LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, March 4, 2025

கண்ணிருட்டும் பசியும் இன்னுமான நெடுந்தொலைவும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்ணிருட்டும் பசியும்

இன்னுமான நெடுந்தொலைவும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குழந்தைகளின் கைகளில்
பானகம் நிரம்பிய கோப்பை தரப்படுகிறது
ஆளுக்கு ஒன்றாய்.
வெய்யிலில் வந்திருக்கிறார்கள்
குழந்தைகள்.
அவர்களுடைய விழிகள்
சோர்வில் அரைமூடியிருக்கின்றன.
நாவறள தோள் துவள கால் தளர
வரிசையில் காத்திருக்கும்
அந்தக் குட்டி மனிதர்களைச்
சூழ்ந்துகொள்கிறார்கள் பெரியவர்கள்.
’யாரைக் கேட்டுக் கொடுத்தீர்கள் பானகம்?
குறிப்பாக, எங்களை ஏன் கேட்கவில்லை’
யென்று
அத்தனை ஆவேசமாகக் கேட்கும்
‘அங்கிளி’ன் முழி பிதுங்கித்
தெறித்துவிழுந்துவிடுமோ
என்று பயந்துபோகிறார்கள் குழந்தைகள்.
பானம் என்றால் பானகம் தானா –
வேறு எதுவும் இல்லையா
காம்ப்ளான், இளநீர், கொய்யாப்பழ ஜூஸ்
ஏன், வெறும் தண்ணீரே கூடக் கொடுக்கலாமே
என்று ஒருவர்
நீதிமன்றத்தில் குறுக்குவிசாரணை செய்யும்
தோரணையில் கேட்கிறார்.
உண்மையில் எப்பொழுதுமே முன்முடிவோடு
தீர்ப்பெழுதி தண்டனை வழங்கும்
நீதியரசர் அவர்.
பேருந்துப் பயணத்திற்கு வழியில்லாமல்
பிஞ்சுக்கால்களால் அத்தனை தூரம்
அந்தக் குழந்தைகள் நடந்துவருவதைப்
பார்க்காதவர்
யாரேனுமிருக்கமுடியுமா என்ன?
ஆனால், அவர்களை நோக்கி ஆதுரத்தோடு
தண்ணீர்க்குவளையை நீட்டிய கை
அரிதினும் அரிது.
”அதற்காக?
யார் வேண்டுமானாலும்
அவர்களுடைய தாகம் தீர்க்கட்டும்
என்று விட்டுவிடமுடியுமா என்ன?”
”குழந்தைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்கு
பானகம் நல்லதுதானே,
யார் தந்தால் என்ன?” என்று கேட்டவரின்
வாயிலேயே ‘சப்’ என்று அறைந்தபடி
வேறுவகை விபரீத பானங்களை விற்கும்
அப்பட்ட வியாபாரி யொருவர்
ஆத்திரத்தோடு கூவுகிறார்:
”என்னைக் கேட்டால் நான்
தந்திருக்க மாட்டேனா?”
“நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும்
தாமாகவே செய்யலாமே?”
“தாராளமாக. ஆனால்,
அவர்கள் யார் என்பதைத்
தீர்மானிப்பது நானாக இல்லாதவரை
உங்களுக்குத் தொல்லைதான்.”
சொன்னவர் குரலிலிருந்த உறுதி
அசாதாரணமானது என்று
அங்கிருந்த அவருக்கு வேண்டப்பட்டவர்கள்
கரகோஷம் எழுப்புகிறார்கள்.
திடீரென்று ஏதோவொரு வகையில்
வாக்குவங்கிக்கும் வெறுப்பு அரசியலுக்கும்
தொடர்புடையவர்களாகிவிட்ட
உண்மையை அறியாதவர்களாய்
வெள்ளந்தியாய் கோப்பையை ஏந்தி நிற்கும்
அந்த வாடிய முகங்களின்
பின்னணியில்
ஷெனாயின் துணையோடு
சன்னமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது _
’THERE IS MANY A SLIP BETWEEN THE CUP AND THE LIP’

