LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, June 5, 2015

சிறுகதை அருங்காட்சியகம்

சிறுகதை

அருங்காட்சியகம்

‘அநாமிகா’

[லதா ராமகிருஷ்ணன்]

( * பன்முகம்  ஜூலை – செப்டம்பர், 2003 இதழில் வெளியானது)




னாதி காலம் தொட்டு அது இருந்துவருவதாகக் கூறினார்கள். ’அதென்ன ‘அனாதி காலம்?’ அதற்கென்று ஒரு கணக்கு வழக்கு இல்லையா’ என்றால் ”அதெல்லாம் சரிவரத் தெரிந்தவர் யார்தான் இருக்க முடியும்? அனாதி காலம் என்றால் அநாதி காலம். அவ்வளவுதான்,” என்று கூறி முடித்துக்கொண்டார்கள். இல்லை, ‘அதுவா முக்கியம்…. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு அது எத்தனை காலம் முந்தையது என்பதில் இல்லை. அது எல்லாக் காலத்திற்குமானது என்பதிலும், எப்போதும் புராதனமாகாதது என்பதிலும்தான் இருக்கிறது என்று எரிச்சலோடு தெளிவுபடுத்துவதாய் காட்டினார்கள்.

அருங்காட்சியகத்தின் தனித்தன்மை அதன் சுவர்களி லிருந்தே பிடிபடலாயிற்று. கருஞ்சிவப்பு நிறத்தில் சாயம் தீட்டப்பட்டிருந்த சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக மெலிந்தும் தடிமனாயும் ஒரு பிரத்யேக வலைப்பின்னல் அமைப்பாகக் காணப்பட்டவை உண்மையான மனித நரம்புகளும், இரத்தநாளங்களும்தான் என்று சுற்றுலா வழிகாட்டி குறிப்பிட்டபோது நம்பமுடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. ‘அப்படியென்றால்…. ஒருவேளை அந்தச் சுவர்களின் சாயம்….’ தன்பாட்டில் மனதில் ஒரு உள்ளுணர்வு குமிழ, ‘இதென்ன அபத்த எண்ணம்’ என்று அறிவைக்கொண்டு அசட்டை செய்ய முயன்றாலும் முடியாமல், திகிலுடன் அண்ணாந்து பார்க்க, “ஆம், உங்கள் ஊகம் சரிதான்,” என்று உடனடியாகக் கூறினார் வழிகாட்டி. 

“அது அசல் மனித ரத்தம்தான்.” அனிச்சையாக முகத்தை மூடிக்கொண்ட கைகளின் விரலிடுக்குகள் வழியாய் ஆங் காங்கே கீற்றுகளாய் கசிந்துகொண்டும், கோடுகளாய் வழிந்துகொண்டும் இருப்பதைக் காண முடிந்தது.

குமட்டலெடுத்தது. இது என்ன குரூரம்…? போரில் வெற்றிவாகை சூடியவன் தோற்ற எதிராளியைக் குத்திக் கிழித்ததோடு திருப்தியடையாமல் அவனுடைய தலையை வாளில் செருகி ஊர்வலம் வருவானாமே…. அப்படி வந்து வந்து அலுத்துப்போய் புதிதாய் வேறு ஏதாவது செய்யவேண்டும் என்று இவ்விதமாய் வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்தார்களோ….’

“இது வேறுவகையான போர்” என்று இடைமறித்தார் வழிகாட்டி. “இதம் வழிமுறைகளும் விதிமுறைகளும், அவ்வளவு ஏன், போரில் தான் வஞ்சகமாய்க் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதே சம்பந்தப்பட்டவருக்கு இறுதிக்கணங்களில்தான் தெரியக் கிடைக்குமாம்….”

“புரியவில்லை”

“தாஜ்மகால் என்பதைக் காதல் சின்னமாக எடுத்துக் கொண்டால் இதை ‘தாஜாமகால்’ அல்லது ‘அ-தாஜ்மகால்’ எனலாம்.”

“ஆனால், தாஜ்மகாலே உண்மையில் காதல் சின்னம் இல்லையே….”

“நமக்கு ஏதாவது ஒரு சின்னம் காதலுக்குத் தேவைப் படுகிறது. வேறு எதுவும் கைவசம் இல்லை. எனவே, தற்சமயத்திற்கு தாஜ்மகாலையே காதல் சின்னமாகக் கொள்வோம்.”

“சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருந்த, இப்போது பகுதி பகுதியாக வெட்டி வேறொரு மாநிலத்தில் ஒட்டிவைக்கப்படப்போகும் அந்த ‘நகல்’ தாஜ்மகாலை நாம் சின்னமாக்கிக்கொண்டால் இன்னும் பொருத்தமாயிருக்கும்.”

“தாஜ்மகாலை நாம் காதல் சின்னமாகக் கொண்டால், அதில் அசல் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன?”

“இருப்பதாகவும் வைத்துக்கொள்ளலாமே…. சரி, இந்த விவாதம் நீண்டுகொண்டே போகும். நீங்கள் இந்தத் ’தலபுராணத்தை’க் கூறுங்கள்-” கடுப்பாக ஒலித்த என் குரலை அவர் உற்றுக்கேட்டவாறிருந்தார்போல் காணப் பட்டார். சில நிமிடங்கள் மௌனமாக நின்றிருந்தார்.

பின், “இங்கே பாருங்கள்” என்று கூறியவாறே சுவரின் மீது ஒன்றிரண்டு இடங்களில் கை பதித்துக் காட்டினார். அவர் கையை மீட்ட போது அவர் கைப்பதிவு கண்ட இடத்தில் மனித இதயம் துடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. உடலில் நடுக்கம் பரவியது.

“அது ஆணின் இதயமா? பெண்ணின் இதயமா?”

“பெயர்களிலும், பிறப்புறுப்புகளிலும்தான் அந்த பேதங்க ளெல்லாம். இதயத்தில் ஆணென்ன, பெண்ணென்ன….”

“அப்படியென்றால்…?”

“ஏதொன்றும் காயப்படும், காயப்படுத்தும். அழும்; அழ வைக்கும். உடைக்கும், உடைபடும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இருவர்க்கிடையேயான உறவில் இந்த இருதரப்புகளும் கட்டாயம் இருக்கும். இருபாலரும், இரு நிலைகளிலும்  இடம்பெறக்கூடும்.”

வழிகாட்டி பெருமூச்செறிந்ததில் சுவர் மீது கண்ட இதயப் பதிவில் புதிதாய் சில ரத்தக்குமிழ்கள் கொப்பளித்தன.

“சரி வாருங்கள், உள்ளே போகலாம்.”

சில அடிகள் முன்னே சென்றவர், நான் தயங்கிநிற்பதைப் பார்த்து முறுவலித்தார். “பயப்படாதீர்கள், சீரான தரையில்தான் நடப்போம், சடலங்கள் மீது அல்ல!”

அவர் சொன்னதுபோல் தண்ணெனக் குளிர்ச்சி பொருந்திய சமதரையில்தான் நடந்தோம். அது ஒரு நீண்ட கூடம். மேற்கூரை மிக உயரத்தில் இருந்தது. கூடத்தின் இருமருங்கும் ஆளுயரக் கண்ணாடிப் பெட்டிகள் நீள் செவ்வக வடிவில் செங்குத்தாய் நின்று கொண்டிருந்தன. ஒவ்வொன்றின் உள்ளேயும் ஒரு மனித உடல். உடல் என்றால் இறந்த உடல் அல்ல. உயிரோ டிருக்கும் உடல். ஒவ்வொரு முகமும் ஒரு விவரிக்கவியலா வலியில் கோணியிருந்தது; சுருங்கியிருந்தது; வீங்கி யிருந்தது. சில முகங்களின் கண்களிலிருந்து கன்னங்கள் வழியாய் ஒரு நீண்ட வெட்டுப்பிளவு காணப்பட்டது. கண்கள் உயிரோடிருக்க, தேகம் ஒரு கையறு நிலையில் உறைந்திருந்தது.

“அன்பின் வழி நேரும் அலட்சியம், அவமானம், நம்பிக்கை துரோகம், அடிப்பதாய் வீசப்படும் வார்த்தைப் பிரயோகம் முதலியவை மனித மனதால் தாங்கமுடியாமல் போகும்போது இந்த உறைவுநிலை சம்பவிக்கிறது. அப்படித் தாக்குண்டவர்கள் அதற்குப் பிறகு ‘இருந்தும் இல்லாதவர்’களாகிவிடுகிறார்கள். உயிர்ச்சவமாயிருக் கும் அத்தகையோர் பற்றித் தகவல் தரப்பட்டால் இங்கி ருந்து ஆட்கள் போய் எங்கள் பிரத்யேக வண்டிகளில் அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து இங்கே இப்படி நிறுத்திவைப்போம்.”

