LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 30, 2014

மற்றும் சில திறவாக் கதவுகள் _ :கவிதைகள் 1- 6

மற்றும் சிலதிறவாக் கதவுகள் 

’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு _ கவிதைகள் 1 - 6
                                                                                                       

* இந்த என் கவிதைத் தொகுப்பை மனமுவந்து வெளியிட்ட
தோழர் ராயன் அவர்களை
இத்தருணத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்
_ லதா ராமகிருஷ்ணன்  (ரிஷி)







நூலில் இடம்பெறும்

என்னுரை 




என்னைப் பொறுத்தவரை எளியார், வலியார் என்ற
இரு பிரதா னமான பிரிவுகளே உலகில் உள்ளன.
         
இதில் பெண்கள் எல்லோரையும் அடக்கப்பட்டவர்கள்,
ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாய் ஒற்றை மொந்தை யாக்கி, ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து வைப்பது
நிறைய நேரங்களில்அவர்களது 
தனி மனித அடையாளம்அழிப்பதாகி விடுகிறது.
         
தன்னைப் பற்றிய கழிவிரக்கத்தை அவர்களுக்குள் திணிப்பதோடு தன்னுடைய பொறுப்பேற்பையும்  பலநேரங்களில் தட்டிக்கழிக்கச் செய்துவிடுகிறது.

கவித்துவரீதியாய் இத்தகைய பகுப்பு சாதாரணமானவர் களுக்கும் சலுகை கூடிய வகையில் ஒரு அடையாளத்தை யும்,அங்கீகாரத்தையும் அளிப்பதாகி விடுகிறது.
         
 இன்னொருவகையில்,மறுபடியும் பெண்ணை 
பிரதான நீரோட்டத்திலிருந்து விலக்கி 
விளிம்படுத்த மனிதர்க ளாக்குகிறது.
         
 அதுபோக, பெண் புரவலர்களாகத் தங்களை முன்னி லைப்படுத்திக்கொள்ள முயல்வோருக்கு ஒரு மேடை அமைத்துக்கொடுக்கிறது.
         
பெண் எழுதும் கவிதைகளில் பால்பேதம் சார் புலம்ப லும், பிரசவவாடையும், பாலுணர்வுப் பீறிடலும்,அன்ன பிற கருப் பொருட்களே இடம்பெற வேண்டும் எனவும், அவற்றை எழுதக் கூடாது பெண்கள் எனவும்பல்வேறு வரையறைகளைப் பிறர் வகுத்துத் தரவழி அமைக்கிறது.
         
கவிஞரின் மனப்பண்பு ‘அர்த்தநாரீஸ்வரமா’ய் அல்லது  ‘அரவாணியமா’க  இருக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பும்,அப்படித்தான்இருக்கும் என்பது  என் நம்பிக்கையுமாக இருந்த காரணத்தால்  என் கவிதைகளுக் கான இடமும், அங்கீகாரமும் அவற்றின் தரத்தின் அடிப் படையில்எனக்குக்கிடைக்க வேண்டும் என்ற நோக்கத் தில், ‘ரிஷி’ என்ற புனைப்பெயரில் எழுத ஆரம்பித்தேன்.

பாலுணர்வையும், பாலுறவையும் பற்றி கவிதை எழுது வது கூட சுலபம்.ஆனால், மனதின்அழுக்காறுகளை, பகைமையுணர்வை, நபும்சகத்தனங்களை அம்பலமாக் குவது தான் அசாத்தியம் என்று தோன்றுகிறது.”        


__ எனது முதல்தொகுப்பில் (அலைமுகம்)நான் எழுதி யுள்ள இவ்வரிகளே இன்றளவும் என் நிலைப்பாடாய் இருந்துவருகிறது.

பார்வைகள் வேறுபட்டிருக்கக்கூடும் எனினும்  பரஸ்பர மரியாதை, தோழமை காரணமாக இந்த எனது கவிதைத் தொகுப்பை திரு.இராயன் வெளியிடுவது  நிகழ்ந்திருக் கிறது.
         
அவருக்கு என் நன்றிகள்.

