LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label எனக்குப் பிடித்த என் கவிதைகள் - ரிஷி. Show all posts
Showing posts with label எனக்குப் பிடித்த என் கவிதைகள் - ரிஷி. Show all posts

Sunday, April 14, 2013


எனக்குப் பிடித்த என் கவிதைகள் – [5]
முதல் தொகுப்பிலிருந்து
(’அலைமுகம்’)




52. இரை விழுங்கித் திரை

உறுவாழ்க்கை வரமாக ஆர்யாபல்பு வேண்டும்.
பருவப்பெண்ணைத் துரத்தாதவன் பாதி ஆண்.
புலியைப் புள்ளிமானாக்கும் கான் கஸந்த்’.
கலிதீரும் கபில்தேவ் டேஸ்ட்சுவைக்கவும்.
நாலெட்டு ஐந்து நட்சத்திரங்களைப் பறித்து
வாயிலிட்டுக்கொள்ளாப் பிள்ளை வெத்துக்குப்பை.
நாலெட்டு கால்தேயாமல் நடக்க வேண்டும்_
நானூற்றுப் பதினெட்டு ரூபாய் செருப்பு. விருப்பு
வெறுப்புக்கு வெனிலாஎண்ணெய் பொறுப்பு.
பரு வராமல் காப்பதே பிறவிப் பெறும் பேறு.
பூசு ப்ளியரஸில். வேறு_
காசநோய் போக்கும் பாரு_
நேசமிக்க ஜிப்ஸி ஸோலா _ லாலல்லல்லல்லா......
பரிட்சையில் தேற, பெரிய வேலை சேரத் தேவை
வைட்டமின் ஆயிரங்கொண்ட வாலிக்ஸ்சேவை.
பெரியவரோ, சிறியவரோ _ துருப்பிடிக்கும் மூளை
பார்ன்மிட்டாஅருந்தாவிடில் நாளை,
நோகும் இடுப்புக்கு உண் டு நூறு தைலம்.
போக வரக் கிடைக்கும் அடுப்புக்கரித் துண்டு இனாம்.
சுகப்பிரசவமாகும் _ ’ஸின்சோப்பில் தோய்த்தால்.
செஸ்டஸேகாப்பியில் ஸப்தஸ்வரம் சங்கமம்.
தாய்எஸ்டேட்தேனீர் பருக
மாய்ந்துபோகும் மரணமும்.
இல்லறத்தின் சாரம் இளவரசியணியலங்காரம்.
அமரன் பட்டணிய அழியாப்புகழ் சேரும்.
கலங்கரை விளக்கமாகக் கண்மின்ன உண்பீர்
பொன்மிளகாய்ப்பொடியும், மசாலாப்பொடியும்.
பட்டிதொட்டியெங்கும் பறக்க உதவும்
குட்டியானைபபுள்கம்.
வாய்நாற்றம் அகல, விட்டு விலகும் நட்டமெல்லாம்_
வாங்குவீர் திக்கெட்டும் பரவிய கிருமிநாசினி புட்டி.
ஒரு நாளைக்குப் போதும் ஒன்று மட்டும். இள
முது நரை போக்கும் முடிச்சாயம் கொட்டித் தடவ
மறையும் மறுஜென்மக் கறை பல.
மூவாயிரம் ஷாம்பூக்களில் முக்காலமும் பிடிபடும்.
பகைதீரப் படியுங்கள் பேபியின் மடியில்’.
பகுத்தறிவைப் பெருக்கிக்கொள்ளச் சுற்றுவீர்
அதிர்ஷ்டச்சக்கரம்.
கதிமோட்சம் உஜாஜ், பஜாலா கைவசம்.
சுட்டுப்பொசுக்கும் வெயில் மசிய
எட்டு புட்டி ஜிஸ்னா குடித்து
கட்டிப்புரள வேண்டும், பேதி முட்ட
நட்ட நடு வீதியில்.
கற்க வேண்டும் கசடற
கலா கலா குலுக்கலா...
விலாவரியாய் துலங்கும் தொப்புள் கொப்புளங்களில்
விழியப்பிக்கொள்ளட்டும்.
எந்தக் குழி சுந்தரச் சுழி?
எழுதியனுப்புங்கள் இக்கணமே_
எக்கச்சக்கமாய் பம்ப்பர் பரிசுகளுண்டு_
உரல் முதல் விரல் வரை.....
_அரைகுறை வாழ்விதில்
இருள் பிரிந்தது முதல்
விரிவிரிந்த கண்களும் வினோபால்வெண்சிரிப்புமாய்
அரும்பெரும் அனர்த்தமாகும் ஒளியும் ஒலியும்.
தினம் அழுக்கூறி ஊஉறி ஊறி, ஐயோ_
மனம் வெளுக்க வழியில்லையே எங்கள் முத்துமாரி.


