LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, June 9, 2018

திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 திருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


”கண்டிப்பாகப் போய்ப் பார்த்துவிடுஇல்லையென்றால் உன்னை எழுத்தாளரென்றே யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்” என்றாள்
லாலல்லல்லா……… ராகம்போட்டுப் பாடிக்கொண்டே வந்த
தோழி நீலா அல்லது லீலா.



நானே ஒப்புக்கொள்வதில்லையே என்று நகைத்த என்னைப்
பகையாளிபோல் பார்த்தபடி
பார்த்தே தீரவேண்டும்;
நேர்த்திக்கடன் செலுத்தாதிருப்பது தெய்வக்குத்தம்-
உய்ய வழி தேடிக்கொள். அவ்வளவுதான் சொல்வேன்என்றாள்.



பல வருடங்களுக்குப் பிறகு பார்த்த தெனாலியில்
கிளப் டான்ஸர்(?) கணக்காய் அத்தனை குட்டைப்பாவாடையில்
அண்ணனோடு ஜோதிகாத் தங்கையைப் பார்த்ததில் உண்டான பீதியில்
அரங்கில் இடியிடித்து எரிமலை வெடிப்பதாய் பரவிய
ஒலியின் வன்முறையில் பலவீனமாகிப்போன மனதிற்கு
திரும்பவும் தியேட்டருக்குள் நுழைய தைரியம் வரவில்லை” யென்றேன்.



”பெண்ணின் நடை யுடை பாவனை குறித்து உனக்கெல்லாம்
எத்தனை மனத்தடை” என்று பழித்தாள்.
நான் சொல்லிக்கொண்டிருப்பது மனத்தடையின்
இன்னொரு பரிமாணம் பற்றி என்பதை
நன்றாகவேஅறிந்திருந்தும் ஏதுமறியாதவள் போல பேசுபவளிடம்
மேலும் என்ன சொல்லவிருக்கிறது…. ?
நாளும் வாளாவிருப்பதே இங்கே சாலச் சிறந்தது…..



அதையும் செய்யவிடாமல்
அங்கே விற்றுக்கொண்டிருந்த இளநீரைத் தாண்டிச் சென்று
கோலா வாங்கிக் கொடுத்தபடி _
”அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கோள்களிலிருந்தெல்லாம்
வந்திறங்கிக் கண்டுகளித்துக்கொண்டிருக்கிறார்கள்;
அவர்களில் பேர்பாதிக்கும் மேல்
பாரியஎழுத்தாளர்கள்பாரியஎழுத்தாளர்கள் தெரியுமா”
என்று கூறிச் சென்றாள் மாலா அல்லது ஷீலா.



காரியமாய் அன்றி மனதார அப்படியேதேனுமொரு நூல்
அவர்களுடைய மேடைகளில் என்றைக்கேனும் மரியாதை செய்யப்பட்டிருக்குமானால்…….என்று
முனகும் மனதின் முட்டாள் வாயை முக்கியமாய் அடைத்தாகவேண்டும்….



அகண்ட திரையின் ஆக்கிரமிப்புக்கு அப்பால், இருள் மூலைகளில்
இறைந்துகிடக்கின்றன ஏராளமான இலக்கியப் படைப்புகள்
சிறிய அறிமுகமற்று, ஒரு வரி விமர்சனமுமற்று
சக படைப்பாளிகளாலும் சீந்தப்படாமல் _
வீசியெறியப்பட்ட மீந்த சோற்றுப்பருக்கைகளாய்




விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


விலகியிருந்து பார்க்கக் கிடைக்கும் வெற்றி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


உருப்பெருக்கிக்கருவி, காந்தக்கல், ஒரு கணத்தில்
 உடைந்த கண்ணாடியை மீண்டும் ஒன்றாக்கிவிடும்
புதுரக ஒட்டுபசை, அதிமதுர சகோதரத்துவ இசை
வேண்டும்போதெல்லாம் பெருகச்செய்யமுடிந்த அன்புவெள்ளம்
ஆங்காரப் புழுதிப்புயல் – இன்னும் ஏராளமானவற்றோடு
வெற்றியாளர்களை வலைவீசித் தேடித்தேடிக் கண்டெடுத்துக்
கொண்டவாறு சிலபலர்…..