தோழமையுடன்
ரிஷி




1.   பரிபாலனம்

மயிரிழைக்கு அப்பாலே இருப்பு.
இரவுபகல் இம்மிபிசகாக் காவல்.
அப்படியே போலும் அவ்விடமும்
இச்சையா? நிச்சயமா?
எதை வைத்தறிய எதற்கறிய?
இருந்தும்.இருந்தும்.
இல்லாததை இழந்ததற்கே
இந்த அழுகை என்றால்
இருந்திருந்தால்.? இருந்திறந்தால்?
_மருளில் மூடிக்கொள்ளும் மனதில்
மற்றும் சில திறவாக் கதவுகள்.




2.   கவிதைச் சன்னிதானங்களுக்கு

என் தேவகணங்களுக்கும் அசுரகணங்களுக்குமான
நேர்த்திக்கடன் என் கவிதைகள்.
காலற்ற அவற்றின் கால்களை யும்
கோல் கொண்டு அளக்க மாட்டாது.
காட்டாற்று வெள்ளம் சீருடை கொள்ளுமோ?
இக்கண சிக்கனம் அக்கண செலவினம்.
வாமனாவதாரமும், விசுவரூபமும் வாழ்வின் இலக்கணம்.
வெற்றுச் சப்தமும் வேய்ங்குழ லோசையும்
வாய்த்த செவித்திறம். இதில்
ஆம் ஆம் என்றுமது அபத்தப் பார்வைகளுக்கென் தலையாட
பூம் பூம் மாடல்லவே யாம் பூதலிங்க சாமிகளே!



3.   விளைச்சலும் அரசியலும்

நிலத்தடி நீராய் வேராய் பரவியிருந்தது.
பதியும் மண்வெட்டிகளில் எதுவாகிலும்
வேரறுக்கப் புகாது வளங்களை
வாரிவரலாகாதா வென
காத்துச் சோர்ந்திருக்கும்
பாத்திற மறிந்த மனம்.
கைவாரினாலும் கால்வாரினாலும்
நீரும் வேரும் நாளும் நிலைத்தவாறு.
காற்றேகும் தன் போக்கில் களைப்பாற்றியவாறு.
ஊறுங்கேணி ஊறும் ஊற்றுக்கண் நூறு.
மண்ணடிப் பரப்பு பொன்னுடைத்து.
தன்மையறிந்தார்க்கு உண்மை புரியும்.
மண்ணாந்தைகளுக்கு மண்ணே தெரியும்.
மாமன்னர்க்கோ களராகும் தளிரும்.
மூக்கில்லா ராஜ்யத்தில் முறுமூக்கன் ராஜன்.
இரவல் மூக்கன் ஏகாதிபத்தியன்.
பகலிரவாய் ஊர்வலம். பெரும் படைபலம்.
பயிரழித்தலே தேர்க்காலின் நோக்கமாய்.
தாக்கித் தாக்கி உளைச்சலுறும்.
தன்னைத் தாண்டி விளைச்சல்
கண்டுவிட்டால்? உம்_
கண்ணறுத்தா லாயிற்று
புண்ணறுப்பதாய் பறைசாற்றி
தாளாது வாளெடுப்பான் தகைமை போற்றி போற்றி.




4.   கவிதைக் குறிசொல்லிகளுக்கு.

சூழப் பசுந்தளிர்கள் ஏராளம் துளிர்த்திருக்க
பாழும் சருகுகளைத் துருவிப் பொறுக்கி யெடுத்து
செத்துவிட்டது இயற்கை யென்றே கத்தித் தீர்த்திடுவார்.
தண்மர இன்கனிகளை யெல்லாம் எத்தித் தள்ளி
சின்னதாய் கசக்குமொரு பழத்தைக் கையில் அள்ளி
இற்றைக்கும்  இனியும் யாவும் புளிக்குதென்றே கதைப்பார்.
வட்டமும் வளைகோடுகளுமாய் திட்டமாய் வரைந்து
விஞ்ஞானமாக்கப் பார்ப்பார் விவரங்கெட்ட தனத்தையும்.
பாடை தூக்கவென்றே பரபரக்கும் கையர்க்கு
பிறப்பின் நல்வாடை, அந்தோ, ஒருநாளும் வசப்படாது.




