LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 30, 2025

கொச்சைவார்த்தைகளும் குழந்தைகளும் பெரியவர்களும் - '’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கொச்சைவார்த்தைகளும் குழந்தைகளும் பெரியவர்களும்

'’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தெருவில் இரண்டு சிறுவர்கள்
கெட்ட வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தார்கள்.
இது வழக்கமாகக் காணக்கிடைப்பதுதான்;
போகும் வழியில் உள்ள கான்வெண்ட் பள்ளியிலிருந்து வெளியே வரும் சில சிறுவர்கள் ஆங்கிலத்தில் அந்த வார்த்தைகளை ஒருவர் மேல் ஒருவர் சகஜமாக எறிந்துகொள்வார்கள்.
பெரும்பாலும் அந்த வார்த்தைகள் அம்மாவின் பத்தினித்தனத்தைக் குறித்ததாக இருக்கும்.
பெண்டாட்டியை அவிசாரியாகக் குறிப்பதாக இருக்கும்.
பெண்ணின் அந்தரங்க உறுப்பை அவமானப்படுத்தும் சொல்லாக இருக்கும்.
ஒருமுறை அப்படி சண்டைபோட்டுக்கொண்டிருந்த இரு சிறுவர்களை அருகே அழைத்து அந்த வார்த்தைகளைச் சொல்லுவது சரியல்ல என்று ஒருமாதிரி சொல்லிப் புரியவைத்தேன்.
அந்த வார்த்தைகளின் அசிங்கம் அவர்களுக்கு சரியாகப் புரியாததுபோலவே
நான் சொல்வதையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியாதவர்களாய்
சில கணங்கள் முழித்துக்கொண்டு நின்றார்கள்.
பின், ‘இனிமேல் சொல்லக்கூடாது, சரியா?’
என்று நான் சொன்னதற்கு
அரைகுறையாகத் தலையாட்டிக்கொண்டே சென்றார்கள்.
பின்னொருநாள் சாலையோர தேனீர்க்கடையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவர்கள் அதே வார்த்தைகளைப் பெரிதாகச் சிரித்து போவோர் வருவோர் அனைவரும் கேட்கும்படி பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
பக்கத்தில் போய் சொல்லாதீர்கள் என்றால் ‘போய், அங்கே அந்தப் பெண்கள் இன்னும் எத்தனை வண்டை வண்டையாகப் பேசுகிறார்கள் என்று கேட்டுப்பாரு” என்று சொல்லக்கூடும்.
பேசாமல் என் வழியே சென்றேன்.
பெண்கள் கல்லூரியொன்றின் வாசலிலிருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தபோது
மாணவிகள் சிலரும் சக பெண்ணை மதிப்பழிக்க
அதே வார்த்தைகளை முன்மொழிந்து வழிமொழிந்துகொண்டிருந்ததைப் பார்த்து
ஒருவித உதறலெடுத்தது.
நிலநடுக்கமோ என்று குனிந்து பார்த்து
இல்லையென்பதை உறுதிசெய்துகொண்டேன்.
இன்று சில அறிவுசாலிகளும் சமூக ஊடகங்களில் அதே ’அசிங்க’ வார்த்தைகளை
முழுப்பிரக்ஞையோடு பயன்படுத்துவதைப் பார்க்கிறேன்.
அத்தனை அநாயாசமாக உதிர்க்கப்படும் அந்த வார்த்தைகள் பெண்ணைத் தாண்டி வேறு சில வற்றையும் அவதூறு பேசுகின்றன _
அதேயளவு அசிங்கமாய்……


பறக்கும் பலூன்! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பறக்கும் பலூன்!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

