LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, June 5, 2015

மற்றும் சிலதிறவாக் கதவுகள் _ ’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு கவிதைகள் 41 _ 45

மற்றும் சிலதிறவாக் கதவுகள்  _ 
’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு


கவிதைகள்   41 _  45




41.உயிர்நிலை

எழுந்த சமாதிக்குள்
விழி பிதுங்க
மூச்சடைக்க
அதுநாள் நுகர்ந்த வசந்தம்
நெஞ்சு ஊற
நினைவு மீற
தந்ததும் கொண்டதும்
சந்திர சூரியனாக
ஏறிய தேரின் கால்கள்
ஏறிய தேர்க்கால்களாக _
எல்லாம் சுபாவம்….
தின்னத் தீருமோ கொன்ற பாவம்?




42. கொதிகலன்

மண் தின்று சென்ற வண்ணம்.
சோற்றுக்கப்பால் நூற்றுக்கணக்கான பசிகள்.
தோற்றுத் திரும்பும் காற்றின் வசியம்.
நேற்றின் நெருஞ்சிகளில் குருதி கசிந்தபடி.
நெருப்புக் கம்பியாய் சிரசில் சொருகும் சூரியன்
முள்ளெடுக்கும் முள்ளாய் கும்பியாற்ற,
மிதியடிகளைத் துறந்து உச்சிவெயிலின் மிச்சத்தையும்
உள்வாங்கிக்கொள்ளவேண்டும்போல்…..



43. அமரத்துவம்

காலத்தின் கடைசிப் படிக்கட்டில் நின்றவாறு
கடலையே அவதானித்துக்கொண்டிருந்தாள்
அந்த தேவமகள்.
இருகைகளின்  பக்கங்களில் தொய்ந்துகிடந்தது
இயக்கம்.
என்ன வேண்டும் என்று வினவிவரச் சொல்லி
கடல் முன்னுந்தியது அலைகளைக் கனொவோடு.
முகமன் கூறிய நீர்ச்செல்வங்களை
மெல்ல வருடியது அவள் புன்முறுவல்.
அகமகிழ்ந்து தட்டாமாலையிட்டுத் திரும்பின அவை
ஏதும் கேட்காமலே.
எட்டா உயரத்திலிருக்கும் தொடுவானம்
மட்டுமீறிய அன்பில் முதுகு வளைந்து
நடுக்கடலை உச்சிமோந்தது.
பரவிய பரிதிக்கிரணங்கள் வயதின் ரணங்களாற்ற
காலாதீதக் கரையில்
நிச்சலனம் உறைய சித்தித்திருந்த புத்துடலில்
சிறகுகளாகியிருந்தது கத்துங்கடல்!

(* பத்மினி Madamக்கு)





44. ஊழியம்

பொற்கிழிகளை யளித்துப் புதுவயல்களைப்
பரிசிலாக்கி
‘போய் வா பால்வெளி’க்கென
வரமளித்த அரசிக்கு
வந்தனம்
வெண்சாமரம்
வைராபரணம், வழிபாடு
வைபோகம்….
பயணப் பொதி சுமந்து
பயனாளியையும் சுமந்து
அயராமல் கொதிவெயிலில்
வெறுங்கால் நடை பழகும் ஏழைச்
சிறுவனின் பாசம்
விசு வாசமெல்லாம்
எழுதப்படாது போகும்.

 




45.சுமை

சம்மதத்திற்கு அறிகுறியாகா மௌனத்தில்
உறை நெஞ்சின்
அடியாழ வீதியில் போட்டுடைக்க லாகா
பானை நிறைய யோனிகளோடு
வீடடைந்துகொண்டிருக்கிறாள்
தானழிந்த நளாயினி.




No comments:

Post a Comment