LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 30, 2014

மற்றும் சில திறவாக் கதவுகள் : கவிதைகள் 13 - 18

மற்றும் சில திறவாக் கதவுகள்

ரிஷியின் 3வது கவிதைத் தொகுப்பிலிருந்து
கவிதைகள் 13 _ 18

(மகிழம் வெளியீடு. 2005)



13. ஜடவுயிர்

வளைவுப்பாதையிலான ஓட்டப் பந்தயம்
மியூஸிக்கல்சேர் மும்முரமாய் நடந்தவண்ணம்….
வாத்திய இசை நிற்கும்போதெல்லாம்
வதைபடுகின்றன இருக்கைகள்.

ஒவ்வொன்றாய் அறைந்து மூடப்பட
முடிவாய்
தனிமையில் உறையும் ஒன்று.

இனி
வின்னர், ரன்னர் அப், வெள்ளி கப்….

மூலையில் சாய்ந்திருக்கும் நாற்காலிகளுக்காய்
தாலாட்டுப் பாடத் தோன்றுகிறது.




14.ராமேஸ்வரம் போகலாமா?

அழுக்கேறியிருந்த அரசாங்கப் பேருந்தை
யெனக்காய் அழகிய ரதமாக்கி
சாரதம் செய்தான்.
ஆர்வமாய்
தான் அறியாத ஜெர்மானிய வீதிகளில்
என்னோடு பயணம் மேற்கொண்டான்.
குண்டு குழிகள் நிரம்பிய தார்ச்சாலையை சீராக்கி
வண்டி யோட்டிய அந்தக் கரங்களின் வீர்யம்
வணக்கத்திற்குரியது.
முறுக்கிக் கண்ட நரம்புகளில்
பிரத்யேக வாத்தியமொன்றின் தந்திகள்
அதிர்ந்த வண்ணம்.
இருவிழித் தேடலின் நீட்சியாய்
பிறந்த அழைப்பொரு
வரம் போலும், சாபம் போலும்.
கரந்திருந்தது காமமா? காதலா?
போற்றலும் தூற்றலுமா யெத்தனை காதங்கள் _
ஏற்றிருப்பின்?
உரிய மனோநிலை வேண்டும் சிறு
முத்தம் பகிர்தலுக்கும்அழைப்பை
மறுதலித்த மனதில் நாட்பட
கேட்டவன் மறந்து போக,
கேள்வியின் நெரிசலில் நான்
மாட்டிக் கொண்டேனாக.




15.அரசியல்

சேடிப் பெண்கள் புடை சூழ
சரசமாடிக் கொண்டிருந்தது அரச ஜோடி.   
மன்னவன் கை ராணியை மேய
தன்னவனுக்கான விரகத் தீயில்
வெண்சாமரம் தவறவிட்ட கை
துண்டிக்கப்பட்டது தண்டனையாய்.





16.          செங்கோல்

அந்தப்புரத்தின் அறுநூறு சுந்தரப் பெண்டிரில்
அன்றைக்கெனத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களை
ஆசை தீர தின்று முடித்த பின்    
இந்தப்புறம் வரும் மன்னர் தப்பாமல்
ஒப்பிட்டுப் பார்ப்பார் எப்போதும் போல்:
அடைக்கட்டை விரலதிகம் அவள் முலைவிட்டம்.
குறையாழமே குட்டித் தொப்புள். இன்னொருவள்
மறைவிடத்தில் தட்டுப்படும் மருவழகோ
புறையேறக் கள்வெரி யூட்டுவது திட்டம்.
மல்லிகைப் பூ மணம் மேனியெங்கும்.
துல்லியத் தனி நிறத்தில் துலங்கும் அல்குல்.
கருக்கல் வரை கலவி செய்தும்
களைக்க மாட்டாள் கனகாம்பிகை.       .
வளைக்கரத்தாள் வடிவுக்கரசியின்
துடியிடை அருட்கொடை.
நித்திலவல்லியின் நிதம்பமேடு
புத்தம் புது சுகம்
என்பதோடு
இன்னுமின்னுமின்னுமாய்
பட்டமகிஷியோடு கட்டிப் புரண்டபடி
சொன்ன சொல் லொவ்வொன்றும்
வன்புணர்ச்சியாக _
வேய்ங்குழலியின் யோனிவாய்
ராணியில் ஈனமாக,
இருவிழியோரம் தோயும் நீர்
திரிவேணியினுடையதாக….




