள் மனதில்.
மறுபடியும் ஒரு படத்தில் நடிக்கச்சொல்லி
’ஆடைத்தேர்வு பெண்ணின் சுதந்திரம்’ என்ற
வழக்கமான சொற்களோடு அம்மா
ஆரம்பித்தபோது
சும்மாயிருக்கச் சொல்லி சைகை காண்பித்தவள்
“அம்மா, என் ஆடைத்தேர்வு என் சுதந்திரம்
எனப் புரிந்துகொள்ளுமளவு
வளர்ந்துவிட்டேன் நான்’ என்றாள்.
அம்மா வாயடைத்துநின்றாள்.

INSIGHT - DEC 2021 & JAN 2022 - TWO BILINGUAL VOLUMES OF CONTEMPORARY TAMILPOETRY

 INSIGHT - TWO BILINGUAL VOLUMES OF CONTEMPORARY TAMIL POETRY


SALE AT PUDHUPUNAL PUBLICATIONS 



நூலகம் உண்டு; ஆனால் நூல்களைப் படிக்க முடியாது!

லதா ராமகிருஷ்ணன்

/
/ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான நூலகம் என்று பெயருக்கு இருந்தாலும் குழந்தைகள் கிழித்துவிடுவார் கள் என்று பீரோவுக்குள்ளேயே பூட்டிவைத்து விடுவது தான்
பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.//

மொழியாற்றல், ஒரு மொழியை சரிவர எழுதவும் படிக்கவும் தெரியவேண்டியது அவசியமே. இதற்கு மாற்றுக்கருத்தில்லை.
அதே சமயம் மொழி என்பது காலந்தோறும் பல வகையான மாற்றங்களை ஏற்றுவருவது.
ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இந்த விழிப்புணர்வோடு, புரிதலோடு மொழியைக் கையாளவேண் டிய தேவையிருக்கிறது.
பழந்தமிழ்க் கவிதைகளின் மொழிவழக்கிலிருந்து சம காலக் கவிதையின் மொழிவழக்கு பெருமளவு மாறுபட் டிருக்கிறது.
வட்டார வழக்குகளையும் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலக்கு வாசகர்கள் யார் என்பதும் ஒரு மொழியைக் கையாள்வதில் முக்கிய கவனம் பெறும், பெறவேண்டிய ஒன்று.
சில வருடங்களுக்கு முன்பு AID INDIA, PRATHAM ஆகிய சில தன்னார்வல அமைப்புகள் சேர்ந்து நாடு முழுக்க நடத்திய சுற்றாய்வொன்று நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு இரண்டாம் வகுப்பு தாய்மொழிப் பாடப் புத்தகங்களையே படிக்கத் தெரியாத நிலையை எடுத்துக்காட்டி யது.
ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான நூலகம் என்று பெயருக்கு இருந்தாலும் குழந்தைகள் கிழித்துவிடுவார்கள் என்று அலமாரிக்குள்ளேயே பூட்டிவைத்து விடுவது தான் பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.
தனியார் பள்ளி மாணவர்களின் மொழித்திறனும் இப்படியே.
சிறு பருவத்திலேயே மொழிமீது ஆர்வமும் மொழியாற்றலைப் பெற வழிவகைகளையும் உருவாக்கித் தரவேண் டியது இன்றிய மையாதது.



மொழிமனம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிமனம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மண்புழுவை மகா பாம்பு என்று
கண்ணையுருட்டிச் சொன்ன சிறுவனை
தப்பாகச் சொன்னதற்காயொரு
அப்பு அப்ப எழுந்துகொண்டு்
மகா பாம்பா, மகாப்பாம்பா – எது சரி
என்று ஒருகணம் குழம்பிய
பிறகு
மக்கு மக்கு என்று குட்டப்போன
உறவுக்காரரின் கையைத்
தட்டிவிட்ட தந்தை
ஈன்றபொழுதின் பெரிதுவந்துரைத்தார்
பக்குவமாய்:
’என் பிரிய மகன் அரும்புகிறான்
பெருங்கவியாக!’

மகிழ்ச்சியைத் தேடி... ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மகிழ்ச்சியைத் தேடி...
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