பெற்றெடுத்த பிள்ளையாய் தத்தெடுத்து முத்தம் கொடுக்க
அல்லது குற்றேவல்காரராய் பாவித்து எத்தித் தள்ள.


இவர்களுடைய குரல்வளைகளிலிருந்தெல்லாம்
இடையறாது துருத்திக்கொண்டு வெளிக்கிளம்பும்
கால்களின் வளைநகங்கள்
கத்தியைக் காட்டிலும் கூர்மையானதும்,
கொடிய விடந்தோய்ந்ததுமாய்….


வரலாற்றுச்  சின்னமொன்றின் வயிற்றுப்பகுதியில்
படிந்திருக்கும்  சில ஒட்டுண்ணிகள்,
வெவ்வேறு ஊடகங்களில்
வாகாய்த் தெரியும்படியாக…….


அன்புமழையில் குளிப்பாட்டுவதாய்
ஜன்னியில் தள்ளிப் பிதற்றச் செய்து
சுரவேக உளறல்களையெல்லாம்
பொன்மொழிக்கையேடுகளாக்கி
பெரிய பெரிய அச்சுருக்களில்
சமூக வெளிகளெங்கும்
அமோகமாய் அப்பளம் சுட்டு வடை பொரித்து
வெற்றியாளருக்கு நெட்டி முறித்து
திருஷ்டி கழித்து
காலின் கீழ் குழிபறிப்பவைகளுமாக
விறுவிறுவென இயங்கிக்கொண்டிருக்கின்றன  
வேறு சில.


வருடாவருடம் தண்ணித்துறை மார்க்கெட் கடையில்
கதை கட்டுரை கவிதைப் போட்டிகளில்
வெற்றிபெறுபவர்களுக்கான
பரிசுகளைத் தயாரிக்கச் சொல்லி
முன்பணம் கொடுக்கச் செல்லும் நேரம்
சின்னதும் பெரியதுமாய் அங்கே
அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கோப்பைகளின்
மங்கிக்கொண்டே போகும் தங்கமுலாம்…….
விற்பனையாகாமலே தங்கிவிட்ட
விதவிதமான வடிவங்களிலான
பதக்கங்கள் ஷீல்டுகளைப்
பார்க்கநேரும் தருணங்களில்
பெறக் கிடைக்கும் போதிமரத்தடி வாசத்தில்
வீசும் தென்றலினூடாய் வெகுதொலைவில்
செல்ஃபி சகிதம் சுற்றுமுற்றும் பார்த்தபடியே
வெற்றியாளர்களைச் சேர்த்தணைத்து
இன்னும் இறுக்கமாய்ப்பற்றிக்கொள்வதில்
முற்றிலுமாய்த் தம்மை யிழந்து
மும்முரமாய், மூழ்கிக்கொண்டிருப்பவர்கள்
மங்கலாய்த் தெரிகிறார்கள்.






WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 5


WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 4


WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 3


WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 2


WILLIAM SHAKESPEARE/QUOTABLE QUOTES - 1




Thursday, June 7, 2018

தீராத் தனிமொழி சீதையின்…… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தீராத் தனிமொழி சீதையின்……

ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)


அசோகவனத்தில் என்னை சிறைவைத்திருந்தவருக்காக
ஆயிரம் வழக்குரைஞர்கள், அத்தனை வாய்தாக்கள்,
குறுக்குவிசாரணைகள்பொய்வாக்குமூலங்கள்பிறழ்சாட்சிகள்
அன்றிலிருந்து இன்றுவரை…..