17.உள்வெளி

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
அணுகுண்டாய் ஒன்றுவிர்ர்ரோடித் துளைக்க
அருகிருந்தது பாவனையாய் சாய்கிறது சுருண்டு….
மருள் மனக் காட்சியில்
வழக்கம்போல்
முதல் குழந்தை பூவாய் அபிநயிக்க
விழுந்த பிள்ளையும் மலரச் சிரிக்கிறது.




18.தான்தோன்றித் தருணங்கள்

அபிமானம் அவமானம் பிடிமானம் வெகுமானம்
செரிமானம் வருமானம் வேறு மானாதி மானமெலாம்
சிறுதுளி மூச்சுவெளியேற்றமன்றிப் பிறிதொன்றில்லை யாக
போகும் வேகத்தில் தார்ச்சாலை நாகத்தின்
மாணிக்கங்கள் மினுமினுங்கச்
சிணுங்கும் மனச் சொப்பனங்கள் சொல்லாமல்
பதுங்கிக் கொள்ளும்
பூங்கொத்துக்களின் முதுமக்கட்தாழிப் பாழுக்குள்
முகிழ்த்து மேலெழும்பும் மூலாதார வலி தீண்ட
வேண்டும் வேண்டும் பதுங்கு குழி தோண்ட வேண்டும்
செய்யும் தொழிலே தெய்வம் அன்பு தவமாக
என்னென்ன பொய்புனைசுருட்டுகள் வனைய வேண்டும்
எத்தனை கிலோ செய்ய வேண்டும்
குறிப்புகள் உண்டா வகுப்புகள் உண்டா
கந்தா கடம்பா கார்த்திகேயா நின்
குமரிமுனைகள் நிணத்தாலானதா மனதா லானதா
நிஜமா பொய்யா உன் recipe எனக்கு கந்ததா
என் recipe உனக்கு உகந்ததா
எனக்குப் பிடிக்குமா உனக்குப் பிடிக்குமா
மனம் கீறல் விழுந்த இசைத்தட்டாய்
தினம் பாடியபடியிருக்கும்
அந்தக் காலக் காதற்பாட்டின் அதே வரிகளின்
பிசகிய சுருதியில்.
குருதியப்பிய சுவர்க்கடிகார முட்கள்
என் சிறகுகளை யெப்போதும் அரிந்துகொண்டிருக்க
மழித்தலும் நீட்டலும் வாழ்க்கையென் றான பின்
மார்க்கங்களைப் புரட்டிப் போட்டுப் பயனென்ன கூடும்
சொல் மனமே முருகனின் மயில் வாகனமெனில்
ஆறுமுகத்திற்கு எத்தனை தாகங்கள் எண்ண
சின்ன விழிப் பார்வையின் என்னென்ன வார்த்தைகளை
மொழியாக்கியதில் பழி சேர பிழை சேரப்
பீழை சேர்ந்துளதோ அன்பின் வழியில்
பிடரிபடும் இருகால் ஏகும் பொழுதில்
நடந்ததும் கடந்ததும் இடறிவிட இடறிவிட
தினங்கள் மாதங்களாகி வருடங்களாகிய பிறகும்
அதேயளவாய் பசுமையை உசாவுதல் மடமையோ
பன்னிப் பன்னி அறிவுறுத்திக் கொண்ட பின்னும்
இன்னும் ஏன் புண்பட்டுக் கசியும் அகம் தானும்
போனால் போகட்டும் போடா வா வா
அருகில் வா வந்த பின் விலகிப் போ
நித்தமும் தத்துவம் ஒப்பித்தல் உத்தமம்
அத்தனைக் கத்தனை சித்தம் கப்பிய இருளில்
தன்னைத் தான் குத்திக் கிழித்திருக்கும் பித்து மனம்
பத்தியம் பார்க்காது முள் விழுங்கி விழுங்கி யுள்
சேரும் சித்திரத் தன்ன காயம் உலரத்
தழும்புகள் அழியத் தான்
தன்னை நித்திரையில் பத்திரமாக்கும்
தாற்காலிக மரணத்திற்கென் தோத்திரம்.