“பிரத்யேக வண்டிகள் என்றால்…?”

“தாங்கமுடியாத அளவு அன்பினால் விளையும் அலட்சி யமும், அவமானம், துரோகம், துக்கம் போன்றவற்றால் தாக்குண்டவர்களை இந்த வண்டிக்குள் ஏற்றும்போது அந்த உச்சபட்சத் தாக்குதல் சொல் வடிவிலான நினைவாய் அவர்களுடன் ஏறிக்கொள்கிறது. இங்கே, இந்தப் பெட்டிகளைப் பாருங்கள். இதில் ஏதாவது வழக்கத்திற்கு மாறாகத் தென்படுகிறதா உங்களுக்கு? உற்றுப்பாருங்கள்.”

உலோகத் தன்மையுடன் இருந்த அந்தக் குரல் வசியம் செய்வதாய் தலையசைத்தார். “இந்தக் கண்ணாடிகள் வழக்கமான கண்ணாடிகளல்ல. மனித உடம்பின் நிணநீர்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. ஹிட்லரின் வதை முகாம்களிலும், அதற்குப் பிறகான ஏராளமான சின்ன, பெரிய இனக்கலவரங்கள், சாதிச் சண்டைகள் மற்றும் பெரும் போர்களிலெல்லாம் இறந்துபட்டு அனாதைப்பிணமாக கூட்டுச்சிதையேற்றப்படுபவர்களை, அதிகாரிகள் சென்ற பிறகு, நெருப்பணைத்து வெளியே இழுத்துவந்த உடலங்களின் உறைவுநிலையைத் தற்கா லிகமாகப் போக்கி உள்ளோடும் நீர்களை மீண்டும் ஓட வைத்து அவற்றை வெளியே குடுவைகளில் சேகரித்து, அவற்றில் சில துளிகள் காற்றையும், காலத்தை யும்,காதலையும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத் தில் சேர்த்து இருளுக்கே உரிய அதிவெப்ப நெருப்பில் கொதிக்க வைத்து உருவாக்கிய கண்ணாடி இது. இன்னும் சில விஷயங்களும் சேர்க்கப்படும். எல்லாவற் றையும் சொல்லிவிட்டால் பின் ஆளுக்கொரு அருங்காட்சியகம் என்று ஏற்படுத்திக்கொண்டுவிடக் கூடும். பின், இங்கே யார் இத்தனை அதிகக் கட்டணம் கொடுத்துப் பார்க்கவருவார்கள்….?

“அதுவும் சரிதான். நான் துருவிக் கேட்கப்போவதில்லை. இந்தக் கண்ணாடியின் பிரத்யேகத் தன்மைக்கும், இந்தப் பெட்டிகளின் கதவின்மைக்கும் என்ன தொடர்பு?”

“அப்படிக் கேளுங்கள். நல்லவேளை, காதல் இன்னமும் உங்களை முழுமுட்டாளாக்கிவிடவில்லை.”

“அதில் ஆனந்தப்பட ஒன்றுமில்லை. எல்லா உறவுக ளிலும் முட்டாளாக இருப்பதுதான் சௌகரியம்.”

“சொரணையில்லாமல் இருப்பதும்.”

“தோ-தோ-நாய்க்குட்டியாக”

“தூக்கமின்மையில் தூங்கி…”

“தொலைபேசி அழைப்பிற்காய் தவம் செய்து…”

“நிஜம் போலும் பொய் பேசி.”

“பூசனைகள் செய்து…”

”வாசனை புனைந்து…”

“ஹப்பா, கவிதையிலேயே இந்த பூசனை, வாசனை நடையைக் கைகழுவியா யிற்று. நீ பேச்சுவழக்கிலும் அதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாயே!”

“எதையேனும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கத்தானே வேண்டியிருக்கிறது…”

“எத்தனை காலம்தான் தொங்க முடியும்?”

