LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 13, 2025

சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

சிறுமிகளின் இரட்டைச்சடையும் குதிரைவாலும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



குட்டிப்பெண்ணுக்கு அவளுடைய அம்மா எப்போதுமே அத்தனை இறுக்கமாக இரட்டைச்சடை பின்னிவிடுவாள்
காதுகளின் பின்புறமும் பிடரியிலும் நெற்றிப்பொட்டுகளிலும் வலி தெறித்தெழும்.
தாளமுடியாமல் சிணுங்கினால் நறுக்கென்று குட்டுவிழும்.
நடுமண்டையும் சேர்ந்து வலிக்கும்.
அல்லது குதிரைவால்.
கோடையில் கசகசக்கும்.
ஆனால் அம்மாவுக்குப் பெண் நாகரீகமாக இருக்கவேண்டும்.
அதாவது, அவர் வகுத்த நாகரீக வரம்பெல்லைக்
குட்பட்ட அளவில்
அவர் வகுத்தது அம்மம்மா வகுத்திருந்ததில் பாதி
அச்சு அசலாகவும் பாதி புறந்தள்ளப்பட்டு
திரிந்து உருமாறியதாகவும்.
பள்ளிக்குச் சென்றபின் கூந்தலை அவிழ்த்துவிட்டுக்கொள்ளலாமென்றால்
வகுப்பில் எல்லோருமே விறைத்துக்கட்டிய பின்னல்களும் அல்லது கசகசக்கும் குதிரைவால்களுமாயிருக்க
பாடமெடுக்கும் கைகளில் இருக்கும் இல்லா
திருக்கும் பிரம்புகளின்
நீள அகலம் நினைவில் பேயாகத் தலை
விரித்தாடும்.
அன்று அப்படியொரு தலைவலி வந்தபோது
அம்மா அலறியடித்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றாள்.
மருத்துவர் ‘அறிவுகெட்டத்தனமா இத்தனை இறுக்கமாகப் பின்னியிருக்கிறீர்களே – நரம்புகளே அறுந்துவிடுமளவு?’ என்று கோபமாகக் கேட்டபோது அன்பு அம்மாவின் முகம் துவண்டுபோவதைக் காணப்பொறுக்காத சிறுமி
’ அம்மாவை ஏன் திட்டுகிறீர்கள் – இப்படிப் பின்னுவதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றாள்.
‘அறிவுகெட்டத்தனமா’ என்று மருத்துவர்
கூறியிருக்கத் தேவையில்லை’.
யாகாவாராயினும் நாகாக்க.
மருத்துவர் சொன்னது அவளுடைய மீட்சிக்கான தருணம் என்று அந்தச் சிறுமிக்குப் புரிந்திருக்க வழியில்லை…
ஓர் அந்நியர் அன்பு அம்மாவை முட்டாளென்று திட்டக்கேட்டு முட்டிக்கொண்டு கோபம் வரத்தானே செய்யும்…
மகள் சொன்னதைக் கேட்டு அகமகிழ்ந்துபோன அம்மா அடுத்தநாளிலிருந்து இன்னும் இறுக்கமாகப் பின்னக்கூடும்.
புரிந்தும் புரியாமலுமான குழப்பத்தில் உறங்கத்தொடங்கினாள் சிறுமி.

மூன்றாவது நதிகளுக்கு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2024, 14 FEBRUARY - மீள்பதிவு//