புதிர்விளையாட்டு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புதிர்விளையாட்டு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இன்னார் இன்னாரை ஏசினால்
அது மானங்கெட்ட சாதிவெறி;
இன்னார் இன்னாரைப் நீசமாய்ப் புறம் பேசினால்
நிச்சயமாய் அது சமத்துவம் பேணும் நெறி.
அன்னார் இன்னாரை வசைபாடினால்
அது ஆக்கங்கெட்ட மதவெறி;
இன்னாரை அன்னார் வார்த்தைக்கசையாலடித்தால்
அது மாவீர அறிகுறி;
அதே வார்த்தைகள் – சில கொச்சையாய் பச்சையாய்
சில நாசூக்கு, முற்போக்கு, மனிதநேய, அறிவார்த்த அறச்சீற்ற அன்னபிற முலாம் பூசப்பட்டு.
ஜனவரியை அடுத்து பிப்ரவரி என்று ஒருவர் சொல்லும்போது சரியாவது
அதையே இன்னொருவர் சொன்னால் தவறாவது எப்படி யென்று
கதைக்கச் சொன்னால், ஐயோ உதைக்க வருவார்களே…..
அதையும் இதையும் எதையும்
பார்த்தபடி கேட்டபடி
கதைக்கும் ’கதை’க்கும் உள்ள வித்தியாசத்தை உள்வாங்கியபடி.
ஆறு மனமே ஆறு _
விதை முளைக்கும் நாளை வழிபார்த்தவாறு.

நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


உனக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியை
உனது வரிகளிலெல்லாம் உயர்த்திப்பேசியவாறே
எனக்குள்ளிருப்பதை எள்ளிநகையாடுகிறாய்.
ஒரு சொல் ரகசிய உயிரியாய் எவரொருவருடைய
ரத்தவோட்டத்திலும்
மிதந்துகொண்டிருக்கலாகும் சூட்சுமம் அறிந்திருந்தும்
அறவேயதை மறுதலித்தாகவேண்டிய அவசியமென்ன?
அதோ _
ஒருவர் அருவ இடக்கையால் ரகசிய உயிரியைத்
தான் போகுமிடங்களுக்கெல்லாம் அழைத்துச்
சென்றவண்ணம்…..
இன்னொருவர் தன் இடுப்புவளைவில்
அதைஏந்தியபடியே…….
வேறொருவருக்கு அதன் அருவத்தலையைத்
தடவித் தீரவில்லை….
நீயுங்கூடத்தான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்த்
தாவியபடியே;
ஆனான அந்தரத்திலும் சுவடு பதித்தபடியே….
அப்போதெல்லாம் உன்னை வழிநடத்துவது
உன்னுடைய அந்த ரகசிய உயிரிதானே!
நாமொரு உயிரியாக இருப்பதே
நமக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியால்தானே!
ரகசியம் என்பதோ உயிரி என்பதோ
கெட்ட வார்த்தைகள் அல்லவே!
நமக்குள்ளிருக்கும் நாமறிந்த அறியாத
ரகசியம்
உயிர்த்திருக்கும் காலம் வரை
அதுவுமோர் உயிரிதான்.
நினைத்துப் பார்த்தால்
நாமேகூட ரகசிய உயிரி நமக்கு.
அறிந்தவர்களுக்குள்ளிருக்கும்
ரகசியம்
உயிரி _
ரகசிய உயிரி.

மறந்துவிட்ட உண்மை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மறந்துவிட்ட உண்மை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு இறப்பின் மேல் பெருமதர்ப்பில் ஏறிநின்று
சிறிதும் பெரிதுமாய் போதனைகளைப் பொதிந்து
சொற்பொழிவாற்றிக்கொண்டிருப்பவர்கள்
மறந்துவிட்ட உண்மை
அவரவர் மனதின் மிக ஆழத்திலிருந்து துல்லியமாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது:
“பிரசங்கங்களெல்லாம் மலைப்பிரசங்கமுமல்ல
பேசுவோரெல்லாம் ஏசுபிரானுமல்ல.”
தீர்ப்பளிக்காதே நாமெல்லோருமே பாவிகள்தான் என்று
திரும்பத்திரும்ப எத்தனை முறை சொல்லிக்கொண்டேயிருப்பது என்று நாவறளக் கேட்டுக்கொண்டேயிருக்கும் மேரிமைந்தனிடம்
மன்னிப்புக் கோரவும் நேரமில்லாமல்
இன்னமும் ஓங்கிக்குரலெடுத்து நியாயத்தீர்ப்பு வழங்கிக்கொண்டிருக்கும்
அவர்களின் வாதப்பிரதிவாதங்களெல்லாம்
ஆளுக்கொன்றாய் ஒலிக்கும்.
அவர்களுடைய நீதிதேவதையின் கண்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது
ஆயிரம் துளைகள் கொண்ட கருப்புப்பட்டை.

மௌனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மௌனம் சம்மதமல்ல
மந்திரக்கோல்
மாயாஜால மொழி
மனதின் அரூபச் சித்திரம்
மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசி
மகோன்னத நறுமணம்
மரித்தார் உயிர்த்தெழல்
மாகடலின் அடியாழ வெளி
மையிருட்டிலான ஒளி
மாமாங்க ஏக்கம்
மீள் பயணம்
மருகும் இதயத்தின் முனகல்
மனசாட்சியின் குரல்
மிதமிஞ்சிய துக்கம்
மகா அதிர்ச்சி
முறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதி
வழிமறந்தொழியும் சூன்யவெளி
மொழியிழந்தழியும் எழுத்துக் கலை
மரணமனைய உறைநிலை……..

வழக்கு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வழக்கு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும்
இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்…….
எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன்.
குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும்.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்.
புத்துசாலிதான்…..
குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம்.
குருவியென்று எதுவுமே இல்லையென்றால்…..
படங்களைக் காட்டினால் ‘க்ராஃபிக்ஸ்’ என்றார்.
ஓவியங்களைக் காட்டினால் வரைந்தவரின் ’கிரியேட்டிவிட்டி’ என்றார்.
குருவிகள் சாகாவரம் பெற்று சிறகடித்துக்கொண்டிருக்கும் கவிதைகளை வாசித்துக்காட்டினால்
’கவியின் மெய் பொய்தானே’ என்று கண்ணடித்தார்.
நானே பார்த்திருக்கிறேன் என்றேன்.
காட்சிப்பிழை என்றார்.
’குருவி யொரு குறியீடு மட்டுமே’ என்றார்.
’தூலமல்ல; சூக்குமமே’ யென்றார்.
’ஆன்மா சூக்குமமா தூலமா’ யென்றேன்
’அப்படியென்றால் குருவி ஆன்மாயென்கிறாயா?
ஆமென்றால் உன் கேள்விக்கு பதில் அதுவே’ என்றார்
அதிமேல்தாவியாய்.
பதிலுக்கு
’குருவியின் குட்டிமூக்கு எத்தனை அழகு!’ என்றேன்.
’தொட்டுப்பார்த்திருக்கிறாயா என்ன? கத்தாதே’ என்றார்.
’கண்ணால் வருடிச் சிலிர்த்திருக்கிறேன்;
என் காமராவில் சிலையாய் வடித்திருக்கிறேன்’ என்றேன்.
’யாருடைய கைக்கூலியாகவோ பொய்சாட்சியம் பகர்கிறாய்’ என்றார்.
’விட்டுவிடுதலையாகி நிற்பாய்’ என்ற பாரதி வரியை மொழியத்தொடங்குவதற்குள்
’வசனம் பேசாதே, நிரூபிக்கும் வழியைப் பார்’ என்றார் வெற்றிப்புன்னகையோடு.
அன்றுமுதல் அலையோ அலையென அலைந்து,
ஏழு கடல் ஏழு மலை எத்தனையோ பாதாளம் வேதாளம் தாண்டி,
ஒரு குகைக்குள்ளிருந்த குருவியைக் கண்டுபிடித்து
இருநூறு இறக்கைகளை யதற்குப் பொருத்தி
ஒரே சமயத்தில் நாலாபக்கங்களிலும் அங்கிங்கெனாதபடி சிறகடித்துப் பறந்துகொண்டேயிருக்க
அதற்குக் கற்றுக்கொடுத்தேன்.....
கச்சிதமாய் எச்சமிட்டுத் தன் இருப்பை
முற்றிலும் உண்மையென நிரூபிக்க
அந்த மனிதரின் உச்சிமண்டையை அடையாளங்காட்டியிருக்கிறேன்.