53. ரயில் ஸ்நேகம்

இடியின் முதுகில் என்னை எடுத்துச்செல்கிறது.
சில நேரம் சிங்கத்தின் உறுமற்சிறகுகளில்.
சமயங்களில் சாதுப்பாம்பாய், செல்லப்பூனையாயும்
சப்தமின்றி சீராட்டுகிறது.
ஜன்னல் கம்பிகளில் கண்பதித்துப் பார்க்க
என்னை யொரு மையப்புள்ளியாக்கிப்
பின்னுகிறது ஆரக்கால்.
கால் அரையாகும் வேகம் காண
வட்டம் முழுமையாய்_
நான் இருந்தவிடமே திரும்பிவிடுவேனாய்த்
தெரிகிறது.
திடுமென ராட்ஷஸன் கோட்டை மேல்
தடதடக்கிறது.
செவி நடுங்கும் அதிர்வில் கண்ட நேரம்
கொப்பளித்துப் பெருகுகிறது ஆறு_
வரண்டு வெடித்த படுகையிருந்து.
இலைகளே மலர்களாய் பூத்துக் குலுங்கும் திறம்
கலைநூதனம்; கண்மருந்து!
நுண்பச்சை நிறமாயிரம்; நூறாயிரம்.
காமிராக் கை மீறிய காற்றுப்பிரவாகம்.
ஸாரதாஸைஎள்ளிச் சிரித்த மனதில்
பிரமிப்பூட்டுகிறான் அயர்ன்ராண்ட்மனிதன்!
கையெட்டாத் தொலைவில் உதிர்கனவாய்
பறந்துசென்றது
பாப்பா மயில் போல் ஒன்று.
ஒவ்வொரு காட்சிவழியும் மின்னி மறைகின்றன
இளிந்திருக்கும் நட்சத்திர அட்சரங்கள்.
வாசிக்கப் புகின் விடுபடுகிறது காட்சி.
பார்க்கவே போதற்ற போது
வேர் கிளைகளுக்குள் போய்வருவதேது?
நிறையும் மனமெல்லாம் விரைவிரைச்சல் பிற
புரையேறித் ததும்பும் போதம்!
கரையெல்லாம் இருமருங்கும் கையசைப்புகளாகும்!
ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஏகியபடி என் ரயில் _
பயணத்தின் முடிவு பயணமாக.


54. பயணம்

சுற்றமற்றவரின் சீரான ஸ்வாசவோசை சுற்றிலும்.
சுழலும் சக்கரங்களால் சாகரமாய் சப்தமிட்டுச்
சுருண்டோடும் சாலை.
எண்ணற்ற மரங்கள் கடுந்தவமியற்றுவதாய்
கண்ணயராது எனக்குக் கரமசைக்கக்
காத்து நின்றதுவாய்....
காற்சங்கிலி யறுத்தென் பின்னோடி வருகின்றன!
ஓசைகளை மீறிய நிசப்தமும் பேசுகிறது!
ஓட்டுபவனை ஊடுருவும் மனம்.
ஊருறங்கத் தேரிழுக்கும் அனாதையாய்,
ஆண்டையாய் அழவைக்கிறான் என்னை!
பழகிய ஓசைகளும் தடங்களும்
படுத்துமோ அவனையும்...?
நேர்ப்பார்வையில் இறுதியின்றிப் பெருகும்
தார்ச்சாலை ஜனனமாய்....
கனத்த இருள் உறவாய், தனிமையாய்....
ஒரு கண விருப்பில் அந்நிய ஸ்பரிசம் பிரியமாய் வருடும்.
இருவகை யுணர்வில் விழி நிறையும் கண்ணீர்.
அரிய, அறியாத நினைவுகள் அருகேகும்...
தூக்கம் கண்களைக் கீழிறக்க
தருணமிதைத் தொலைக்கலாகாத் தாக்கம்
தூக்கி நிறுத்த _
வழியும் பொழுதும் கழிந்தவாறு...கழிந்தவாறு.....


