LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 16, 2014

[Jul. 02  2013, மலைகள் டாட்.காம் ]




மைனஸ் ஒன் -1 என்ற தலைப்பே கவிஞரின் நவீன தமிழ்க்கவிதை ஆர்வத் திற்கும் வாசிப்பிற்கும் கட்டியங்கூறுவதாய் வெளியாகியுள்ள கவிதைத் தொகுப்பு இது. மொத்தம் 89 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் நந்தாகுமா ரனைப் பற்றிய ரத்தினச்சுருக்கமான அறிமுகக்குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.

நவீனம் என்ற சொல் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டையும் சேர்த்தே தரப் படும் அடைமொழியாகத்தான் இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது எனலாம். The best selection of words in the best order என்றும் செறிவான கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்பட்டிருக்கிறது. Best என்ற வார்த்தை ஓரளவு relative term தான் என்றாலும் ஒரேயடியாக relative term அல்ல. நவீன தமிழ்க்கவிதை இயக்கத்தின் போக்கில் உருவம் சார்ந்த பரிசோ தனை முயற்சிகள் அதிக நேரங்களில் எள்ளலும் எதிர்ப்புமாகவே எதிர்கொள்ளப் பட்டிருக்கின்றன. உருவம் சார்ந்த, மொழி ரீதியான பரிசோதனைகளில் ஒரு கவிஞர் இறங்கினால் உடனேநவீன தமிழ்க்கவிதை வெளிக்குப் புறத்தே இருப் பவர்களோடு சேர்ந்து நவீன இலக்கியப் பரப்பிற்குள் தம்மளவில் பங்காற்றி வருவோரும் கூட மேற்படி பரிசோதனை முயற்சியை எதிர்ப்பதும், தூற்றுவதும் வழக்கமாக நடந்தேறிக்கொண்டிருக்கும் காட்சிகள். பரிசோதனை முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் கவிஞர் தமிழ்க்கலாச் சாரத்திற்கு அந்நியப் பட்டவர், மேனாட்டு பாணிகளை ஈயடித்தான் காப்பி அடிப்பவர் என்பதாக, ஒட்டு மொத்தமாக முத்திரை குத்தப்பட்டு ஓரங்கட்டப்படு வதன் மூலம் அவர் கவிதை களில் இடம்பெறும்தமிழ் மண்வளம், கலாச்சார-இலக்கியப் பரிச்சயங்கள், அவற்றை அந்தக் கவிஞர் புதுவகையாக, நவீன வாழ்க்கையின் ஊடாட்டத்தோடு அணுகும் பாங்கு ஆகிய அனைத்தும் கவனம் பெறாமல், பேசப்படாமல் போய் விடும் அவலநிலையும் நீடிக்கிறது.

இந்த ஏசல்கள்,வசைபாடல்களால் சோர்ந்துபோய் தங்களுடைய மொழிரீதியான, வடிவம்சார்ந்த பரிசோதனை முயற்சிகளைக் கைவிட்டுவிடும் இளங் கவிஞர் கள் கணிசமாகவே உண்டு. ‘புரியவில்லைஎன்ற வார்த்தை கவிதையில் மொழி ரீதியான, நடை ரீதியான பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்கிறவர் களை முடக்க, புறமொதுக்க தொடர்ந்த ரீதியில் முன்வைக்கப்பட்டுவரும் [விதண்டா] வாதம். நவீன கவிதையின் உத்திகள், பரிசோதனை முயற்சிகள், நவீன கவிதை களைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்கள் முதலியவை குறித்த அகல்விரி வான, திறந்த மன விவாதங்கள், கருத்தரங்குகள், நூல்கள் இங்கே தொடர்ந்த ரீதியில் அமையவில்லை.