சிறுமி அத்தனை ஆர்வமாய் அத்தனை ஆனந்தமாய்
அத்தனை அன்பாய் அத்தனை அழகாய்
ஒரு பலூனை ஊதுகிறாள்.
முழுமுனைப்போடு மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி
ஒரு கால்பந்து அளவுக்கு அதை உப்பவைத்து
ஒரு கையின் இருவிரல்களால்
பலூனின் திறப்பை இறுகப் பிடித்தபடி
வாயிலிருந்து வெகு கவனமாய் வெளியே எடுக்கிறாள்.
அதற்கென்றே காத்துக்கொண்டிருந்தவர்
கையிலிருந்த குண்டூசியால் பலூனில் குத்த
ஒரு நொடியில் உருக்குலைந்து சுருங்கித் தொங்குகிறது பலூன்.
சிறுமி அழுவாள் என்று எதிர்ப்பார்க்கிறார் அந்த மனிதர்.
சிறுமி அழவில்லை.
காயப்படுத்தினாலும் தன்னிடமே ’ஊதித் தாயேன்’ என்று
மருந்து கேட்பாளென திட்டவட்டமாக நம்புகிறார்.
அவள் கேட்கவில்லை.
கையிலிருந்த இன்னொரு பலூனை அதே முனைப்போடு
ஊத ஆரம்பிக்கிறாள்.
ஆத்திரம் மேலிட, தவறவிட்ட குண்டூசியைத்
தேடப் பொறுமையின்றி
அருகே கிடந்த சிறிய கூர்கல்லைக் கையிலெடுத்து
இரண்டாவது பலூனையும் கிழித்துவிடுகிறார்.
சிறுமியிடம் மூன்றாவது பலூனில்லை.
பலூன் வாங்கக் காசில்லை.
‘இவ்வளவுதானா நீ’ என்பதாய் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு
’உங்களால் ஒரு பலூன் செய்ய முடியுமா?’ என்று கேளாமல் கேட்டு
இரண்டெட்டு முன்னோக்கி நடந்து
சாலையோரக் குட்டிச் சுவரில் சாய்ந்து நின்றபடி
கழுத்தை சாய்த்து
பக்கத்துவீட்டு மாடியிலிருந்து நீளும் நூலில் பறந்துகொண்டிருக்கும் பலூனை
ஊதத் தொடங்குகிறாள் சிறுமி...All reactions:

அவரவர் நிலா! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் நிலா!

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நிலா என்னைத் தேடிவந்ததுண்டு
அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா?
மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை
இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும்
விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன்.
அலைபுரளும் உலக உருண்டையாய் விசுவரூபமெடுக்கும்.
அம்மிணிக்கொழுக்கட்டையாய் உருளும் குரல்வளைக்குள்.
'இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்ததுபோலிருந்த'தொரு காலம்;
நானே நிலவாகி நின்றதொரு காலம்;
கண்ணால் காற்றேணி கட்டி நள்ளிரவில்
நிலவில் வலம் வந்ததொரு காலம்;
நிலவிறங்கி நெருங்கிவந்து என் நெஞ்சுருக
தலைவருடித் தந்ததொரு காலம்;
காணாமல் போய்விட்ட நிலவைத் தேடியலைந்து
மறுஇரவில் கண்டடையும் வரை
உயிர் பதைத்துப்போனதொரு காலம்;
நாளெல்லாம் இல்லாதுபோனாலும்
நிலவுண்டு நிரந்தரமாய் என்றுணர்ந்துகொண்ட
தொரு காலம்;
கண்டாலென்ன காணாவிட்டால் என்னவென்று
எட்டிநின்றதொரு காலம்;
உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் இல்லை யென்று
விட்டுவிடுதலையாகி நிற்க வாய்த்ததொரு காலம்…..
அன்று வந்ததும் இன்று வந்ததும் அதே நிலாவா?
யார் சொன்னது?
அழைத்துக்கொண்டிருக்கிறோம் ஒருவரையொருவர் நிலவென்று.
அவரவருக்கு அவரவர் நிலா……








கலைடாஸ்கோப் கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப் கவிதைகள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