நான் யார் நான் யார் நீ யார்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நான் யார் நான் யார் நீ யார்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நான் நான் நான் நான்…
நாமைப் பற்றிப் பேசினாலும் சரி
நீயைப் பற்றிப் பேசினாலும் சரி
அவளை அவனை அவரை அவர்களை
அதை அவற்றை _
யாரைப் பற்றிப் பேசினாலும் சரி
அந்த நானுடைய பேச்செல்லாம்
நான் நான் நான் தான்….
எனில்
இந்த உலகம் நான்களால் ஆனது
ஒரு நானால் அல்ல
நானாவிதமான நான்களால் ஆனது
ஒரேவிதமான நான்களால் அல்ல.
இதைப் புரிந்துகொள்ளாத ஒரு நான்
பல நான்களாகக் கிளைபிரிந்து
பேசிக்கொண்டேபோகிறது.
அந்தப் பாதைகளில், திசைவழிகளில் முளைக்கும்
புல் பூண்டு செடி கொடி பெருமரம் எல்லாமும்
அந்த ஒரு நானின் பல நான்களில் மட்டுமே
வேர்பிடித்து வேர்பிடித்து.
மெய்யான இயற்கையை, வாழ்வை
தரிசிக்கும் ஆர்வங்கொண்டோர்
அந்தப் பாதைகளில் புகுவதை
கவனமாகத் தவிர்த்து
அப்பால் சென்று
தனது நானின் நான்களுக்கேற்ற
பிறரது நான்களை அடையாளங்காணும்
முனைப்பில்
அடுத்தடுத்து விரிந்திருக்கும் பாதைகளில்
நுழைந்து நடந்தவண்ணமே.
எந்த நானும் எந்த நானுக்கும்
பிரதிநிதியாகிவிட முடியாது
எல்லா நான்களுக்கும் பதிலியாகிவிட
ஏலாது
தன் நான்களைத் தேடப்புகாத ஒரு நான்
அடுத்தவன் நான்களை
அடையாளங்காட்டலாகுமா என்ன
யாரும் நுழையாத அந்த நானின் நான்களின்
ஆளரவமற்ற பாதைகள் கிளைப்பாதைகள்
நீண்டுகொண்டே போகின்றன.....
நாராசமாய் வீறிட்டுக்கொண்டிருக்கிறது
அதன் அனர்த்த மூச்சுக்காற்று...

உன்னதாற்புதம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 உன்னதாற்புதம்!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பிட்ட எனது பனிரெண்டாவது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.


உன்னதத்தைக் கண்டதுமே உள்ளுணர்வுக்குத் தெரிந்துவிடும்.
உடனே உதறலெடுக்கத் தொடங்கும் முகமூடி மனிதர்களுக்கு.
உடனே அவசரக்கூட்டம் நடத்தி
‘மகோன்னதம் யாம்’ என்ற விளம்பரப் பதாகைகளை
மேற்கு, கிழக்கு, வடக்கு தெற்கெல்லாம்
நட்டுவைக்கும் ஏகோபித்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடுகிறார்கள்.
நாற்புறமிருந்து அதன்மீது காறித்துப்பவென்றே
நிதமும் நாலுபேரை வேலைக்கமர்த்திவிட்ட பிறகும்
நிம்மதியின்றி அலைபாய்ந்தவண்ணமிருக்கும் அவர்கள்.
அத்தனை வலிவேதனையிலும் அதெப்படி அழாமலிருக்கிறது இந்த உன்னதம்
என்ற ஆங்காரத்தில்
கூலிப்படையைக்கொண்டு அதை
அடையாளமற்றுச் சிதைக்கப் பார்த்தார்கள்.
தக்க தருணத்தில் நல்லவர்கள் பார்த்துவிட்டதால்
ஒரு பல் உடைந்ததோடு தப்பித்துவிட்டது உன்னதம்.
தோல்வியைத் தாங்கமுடியாதவர்களாய்
ஓட்டைப்ப, ஓட்டைப்பல் அய்யய்யே ஓட்டைப்பல்
என்று உரக்கக்கூவி
‘பல்லிழந்த உன்னதம் பாவம் பரிதாபம்’
என்று எள்ளிநகையாடுபவர்களை
எட்டநின்று பார்த்தவாறு
வருத்தத்தோடு சிரித்துக்கொண்டிருக்கிறது _
எல்லோருக்குள்ளுமிருக்கும் உன்னதம்.