பேசிக்கொண்டே போனதில் ஏதோ ஒரு கட்டத்தில் அது தனிமொழியா, உரையா டலா என்று குழம்பிப்போனது. எதிரே கண்ட காலிப் பெட்டியின் கண்ணாடிப் பரப்பில் ஏதோ அலைவு கண்டதுபோல் தோன்றியது.

“அங்கே பாருங்கள், அந்த அலைவு தெரிகிறதா? அதுதான் பெட்டிக்குள் போவதற் கான வழி அல்லது திறப்பு. உங்களுடைய கேள்விகளும் என்னுடைய பதில் களும் அல்லது என்னுடைய கேள்விகளும் உங்களுடைய பதில்களாகவும் இருக்கக்கூடிய இந்த உரையாடலின் ஊற்றுக்கண் உங்கள் மனதில் ஊறியிருக்கும் துக்கம். இந்தத் துக்கத்தின் உச்சப்புள்ளிக்குக் காரணமான சம்பவம் அல்லது வார்த்தைகளை நீங்கள் மீண்டும் பேசிக் கொண்டே வந்தால் உள் மனதின் வலி தாங்கமுடியாத உச்சத்தை எட்டும் கணம் இந்தக் கண்ணாடிச் சுவரில் ஒரு பெரிய திறப்பு ஏற்பட்டு உங்களை உள்வாங்கிக் கொள்ளும்….”

அந்த வசியக்குரல் எனக்கு அச்சமூட்டியது. ‘இது என்ன பயித்தியக்காரத்தனம்…. இந்த மனிதனின் மோடி மஸ்தான் பேச்சை யார் நம்புவார்கள்…’

என் மனதைத் துல்லியமாகப் படம்பிடித்துப் புன்முறு வலித்தார் அவர். “நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை யல்லவா? என்னால் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.”

“சொல்லுங்கள், நான் என்ன செய்யவேண்டும்?”

“உங்களுடைய துக்கத்தின் அந்தத் தாங்கமுடியாத கட்டத்தை உருவாக்கிய உரையாடலை நீங்கள் ஞாபகப் படுத்தி மீண்டும் ‘ஓரங்க நாடகம்’போல் பேசவேண்டும்.”

எத்தனை தாங்கமுடியாத கட்டங்கள்…. பாதி கற்பனை யாகவும் பாதி நிஜமாகவும் எட்டியவை…. கயிற்றரவாய் மனதை கிலி பிடித்தாட்டும் அந்தக் கேள்வி… “உனக்கு நான் காதலியா, இல்லை, வெறும் ‘கான்க்வெஸ்ட்’ (conquest) மட்டும்தானா?”

….” கன்க்வெஸ்ட் என்றால் உன்னைவிட அழகான வேறு எத்தனையோ பெண்களை என்னால் கைக்கொண்டிருக்க முடியும்.”

“இந்த பதில் எனக்கு நிவாரணமளிக்கும் என்று நீ நினைக் கிறாயா?”

“நீ எனக்கு நேர்ந்த ஒரேயொரு காதலி என்று என்னால் பொய் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய முதன் மைக் காதலிகளில் நீயும் ஒருத்தி.”

“கான்ஸலேஷன் ப்ரைஸ் தருகிறாய். கூடவே, கங்கிராட்ஸ் சொல்லவேண்டுமே! எனக்கு அந்த ஷர்மிலி பட காதலன்தான் ஆதர்ஷம். தன் காதலியின் முகம் தவிர மீதிப் பெண்களின் முகங்களெல்லாம் வெறும் பலூன் மொந்தைதான் அவனுக்கு!”

“நீங்கள், பெண்கள் எல்லோருமே மிகையுணர்ச்சிக் காரர்கள்; தொட்டாற்சுருங்கிகள்!”

“நீ தொட்டு நான் என்றாவது சுருங்கியிருக்கிறேனா? அபூர்வமாக மட்டுமே நீ தொடுகிறாய் என்பதுதானே என் நஷ்டக்கணக்கு”

“அது ஐயாவோட மகிமை!”

“நீ இப்படி மார்தட்டிக்கொள்வது என்னை இன்னும் அவமானப்படுத்துகிறது. வேண்டாம், ப்ளீஸ்…”

“ஹா, ப்ளீஸ் என்ன “ஸ்பெல்லிங்’, சொல்லு பார்க்க லாம்?”