5.   சுடர்மணிப்பூண்

ஞாயிறைப் பார்த்துக் குலைக்கும் நாய்களின் ஊளை
காலை மாலை திங்கள் வெள்ளியும் கேட்கும்.
வாரண தோரண காரணம் நாமறிந்தால் போதும்.
குரோதமே குறியாய்த் தாக்கும் கற்களின் காயங்கள்
கசியு முன்பே தழும்பாகிடும் மாயம் கைகூடிட வேண்டும்.
அந்தரத்தில் சுழலுகின்ற மூன்றாங் கண்விழிப்பில்
அன்றாடம் எழுநூறு வர்ண வானவில் வசப்பட
கழியுங் காலத்தே விரலிடை வழி மழைப்பொழிவாய்
கந்தகம் குளிர மந்திரமாகட்டும் சொல். மொழிவாய்.




6.   யுத்தகாண்டம்


திரும்பத் திரும்பப் பொருதிக்கொண்டிருக்கிறேன்
குருதி பெருக. என் கணைகளெல்லாம்
குறிதவறாது துளைக்கின்றன எறியாளையும்.
இருமருங்கும் தெறித்துச் சிதறும் உதிரத்தில்
பேதுறும் மனம் பதறும் அதிகம் _
சேதம் தனதாகட்டு மென.
வாள்வீசும் போதெல்லாம் கையொடிகிறது.
வேலெறிகை யிலெல்லாம் விழியழிகிறது.
குதிரை யானை காலாட்படைகளி லெல்லாம்
முதுகமர்ந்தாரும் மிதிபடுவாரும் நானேயாக
நஞ்சூட்டித்  தீட்டிய கூர்முனை ஈட்டி கத்தி
அம்பேகும் வேகத்தினும் அன்பேகி யழுதரற்றும்
அடிபட்டாரை மடிகடத்தி.
பாண்டவர் கௌரவர் பாஞ்சாலி பீமன்
பார்த்தன் தேரோட்டி கர்ணன் சகுனி
சூதாட்டம் வரும் தாயம் வரவல்ல;
வெட்டாட்டம்  விரோதியுடனல்ல; விருந்தோடும்
உறவோடுமல்ல. புறநானூறு நான்களோடு.
அகநானூ றொருபொருட்பன்மொழி யாழ்வார் நாயன்மார்
ஆண்டாள் மீரா க்ளியோபாத் ராதிசங்கரா
த்த்வைத அத்வைதம் தீரா த்வந்தயுத்தம்.
அந்தி சாய சங்கு ஊதி சண்டை நிறுத்தி
அன்று கொன்றாரை அசைபோட்டு சிந்தை வெறுத்து
அடுத்த காலை மறுபடி முரசறைந்து வியூகங்க
ளமைத்து விழவைத்து விழுந்து வைத்தது தைத்து
அன்றாடம் நடத்திவரும் நேர்தலைகீழ்ப் போரிதில்
என் உயிரைப் பணயமாக்கிப் பெறுவது
என்() வாகை யது? சாகாவரம் யார் தருவது?
பூஜ்யராஜ்யங் கொளும் பிரம்மாஸ்திரம் எங்குளது?








