LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, September 13, 2020

குறையொன்றும் இல்லை! ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 குறையொன்றும் இல்லை!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அவ்வப்போது இம்மாதிரி ஆதங்க வெளிப்பாடுகள் பதிவுசெய்யப் படுவதைப் பார்க்கிறேன்.


அதாவது, என் இலக்கியப்பணிக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்பதாக இன்னொரு வர் வெளிப்படுத்தும் ஆதங்கம்.


இம்மாதிரி ஆதங்கங்கள் வெளிப்படுத்தப்படுவதிலும் அரசியல் உண்டு என்பதையும் நான் அறிவேன். வேறொருவரைக் குறை சொல்லவோ, தன் பொருட்டோ, தனக்குப் பிடித்த இலக்கிய வாதியை முன்னிறுத்துவதற்காகவோஅவருக்கு அடை யாளம் கிடைக்கவில்லை, இவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லைஎன்று ஒருவிதபகடைக்காய்நிலையில் ஒரு படைப்பாளியைச் சுட்டுவது.


இதை அக்கறையோடு சொல்பவர்களும் இருக்கிறார்கள்.


ஆனால், இந்த ஆதங்கம் தேவையில்லைமுக்கியமாக, என் பொருட்டு தேவையில்லை என்பதே என் கருத்து.

அது சரி, இலக்கியப் பணி என்று ஏதேனும் இருக்கி றதா என்ன?

ஒரு கவிதையை எழுதும்போது, அது ஒரு வாசிப் போராக என்னால் முதல் தரமான கவிதையாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும்கூட, எனக்குக் கிடைக்கும் வடிகாலும், வலி நிவாரணமும், பரவசமும் சொல்லுக்கப்பாற்பட்டது.

முழுக்க முழுக்க என் சுயநலத்திற்காகத்தான் எழுது கிறேன்.

பின் ஏன் என் எழுத்தைப் பிறர் பார்க்கப் பதிவு செய்யவேண்டும்? பிரசுரிக்கவேண்டும்?

ஏன் பதிவு செய்யலாகாது, பிரசுரிக்கலாகாதுஎன்பதைத் தாண்டி என்னால் இதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.

ஆனால், படைப்பு என்பது பணியல்ல என்பதே என் புரிதல்; நிலைப்பாடு.

குறிப்பிட்ட ஒரு நோக்கத்திற்காக ஓர் இலக்கியப் படைப்பு எழுதப்பட்டாலும் கூட அதை எழுதுவதில் சம்பந்தப்பட்ட எழுத்தாளர் அல்லது கவிஞர் உணரும் நிறைவுதான் அதன் நோக்க நிறைவேற் றத்தைவிட மேலோங்கியிருப்பது.

சிற்றிதழ்களில் விரும்பி எழுதுபவர்கள்உலகப் புகழின் மீதோ, அங்கீகாரத்தின் மீதோ அபிமானம் கொண்டா எழுதவருகிறார்கள்? அவர்களுக்கு நிலவரம் தெரியாதா என்ன? பின், ஏன் தொடர்ந்து அதிலேயே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? சிற்றிதழ்களின் வாசகராக, படைப்பாளியாக இருக்கப் பிடிக்கிறது. அதனால்தான்.

சிற்றிதழ் எழுத்தாளர் என்பதில் ஒரு 'கெத்து' காட்டிக் கொள்ள முடியும். அதனால்தான்என்று சிலர் சொல் லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அப்படிச் சொல்பவர் கள் பெரும்பாலும் சிற்றிதழில் எழுதுபவர்களின் தரம் அறிந்து அந்த அளவு தங்களை உயர்த்திக் கொள்ள விரும்பாதவர்களாய், இயலாதவர்களாய் இருப்பார் கள்.


சிற்றிதழ்களில்வெத்துஎழுத்துகள் இலக்கியப் படைப்பாக இடம்பெறுவதில்லையா என்ன?


கண்டிப்பாக இடம்பெறுவதுண்டு. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், சாதாரண எழுத்தை அடர்செறி வான இலக்கியப் படைப்பாக சிற்றிதழ் வாசகர்களை வெகுகாலம் மூளைச்சலவை செய்துகொண்டிருக்கவியலாது.


கவிதை எழுதுபவர் கவிதையைப் பற்றிப் பேசவேண்டியது அவசியமா? சிலருக்கு அது அவசியமாகப் படுகிறது. பேசுகிறார் கள். சிலருக்கு உரையாடல்களில், கலந்துரையாடல்களில் இயல்பாகவே ஆர்வமுண்டு்.