மற்றும் சில திறவாக் கதவுகள் _ கவிதைகள் 19 - 24

மற்றும் சில திறவாக் கதவுகள்

ரிஷியின் 3வது கவிதைத் தொகுப்பிலிருந்து
கவிதைகள்  19 - 24


19. சமாதிகள்

எண்ணிறந்த ஆறடிகளைக் கொண்ட அந்த சமாதியில்
தண்சலவைக்கல் விரிப்பில் சென்றிருந்தான் மெல்ல.
தன் கட்சியா ளென்றெதிர் வரும் சிலர் புன்சிரிக்க
தரங்கெட்டவ என்றெதிர் கட்சியினர் கண்ணெரிக்க
என்பாட்டில் காலார நடக்கக் கிட்டிய
இன்வெளி யிது என் றவன் எப்படிச் சொல்ல.



20. பிரக்ஞையும் பிரதிக்ஞையும்

இன்னொரு நாளில் இந்நேரச் சற்று முன் நான்
இடம் பெயர ஆரம்பித்தேன்.
இதுகாறும் வேராழ்ந்திருந்ததன் அடையாளமாய்க்
கொண்டிருந்த மேகத்திரள்
உடைந்து உருக்குலைந்தது ஒரு நூறு சில்லுகளாய்.
மடையரே கதைப்பார் மண்ணில் ஏதும் நிலைக்குமென்று.
முக்கண்கள் முழுவிழிப்பில்
ஒன்றில் நீரும் ஒன்றுல் நெருப்பும் ஒன்றில்
பெருவிருப்பும்
ஒவ்வொன்றாய்க் களையறுத்தேன் எனதேயான கைகளினால்.
நீருடை நயனம் அற இறுகியது உள் இரும்பாய்.
நெருப்புறை கண் சுழலக் கனன்றது அவிந்தது.
பெருவிருப்பின் கண்டம் நெரிபட நேயம் விடுபடப்
புறப்பட்டது.
நெடுநாள் தீங்கனவொன்றன் நிறைவேற்றமாய்
கழுமேடையில் என் தலை.
தெறித்து விழு முன் அறுந்த சிறகுகளோடு
பறந்து போகிறேன் என் அத்துவானத்திற்காய்.
நான் கேட்க என் கானம், ஆங்காலம் போங்காலம்.
பழுதுறும் பஞ்சரத்தினங்களுக்கும் தஞ்சம்
குப்பைத்தொட்டியே ஆகட்டும்.
கற்றை வலி முற்றிய மனதின் கருநாகப் புற்றுக்குள்
கை யிட்டுத்
திருகியெறிந்தேன் நச்சு மாணிக்கங்களை.
பெறக் கிடைக்கலாம் இனி யென் பத்திரத்திற்கான
உத்தரவாதம் _
வறுமைக்கோட்டின் வெகு கீழே இறங்கிவிட்ட போதும்.





21. தகிப்பு

வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது.
எட்டாய் மடித்த உடலுடன் கிடத்தப்பட்டிருந்தான்.
குரல் மட்டும் விட்டு விட்டுப் பிச்சை யெடுத்தவாறு.
தொடுவான மெட்டாப்பயணத்தில் எதையோ
பிடிமானமாக்கித் தொட்டுச் செல்வதாய்
காலனேகம் எட்டிப்போகும்.
வற்ற மாட்டாது மிச்ச மிருக்கும் துளி மனிதாபிமானம்
ஒரு கணம் நம்மைப் பற்றிக் கிடத்தும் அவ்விடத்தில்
கொளுத்திக் கொண்டிருக்கிறது வெய்யில்.




22. தரம் தரா தரம்

லோகாயுத வாழ்வைச் சப்புக் கொட்டி முடித்த பின்
ஆகாயச் சுவையறியும் பேராசை யப்பிக் கொள்ளும்.
வேதாளத்தைப் பிடிக்க விதை சட்டென விருட்சமாகும்.
மடு மலையாகும் நொடியில் மாணிக்கமாகும் வெறுங்கல்லும்.
சொல்லாச் சொல் சொல்லியதாக்கும் காக்கும் பூதத்தைக்
காரியச் செல்லமாய்த் தூக்கிக் குடத்திலிட்டு வாகாய்
இடுப்பிலேந்திச் சென்றால் ஆகா சிறப்பு வந்து மோதும்.
கவிதைக் குணம் நிறம் மணம் யாவும் கமர்ஷியல்
த்ரீரோஸஸாய் சரிந்தாலும் தெரிந்தால் போதும்_
பரிச்சயத்தைப் புதுப்பிக்கத் தோதான நேரம். நாளும்
தோளேறி யெம்பிக் குதித்துத் தன்னை யெப்போதும்
அடையாளங் காட்டப் படித்தால் போதும் ஏகக்
கடைநிலை யெழுத்திற்கும் வழிபாடு நடக்கும் ஆம்
படைக்கஞ்சத் தேவையில்லை காசு பணம் பதவியும்
காவல் தெய்வங்களும் குடைபிடிக்கலாக ஆக
இடையறாது எழுதிப் பொழுது போக்காதே வெட்டியாய்.
இன்று தொடங்கினாலும் கூட சிட்டாய்க் கடந்திடலாம்
இருபதாண்டு இலக்கியத் திருகு பாதையை.
தரமெல்லாம் உனதாகிவிடும் எளிதாய், சில
திருவாய்மலர்ந் தருளல்களில், அறிவாய். அட
யாருக்கு வேண்டும் மடமாதே அறநெறிக ளெல்லாம்
பேருக்குக் கட்டத் தெரிந்தால் போதும் வரிகளை.
மோதிரக் கையுண்டு ஏராளம். கெட்டியாய்
பிடித்துக் கொள் இன்றே இப்போதே.
கட கடா குடு குடூ நடுவிலே பாதாளம் _
உட்டாலக்கடி கிரி கிரி யதை நீ திரிக்கக் கவிதை யடி.




23. அறவியல்

எலும்புகள் முறிய வன்புணர்ச்சிக்காளான தொரு
ஒன்பது வயதுக் குழந்தை.
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பதினான்கு வருடங்கள்.
உற்ற மித்ர பந்துக்கள் சூழக் கைப்பிடித்த
ஒன்பது வயதுக் குழந்தையைக் கூடினான் ஒருவன்.
குழந்தைக்கு ஆயுள் தண்டனை _ வாழ்நாள் முச்சூடும்.


24. இகம்

வராத ரயிலுக்காய் உள்ளே யொரு பச்சைக்கொடி
வீசிக்கொண்டே யிருக்கிறது. எனில்,
தண்டவாளங்கள் தடமழிந்து போனதாய்க் காண
வண்டி எங்கிருந்து வரும்? வானிருந்து
செங்குத்தா யிறங்கும் விமானத்தில் நானிரண்டாய்
பிளந்து நொறுங்கிச் சரிகிறேன் பொல பொல வென்று _
உலகத்தொழிற்மையமாய்.
பிடி விடாத கொடியோடு கிடக்கிறது கை,
உடலிலிருந்து கழன்று.
சடாரெனச் சின்னாபின்னமாகும் கனவுகளும் இன்னமும்
நாறும் பிணங்களுக்குள் நினைவுச்சின்னங்களாகும்.
இடிபாடுகளில் துடித்துக்கொண்டிருக்கும் சில
உயிர்களும்
அடங்கிவிடும் ஒன்றிரண்டு தினங்களில்.
பின், காலக் காரிருள் கனமாய் மூட
மறக்கத் தலைப்படும் மனம்.