LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, October 18, 2016

மண்ணாந்தை மன்னர்கள் ‘ரிஷி’

மண்ணாந்தை மன்னர்கள்
ரிஷி


யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள். 
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா 
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர் 
வடித்திருக்க மாட்டாய். 
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய் 
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?
சொட்டுச்சொட்டாய் சேகரித்த முத்துகளை
கொட்டாவி விட்டபடியே கையாடல் செய்யப்புகும் உன்
கீழ்மையை ஒளிக்க
எப்படியெல்லாம் பீடாதிபதியாகித் தொங்குகிறாய் தலைகீழாய்
‘Ten Commandments’
தருவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும்.
தன்னைத்தான் சிலுவையிலறைந்துகொண்டு கவிதை படைக்கும் கவிஞர்
ஒரே சமயத்தில் தனிச் சொத்தும் பொதுச்சொத்துமாய்….
உனக்கெல்லாம் எங்கே புரியப்போகிறது இது?
அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்அறிவாயா?
கோபிகிருஷ்ணனின்உள்ளேயிருந்து சில குரல்கள்கேள்விப்பட்டிருக்கிறாயா?
நாராய் நாராய் செங்கால் நாராயும்
வாராய் என் தோழி வாராயோவும்
தேரா மன்னாவோடு ஒட்டி முட்டும் இடங்கள்
என்னவென்று கேட்டால்
இந்த நூலில் கொஞ்சம் 
அந்த நூலில் கொஞ்சம் எடுத்தாண்டு
கம்பவுண்டர் பட்டங்கள் நாலைந்து பெற்றுவிடல் எளிது.
எம்பாவாய் கம்புமாவிலிருந்து கிளம்பியதாய்
விளம்பிவிட்டால்
பின், புதுக்கண்டுபிடிப்பாளரன்றோ நீ!
சிரிக்காதே வெட்கங்கெட்டு.
பாட்டி சொல்லக் கேட்டதில்லை?
புழுத்துப்போகும் வாய் பொய் பேசினால்”.
வீசும் காற்றுக்குச் சுருக்கிடப்பார்க்கும் உன் 
மடமையை என்னென்பது...
சிற்றிதழ் வெளி யோர் வழுக்குப் பாறை;
இங்கே கரணம் தப்பினால் மரணம்.
அழகுநடை பழகுவதான பாவனையில் சற்றே 
தெனாவெட்டாய் நடந்தால்
வினாடி நேரத்தில் கழுத்து உடைய
விழுந்திடுவாய் அதலபாதாளத்தில்.
கெட்ட முட்டாள் கனவானா யிருப்பதைக் காட்டிலும்
பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பது எவ்வளவோ மேல்
Ø


Monday, August 8, 2016

இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தாலென்ன? லதா ராமகிருஷ்ணன்

இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் 

வந்தாலென்ன?

லதா ராமகிருஷ்ணன்


நேற்று திரு. ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் குறைந்தது நூறு பேர் வந்திருந்தார்கள். ஊர்த் தோழர்கள், பள்ளித் தோழர்கள், கசடதபற மற்றும் நண்பர்கள், பிற நண்பர்கள், வாசகர்கள், அசோகமித்திரன், வைதீஸ்வரன், க்ரியா ராமகிருஷ்ணன், . முத்துசாமி, சா. கந்தசாமி, பிரபஞ்சன், ஷங்கரநாராயணன், மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் உள்ளிட்ட மூத்த எழுத்தாளர்கள், பிற சிற்றிதழ் நண்பர்கள், பிற எழுத்தாளர்கள், கவிதையுடன் தொடர்பே இல்லாமல் வேடிக்கை பார்க்க மட்டும் ஓரிருவர் ஆகியோர் இதில் அடங்குவர். வெளியூர்களிலிருந்து வந்திருந் தார்கள்.”

_ இது கவிஞர் ஞானக்கூத்தனின் மறைவுக்கு அடுத்தநாள் அவருடைய மகன் தன்னுடைய முகநூல் பக்கத்தில்             பதிவிட்டிருந்த நெகிழ்ச்சியான ்நன்றியின் ஆரம்பப் பகுதி.

ஆனால், 7.8.16 தேதியிட்ட ஜூனியர் விகடனில்கடவுள் முதல் கவிஞன் வரைஎன்ற தலைப்பிட்ட கட்டுரையின் ஆரம்ப வரிகள் பின்வருமாறு::

அதே திருவல்லிக்கேணி. அதேபோல 20 பேர் என எழுதி யிருந்தார் கவிஞர் மனுஷ்யபுத்திரன். பாரதியின் இறுதி ஊர்வலத்தில் நடந்த அதே அவலம். ஞானக்கூத்தன் இறுதி ஊர்வலமும் அப்படித்தான் நடந்தது. எழுத்தாளர்களை யானை மீது ஊர்வலம் அழைத்துச்சென்று கொண்டாட வேண்டும் எனப் பிரியப்பட்டவரின் இறுதி ஊர்வலம் அது.'

_இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் வந்தார்கள் என்பதிலா மாற்றுப்பாதையை ஏற்றுக்கொண்டவர்களின் மனநிறைவு அடங்கியிருக்கிறது? பாரதி நினைத்திருந்தால் எட்டயபுரம் மகாராஜாவையோ ஆங்கிலேயர்களையோ போற்றி எழுதி பெயரும் புகழும் பெற்றிருக்க முடியாதா? ஏன் செய்ய வில்லை? வாழ்ந்த காலத்தில் இந்திய விடுதலை இயக்கத் தலைவர் களோடு சரிசமமாகப் பழகியவர் பாரதி.

அதேபோல், ஞானக்கூத்தன் நினைத்திருந்தால் வேறுவித மாகக் கவிதை எழுதியிருக்க முடியாதா என்ன? அப்படிச் செய்யா திருந்ததுதான் அவருக்கும் நிறைவளித்தது; அவரையும் நிறைவான கவிஞனாக அடையாளப்படுத்தியது.

அது சரி, ஞானக்கூத்தன் போன்ற சிறந்த கவியை மக்கள் அறிய வில்லையே, அங்கீகரிக்கவில்லையே, அரசு அங்கீகரிக்கவில் லையே, மரியாதை செய்யவில்லையே என்று  அங்கலாய்க்கும் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகள் அதற்கான என்ன முயற்சி எடுத்தன? நினைத்திருந்தால் ஞானக்கூத்தன் உயிரோடு இருந்தபோதே அவருக்கு பிரம்மாண்ட விழா எடுத்திருக்க முடியாதா என்ன?

மக்களைச் சொல்லித் தப்பிக்க முடியாது. தங்களிடமிருக்கும் பண பலத்தைக் கொண்டு ஒருவித மொண்ணைத்தனமான ரசனையையே வாசகர்களிடம் உருவேற்றுவதில்    முனைப்பாக இருந்தபடியே நல்ல எழுத்தாளர்களை நாடு மதிக்க வில்லையே என்று அங்கலாய்ப்பது வெறும் பரபரப்புச் செய்தி தரும் ஆர்வமே தவிர நல்ல எழுத்தின் மீதான உண்மையான அக்கறையல்ல.