55. அரைவட்டங்கள்

வழி மறந்த குழந்தைகளாய் ஆனபோதும்
கற்களைக் கெந்தியும் காற்றுக்கு முகமேந்தியும்
மேற்பறக்கும் சிறகினந் தன்
நீள அகல நிறமாய்ந்தும்
தலைகீழ்க் கடலாய் வான் கண்டு
அலைநீந்தும் விண்மீன் காணப் புகுந்து
அங்கிங்கெனாதபடி
சூழலை ஆயபுலனனைத்தாலும் நீள
உள்ளிழுத்தபடி
நின்றும் திரும்பியும் நாசி சுருக்கியும்
கண்விரிந்தும் சென்றபடி யிருக்கின்றன
உள்செல் வழி சொல் நினைவு.
அள்ளிக்கொள்ளு முன் அகன்றேகி
துள்ளி ஒளிகிறது மரம் பல பின்_
கள்ளமாய் எனைப் பார்த்துக் கண்சிமிட்டியபடி.
ராதை யசோதை கண்ணன் குழலெனக்
குழம்பித் தளும்புகிறது மனம்.
எங்கோ ஒரு பானையில் வெண்ணெய் குறைகிறது.
ஏதோ ஒரு நதிக்கரையில் துணியைக் காணவில்லை.
சர்வமும் நானே என சவடால்பேர்வழியாய்
வளர்ந்துவிடலாகா தென் செல்லப்பிள்ளை....
காலாதி காலத்தில்
கண்கலங்கிப் பிரிவது காபூலிவாலாவுக்கு.
கைகொட்டித் திரிவது குழந்தைக்கு.

56.காயலான் கடை

கல்லும் சிலையும் கணமொரு விலையும்
பூட்டும் சாவியும் ஸ்விட்சும் ஸ்பானரும்
சுத்தியலுமாய்
ஏதில்லை இங்கு தான்!
சட்டையும் வேட்டியும் ஈட்டியும் சாட்டையுமாய்
சூரியன்கீழ னைத்தும் உண்டு காண்!
பூட்டைப் பூட்டிக்காட்டப் பூட்டுகிறது;
திறக்கிறது. வாங்கிப்பூட்டத்
திறக்கிறது; பூட்டவில்லை; திறக்கவில்லை.
மார்பில் குத்தி  முதுகில் வெளிவரும் ஈட்டிக்கூர்வலி.
தொட்டுத் தடவப் பெறும் உதிரத்துளி
உத்தரவாதம்.
அந்தகாரத்தில் பதியும் கையிடமெல்லாம்
ஸ்விட்ச். அனாதிகால வெளிச்சம் கண்பறிக்கும்.
வாயில்களைத் தேடிச் செல்லும் திறவுகோல்கள்
கைகளைத் தவறவிடும். உருகலைத் திருகி
விடும் ஸ்பானர். ஆணியறைந்து
சாயுங் காலத்தை நிறுத்துப் பார்க்கும் சுத்தியல்.
நினைவில் கூர்மழுங்கியும் மழுங்காது மிருக்கும்
கத்தித் துரு காத்திருக்கும்
காயத்தைக் கீறவும், வடுவைத் திரும்பக்
கசியச் செய்யவும்.
தோள்களைப் பார்த்திருக்கும் சிறகுகளும், சிந்துபாத்
கிழவர்களும், சூட்சுமநாடிகளுக்காய்
சாட்டைகள், சட்டை, வேட்டி யுயிர்த்
திரைச்சீலையாய்...
சொப்பனப் பூக்களும், சொப்பு மாக்களும்
சொல்லக் கூடாதனவும், சொல்லி மாளாதனவும்
செய்யக் கிடைக்காதவையும், செய்து முடிக்காதவையும்
அள்ளியள்ளியள்ளி
எடுத்து நிறுத்து ஏற்றிக் குறைத்து
என்னை நானே கொண்டுங் கொடுத்தும்
ஏலத்தில் விட்டெடுத்த படி
பேரம் படியாமல் நேரம்
தறிகெட் டோடஓட
கடை மூடலாற்றாமல்
நாளுங் கூவும் சந்தைப் பாங்கு
நாவடங்காது மாதோ.