மூன்றாவது நதிகளுக்கு
***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
*********************************************************************
(அலைமுகம் என்ற தலைப்பிலான என் முதல் தொகுப்பில் இடம்பெறுவது)
..........................................................................................................................
*கல்லூரி நாட்களில் ஷேக்ஸ்பியரின் கதாபாத்திரம் ஹாம்லெட் எனக்குள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நடிகர்களில் மம்முட்டி. அவர் அனந்தேட்டன் என்ற பெயரில் ஒரு சரித்திரக் கதாபாத்திரமேற்று நடித்த படத்தைப் பார்த்த தாக்கத்தில் எழுதப்பட்ட கவிதை இது. படம் பெயர் நினைவில்லை. (எனது முதல் கவிதைத் தொகுப்பில் - அலைமுகம்- இடம்பெறுகிறது)
கால வரையறைக்குட்படாத, நெடுந்தொலைவுப் பிரியம், வாழ்வியல் பலன் எதிர்பாரா அன்பு உண்டுதானே!
......................................................................................................................................
மூன்றாவது நதிகளுக்கு
***********************************
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
**********************************
ஒவ்வொரு அசைவிற்கும்
உள்ளலை கொள்ளும் வைரப்பளீரிடலாய்,
காற்றை வாரியணைக்கக் கரங்களில் பெருகும்
காட்டாற்றுத்தினவாய்,
உடைந்து விடாதபடி குமிழ்களை
அடைகாத்துக் கொள்ளக்
கடுந்தவமியற்றும் மனதின் காலாதீதமாய்
அசந்த நேரத்தில் வசப்படுத்தி விட்ட இந்த
உயிர்ப்பின் ரஸவாதத்தை
ஊமையாய் சுமந்து கொண்டிருக்க முடியவில்லை
உரக்கப் பாட வேண்டும்
கண்டம் கானாமிர்தமாய்
காடுமலை மேடெல்லாம் கரைந்துருகப்
பாடிப் பரவ வேண்டும்
அண்டசராசரமும் காண
ஆனந்தக் கூத்தாட வேண்டும்
வரவேற்பிற்கும் பிரிவுபச்சாரத்திற்கும்
இடைநிரம்பியது வாழ்க்கை
வழியில் - ஆறாவதிலோ, அடுத்த மரத்திலோ
எனக்கான அம்பு
அழியு முன்
என் உயிர்க்கோலப் புள்ளிகள்
கோடுகளையெல்லாம்
கொண்டாடி விட வேண்டும்
உன்னையும்
அனந்தேட்டா!
அறிய மாட்டா யென்னை
அதனாலென்ன?
ஹாம்லெட்டுக்கும் தெரியாது!

(*மம்முட்டிக்கு)

வல்லமை தாராயோ…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 2019, FEBRUARY 9 - மீள்பதிவு//

வல்லமை தாராயோ….
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’கல்லடி பட்டாலும் சொல்லடி பட்டாலும்
நல்லபிள்ளைக்கழகு சிரித்துக்கொண்டேயிருப்பது’
என்று திரும்பத்திரும்பப் பரிந்துரைத்துக்கொண்டிருக்கிறார்கள்
நல்லவர்கள் சிலர்; நாலும் தெரிந்தவர்கள்…

ஏலாதய்யா எம்குலச் சாமிகளே……
என்ன செய்ய…
வாலைக் குழைக்கத் தெரியாத ஏழைக் கவிக்கு
வாய்த்த முதுகெலும்பு வளையாதது.

சூடு இருக்கிறது
சுரணையிருக்கிறது.

அரணையைப் பாம்பென்றால் ஆமாம்சாமி போட
’கீ’ கொடுத்தால் கைதட்டும் பொம்மையில்லையே கவி.

கருணைக்கொலை யென்ற பெயரில் காலங்காலமாய் பல கவிகளைக்
கைபோன போக்கில் கழுவிலேற்றிவருபவரின்
அருங்காட்சியகச் சுவர்கள் அரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
அறம்பாடலால்.

பாதகஞ் செய்பவரைக் கண்டா லவர் முகத்திலுமிழ்ந்துவிடச் சொன்ன
பாரதி காற்றுபோல்;
யாரொருவரும் கக்கத்திலிடுக்கிக்கொண்டுவிட முடியாது.

அம்மையப்பனாய் அறிவார்ந்த நண்பனாய்
அன்பே உருவான வாழ்க்கைத்துணையாய்
மொழி யிருக்கிறது.

இம்மை மறுமைக்கு இதுபோதும் –
வேறெந்த ஆசானும் தேவையில்லை.

பொந்தில் வைத்த அக்கினிக்குஞ்சுகளும்
வெந்து தணியும் காடுகளும்
வளர்கதையாக _

விரியும் பாதை. செல்வழி தொலைவு
சொற்பநேரமே இருப்பு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமி கவிதை.
சரணம் கவிதை.

வணக்கம் சொல்லி விடைபெறுகிறோம்
ஒரு சிறு பிரார்த்தனையோடு:
உம்மைப் பெண்டாளனென்றும் புல்லுருவியென்றும்
அம்பலத்தில் நாக்குமேல பல்லுபோட்டுப் பேசும்
நீசத்தனம்
யார்க்கும் வாய்க்காதிருக்கட்டும்.