 அதெப்படி மனம் வந்ததோ தெரியவில்லை _
என் மணாளனையும் மிருகத்தனமாய் என்னைக் கடத்திக்கொண்டுபோனவனையும்
தாங்களாகவே தராசிலிட்டு
பின்னவனே பேராண்மையாளன் என்று நான் எண்ணியதாகக்கூட
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய்ச் சொன்னவர் பலபேர்…..

 அவர்களில் பெண்ணியவாதிகளும் கூட இருந்ததைக் கண்டு
கண்கலங்கிக் கருத்தழிந்த காலம் நிழலாய்ப் பின் தொடரும்…..

கனலுக்குள் திரும்பத்திரும்ப இன்னும் எத்தனை காலம்
இறங்கிக்கொண்டேயிருக்கவேண்டுமோ…..

சூர்ப்பனகை மதிப்பழிக்கப்பட்டதற்கு பதிலடியாய் நேர்ந்தது இது
என்று தீர ஆராய்ந்து பேசுவதாக
திரும்பத்திரும்பச் சொல்பவர்கள் உண்டு.

 நீதிமான்களேநியாயவான்களே
அடிக்கு அடி அசோகவனம் வெருட்ட, அவமானம் உயிர் உருக்க
தினம் சுருக்கிட்டுச் செத்த மனம் _
ஐயோ என்னவொரு கனம்….

 சுமந்தவாறு வழியேகிக்கொண்டிருக்கும்
என் எளிய பிரார்த்தனை இதுவே.
உங்கள் வீட்டுப்பெண்கள் எல்லோரும் பத்திரமாயிருக்கட்டும்.
வரித்தவனோடு வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை வாய்க்கட்டும் அவர்களுக்கு.

துஞ்சாமல் நானங்கே துவண்டிருந்த அவலத்தை 
எண்ணுந்தோறும்
நெஞ்சு பதறும் அதிரும் சிதறும் கதறும்.

என் ஆறா ரணத்தின் வலி சொல்லுக்கப்பால் 
வெகுதொலைவில்.

ஆன்றோரே சான்றோரே -
உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்  _

அன்றாடம் என்னை வரிகளில் கடைபரப்பி
கூறுபோட்டு கூவிக்கூவி விற்காதீர்கள்.

Sunday, June 3, 2018

நானொரு முட்டாளுங்க….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நானொரு முட்டாளுங்க…..
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


 

யாரிருந்தாலுமில்லாவிட்டாலும் ரத்தம் வீதிகளில்
சில சமயம் உறைந்தும் சில சமயம் வழிந்தும்
வறுமையால் உறிஞ்சப்பட்டு வெளியே தெரியாமல்
பலநேரமும்…….

மக்கள் என்று முழங்கி அரியணை ஏறுபவர்களில்
தம் மக்கள் முன்னேற்றத்தை முதலாகக் கொள்பவரே
அதிகம் என்றால்
புள்ளிவிவரங்களைக் கொண்டுவா என்பவர்கள்
தமிழ்நாடே எதிர்ப்பதாகவும் ஆதரிப்பதாகவும்தான்
திரும்பத்திரும்பச் சொல்கிறார்கள்.
.
விரும்பும்வகையில் வாக்கியங்களை
வெட்டித்தட்டி
இட்டுகட்டிச் செய்யப்படும் ’எடிட்டிங்’ வேலைகளில்
எகிறும் ’டிஆர்பி’ ரேட்டிங்குகள்.

அது பொய்யில்லையா என்றால்
வாய்மை எனப்படுவது யாதெனில்
என்று வள்ளுவரை அந்தரத்தில்
தொங்கவிடுவார்கள்…..

பேருக்கு இரண்டு மூன்று தலைகள்
உருண்டால்தான் என்ன?
தன் காரணமாக என்றால் தியாகம் எனவும்
தன்னிகரற்ற வீரம் என்றும்
இன்னொருவர் காரணமெனில்
இரக்கங்கெட்ட கொலையென்றும்
வானத் தாரகைகளையும் சாட்சிக்கு அழைத்து
சத்தியம் செய்ய முடியாதா என்ன?