57. கூண்டுராஜ்யம்

எப்பொழுது வெளியேறினேன், எதனால்
எதுவொன்றும் நினைவில்லை.
கூண்டுராஜ்யம் துறந்து பரதேசியான
சோகம் மட்டும்
ஈரம் மாறா அனலாய்...
தூரத்தே தெரியும் கூண்டில்
பேரரசனும் பிரஜையுமாய் போரின்றி வாழ்ந்திருந்தேன்.
தூரத்தே தெரியும் என்  கூண்டு.
சேர வழியின்றி இடையோடும் வெளி.
முடிந்தாலும் கூண்டுக் கதவடைத்திருந்தால்...?
உடைத்துத் திறக்க உள்நுழைவார்கள் வழிப்போக்கர்கள்.
கூண்டற்ற கூண்டு வேண்டாதது.
கூண்டு நான் விட்ட இடத்திலேயே இருக்கிறதோ?
இல்லை, இடம்பெயர்ந்துவிட்டதோ அதுவும்?
நானில்லாமல் தானியங்காக் கூண்டு அது.
பின்னொடு அருவமாய் வருவதாய்...
திரும்பிப் பார்க்கிறேன்.
விரும்பினால் இங்கொரு கூண்டமைத்தும் இருக்கலாம். 
கூண்டு வருவது பின்தொடர்ந்தா? தொற்றிக்கொண்டா?
உறுத்துப்பார்க்க, உறுப்புகள் மறைந்து
வரிவரியாய் இரும்புக் கம்பியிட்ட கூண்டு விரைவதாய்...















Sunday, July 8, 2012

எனக்குப் பிடித்த என் கவிதைகள் - 3 - ரிஷி




எனக்குப் பிடித்த என் கவிதைகள்-3

- ரிஷி
[*முதல் தொகுப்பு-அலைமுகம்]


40] சுவர்க்கோழி
தினமும் பேசுகிறது, தூரதேசத்து
சங்கேத பாஷையாய்.
பரவும் பயம், போதம் பப்பாதி.
நெற்றிச்சுருக்கம், கண்ஜாடை
கண்டத்தந்தியதிர்வென
முனை கிடைக்கலாம் முகங்காட்டினா லாவது.
மறைவிடமே தெரியவில்லை.
நூறாயிரந் தூண்களுக்காய் ஓடியோடிக்
கரையுங் கால்.
ஒருபொருட்பன்மொழி_
இரட்டுற மொழிதல்_
முரந்தொடை, உருவகம்_
இலக்கண மென்ன இவ்வுரைக்கு?
கூக்குரல், கிசுகிசுப்பு, கேவல்
கானமழை_
இயல்பென்ன இந்தத் த்வனிக்கு?
கண்கட்டியிருக்கும் கறுப்புப்பட்டைக் கப்பால்
கலங்கித் தெரியும் காட்சி
காற்றுச்சாயை நீட்சியாய்.
பிளக்கக் கிட்டுவது சிமெட்டி, செங்கல்,
முடிச்சிட்ட நாளச்சிக்கு_
சுண்ணாம்பும் செந்நீரும்_
நிணக்குழம்பு மட்டும்...
வீடெங்கும் வியாபித்திருக்கிறது ரீங்காரம்.
மௌனவேளைகளில் கரைமீறும்
பிரவாகப்பேரிரைச் சலாய்.
அடர்காட்டின் எக்கிளையில் அடிமுடியாய்
ஆடும் யார் வருவாரோ
உதவிக்கு...?