இன்னொரு பக்கம் நவீன கவிதை என்ற பெயரில்கதை சொல்லல்அல்லதுவரிக்கு நான்கு குறியீடுகளைக் குவித்தல், அப்பட்டமான உரைநடையை வரி வரியாக வெட்டித்தந்து கவிதை படைத்தல், மேலோட்டமாக சில நவீனச் சொல் லாடல்களைத் தூவுதல் போன்ற செயல்பாடுகளும் இடம்பெறுகின்றன.

ஒரு காலத்தில் பரிசோதனை முயற்சிகளாக, நவின உத்திகளாக இருந்தவை இன்றைய தமிழ்க்கவிதைகளின் உள்ளார்ந்த அம்சங்களாகிவிட்டன என்று சொல்லப்பட்டாலும் உருவ ரீதியாய், மொழி ரீதியாய்கவித்துவம் நிறைந்தபத்திகவிதைகள்என்ற ஒரு புதுவகையைத் தவிர மற்றபடி தமிழ்க்கவிதை யின் மொழிப் பயன்பாடு சார்ந்து வடிவம் சார்ந்து ஒருவகையான தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இந்தப் பின்னணியில் கவிஞர் நந்தாகுமாரனின் மைனஸ் ஒன் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள மொழிரீதியான பரிசோதனை முயற்சிகள் கவனம் பெறுகின்றன. கணினித்துறையில் பணிபுரிபவர், தனது பணிக்களம், தொழில் நுட்பம் சார்ந்த அறிவு, விவரங்கள், தகவல்கள், அனுபவங்களின் பின்புலத்தில், அந்தத் துறைக்கேயுரிய கலைச்சொற்களைப் பயன்படுத்தி, துறை சார் தகவல் களைக் குறியீடுகளாக்கி வாழ்வனுபவங்களையும் உணர்வுகளையும் கவிதைக ளாக்கியிருப்பதால் இவரது கவிதைகளில் நவீனத்தன்மை மேலோட்டமாக இல்லாமல் வேர்கொள்ள முடிந்திருக்கிறது.

இதுவரையான நவீன தமிழ்க்கவிதையின் போக்குகள், பாடுபொருள்கள், உத்தி கள் ஆகியவற்றை ஆர்வத்தோடு தன் வாசிப்பின் மூலம் பரிச்சயப்படுத்திக் கொண்டு, உள்வாங்கிக்கொண்டு அவற்றிலிருந்து தன் கவிதைகளுக்கான உரு வத்தையும் உள்ளடக்கத்தையும் கவிஞர் தெரிவுசெய்துகொண்டிருப்பதை இந்தத் தொகுப்பில் இடம்பெறும் கவிதைகள் உணர்த்துகின்றன. எடுத்துக்காட்டாக, பிரக்ஞாபூர்வமாக எளிய நடையில் ஒரு கவிதை எழுதி அதற்கு ‘user friendly’ என்று தலைப்பிட்டிருக்கிறார் கவிஞர்!

சில கருப்பொருள்கள் அவற்றின் அளவிலேயே நவீனமானவையாக இருக்கும். ஆனால், பலரும் பல காலமாய் பல்வேறு விதமாய் விவரித்துவிட்ட, விவரித்தபடியுள்ள ஒரு கருப்பொருளை புதுவிதமாய் கவிதையாக்குவது உண்மையிலேயே சவாலான விஷயம். கவிஞர் நந்தாகுமாரனின் மழை குறித்த கவிதை இந்தச் சவாலில் வெற்றியடைந்திருக்கிறது!

மழை கேட்டல்
வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheet களை
அவசரமாக வாசித்துக்கொண்டே போனது

நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளிவடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசித் தீக்குச்சியைப் பற்றவைக்கும்
தீவிரத்தோடு.


கூடலும் கூடல் நிமித்தமும் என்ற தலைப்பிட்ட கவிதை ஆண்-பெண் உடலுறவைப் பற்றிய நயமார்ந்த கவிதை.

ஒரு கவிதை வார்த்தைகள் என்ற தலைப்பின் கீழ் இடம்பெறும் மூன்று கவிதைகளில் நிறைவான கவித்துவம் கொண்ட முதலாவது இது:

தானியங்கி தாலாட்டு பாடும்
எந்திரத் தொட்டிலில்
மிதந்தபடி
கனவில் எழுதப்படும் கவிதையில்
இவன் வேண்டிக்கொள்கிறான்
விடாமல் தலைகோதும்
எந்திரக் கை வேண்டும் என.

கவிதை எண் 00 என்ற தலைப்பிட்ட கவிதையின் கவித்துவம் மிக்க ஆரம்ப வரிகள் இவை:

காற்று ரெண்டு குட்டிக்கரணம் அடித்து
தலைமுடியைக் கலைத்தது.

4 டிகிரி செண்டிகிரேட் என்ற தலைப்பிட்ட கவிதையில் வரும் அருமையான விவரிப்பு:

பாறைக்குள் பறந்துகொண்டிருந்த என்னை
ஒரு புல்லாங்குழல் கண்டுபிடித்தது

ஒளி எரித்த திரை என்ற தலைப்பிட்ட கவிதையின் கவித்துவமும் நவீனத்துவமும் மிக்க இறுதி வரிகள் இவை:

ஜூபிட்டரின் பாதையில் குறுக்கே போனதாக
என் மீது மற்றொரு குற்றச்சாட்டு
எழுந்தது
ப்ளூட்டோவிலும் தான் நிகழ்கிறது பூரண
சூரிய கிரகணம்
கண்ணாடி அணிந்துகொள்ளுங்கள் என்னைப் போல
என்றேன்.

சாக்கடை என்பதும் நீர்நிலை என்ற நாலு வரி குறுங்கவிதை வடிவத்தில் வழக்கமானதே என்றாலும் சாரத்தில் அடர்செறிவானது.

கழுகுகள் ஊறும்
சாக்கடை வானில்
தனித்துத் தவழும்
கருடப் பறந்து

இந்தத் தொகுப்பின் பலமாக நான் கருதுவது கவிஞர் தனக்குப் பரிச்சயமான நவீன உலக கணினி தொழில்நுட்பத்தை, அதன் கலைச்சொற்களைத் தனது கவிதைகளின் விவரிப்புமொழியாக வரித்துக்கொண்டிருப்பது; அங்கிருந்து தனது உவமான உவமேய குறியீடுகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பது. பலவீன மாக எனக்குப் படுவது இந்தத் தொகுப்பின் கணிசமான அளவு கவிதைகள் கவிஞர் பிரம்மராஜனுடைய கவிதை வடிவை அபப்டியே பிரதியெடுத்திருப்பது போல் தோன்றுவது. நவீன தமிழ்க்கவிதை வெளியில் நுழையும் எவரும் புறக்கணிக்க முடியாத கவியாளுமை பிரம்மராஜன் என்பதில் இருவேறு கருத் துக்கு இடமில்லை. அதே சமயம் அந்தத் தாக்கம் இன்ஸ்பிரேஷன் என்ற அளவைத் தாண்டிவிடலாகாது.

உறுமும் பொழுதுகளில் சர்ரியலிஸம் என்று தலைப்பு மட்டும் நவீனமாக உள்ளடக்கம் சாதாரணமானதாக உள்ள கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டென்றாலும் இந்த அம்சம் இடம்பெறாத கவிதைத்தொகுப்புகளே இல்லை என்பது தானே உண்மை.

நவீனமான தலைப்புகளைக் கொண்ட கவிதைகள் இடம்பெறும் இந்தத் தொகுப் பில் கோடிட்டுக் காட்டத்தக்க கவிதைகள் கணிசமாகவே இருப்பதால் எனக்கு நிறைவான வாசிப்பனுபவம் கிடைத்தது. அறவுரை(unasked) தரத் தயாராயி ருக்கும் பலரில் ஒருவரோ ஒன்றுக்கு மேற்பட்டவரோ வரும் நாளில் ஒரு நாள் [இது நாள் வரை இல்லையெனில்] கவிஞரை அணுகிபுரியும்படி கவிதை எழுதச் சொல்லிபல்லாயிரக்கணக்கான [?!] கவிதை ஆர்வலர்களின் சார்பில் நைச்சியமாக வற்புறுத்த, மூளைச்சலவை செய்ய, ’புரியும் கவிதை எழுதுவது எப்படிஎன்று பாடம் எடுக்க முயற்சிக்கலாம். கவிஞர் நந்தாகுமாரன் அவற்றால் அலண்டுபோய்விடலாகாது. அதே சமயம், புரிந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையான அக்கறையோடு கேட்கும் வாசகர்களைப் பொருட்படுத்தாமல் அலட்டிக் கொள்ளவும் கூடாது!





000





மைனஸ் ஒன்
_ 1
நந்தாகுமாரனின் முதல் கவிதைத்தொகுப்பு
[வெளியீடு : உயிர்மை, முதல் பதிப்பு : டிசம்பர் 2012
பக்கங்கள் 112 விலை: ரூ.90



கிராமத்து ராட்டினம், பூ மலரும் காலம்

ஜி.மீனாட்சியின்
   இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடு  
_ஒரு சிறு அறிமுகம்.

_லதா ராமகிருஷ்ணன்












ஒரு பத்திரிகையாளரின் பணி சவால்களும் சிக்கல்களும் நிறைந்தது. இதன் காரணமாக இதழியலாளர்கள் படைப்பாக்கத்திறன் பாதிக்கப்படுவதுண்டு. வெறும் வாழ்க்கைத் தொழிலாக மட்டுமே பாவித்து இதழியலாளர்களாக இருப்பவர்களும் உண்டு. மிகுந்த ஆர்வமும் இலட்சிய வேட்கையுமாக பத்திரிகைத் துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களும் உண்டு ஜி.மீனாட்சி இரண்டாம்வகை இதழியலாளர். பல வருடங்களாக தினமணி நாளிதழில் பணியாற்றிய பின் தற்சமயம் புதிய தலைமுறை இதழில் என்றுமான உத்வேகத்துடன் இயங்கிவரும் ஜி.மீனாட்சியின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் சமீபத்தில் நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடுகளாக பிரசுரமாகியுள்ளன. 2012-ன் இறுதியில் ஒன்றும், 2013 ஜூன் _ல் இன்னொன்றுமாக வெளியாகியுள்ளன. கிராமத்து ராட்டினம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள சிறுகதைத் தொகுப்பில் 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்தின் விரிவான அணிந்துரையும், ஆசிரியரின் அடர்செறிவான என்னுரையும் வெளியாகியுள்ளன. பூ மலரும் காலம் என்ற கவித்துவமான தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பிலும் 11 கதைகள் இடம்பெற்றுள்ளன. அமுதசுரபி ஆசிரியர், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணைன் விரிவான அணிந்துரையும் ஆசிரியரின் என்னுரையும் வெளியாகியுள்ளன.
 ”உத்தி என்ற வகையில் தமிழ்ச்சிறுகதை எழுத்தாளர்கள் முயன்று பார்க்கவேண்டிய களங்கள் இன்னும் நிறைய உண்டு என்றுதான் தோன்றுகிறது”, என்று தனது அணிந்துரையில் குறிப்பிடும் திருப்பூர் கிருஷ்ணன், தொடர்ந்து, “சில ஆண்டுகள் முன்னால் தமிழ்ச்சிறுகதைத் துறைக்கு ஓசைப்படாமல் ஒரு பேரிழப்பு நேர்ந்தது. எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் மறைவு தான் அது. உத்தி வகையில் எண்ணற்ற பாணிகளில் எழுதி எழுதிப் பார்த்த அசகாய சூரர் அவர். வெறும் விளம்பரங்களின் தொகுப்பாகவே கூட ஒரு கதையைப் படைத்த சாமர்த்தியம் அவருடையது”, என்று சுட்டிக்காட்டுகிறார். அவ்வாறே ‘பூ மலரும் காலம்’ என்னும் கதையிலும் ஜி. மீனாட்சி உத்தி வகையில் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருப்பதாக ஒப்பிட்டுக்காட்டுகிறார். “கருத்து வெளியே தனித்துத் துருத்திக்கொண்டு தென்படாமல் தான் சொல்ல வந்த கருத்தை இலக்கிய நயத்தோடு உள்ளடக்கியிருக்குமாறு சொல்லும் ஆற்றல் இவரிடம் தென்படுகிறது. காலப்போக்கில் இந்த ஆற்றல் பயிற்சியின் காரணமாக இன்னும் மேம்படும்”, என்று திருப்பூர் கிருஷ்ணன் கூறியிருப்பது மிகச் சரியான கணிப்பு.
அதேபோல், கிராமத்து ராட்டினம் என்ற தலைப்பிட்ட ஜி.மீனாட்சியின் சிறுகதைத் தொகுப்பிலான தனது அணிந்துரையில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம், “மொத்தம் பதினொரு கதைகள் அடங்கிய இத்தொகுப்பின் படைப்புகளை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். பெண் மனச் சிக்கல்களையும் இயல்புகளையும் பேசும் கதைகள், வாழ்வின் மற்ற பரிமாணங்களைச் சித்தரிக்கும் கதைகள் எனப் பொதுவாக இருவகையான கதைகள்”, என்று குறிப்பிட்டிருப்பதும் மிகச் சரியான கணிப்பு.
ஜி.மீனாட்சியின் கதைகளில் வரும் கதைசொல்லி எல்லா நேரமும் பெண்ணாகத் தான் வருகிறார் என்று சொல்லவியலாது. இது அவருடைய கதைகளின் பலம். ‘ஈவது இகழ்ச்சி’ என்ற கதையில் பொய் பித்தலாட்டம் செய்யும் பிச்சைக்காரர்களைப் பற்றிய கோபம் வெளிப்படுகிறது என்றால் வேறு சில கதைகள் உயர் மட்ட மனிதர்களின் அல்பத் தனங்களைப் அவர் பேசத் தவறவில்லை. பெரும்பாலான கதைகள் நகரில் நாம் தினமும் காணும், பங்கேற்கும் நிகழ்வுகளைச் சுற்றி அமைந்திருக்கின்றன. நகரின் பல முகங்கள், பல பரிமாணங்கள் இந்தக் கதைகளில் காணக்கிடைக்கின்றன. மீனாட்சியின் பெண் கதாபாத்திரங்கள் புலம்புவதில்லை. வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். அல்லது, அப்படியிருக்க முயற்சிக்கிறார்கள். அழுகையில் சுகம் காண்பதில்லை. ‘செல்லத்தாயி’ கதாபாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. சமூகத்தின் சாதாரண மனிதர்களின், அடித்தட்டு மனிதர்களின் கண்ணியம், கம்பீரம், கருணை, கடும் உழைப்பு, அன்பு, தோழமை எல்லாம் பல கதைகளில் இயல்பான தொனியில் அழுத்தமாகப் பேசப்பட்டிருக்கின்றன.
‘மறுபக்கம்’ கதை இசுலாமியப் பெண்கள் பர்தா அணிந்தாக வேண்டியுள்ள வழக்கத்தைப் பற்றி வெகு நுட்பமாக, எந்தவிதப் பிரச்சாரத்தொனியும் இல்லாமல் கையாள்கிறது. ‘பூ மலரும் காலம்’ காதலின் நேர்மறையான பக்கத்தைக் காட்டுகிறது என்றால் ‘கடல் சாட்சி’ அதன் எதிர்மறைப் பக்கத்தைக் காட்டுகிறது. நேசமாய்ப் பழகிய பின் நிர்தாட்சண்யமாக “பிடிக்கலை, விட்டுடேன்” என்று கூறுபவன் முதலில் கதாநாயகியைத் தவித்து அழவைத்தாலும், ஆரம்பத்தில் அந்தப் பிரிவு கதாநாயகியைக் காய்ச்சலில் தள்ளினாலும் இறுதியில் ‘ஹேண்ட் பேகிலிருந்து செல்போனை எடுத்து பெயர்களைத் துழாவி அவன் பெயர் வந்ததும் ‘டெலிட்’ என்ர வார்த்தையை அழுத்தி செல்போனிலிருந்தே அந்தப் பெயரை நிரந்தரமாக நீக்கிவிட்டு, வசதியாய் சாய்ந்து அமர்ந்துகொள்ளும் மனத்திடம் அந்த இளம்பெண்ணுக்கு இருக்கிறது!
‘பூ மலரும் காலம்’ தொகுப்பிலுள்ள ‘என்னுரை’ப் பகுதியில் “பத்திரிகை உலகில் நான் நுழைவதற்கு முன்பாக எனக்குப் பரிச்சயமானது சிறுகதை உலகு” என்று தன் படைப்பார்வத்தைப் பற்றிக் குறிப்பிடும் ஜி.மீனாட்சி, “ஆனாலும் தொடர்ந்து சிறுகதை எழுத்தாளராக ஆகாமல், பத்திரிகைத் துறையில் என் பயணம் தொடங்கியது. கட்டுரைகள், பேட்டிகள் என்று வேறு தளத்தில் இயங்கியபோது சிறுகதைகளில் தீவிரமாக ஈடுபடமுடியாமல் போயிற்று”, என்று தெரிவிக்கிரார். மேலும், “அத்துடன் என்னை ஆழமாகப் பாதித்த விஷயங்களை மட்டுமே சிற்கதைகளாக எழுதிவந்ததால் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மனம் நிறைந்திருந்தது. நதியின் போக்கில் நகரும் சருகைப் போல, எதையும் வலிந்து திணிக்காமல் இயல்பாக இயங்க முடிந்தது”, என்றும் தன் படைப்புலகு குறித்து விவரிக்கிறார்.
தினசரி எதிர்கொள்ளும் சமகால சமூகம், அதன் நடப்புகள், சக மனிதர்கள் என விரிகிறது ஜி.மீனாட்சியின் கதைப்புலம். சிறு சிறு வாக்கியங்கள். அலங்காரமற்ற [சமயங்களில் சற்றே வழக்கமான வறண்ட] வார்த்தைகள், வாக்கியங்கள், நகர்வுகளைக் கொண்டு கட்டமைந்திருக் கின்றன கதைகள். என்றாலும் அவற்றின் உள்ளடக்கங்களும், சட்டென்று கண்ணுக்குள் புகுந்து மனதில் நிறையும் கவித்துவ வரிகளும் வாக்கியங்களும் இந்த இரண்டு தொகுப்புகளிலும் கணிசமாகவே உண்டு. உ-ம்: “துதிக்கைக்குள் புதைத்து வைத்திருக்கும் தண்ணீரை அள்ளியள்ளி தன் மீதே ஆக்ரோஷமாய் வீசி ஆரவாரம் செய்யும் மதயானையின் குதூகலமாய் தோன்றியது கடலின் செய்கை [கடல் சாட்சி].
”தினசரி வாழ்வில் நாம் சந்திக்கிற சம்பவங்களே என் கதைக்கான களங்கள்” என்று தன்னுடைய ‘என்னுரை’யில் கூறியுள்ளார் ஜி.மீனாட்சி. இந்த சம்பவங்களும் சந்திப்புகளும் சக பயணிகளும் நமக்கும் நேர்ந்துகொண்டிருக்கின்ற காரணத்தால் இந்த இரண்டு கதைத்தொகுப்புகளுமே நிறைவான வாசிப்பனுபவம் தருகின்றன.




0