“Please.”

’அட, இப்ப சரியா சொல்றியே. ஆனா, உன் கட்டுரை யிலே தப்பா எழுதியிருந்துதே! PLESEன்னு அதில் இருந்ததை சுதாதான் பார்த்துச் சரிசெய்தாள்.”

“சுதா?”

”என்னுடைய கஸின். அவளுக்கு என் மேல் ஒரு ‘இது’. யாரு புதுவரவுன்னு உன் கட்டுரையைப் படிச்சுக்கிட்டே கேட்டா! PLESE”ன்னு எழுதியிருந்ததைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சா…”

“நீயும் சிரிச்சே இல்லியா?”

“பின்னே!”

“எனக்குத் தெரிந்தவரை நீ ’ஸென்ஸிடிவ் ஹ்யூமன் பீயிங்’ தான் ஆனால், இந்த உன்னுடைய கேலியிலும் கெக்கலிப் பிலும் நீ கொடூர அரக்கனாக மாறியிருப்பது உனக்குத் தெரியவில்லையா…. நான் அலுத்துவிட்டேன் என்றால், அதை எடுத்துச் சொன்னால் போதாதா… ஒரு காற்றிழை போல் நான் தடமின்றி போயிருப்பேன். இப்படி, சமயம் கிடைத்தபோதெல்லாம் அடித்துத் துரத்தவேண்டுமா….? உன்னிடம் மட்டும்தான் இப்படி ‘வாலாட்டிக்கொண்டிருக் கும் நாய்க்குட்டியாக நான் பின்னோடிவருகிறேன் என்று உனக்குத் தெரியாதா? உன் எட்டியுதைக்கும் கால்களில் மிதிபடவேண்டியது தான் என் தகுதியா? அவமானம் எப்படி அன்பாகும்… ஏதோவொரு எல்லைமீறிய இழப்புணர்வு என்னை முழுவதுமாக விழுங்கித் தீர்த்துக் கொண்டிருக்கிறதே… நான் அழக்கூடாது…. அழுதால் அது என்னை நான் மேலும் அவமானத்திற்கு ஆளாக்கிக் கொள்வதாகும்… என் அன்பின் தெரிவு எனக்கு அவமா னத்தை வரவாக்குவதாக இருக்கலாகாது…. எது கயிறு….? எது வரவு…? எத்தனைக் கையறுநிலையில் என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாய்…. நீ என்னை நேசிக்கிறாய்தானே…? இல்லையா….? ஆமாமா….? சரியாகக் கேட்கவில்லை…. சத்தமாகச் சொல்…. இல்லை, நெஞ்சையெல்லாம் கிழித்துக்காட்ட வேண்டாம்… உன் வார்த்தை போதும்… நான் நம்பு கிறேன்… நம்ப முயல்கிறேன்… நான் உனக்குத் தேவை தானே….? இல்லை, அன்பைப் பிச்சையாகப் போட்டிருக் கிறாயா…? ஐயோ, அதை மட்டும் செய்யாதே… நான் உயிரோடு இறந்துவிடுவேன்…”

அந்த வார்த்தைகள் என் ஆன்மாவிலிருந்து வெளிக் கிளம்பிய கணம் யாரோ என்னைச் சடாரெனப் பற்றி யிழுப்பதுபோல் உணர்ந்தேன். மறுகணம், நான் அந்தக் கண்ணாடிச்சுவருக்குள்ளாய் பெட்டிக்குள் நுழைந்து கொண்டிருந்தேன். நான் உள்ளே வலியில் கோணிய முகத்துடன் உறைவுநிலைக்கு வரவும், அந்தக் கண்ணா டிச் சுவரில் எற்பட்ட திறப்பு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது!

மறுபடியும் வெளியே வர என்ன செய்வது என்று புரியாமல் வழிகாட்டியை நோக்கியதில், அவன் நிதான மான விரைவுடன் நானிருந்த பெட்டியை விட்டு விலகிச் சென்றுகொண்டிருப்பது கண்டது. ஒரு பார்வைக்கு அந்த மனிதனுடைய முதுகுப்புறம் மிகப் பரிச்சயமான ஒரு தேகவடிவமைப்பில் தெரிய, இன்னுமொரு உச்சத்தை எட்டியது வலி.



Ø       

















No comments:

Post a Comment