நேரக்கூடும் தற்கொலையும் கையறுநிலைக் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நேரக்கூடும் தற்கொலையும்

கையறுநிலைக் கவிதையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அக்கம்பக்கத்தில்
தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்
கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்
விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..
அவ்வளவுதான்
ஏதும் செய்யவியலாது.
இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.
தற்கொலை செய்யத் துணிந்தவர்
கோழையா தைரியசாலியா
என்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.
பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோ
தான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்
பொருட்டோ
நடக்கின்றன தற்கொலைகள் என்று எந்த உளவியலாளரேனும் சொல்லியிருக்கிறார்களோ, தெரியவில்லை.
அரை மயக்க நிலை அல்லது ஜன்னிகண்ட நிலை
அல்லது முழுவிழிப்பு நிலையில் எதற்கென்றே தெரியாத
அரைகுறை நம்பிக்கையில்…..
நடுக்காட்டில் நள்ளிரவில் நின்றுபோன வண்டியில்
இல்லாத பெட்ரோல், அல்லது
இருந்தாற்போலிருந்து மறந்துபோன வண்டியோட்டல்,
அல்லது செயலிழந்துபோய்விட்ட கைகால்கள்,
மங்கலாகிவிட்ட பார்வை,
எங்கும் மூடிக்கொண்டுவிட்ட திசைகள்…..
கற்பனையாய் குழந்தைகள் நடித்துக்காட்டும்
சுருக்கிடல்
சமயங்களில் உண்மையாகிவிடுவதுண்டு.
மாஜிக்கல் ரியலிஸமாகவும் சிலர் தம்மைத்தாம்
சாகடித்துக்கொண்டு
மீண்டும் உயிர்த்தெழுவதுண்டு.
அந்நியமாதலின் கொடுந்தழல்
அடுத்த அடி எடுத்துவைக்க
பல்லாயிரத்தடி பள்ளத்தில் விழல்
அடுத்தநாளில் விழித்தல்
வரவாக்கும் மரணபயத்தில்
வற்றிப்போகும் வாழ்வுக்கான விழைவு….
ஒரு புதிர்ச்சுழல்பாதையில் புகுந்தபின்
வெளியேற வகையறியாது
மருகும் மனதிற்குப் புலப்படும் ஒரே வழி.
பழிவாங்கலாயும் சமயங்களில் நடந்தேறும்.
மரித்த பின் பரவசத்துடன் ஆவிபார்க்குமோ
பழிவாங்கப்பட்டவரின் மிகுதுயரை?
முப்பத்தியிரண்டு வயது முற்றிய புற்றுநோயாளி யொருவர்
மனைவிக்கும் சிறு மகள்களுக்கும் தந்த நஞ்சு திருப்திகரமாய்
வேலை செய்ய
தனக்குத் தந்துகொண்டது தோல்வியடைந்ததில்
உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறார் குடும்பத்தலைவர்
_ இன்றைய செய்தித்தாளில்.
இனியான இவர் வாழ்க்கை இப்போதிருப்பதன் நீட்சியா இல்லை
இறப்பிற்குப் பிறகானதன் நீட்சியா?
தற்கொலையாளர்களின் நிர்க்கதி
கற்பிதமா கணநேரக் குரூர உண்மையா
ஒப்புநோக்க வீதியோரப் பிச்சைக்காரர்களின்
வாழ்வீர்ப்பு மெச்சத்தக்கதா – அல்லது
இஃதொரு ஆக்கங்கெட்ட கொச்சையான
அவதானிப்பா
ஒரு தற்கொலை மற்றவர்களையும் ஏதோவொரு விதத்தில்
தங்களுடைய மேற்பரப்பிலிருக்கும் தர்மவான்களைத் தாண்டி
அடியாழத்திலிருக்கும் மனசாட்சியிடம் அண்டச் செய்கிறது
அடுத்த சில நிமிடங்களுக்காவது…..
அண்டச்செய்தால் நல்லது
அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும்….
அடி முடி யறியா வாழ்வின்
அகால மரணம் போலாகுமா இக் கவிதையும்……