அன்பின் துன்பியல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 2023, FEBRUARY 11 - மீள்பதிவு//

அன்பின் துன்பியல்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எல்லோரிடமும் அன்பாக
எல்லோருடைய கருத்துகளையும் அங்கீகரிப்பதாக
எல்லோருடைய வலதுகரமாக
எல்லோருடைய வலியுணர்வாளராக
வீங்கிப்புடைத்திருக்கும் அன்பெனக் கருதும்
ஒன்றை
வர்ஜாவர்ஜமில்லாமல் வினியோகித்துத்
தன்னை வள்ளலாக்கிக் காட்டும் முனைப்பில்
தன் கையிலிருக்கும் அன்புப்பண்டத்தை
சின்னச்சின்னத்துண்டுகளாகக் கிள்ளியெடுத்து
அனைவருக்குமாய் ஆங்காங்கே வீசியெறிவதாய்
அணையாத விகசித்த புன்னகையோடு
விருப்பக்குறியிட்டவாறிருக்கும்
அன்பே யுருவானவராய்த்
தன்னைத்தான் கட்டங்கட்டிக் காட்டிக் கொண்டிருப்பவருக்கு
என்றேனுமொரு ’அன்புக்கடல்’ விருது
மட்டுமாவது
கிட்டாமலா போய்விடும்....?.

கவிதை வாசிப்புக் காணொளிகளும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதை வாசிப்புக் காணொளிகளும் கவிதையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நவீன கவிதையாகச் சொல்லப்படும் சமகாலக் கவிதையை
மசாலா சினிமா பாணியில் கிசுகிசுக்கும் குரலொன்று வாசித்துக்கொண்டிருக்கிறது……
கவிதைக்குள் இருக்கும் சோகம் அந்தக் குரலின்
மிகையுணர்ச்சியில் எரிச்சலூட்டும் அவலமாக மாறுகிறது.
ஆனால் 'அடடா என்ன அருமை!'களும் 'Woo hoo!' களும்
’வாரே வா’க்களும்
அனேகரிடமிருந்து எழுந்தவண்ணமே.
அந்தக் கவிதையை எழுதியவர் உட்பட.
இடையிடையே கவிதை வாசிக்கும் குரல் விடும் பெருமூச்சுகள் கவிதைக்குள் கேட்கவில்லையே
என்று
எவரொருவரும் கேட்கலாகாது.
எவருக்கும் எவரொருவருக்குமிடையேயான அர்த்தபேதங்களைப்பட்டியலிடத் தொடங்கும்
அந்தக் குரல்
ஏழுக்குப் பிறகு பத்தைச் சொல்லும்போது
அதில் கிளம்புமொரு (எத்தனை நன்றாகப் படிக்கிறேன் பார்த்தாயா) குழந்தைத்தனமான பெருமையில்
கவிதைக்குள்ளிருக்கும் தத்துவமும் குறியீடும்
காணாமல் போய்விடுகின்றன.
ஒப்பனைக்கண்ணீர்விட்டு அழுதபடியே வாசிக்கும் குரலில்
என் கண்களிலிருக்கும் குளங்கள்
ஒரேயடியாக வறண்டுபோகின்றன.
கவிதையின் பாதியில் தூரத்தே ஒரு ரயில் போய்க்கொண்டிருப்பது காட்டப்படுகிறது.
அத்தனை தொலைவாக விரைந்துகொண்டிருக்கும் அதில் எப்படி ஏறிக்கொள்வது என்று புரியாமல்
அலங்கமலங்க விழிக்கிறது கவிதை
வாசிக்கும் குரல் கவிதை நேசிக்கப்படவேண்டியது
என்று குறிப்புணர்த்துவதாய்
ஒரு மாதிரி உயர்ந்துதாழ்கிறது.
ஒரு கணம் அந்தரத்தில் அறுந்து தொங்குவதா
யுணர்ந்து
அஞ்சி நடுங்குகிறது கவிதை.
வாசிக்கும் குரல் கவிதையை இழைபிரித்துத்
தருவதான நினைப்பில்
துண்டுதுண்டாகக் கடித்துப் போட _
வாசிப்பு முடிகிறது.
குதறப்பட்டுக் கிடக்கும் கவிதை
அந்த வாசிப்பையும்
அதை ரசித்துக் குவிந்தவண்ணமிருக்கும்
லைக், கமெண்ட், ஷேர்களையும் கடந்துபோய்க்கொண்டிருக்கிறது
தனக்கான மௌ(மோ)ன வாசகரைத் தேடி....
தனியறையொன்றில் நகம் கடித்தபடி
எழுதிக்கொண்டிருக்கும் கவியை நாடி.....reactions:
Shanmugam Subramanian