மற்றும் சில திறவாக் கதவுகள் : கவிதைகள் 7-12

மற்றும் சில திறவாக் கதவுகள்

ரிஷியின் 3வது கவிதைத் தொகுப்பிலிருந்து
கவிதைகள் 7-12

7. இரவல் நானின் இதயம்

அன்பு கனிந்த மனதில் இன்னுமின்னும் ஆற்றாமை கனக்கச்
சேரும் அதிபாரத்தில் மூளைக்கு இதயத்திலிருந்து பிரியும்
நரம்பிழைகள் வேரறுந்து எக்குத்தப்பாய் சுருண்டு கொள்ளும்.
தகவல்கள் தந்து பெறும் இயக்கம் நியமம் தவற,
நினைவடுக்குகளில் பத்திரமாயிருக்கும்
தர்க்கங்களும் தார்மீகங்களும்
தேடக் கிடைக்காத வண்ணம் தொலைந்து போக,
இத்தருணம் எதிர்ப்படும் பருத்த முலைகளை யெட்டிச்
சட்டெனப் பறித்துப் பொருத்திக் கொள்கிறேன்.
அப்படியே முகமும் இதழும் கை கால் கருங்கூந்தலும்
இடுப்பு முதுகு குதம் நிதம்பம் மேலும்
வியர்வைத் தனிமணமு மெல்லாம் தவறாமல் அயராமல்
ஆகச் சிறந்தன கவர்ந்தென்னை யலங்கரித்துக் கொண்டு
ஓடோடி வருகிறேன் உன்னில் மறுபடி யரியணை யேற.
அருகேக ஏகப் பன்மடங்காகும் அங்கலாவண்யங்களோடு
ஆக்டோபஸ் டினோசரின் வினோதச் சேர்க்கையாய்
காணும் எனைக் காணும் நீ
விகசித்துப் போவாயோ? வீறிட்டலறுவாயோ?



8.  தன்மை

அனல் படர்ந்து ரணமாக்கியும்
அவிந்துவிடலாகா தென்று
இருகை குவித் தொளிரச் செய்திருந்தாள்
சுடரை….
அடர் இருளில் தன் விடியலைத்
தேடிச் செல்வோன்
தடுக்கி விழலாகாது.
கல் குத்தலாகாது;
கருநாகம் கொத்தக் கூடாது.
வழுக்கலாகாது குழைசேற்றில்.
காற்றுள நுண்ணுயிரிகள்
கடித்துவிடக் கூடாது.
நிலா மறைந்துவிடும்;
நரி ஊளையிடும்.
நல்லபடியாய்ச் செல்ல வேண்டும் _
முள் துளைக்காது,
கள்வர் கை கொளாது….

சாலையோரத் திருப்பம் ஆளை
விழுங்கு முன்னம்
அரைக்கணம் திரும்பிய
அந்தத் தலை சிரித்தது
நிறைவில் விளைந்த நன்றியுடன்.

ஏராளமாய் கொண்ட பிரியத்தின் பேரில் பரத்தைக்
காதலியிடம் அன்பாய்
தன் மகனின் நண்பர்களுக்குக் கட்டில் சுகம்
கற்றுத்தரக் கோரியவன்
மற்றுமொரு முறை
ஏறி மிதித்துச் சென்றான் மனதை.




9.  ஊர்ஜிதம்


நீலார்ப்பணமாயிருந்தது வானம்.
சூர்யனின் நேர்ப்பார்வையில்
காய்ந்துகொண்டிருந்தன துணிமணிகள்.
கதிரோன் கைவண்ணத்தில் கந்தலும் பெறும்
தனிமணம்.
நீவித் தடவி மடித்துவைக்கும்
தீண்டலின் மாண்பு
மேவிய பூஞ்சிறகாய்ப்
புரிவதற்குள் இருண்ட மேகம்
பொழி மழையில்
வதங்கிச் சுருங்கிய ஆடைகளில்
வரியோடியிருந்தன
வாழ்வின் சங்கேதங்கள்





10. அஜீரணம்

முதல் சில நாட்கள் மௌனம் விழுங்கவொண்ணா
தொண்டைப் புண்ணாய்,
குனியவும் முடியாமல் நிமிரவும் இயலாமல்
குடையும் வாயுப்பிடிப்பாய்,
மாதவிடாய் நாளின் அடிவயிற்றில் கிளரும்
அடையாளப்படுத்தலாகா மொண்ணை வலியாய்,
ஆழ்ந்துறங்க மாட்டாத கண்ணெரிச்சலாய்,
பின்னங்கால் பித்தவெடிப்புகளின் கத்திக்கீறலாய்,
முன்மண்டை யோரங்களின் இடிச் சீறலாய்,
மூக்கைப் பிய்த்தெறியத் தூண்டும் ஜலதோஷமாய்,
முக்கி முக்கி ரணமாகும் மலச் சிக்கலாய்,
நம் நலன் நம் கையிலற்ற நிராதரவு தாக்க
நெஞ்சமெலாம் ஜன்னிகண் டுற்ற
அங்கங்க ளெல்லாம் கதிகெட்டு விட்ட பின்
கடைசிச் சொட்டு மூச்சைக் காக்கத் தவித்து
காலத்திற்குமான துக்கம் கவிய மனம்
மீறிய க்ஷீணத்தில் உறைந்துகிடக்கும் இன்று
சவமாய் விறைத்துப்போன கைகளி லொன்றை
சற்றே மேலுயர்த்தி யென்னை நானே
தலைவருடித் தந்துவிட முடிந்தால் போதும் _
தேறிவிடுவேன் நாளை தீர்மானமாய்.





11. பாதரஸத்தாமரையிலைப் பாதயாத்திரை


தெருவிரு மருங்கின் வீடுகளில் தெரிந்தாரில்லை யாக
வரவாகும் விடுதலையுணர்வில் சிட்டுக்குருவியாகும் உள்
கவலை யற அரவங்கள் பற்பல கவியிருளில் கால்தொட்டு
நடைபழகு மென் அந்தரங்கம் அதிசுந்தரம்
ஆனந்தம் கடைவிரியக்காத்து நிற்கும் இந்த
இல்லங்களின் லாபநட்டங்களில் எனதாம்
பாப புண்ணியமில்லை யில்லை யிவற்றின்
கள்ளங்களில் என் அடிமனக் குறுகுறுப்பேதும்
இல்லை யென் அழுகை இங்குறும் மரணங்களில் இல்லை
உறவுத் திரிபுகளில் இழப்பெனக்கு இல்லை யிதன்
வரவின் செலவுகளி லென் கணக்குப் பிசகில்லை யில்லை
யிதன் பற்றாக்குறைகளில் என் பங்கு இங்கான
கிழக்கு மேற்குகளில் என் திசைகள் புழங்கவில்லை
யில்லை வழக்கும் வலியும் வம்புதும் பேதும்
வழங்கவில்லை நானிவர்க்கும் இவரெனக்கும் இது போதும்
உடனேகும் தனிமை யொரு தவப்பயனா யெனை
வழிநடத்திப் போம் இனிமை யெனதாகு மெப்போதும்.



  12.வரிகளின் கருணை

மயிலிறகோ மலைப்பாறையோ _
உறுபாரமெதையும் இறக்கி வைக்க
திரும்பத் திரும்ப இங்கேயே வருகிறேன்.
மறுப்பேதுமின்றி தோள் தரும் பரிவுக்கு
தந்து தீராது வந்தனம்.
எத்தனை பருவங்கள் பிரதேசங்கள் இங்கே
நித்தம் அறிமுகமாகிய வண்ணம்….
கத்துங் கடல் மேல் நடக்கக் கற்றதும்
இங்குதான்.
அழுகையில் மனம் வெளுக்கப் பழகியதும்
இங்குதான்.
உற்ற சிறகனைத்தும் இங்கு பெற்ற வரங்கள்.
நிறங்கள் நெஞ்சுக்குழியில் மணம் பரப்ப
 வருடுங் காற்றை வழிமறித்து உள்நிரப்பி
கருப்பைக் குழந்தையாய் பராமரிக்கப்படுகிறேன்.
திருட்டுக் காலம் சுருட்டிக் கொள்ளாமல்
அருள்பாலிக்கப் பட்டிருக்கிறேன்.
பொருள் மீறிய உலகம்
இருவிரல்களுக் கிடையில்.
உள்வெளியாய் கொண்டுள தொங்குபாலத்தில்
அல்பகலாய் பயணம் தொடர
மறுபடி மறுபடி உங்களிடமே வருகிறேன்.
வழிச்செலவுக்கு.
ஒருபோதும் இல்லையெனாமல் தரும் பரிவுக்கு
தந்து தீராது வந்தனம்
அந்த நிலவைக் கையிட்ட நேயத்திற்கு,
குமிழைக் கல்லாக்கிய மாயத்திற்கு,
அருவத்திற்கு உருவளித்த மகிமைக்கு,
அன்பிற்குத் தாழ்திறந்த கனிமைக்கு…
இன்னும் தர வேண்டும்
இன்றும்
சென்று சேருமிடம் அறிந்ததாய்
ஒற்றையடிச் சுரங்கப்பாதை யொன்று
மட்டும்
இருளற்றும்
மற்றும்.