எனக்கு அது அவசியம் என்று தோன்றவில்லை.


ஒரு கவிதையைத் தனியாக அமர்ந்து அதன் ரகசியப் பேழைகளைத் திறந்துபார்ப்ப தற்கும், அரங்கில் வகுப்பெடுப்பதாய், போதிப்பதாய் அந்த ரகசியப் பேழைகளை அத்தனை பேரின் முன்னிலையிலும் கவிழ்த்துக்கொட்டுவதற்கும் மிக அடிப்படை யான வித்தியாசம் இருப்பதாய் உணர்கிறேன்.


ஆனால், ஒரு படைப்பாளி இலக்கியத் திறனாய்வாளராகவும் செயல்படும்போது அவர் அதிகம் அறியப்படுகிறார் என்று தோன்றுகிறது.


அறியப்படுதல், அதிகம் அறியப்படுதல் என்பதற் கெல்லாம் என்ன அளவுகோல்? Exit Poll மாதிரி ஏதேனும் இருக்கிறதா என்ன? Exit Poll நடந்தாலும் அது அறவே அரசியலற்றதாய் அமையும் என்று சொல்லவியலுமா என்ன?


உலகிலுள்ள அத்தனை வாசகர்களாலும் நான் அறியப் பட்டாலும்கூட கைகளால் அற்புதமான தொரு மண் குடுவையை வெகு அநாயாசமாய் உருவாக்கும் மாயக் கைவினைக் கலைஞர்களுக்கு நான் யாரோ தானே? ! கண்களையுருட்டியுருட்டி வெகு இயல்பாய் இட்டுக்கட்டி கதைசொல்லும் குழந்தைகளுக்கு நான் யாரோதானே!


இத்தனை ஆண்டுகாலம் இலக்கியப்பணி(?) செய்துள்ள இவரைப் பற்றி யாருமே பேசுவதில்லையேஎன்று என் பொருட்டு ஆதங்கத்தோடு எழுதுபவர்களுக்கு:


இத்தனை ஆண்டுகாலம் இலக்கியப்பணி(?) செய்துள்ள எத்தனை பேரைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்?


நான் மொழிபெயர்த்துள்ள தரமான கவிஞர்களைக் காட்டிலும் நான் மொழிபெயர்க்காத தரமான கவிஞர் களின் எண்ணிக்கை அதிகமல்லவா?


இதில் யாரை யார் குறை சொல்வது?


குறை சொல்ல என்ன அவசியம்?


I COULD BE BOUNDED IN A NUTSHELL என்று விரியும் ஹாம்லெட்டின் வாசகம் நினைவுக்கு வருகிறது.


ஹாம்லெட்டை அலைக்கழிக்கும் கொடுங்கனவு களும் எனக்கில்லை.


நான் எழுதிய கவிதைகளில், சிறுகதைகளில் நிறை வானவை எவை, அரைகுறையானவை எவை என்று ஒரு வாசகராக எனக்குத் தெரியும். எழுதும்போது கிடைக்கும் நிறைவு, நிவாரணம் மனதைச் சுத்திகரிக்கும்.


வேறென்னவேண்டும்?

 

 

 

ராஜா ராணி இளவரசியும் ஒரு சாமான்யப்பெண்ணும்……. ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ராஜா ராணி இளவரசியும் 

ஒரு சாமான்யப்பெண்ணும்…….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எழுவது வயதுக்கு மேலிருக்கும் மூதாட்டியின் மீது
அத்தனை குரூரமாய் காறித்துப்பிக்கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.

சிறுமியாகி சிறுமி வளரிளம்பருவத்தினளாகி
வாலைக்குமரியாகி புதுமணப்பெண்ணாகி இளம் மனைவியாகி தாயாகி
என காலத்தே அனைத்துக் கட்டங்களையும் கடந்த பின்
இன்று மும்முரமாகக் காய்வெட்டிக்கொண்டிருக்கிறாள்.

வாழ்க்கை சதுரங்கவிளையாட்டல்ல என்பதும்
சிப்பாய்க்கு ராஜாவின் அந்தப்புரக் கதவுகளைத் திறந்து
உள்நுழைய அனுமதியில்லை என்பதும் தெரியாமல்
மன்னரும் அவருடைய அன்புக்குரியவளும்
அடுத்தடுத்துப் படுத்ததேயில்லையென்றும்
அரசனை வெட்டிப்போடுவதே அந்த மாதின் நோக்கம் என்றும்
பரபரவென்று எழுதித்தள்ளுகிறாள்.