1. வழிச்செலவு
May be an illustration of tree


ஓருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில்
எனக்கேயெனக்கான நிழலை
குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில்
இன்று
நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர்.
சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி;
சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின்
திருப்பெயர்களைச் செதுக்கியபடி;
சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;
சிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து
நெடுஞ்சான்கிடையாய் விழுந்து கும்பிட்டபடி.
சிலர் சலசலத்திருக்கும் பறவைகளைப்
பலகோணங்களில் படமெடுத்தபடி…..
உணவிடுவார்களோ உரமிடுவார்களோ, தெரியவில்லை.
மரத்தின் பச்சையம் மாற்றுக்குறையாமலிருக்கிறதா?
அறியேன்.
வனாந்திரம் மரத்தின் விருப்பா? அன்றி
விபத்தாயமைந்த இருப்பா?
கனாக்கண்டு முடித்தபின் கண்விழித்த கதையாய்
பயணப்பொதி சுமந்துவழியேகும் தருணம்
விழிநிரம்பும் நீர் வழியும்
மரம் வாழப் பொழிமழையாய்.

***


2. வீதியுலா

தொலைவிலோர் ஊர்வலம் வந்துகொண்டேயிருக்கிறது.
அது மண ஊர்வலமா பிண ஊர்வலமா – தெரிவதில்லை.
சில சமயம் சன்னமாய்க் கேட்கும் இசை புலப்படுத்திவிடுகிறது.
பலசமயங்களில் இல்லை.
இப்பொழுதெல்லாம் மணவிழா மண்டபங்களில் ’வாராயென் தோழி வாராயோ’வை அடுத்து வந்துவிடுகிறது
’போனால் போகட்டும் போடா’……
ஊர்வலம் என்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது;
நான் ஊர்வலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன்.
வருவதும் போவதும் சந்திக்கும் புள்ளியில்
உருவாகும் கருந்துளை வெற்றிடமோ? அணுத்திறமோ…..?
அதோ, அந்த ஊர்வலத்தில் நானும் போய்க்கொண்டிருக்கிறேன் _
மௌனமாய் _ மகிழ்ந்து சிரித்தபடி _ மாரிலடித்து அழுதபடி……
ஓலமும் ஆலோலமும் ஆனபடியே….
தொலைவில் தெரியும் வெளிச்சப்புள்ளி
மோட்டார் பைக்கா? தண்ணி லாரியா….?
ரய்லில்லை, கப்பலில்லை என்று உறுதியாகச் சொல்வதற்கில்லை.
நான் நகர்ந்துகொண்டிருப்பது
நிலத்திலா, நீரிலா, ஆகாயத்திலா என்று
நிச்சயமாகத் தெரியாத நிலை.
உள்ளேயொரு ஆகாயவிமானம் தரையிறங்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு கப்பல் தரைதட்டிக்கொண்டிருக்கிறது.
இரண்டிற்குமிடையேயான வித்தியாசத்தில்
தொலைதூரத்து ஊர்வலம் தவறாமல் நடந்தவாறு.


***

3. மால்

கற்றது கையளவெனினும்
கடல்முழுக்கப் பொங்கும் பால்
முற்றிய பித்துநிலையில்
மனதில் முளைத்துவிடுகிறது வால்
புற்றுக்குள் பாம்புண்டோ என்றறிய
நுழைக்கவோ கால்
சற்றேறக்குறைய நடுமார்பில் தைத்தபடி
அற்றைத்திங்களிலிருந்தொரு வேல்.
காற்றாடிக்கு எதுவரை தேவை நூல்?
உற்றுப்பார்க்க ஒரே இருள்தான்போல்.
வெற்றுச் சொற்களுக்கு வாய்த்த மௌனம் மேல்......

***

4.அரைகுறை ரசவாதம்
ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும்
இறுகிய கருங்கல்லாகவும் காலம்….
நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
என்னால் முடிந்த உருவங்களையெல்லாம்
வனைந்துபார்க்கிறேன்.
நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு
இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம்
நான் குருவியாய் செதுக்க முனைந்து குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த உருண்டையைப் பார்த்து.
கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது.ll reactions: