LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 10, 2025

மொழிப்பெருங்கருணைக் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மொழிப்பெருங்கருணைக்
கவிதைகள்

- ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

1. மொழி
சின்னதாக இருப்பதால் கையிலெடுத்து
இடுப்பில் பொருத்திக்கொள்கிறேன்
என்பதால்
குழந்தையின் விஸ்வரூபம் எனக்குத் தெரிந்ததாகிவிடுமா என்ன?
வாய்க்குள் தெரியாத அகிலத்தை
மனதிற்குள் பார்க்க முடிய வேண்டும் நமக்கு.
அர்த்தம் புரிவதற்கு முன்பாகவே நம்மை
உள்ளுக்கிழுத்து முத்துக்குளிக்கவைக்குமொரு கவிதையின் ஆழத்தை
எதைக்கொண்டு அளப்பது?
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
தெய்வம் இல்லையென்பார்க்கு
குழந்தை இசையொத்தது எனல் நன்று.
அன்பிற்கும் அதிகாரத்திற்கும் தனக்கு
வித்தியாசம் தெரியுமென்பதை
உதட்டைப் பிதுக்கி ஒரு துளி கண்ணீரை
வெளியேற்றி
எத்தனை தெளிவாக உணர்த்துகிறது குழந்தை!
நாம் தான் அதை உள்வாங்கத்
தவறிவிடுகிறோம்.
பித்தம் தலைக்கேற
மொழியைக்
குழந்தையாக பாவிப்பதற்கு பதிலாக
குழந்தைத் தொழிலாளியாக நடத்தத் தொடங்கிவிடுகிறோம்.
ஒரு கட்டத்தில் நம் வளர்ச்சி முடங்கிவிட
நம்மைத் தாண்டி வளர்ந்துகொண்டேயிருக்கும் குழந்தை.

2. மொழிவாய்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிடம் நத்தையோடாய் இறுகிக்கிடக்கிறது
இவரிடம் இறக்கையாய் விரிந்து பறக்கிறது
பிள்ளையின் மழலையில் புதிதாய்ப் பிறக்கிறது
முதியவர் குழறலில் அதன் வேர் தெரிகிறது
ஒரு வியாபாரி கணக்குவழக்காய்
கைவரப்பெற்றிருப்பது
ஓர் ஓவியரின் வண்ணக்கலவைகளில்
இரண்டறக் கலந்திருப்பது
யார் யாரோ நகமும் சதையுமாக வழியமைத்துக்கொடுப்பது.
தீராத தாகத்திற்கெல்லாம் நீராகி
அமுதமுமாவது
கண்ணிமைப்போதில் இடம் மாறும் வித்தை
யதன் கூடப்பிறந்தது
காலத்திற்கும் அதற்குமான கொடுக்கல்வாங்கல்கள்
கணக்கிலடங்காது
அவரவர் வழிச்செலவுக்கான கட்டுச்சாதமாய்
தாகம் தணிக்கும் நன்னீராய்
தண்காற்றாய் தலைச்சுமையாய்….
கூடவேயிருக்கும் மொழி
இன்னொரு மேனியாய்
இதயமாய் மூளையாய்…
கூடுவிட்டுக்கூடுபாயவும் வழிகாட்டும்.
இன்றுமென்றும் நம் காலைமாலையாய்
நன்றும் தீதும் பிறிதுமாய் தேடிவந்து
தட்டிக்கொடுத்தும் முட்டுக்கொடுத்தும்
எட்டையும் நான்கையும் பெருக்கியும் கூட்டியும்
கழித்தும் வகுத்தும் பகுத்துரைக்கும்.
அழுகையில் அலறலில் ஆங்கார வசையில்
அதிமதுர இசையில்
அத்தரிபாட்சா கொழுக்கட்டைச்சுவையில்
அனார்க்கலியின் ஆடல்பாடலில்,
அழியாக் காதலில்.
அம்மாவின் இருப்பில்
அடிமனப் பெருவிருப்பில்
அங்கிங்கெனாதபடி யிருக்கும்
வீடுபேறாய மொழி யழிவதில்லை.
நாடிலியானோர் ஒருபோதும் மொழியிலி
யாவதில்லை.


3.மொழிவழி
திக்குத்தெரியாத காட்டில் தேடித்தேடி இளைக்கு
மென் நோயும் மருந்துமாகும் மொழியின்
வழியெல்லாம் பறக்கும் மின்மினிப்பூச்சிகள்
விண்மீன்களாய் சந்திரசூரியர்களாய்
ஒளிவழிந்தொளிர
குழந்தைப் பருவமும் குழந்தைக்கான பருவமும்
இருவேறாய்ப் புரிய
திக்குத்தெரியாத காடாகப் படரும் மனதின்
கிளைகளெல்லாம் பூபூத்துக் காய்காய்க்க
நகரும் வனமாய் மொழிசொல்லும் வழி செல்லும்
பகலும் இரவும் விரிந்துகொண்டேபோக
அங்கங்கே சில திருப்பங்களில்
இறக்கைகளும் இலவம்பஞ்சுத்திரள்களும் தந்து
களைப்பாற்றித் தேற்றும்
மொழியின் வள்ளன்மைக்கு என்ன
கைம்மாறு செய்யவென்ற கேள்வியில்
மீண்டும் திக்குத்தெரியாத காட்டில்
தேடித்தேடி இளைக்கு மென்
நோயும் மருந்துமாகும் மொழி….

***
4. மொழிபெருங்கருணை
..................................................................................................................
வழியேகும் அடரிருள் கானகத்தில்
கைப்பிடித்து அழைத்துச்செல்லும் மொழி
குழிகளிலிருந்தும் கட்டுவிரியன்களிலிருந்தும் காத்து
உயிர்பிழைக்கும் வழி கற்றுத் தந்தவாறு
பழிபாவங்களுக்கஞ்சி சில ஒழுக்கங்களுக்குட்பட்டுப்
போகுமாறெல்லாம் என்னை உயிர்ப்பித்தபடி
சுழித்தோடும் நதியாக தாகம் தீர்த்து
கரையோரங்களில் பூவாய்ப் பூத்து
சோர்ந்துபோகாமல் தீர்ந்துபோகாமல் மனதை அறிவை
அவற்றின் அருவசேமிப்பையெல்லாம்
காவல்காத்தவாறு
கூடவே வரும் அருந்துணைக்கு
யாது கைம்மாறு செய்யலாகும்
ஏழை யென்னால்
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி நிற்பதல்லால்.....

கல்லுக்குள் தேரை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கல்லுக்குள் தேரை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி அவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்:
"குளிரை வெய்யிலென்றும்
வெயிலைக் குளிரென்றும்
மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?"
"கடலை அருவியென்றும்
அருவியைக் கடலென்றும்
மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?"
குளிருக்கும் வெயிலுக்கும் மூலாதாரமான தட்பவெப்பத்தில்
அதன் அடிவேரான அற்புத இயற்கையில்
இரண்டறக் கலந்த பின்னே
யார் என்பதும் அதிகாரம் என்பதும்
குளிரும் வெய்யிலும் பிறவும்
இருமையற்றதாக
வெறுங்கால் நடைபழகிக்கொண்டிருக்கும்
இறை உறை திரு வுளமெலாம்
மறைபொருளாகி வலம்வரும் அண்டம்
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்….

சிறுசேமிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சிறுசேமிப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இன்னும் சொல்லில் வந்திறங்காமல்
அண்ணாந்து பார்த்தால் அடையாளந்தெரியாத
வெகுதொலைவில்
அந்தரத்தில் பித்தம் தலைக்கேற சுற்றிச்சுற்றி
வட்டமடித்துக்கொண்டிருந்த
உணர்வொன்று கவிதையாகுமா ஆகாதா என்று
ஆரூடங்கேட்க/கூறத் தொடங்கினேன்.
அறிவியல் கோபத்தோடு கணினியை அணைத்துவிட
சேமிக்காத என் வரிகள் என்றுமாய் காணாதொழிந்தன.
நினைவுண்டியலைக் குலுக்கிப் பார்த்தேன்.
சன்னமாய் கேட்கும் ஒலி செல்லாக்காசுகளோ,
சில்லறையோ, சுருங்கி மடிந்த இரண்டாயிரம் ரூபாய்த் தாளோ, தொகை குறிப்பிடப்படாமல் கையொப்பமிடப்பட்டிருக்கும் காசோலையோ......

’காளி’த்துவக் கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 1.யாதுமாகி நின்றாய் காளி.....

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

வெளிபரவித் திரிந்து நிரம்பித்தளும்பும்
காற்றை
வேகவேகமாகத் தமதாக்கிக்கொள்ள
வலமும் இடமுமாய்
வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்.
சின்னக் குடுவை முதல்
பென்னம்பெரிய பீப்பாய் வரை
அவரவர் வசதிக்கேற்ப
வழித்துத் திணித்துக்கொண்டு
ஆளுயரக் அண்டாவிலோ
அந்த வானம் வரை உயரமான
தாழியிலோ
நிரப்பிவைக்க முயன்றால் எத்தனை
நன்றாயிருக்கும்
என்று அங்கலாய்த்தபடி
நானே காற்றுக்கு அதிபதி
நானே காற்றின் காதலன்
நானே காற்றின் ஆர்வலன்
நானே காற்றின் பாதுகாவலன்
நானே காற்றைப் பொருள்பெயர்ப்பவன்
நானே காற்றை அளந்து தருபவன்
நானே காற்றைக் குத்தகைக்கு எடுத்திருப்பவன்
நானே காற்றைக் கூண்டிலடைத்திருப்பவன்
என்று நானே நானேக்களால்
நன்கு வளர்ந்தவர்கள்
நாளும் மூச்சுத்திணறியவாறிருக்க
நான்கு வயதுக் குழந்தையொன்று
தளர்நடையிட்டுவந்து
நன்றாய்த் தன் காலி உள்ளங்கைகளைத்
திறந்து காண்பித்துச்
சொன்னது:
“என் கையெலாம் காற்று!”

***


2. போதமாகி நின்றாய் காளி!

சொப்பனங்கள் சொல்லற்கரியவை!
அத்தனை அடர்ந்த
அரூப ஓவியம்போல்….
அடியாழம் தொடும்
இருண்மைக்கவிதைபோல்….
ஒன்றையேனும் ஓரளவேனும்
கோர்வையாய்ச் சொல்லமுடிந்தால்
வரமருளப்பெற்றதாய்!
உறக்கத்தின் விளிம்பில்
விசித்திரமான வாலோடு
தன்னைப்போலொரு நிழலுருவம்
வளையவருவதைப் பார்த்தவள்
விறுவிறுவென அரைவிழிப்பெய்தி
யதை வரிவடிவில் முழுமையாக்கி
முடிக்கப்புறப்பட்டபோது
அவள் தோளில் அத்தனை அழகிய
பஞ்சவர்ணக்கிளியொன்று
வந்தமர்ந்தது!
நெற்றிப்பொட்டில் இரண்டறக்
கலந்தன
சந்திரனும் சூரியனும்!
பெருங்கோபத்தில் அவள்
வெட்டிவீழ்த்திய
கெட்டவர்களெல்லாம்
பேரன்பில் புண்ணியாத்மாக்களாக
மாறி
அவளை சூழ்ந்துகொண்டு
கட்டிக்கொண்டனர்!
மனங் கனிந்துருகி யவள்
விழிகளிலிருந்து
கண்ணீர் தீர்த்தமனைத்தாய்
வழியத்தொடங்கியபோது _
சட்டென்றொரு கடுஞ்சூறாவளி வீசி
கனவின் மேலெல்லாம்
கனத்த போர்வையாய்
படர்ந்து மண்டியது
பெரிய பெரிய பூட்டுகளுடன்
பாழும் தூசி.
சுற்றிலும் அந்தகாரம்.
சிதறடிக்கப்பட்டு
எங்கெங்கோ சிக்கிச்
சுருண்டு கிடந்தன
சொப்பன மென்னிழைகளால்
பின்னப்பட்ட வரிகள்.
வருத்தத்தோடு சிரித்துக்கொண்டாள்
பிரகதீசுவரி
மூவேழுலகும் கனவென்றும் நனவென்றும்
தினந்தினம்
கண்ணாமூச்சியாடிக்கொண்டிருக்கும்
மாகாளியறியாதவையா
மிகுபுயல்கள்?

***
3. குட்டிப்பெண் காளீஸ்வரி!
கயிறிழுக்கும் போட்டி உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
இருபுறமுமிருக்கும் இரண்டு குழுக்களும்
பிறவி வன்முறையாளர்களாய் இழுத்துக்கொண்டிருந்தனர்.
ஒரு குழுவில் ஒருவரது கை
சற்றே தளர
சரேலென்று பின்சரிந்து விழுந்தனர்
இருகுழுக்களில் ஒன்று
சமயங்களில் இரண்டுமே.
ஆளாளுக்குக் கைகொடுத்துத்
தூக்கிவிட்டவாறே
அடுத்த சுற்றுக்குத் தயாராகின்ற
இருதரப்பினருக்கும்
கிடைத்த சிறிது இடைவேளையில்
தேனீர் தரப்படுகிறது.
லோட்டாவின் சூட்டில்
கனன்றெரிகின்றன கயிறின்
கீறல்கள்
வெட்டுக்காயங்கள்
வீங்கிவிட்ட உள்ளங்கைகள்.
பார்த்துக்கொண்டிருந்த சிறுமி
ஒன்றும் புரியாமல் கேட்கிறாள்:
“நீங்களெல்லோரும் ஏன்
இந்தக் கயிறையிழுக்கிறீர்கள்?”
“இதுவொரு போட்டி.
வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு
உண்டு”.
“வீரத்திற்கோர் விளையாட்டு இது.”
திக்கற்றவர்களுக்குத் துணைநிற்பதல்லவா
வீரத்தின் சாரம்.
வீணுக்கு இழுக்கவேண்டாம் கயிறை.
அதற்கும் வலிக்குமே!
வாருங்கள் !
கரங்கோர்த்துத் தட்டாமாலை தாமரைப்பூ
விளையாடுவோம்!”
சொன்னவள் நாவில் இனித்த சொற்களைக்
கேட்டவர் காதுகளிலெல்லாம் சுநாதம் பாய
தன் வலி மறந்து கயிறு களிநகைபுரிய
மண் சிலிர்க்க மனம் நிறைய
தோளோடு தோள்சேர்ந்து
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்
தெய்வங்களாய் மானுடர்கள்.
சிறுமி அகிலாண்டநாயகியின்
பேரானந்தச் சிரிப்பு
வெளியெங்கும் ரீங்கரித்தவாறு.

பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பங்களிப்பின் பல்பொருள் அகராதி : ஓர் அறிமுகம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கவனமாக வெளிச்சமூட்டப்பட்ட
ஒளிவட்டங்களுக்கு அப்பால்
காரிருளார்ந்த நள்ளிரவில்
மினுங்கிக்கொண்டிருக்கின்றன
நட்சத்திரங்கள்.
கருத்தாய் மேற்கொள்ளப்
பட்ட
ஒத்திகையின் பிறகான
கைத்தட்டல்களுக்கு மேலாய்
ககனவெளியில் கலந்திருக்கின்றன
ஒருகையோசைகள்.
காண்பதும் காட்சிப்பிழையாகும்;
கேட்பதும் அழைப்பாகாதுபோகும்...
ஆனபடியால் ஆகட்டும் _
உம் ஒளிவட்டங்கள் உமக்கு;
எம் விண்மீனகங்கள் எமக்கு.
1

INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர் லதா ராமகிருஷ்ணன்

 INSENSITIVITYயின் இருபக்கங்கள் : பெரிசு – கிழவர்

லதா ராமகிருஷ்ணன்



வயதின் காரணமாக உடலில், தோற்றத்தில் கண்டிப்பாக மாற்றங்கள் நிகழ்கின்றன என்றாலும் வயது என்பது உண்மையில் மனதால் நிர்ணயிக்கப் படுகிறது என்று தோன்றுகிறது.
சமீபத்தில் யதேச்சையாக தொலைக்காட்சியில் காணநேர்ந்த பழைய திரைப்படக் காட்சியொன்றில் 60 வயது நிரம்பிய கதாநாயகி ‘இனி தன் வாழ்க்கை சூன்யம் என்று அழுவதைக் காணநேர்ந்தது. வேடிக்கையாகவும் விசனமாகவும் இருந்தது. வாழ்வு சூன்யமாக வயதா காரணம்?
பாதிப்பேற்படுத்தாத ‘தலைமுடிச்சாயம் எல்லாம் வந்துவிட்ட பின்பு, நிறைய மருந்து மாத்திரைகள் கிடைக்கும்போது, முதுமை என்பது குறித்த சமூகத் தின் பார்வையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுவிட்ட நிலையில் இந்த 60 வயது இப்போது பழைய 60 வயதாக பாவிக்கப்படுவதில்லை என்பதைப் பார்க்க முடிகிறது.
ஆனாலும் நிறைய திரைப்படங்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும், (இதன் தாக்கத்தால் என்றும் சொல்லலாம்) தெருவில் எதிர்ப்படும் இளையதலை முறையினர் மத்தியிலும் ‘பெரிசு’ என்று கேலியாக 60, 60+ வயதினரைக் குறிக்கும் வார்த்தை பரவலாகப் புழங்குகிறது.
‘ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாதது, வீணாக தனக்குத் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது, வாயைப் பொத்திக்கிட்டுப் போக வேண்டியது, என இந்த ஒற்றைச்சொல் பலவாறாகப் பொருள்தருவது.
சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூகம் என்பது இந்த வயதிலானவர்களையும்(60, 60+ அதற்கு மேல்) உள்ளடக்கியது, இவர்களையும் உள்ளடக்கியே முழுமை பெறுகிறது என்ற புரிதலை அறவே புறந்தள்ளும் சொல் இந்த ‘பெரிசு’.
சமீபத்தில் இந்தச் சொல்லுக்கு இணையான கிழவர் / கிழவர்கள் என்ற, ஒப்பீட்டளவில் நந்தமிழ்ச் சொல்லை தன்னளவில் அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒரு சீரிய இலக்கியவாதி யும் இளக்காரமாகப் பயன்படுத்தியிருக்கும் INSENSITIVITYஐ எண்ணி வருத்தப் படாமல் இருக்கமுடியவில்லை.