போதாக்குறைக்கு நேரடியாக வந்தும்
இப்படி காறித்துப்புகிறாள்.

மன்னர் இறந்து பட்டத்தரசியும் தளர்ந்துவிட்ட பின்
தாந்தோன்றி இளவரசி வைத்ததுதானே சட்டம்.

இரண்டாம் மனைவி, மனத்துணை, ஆசைநாயகி
போன்ற அடைமொழிகளில்
கொஞ்சம்போல் மரியாதை தொக்கிநிற்பதாக எண்ணி
அந்த மூதாட்டியை தன் தந்தையான சக்கரவர்த்தியின் வப்பாட்டி
யென்று திரும்பத்திரும்ப வசைபாடி மகிழ்கிறாள்.

இன்னும் விபச்சாரி என்று சொல்லவில்லையே தவிர
வேறு என்னவெல்லாமோ சொல்லியாயிற்று.

அரியணையும் கிரீடமும் வாரிசுரிமையும்
அசையும் அசையா சொத்துக்கள் யாவும் வேண்டும்
அதேசமயம் அவருடைய மனதுக்கினியவளை
வசைபாடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

முடிந்தால் ஊரைவிட்டே துரத்தி ஒரேயடியாய்
முடித்துவிடவேண்டும் தலையை வெட்டி.
ஆனால், மனிதநேயவாதி என்ற முகக்கவசத்தை
இழந்துவிடலாகாதே….

மனக்கணக்குகள் பலவகையாய்,
மூதாட்டியை மதிப்பழிப்பதே
முதலும் முடிவுமான நோக்கமாய்
காறித்துப்பிக்கொண்டிருக்கிறாள் இளவரசி.

கொரோனா காலத்தில் பொதுவிடங்களில் துப்பக்கூடாது
என்று அவளுக்கு யார் எடுத்துச்சொல்வது?

விரிந்து பரந்த அரசரின் பெயர் புகழ் செல்வத்திற்காய்
வந்து ஒட்டிக்கொண்டாள் என்று ஏசி
மீண்டும் மீண்டும் காறித்துப்பப்படும் தன் முகத்தை
மௌனமாய் துடைத்துக்கொள்கிறாள் மூதாட்டி.

தன் மனதுள்ளிருக்கும் டிரங்குப் பெட்டி நிறைய
மன்னர் தந்த சூக்குமப்பரிசுகள் இருப்பதை
எண்ணிப்பார்க்க
அவருடைய சுருக்கங்கள் நிறைந்த முகத்தில்
புன்னகை பரவுகிறது.

மூன்றாமவருக்கு இடமற்ற
அந்தரங்கம் புனிதமானது.

 

மகத்துவம் பலவிதம்! - ஷேக்ஸ்பியர்

                         மகத்துவம் பலவிதம்!



//மகத்துவத்தைக் கண்டு அஞ்சவேண்டாம்

மகிமையோடே பிறப்பவர்கள் உண்டு
.
மகத்துவமானவர்களாக மலர்பவர்கள் உண்டு.

மகத்துவம் வலிந்தேற்றப்பட்டவர்கள் உண்டு//


_ ஷேக்ஸ்பியர்

(பி.கு: பிறரை மட்டந்தட்டுவதன் மூலமே தங்களை மகத்துவம் வாய்ந்தவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் உண்டு!)

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விதையாதல்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு சொல் என்னைப் பின்தொடர்ந்தவாறே….
அல்லது, நான் அதை விட்டு விலகிச்செல்கிறேனா…?
ஒரே சீரான இடைவெளி பராமரிக்கப்படுகிறது
தண்டவாளங்களிலும்……
அவ்வுலகில் அரைவட்டங்களும் பொருட்படுத்தப் படும்என்று சொல்லிச் சென்ற கவி ராபர்ட் ப்ரவுனிங்கை(என்று ஞாபகம்) நான் முழுதாகப் படித்தேனில்லை....
என்றாலும், அவருக்கு என் நன்றி உரித்தாகிறது.
இத்தனை வார்த்தைகளை இறைத்த பின்னரும்
என்னைப் பின் தொடரும் அந்தச் சொல்லின்
ஒலி வரி வடிவங்கள்
கனவுங்கற்பனையுமாய்.....
இருந்தபோதும் அந்தகாரத்திலிருந்து அதன் கண்கள்
என் மனதின் முதுகை உறுத்திக்கொண்டேயிருக்கின்றன.
சிறு சிறு திருப்பங்களில் அதன் மூச்சுக்காற்றை
என் பின்கழுத்திலும் காதுமடல்களிலும் உணரமுடிகிறது.
சமயங்களில் முதுகைச் சுரீரெனத் துளைத்து
உள்ளிறங்கி இலவம்பஞ்சின் இதமாய் வருடித் தந்து
பிரமிப்பில் நான் திக்குமுக்காடி நிற்கும் நேரத்தில்
சமச்சீராகப் பராமரிக்கப்படும் தொலைவிலிருந்து
Zoom
செய்யப்பட்ட தன் விழிகளைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டு
என்னைத் தொடரும் சொல்
வழித்துணையாய்
வாழ்வாய்