அறிவாளி – அறிவீலி - அரசியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அறிவாளி – அறிவீலி - அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தன்னை யறிவாளி யென்று சொல்கிறவரின் சொல்கேட்டு
சொல்லமுடியாத ஆனந்தத்தில் சொக்கிநிற்கிறார்கள்;
சுற்றிச் சுழல்கிறார்கள்;
சுடரொளி வீசுகிறார்கள்;
சுநாதமிசைக்கிறார்கள்….
சொல்பவர் அந்தச் சொல்லைச் சொல்லத் தகுதியானவரா
வென்றெண்ணத் தலைப்படாமல்
சொல்பவரின் சொல்படி தானே அறிவாளி யென்று சுற்றுமுற்றுமுள்ளவர்க்கெலாம் தன்னைச்
சுட்டிக்காட்டும் முனைப்பில்
காரணகாரியங்களோடு மறுத்துப்பேசுவோரை
கோமாளிகளாகச் சித்தரித்து
சொந்த சகோதரர்களுக்கு முட்டாள் பட்டம்
கட்டப்படுவதை கைதட்டி ரசித்து _
சிறகசைத்துப் பறக்காத குறையாய்
சீக்கிரசீக்கிரமாய் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து
வரிசையில் நின்று
வாழ்நிலத்தைத் தன் வம்சாவளிச் சொத்தாக பாவிக்கும்
வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்க்கே
வாக்களித்துவிட்டு வந்தார் வெற்றிப்புன்னகையோடு.
அந்த வாக்காளரே அறிவாளி என்று அறைகூவலிட்டவாறே
அறிவாளிக்கெல்லாம் அறிவாளி
அரியணையில் அமர்ந்துகொள்ளுமோர் நாளில்
அடுத்தவர்களை முட்டாள்களாய் மட்டுமே
அடையாளங்காணப் பயிற்றுவிக்கப்பட்ட
பரிதாபத்துக்குரிய உண்மையான அறிவீலி
அடிமையாய் அந்த வேலியிட்ட திறந்தவெளியில்
அம்மணமாய் நின்றுகொண்டிருக்க
ஆயிரங்கால் ஜந்து ஒன்று
எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து
கடித்துக் குதறத் தொடங்கும்.

Friday, February 7, 2025

உண்மை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உண்மை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
உண்மையெனும் ரோஜாவின் மணம்
ஊர்முழுக்கப் பரவும் என்றபடியே
இதழிதழாய்ப் பிய்த்துக்கொண்டார்கள்.
ஆளுக்கொரு பிடி யள்ளிக்கொண்டார்கள்.
சிலர் வாயில் போட்டு மென்றார்கள்
சிலர் மூடிய உள்ளங்கையில் முனைப்பாகக் கசக்கியெறிந்தார்கள்.
சுருங்கிக்கிடந்த இதழொன்றை யெடுத்து
இதுதான் முழு ரோஜா என்றார் ஒருவர்.
பின்னோடு வந்தவர்கள் ’அதேதான், அதேதான்’ என்றார்கள்.
வழியெங்கும் காலையில் இறைந்துகிடந்த
இதழ்களின் வண்ணம்
அந்தியில் வெளிறிப்போயிருந்தது.
இதுதான் அசல் ரோஜா நிறம் என்றார் ஒருவர்.
‘அதேதான் அதேதான்’ என்றார்கள்
அருகே நின்றிருந்தவர்கள்.
நூற்றுக்கு நூறு உண்மை
சில பத்திருபதுகள் குறைந்து திரிந்து
அரைகுறை உண்மையாகி
கரைகடந்து நகர்வலம் போய்க்கொண்டிருப்பதைக்
கண்ணால் பார்த்ததாய் யாரோ சொல்ல
யாரோ கேட்க..........