//என்னுடைய எட்டாவது கவிதைத்தொகுப்பு ’போகிற போக்கில்’. 24 கவிதைகள் கொண்ட சிறுநூல். 2011இல் வெளியாகியது. அதில் கடைசிக் கவிதையாக இடம்பெறு வது இப்போது ஆஸ்கார் வி்ருது வாங்கியுள்ள நடிகர் வில் ஸ்மித் நடித்த அற்புதமான படம்The Pursuit of Happyness குறித்துப் பேசுவது. 2006இல் வெளியான படம் அது.
நேற்று 2022 சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டு ஆஸ்கார் விருது வாங்கும் முன் விழாவில் நகைச்சுவை என்ற பெயரில் மேடையில்ருந்தவர் (stand-up comedy) வில் ஸ்மித்தின் புற்று நோய் வந்த மனைவியின் தோற்றத் தை (மனைவி புற்றுநோய் வந்து அதன் விளைவாய் தலைமுடி இழந்து மொட்டையடித்துக் கொண்டிருக்கி றார்) கேலி செய்து ஏதோ கூற நேரே மேடைக்கு சென்று அந்த மனிதரை அடித்துவிட்டார் வில் ஸ்மித்.
பின்னர் விருது வாங்கியதற்கான தன் ஏற்புரையில் தன் நடத்தை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவரு டைய ஏற்புரை அத்தனை ஆழமானது; ஆத்மார்த்தமானது.
ஆனால், எல்லோரும் வில் ஸ்மித் வன்முறையைப் பிரயோகித்துவிட்டார் என்று குற்றஞ்சட்டத்தொடங்கி விட்டார்கள்.
நல்ல வேளை, இருவரும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்த வர்கள் என்பதால் நிறவெறி என்பதாய் இந்த நிகழ்வு பகுக்கப்படும் அபாயம் நேரவில்லை.
வார்த்தைகளின் வன்முறையையையும் வன்முறைச் செயல்களில் ஒன்றாக ஏன் கணக்கிலெடுத்துக்கொள்ளக் கூடாது?
நடிகர் வில் ஸ்மித்திற்கு என்னுடைய இந்தக் கவிதை சமர்ப்பணம்


 மகிழ்ச்சியைத் தேடி...

ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று
என் கண் முன்.
அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும்
பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன்.
அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி
மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன்.
அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம்
வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை.
விரையும் வேகத்தில் 'ராணுவ வீரனின் பொம்மை
கைநழுவி
சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக,
பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில்
நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில்
இன்றும் நேற்றும் நாளையும் சிறைச்சாலையாகிவிடுகிறது உலகம்.
மகிழ்ச்சியைத் தேடி மகனை தோள்மீது சுமந்தபடி
நாளெல்லாம் ஓடித் திரிகிறான் க்ரிஸ்.
தினமும் தங்கவும் தூங்கவும் இடமில்லாமல்
அறைதேடி அல்லாடும் வழியெல்லாம் சிலுவைகள்.
அவரவர் உலகங்களை அன்பிணைக்க
இரத்ததானம் அளித்துப் பெறும் பணத்தில்
மகனுக்கு விருந்தளித்து மகிழ்பவன் மீண்டும் ஓடுகிறான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மகனை
மார்போடணைத்து
ராஜகுமாரனாக்குகிறான்!
அடுத்தவேளை சோறுக்கே வழியில்லாத நாளிலும்
ஆளரவமற்ற இரயில் நிலையத்தில்
மகனுக்காக
டினோசார் வாழும் காட்டையே
நிர்மாணித்தவனாயிற்றே!
”கோள்கள் எத்தனை?”
“ஏழு”
”இல்லை, ஒன்பது" ”வனராஜா யார்?"
"கொரில்லா”
”இல்லை, சிங்கம்”
தந்தையின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கும்
மகன்.
(தவறாய் இருந்தால்தான் என்ன!)
எனில், அன்றொரு நாள் மகன் கேட்கும் கேள்வியில்
கதிகலங்கி நிற்கிறான் தந்தை:
”அம்மா என்னால் தான் பிரிந்து போனாளா?”
“இல்லை, அம்மா தன்னால் தான் போனாள்”.
“நீ விரும்பினால் குகைக்கே திரும்பிவிடலாம்" என்று
பரிவோடு கூறுகிறது பிள்ளை.
”வெறுமே கடற்கரைக்குச் சென்றோம்
எல்லாவற்றிலிருந்தும் தொலைவாக;
ஏமாற்றத்திலிருந்து வெகுதொலைவாக
என் வாழ்க்கையின் இந்தப் பகுதி
’இந்தச் சின்னஞ்சிறு பகுதியே மகிழ்ச்சியென்று அழைக்கப்படுகிறது”
என்கிறான் க்ரிஸ்.
”என்ன நடந்தாலும் சரி, நீ செய்தது அற்புதமான
காரியம்
நல்லபடியாக கவனித்துக்கொள் உன்னை”
என்றவரை
வேண்டி விரும்பி வழிமொழிகிறேன் நானும்.
காரணம் புரியாமல் விழிநிரம்பும் கண்ணீர்
க்ரிஸ்ஸுக்காகவும் எனக்காகவும் உங்களுக்காகவும்
கருணை செய்யட்டும் காலம்.
...................................................................................................................

www.2019insight.blogspot.com - INSIGHT - A BILINGUAL INITIATIVE OF CONTEMPORARY TAMIL POETRY


www.2019insight.blogspot.com

www.2019insight.blogspot.com _INSIGHT - A BILINGUAL INITIATIVE OF TAMIL CONTEMPORARY POEMS