 

ஒரு கதையின் கனபரிமாணங்கள் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு கதையின் கனபரிமாணங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

சீக்கிரம் தூக்கம்வந்துவிடும்போலிருக்கிறது
சின்னதாக ஒரு கதை சொல்லேன்”, என்று கேட்ட பிள்ளைக்கு
என்ன கதை சொல்ல என்று
கணநேரம் குழம்பினாள் தாய்.

சீக்கிரம் வந்துவிடப்போகும் தூக்கத்தில் சிக்கிக்கொண்டிருந்தது அந்தச் சின்னது.

குழந்தையை மட்டுமா சமீபித்துக்கொண்டிருந்தது தூக்கம்?
அவளையும்தான்.

இருவரையும் நெருங்கிவந்துகொண்டிருக்கும தூக்கங்கள்
ஒன்றையொன்று குறுக்குவெட்டிக்கொள்ளும் புள்ளியில்
முடிந்துவிடவில்லையென்றால் பின்
அதிலிருந்து கிளைபிரிந்து எதிரெதிர்த் திசைகளில் போய்க்கொண்டிருக்கும்
தூக்கங்களிலும் சிக்கிக்கொண்டிருப்பது அதே கதையின் நீட்சிதான்
என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாதி மூடிய பிள்ளையின் கண்களையே பார்த்தபடி
இரண்டு பூக்கள் மலர ஆரம்பித்ததாகக் கதை சொல்ல ஆரம்பித்த அம்மா
ஒன்று சின்னது இன்னொன்று பெரியது என்று சொன்னதைக் கேட்டு _

இரண்டுமே அழகு,
இரண்டுமே ரொம்ப வாசனை
என்று நாக்குழறக் கூறி கதையை நிறைவுசெய்து
உறங்க ஆரம்பித்தது பிள்ளை.

மம்முட்டிக்கு வயதாவதில்லை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மம்முட்டிக்கு வயதாவதில்லை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


மம்முட்டி

மனதிற்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பின்
முதல்படியிலேற முற்படும் மா கனவு.

மம்முட்டி நடிக்கும் படங்களில் மற்றவர்களின் முகங்களும்
இயக்கங்களும் மங்கலாகவே தெரிவது
இன்றல்ல நேற்றல்ல.

மம்முட்டி காற்றுபோல்;
அவரவருக்கு மட்டும் என்று எண்ணுவதைக் காட்டிலும்
அபத்தம் வேறிருக்க முடியாது.

மம்முட்டி முழுநிலவுபோல்.
மேலேறிச்சென்று தொட்டுணரவேண்டும் என்ற நினைப்புக்கு
மிகு தொலைவில்.

மம்முட்டி யொரு கேட்கத் திகட்டாத
இசைக்கோர்வை.
செவிமடுக்கும் நேரம் அது துயரார்ந்த இசையா
துள்ளல் இசையா என்று பிரித்தறிய முற்பட
மறந்துபோய்விடுகிறது மனம்.

வில்லன் மம்முட்டியும் நல்லவனே
அவன் மம்முட்டியாக இருப்பதால்.

மம்முட்டி யொரு குறியீடு
மனதை நெகிழச்செய்யுமெல்லாவற்றிற்கும்.

மம்முட்டி யொரு கவித்துவ மொழிப்பயன்
ஆன்மாவை தூய்மையாக்கும் அனைத்திற்கும்.

மம்முட்டிக்கு வயதாவதில்லை.

மம்முட்டியைப் பார்க்கும்போதெல்லாம்
வருடங்களால் ஆட்டிப்படைக்கப்படாத
அருவவெளியொன்றை நோக்கி
இன்றின் முழுப்பிரக்ஞையோடு
இன்றிலிருந்து வெளியேறும் நான்…..