விண்மீன்கள் வரவில்லையெனில்
ஏலியன்கள் விழுங்கிவிட்டதாகச்
சொல்லிவிட்டால் போயிற்று.

பரபரப்பாக இங்கே எதையாவது
சொல்லிவிடத் தெரியவேண்டும்.
பொய்யா மெய்யா என்று
நாக்கு மேலே பல்லப் போட்டு கேட்கத்
துணிபவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.
பட்டென்று பொட்டிலொரு தட்டுதட்டினால்
போதும்.

ஏகவேலையிருப்பதாய்,
எக்குத்தப்பான கேள்விகளுக்கு பதிலளித்து
நேரத்தை விரயம் செய்யப் பிடிக்கவில்லை
யென்பதாய் , எத்தனைக்கெத்தனை
கிராக்கி காட்டிக்கொள்கிறோமோ
அத்தனைக்கத்தனை அறிவுசாலியாகப்
பகுக்கப்படும் சாத்தியப்பாடு அதிகம்.

அப்படியும் எவரேனும் தர்க்கித்தால்
அவர் சாதியைச் சொல்லி வசைபாடினால்
முடிந்தது விவகாரம்.

முடிந்துவிடுவதில்லை அதிகாரத்தின் உறவு _
அரியணையோடு மட்டும்.

எட்டும் வரை பட்டறிவு பார்த்ததில்
ஒரே சாதியென்றாலும் முதலாளியும் சேவகரும்
சமமாய் அமர்ந்துகொள்ள முடிவது
சினிமாத் தியேட்டர் மட்டுமே.
அதாவது வேறு வேறு வரிசையிலுள்ள
இருக்கைகளில்.

வர்க்கம் என்ற சொல் வெறும் இன்னொரு கெட்டவார்த்தையாக்கப்பட்டுவிட்டது.

வெளியே சொன்னால்
”மரியாதை கெட்டவன்
மனிதர்களை மதிக்கத் தெரியாதவன்
நீயென்ன பெரிய இவனா
நாயாண்டி பேயாண்டி
‘க்ரா’ப்பாண்டி ’டூப்’பாண்டி
நக்கிப்பிழைப்பவன், பொய்யைக்
கக்கிக்கொண்டிருப்பவன்…”
_ நயத்தக்க வார்த்தைகள் இவை
நான் பேசும் விதத்தில் பேசினால்
நாண்டுகிட்டு சாவாய் நீ
யிருந்துதான் ஆகப்போவதென்ன?” _
யென ஆரம்பித்துப் 

பண்பாளர்களாய்த் தம்மைத்தாம்
முரசறைந்து பிரகடனப்படுத்திக்
கொள்கிறவர்களிடமிருந்து
கிளம்பும் நரகல் நச்சு நாராசச் சொற்கள்
காறித்துப்பிக்கொண்டேயிருக்கும்.

விளம்பி மாளாது;
வித்தகமும் போதாது……
குரல்வளைக்கு வெளியே
தெறித்துவிட்டது கையளவு…..

அதுவும்கூடக் குத்தம்;
வாய்மூடிக்கொண்டிருப்பதே உத்தமம்
என்பீர்களெனில்
அப்படியே ஆகட்டும் –
தங்கள் சித்தம்.


ஒருசொல்பலவரி திறந்தமுனைக் கவிதைகள் சில….('ரிஷி’ லதா ராமகிருஷ்ணன்)

           ஒருசொல்பலவரி
திறந்தமுனைக்கவிதைகள் சில….

வலி
வாழ்வு
இழப்பு
துக்கம்
ஏமாற்றம்
காலம்
நேயம்
மரணம்
தனிமை
மழை
நிலவு
மனம்
மூளை
வாசனை
யோசனை
மின்னும்
இன்னும்……