41]வரைபடம்
காலுங் கையும் சூம்பிப் போனதாய்
ஏதோ ஒன்று காணக் கிடைத்தாலும்
அழித்துவிடலாம் அரைகுறை நிறைவோடு...
கண்டதெல்லாம் விண்ட புள்ளிகளும்
வரித்துகளுமாகையில்
கலைப்பதெங்ஙனம்...?
குரல்வளை நெரிக்கிறது கூவுங்காலம்.
‘கருவா என்ன? கலைத்துவிடு_
அறிவுறுத்துகிறது.
விரலுரியத் தேய்த்து விரட்டினாலும் போதாது.
பழக வேண்டும் பின்
விழி வயது மூன்றின்_
இழுகோடு இரண்டெட்டிருபதாக...
விழுபுள்ளி குரங்கு புலி கிளி கரடியாக...


42]அக்களோ-பட்சி
அளவு குந்துமணியோ, கோலிகுண்டோ_
குரல்வளைப்புறத் தொரு துளையிருக்க
காடுமலை மேடெல்லாம்
கண்ணெல்லாம் தொண்டையாகக் கரைந்து
திரிந்திருக்கும்.
திறப்படைக்கக் கரம் காலாக்கிப்
புரிந்திருக்கும் த்வந்தயுத்தம்.
வெளிப்போந்திருக்கும் நீர்
விரலிடுக்காய்.
அனல்தகிப்பில் ஆவியாக நீரை
வாங்கிக்கொள்ளப் பார்த்து
வானெழும்பியிருக்கும்.
நாநுனியோடே நீர்க்கனிவு
கந்தந்து பறிப்பதாய்.
அகழிதாண்ட லாகாது அலைபாய்ந்
திருக்கும் அங்கும்...
எங்கெலாம் தலைமோதி மூக்குராய்ந்து
அழுததுவோ யாரரிவார்?
என்னென்ன சொல்லி அரற்றியிருக்கும்...?
எத்தனையாவது ‘டார்ஜானாவது
அறிந்திருக்கக் கூடும்.
போன நேரங்களில் ஈனக்  குரலெழுப்பவும்
திராணியற்று
இறந்த சிறகுகளோடு சுருண்டிருக்கும்
ஒரு மூலையில்.
சும்மாயிருந்திருப்பானா சர்வாதிகாரி?
சிறு கல் சிறுவ னெறிய பெரியவன்
பொரித்துத் தின்றிருப்பான்.
ஒரு கையேனும் புனல் நுழைத்துப்
பயிர்தழைக்கப் பாய்ச்சியிருக்கலாம்...
வெருளாமலிருக்குமோ பறவையும்?
‘யாருக்கோ நீர்தராத் தண்டனை
யாரோ அனுபவிக்கிறான்
_அழுகுழந்தையை அடக்க
ஆய்தம் வீசுவாள் அம்மா.
சிறகுவரம் சிறையிலும்!
பறந்தது வானிலோ நானிலோ...
அழிந்துவிட்ட இனம் என்பார்கள்....
விழுந்து கிடக்கிறது வழியெங்கும்.


43]முட்டாள்பெட்டியின் மடியில்...
‘ஒரு வாய் நிறைய வானத்தில்* பிறக்கிறது அசரீரி:
“பழிதீர்ப்பானா, மாட்டானா அபிமன்யூ?
அழும் மழலையின் அனாதரவு அடிமனம்
பழுக்கக் காய்ச்சிய கம்பியாய் பாய
தாயிடம் பீறிடுங் கண்ணீர் திரைமீறும்.
தீர்ந்து கிடந்த அடிமகள் உதிரம்
யாரையும் உறுத்தாதது அகம் வருத்தும் அதிகம்.
ஆணவத் தந்தையின் தானறு நிலை
ஆனந்த மளிக்கவில்லை.
மீண்டும் உரத்துக் கிளம்புகிறது குரல்:
“பழிதீர்த்துக்கொள்வானா அபிமன்யூ?
முந்திச் சொல்வோர்க்கு முன்னூறு பரிசுகள்.
இரவு பகல் இருபது நாட்கள்
களித்திருக்கலாம் கோவாக் கடற்கரையில்.
விதிமுறைகளை எடுத்துரைக்கும்
இரவல் குரல் இரைய
கிளரும் துளி சபலம்.
‘வரவு செலவுக்குள் அடங்கும் யாவும்-
புரியும் வரியிடை வரிகள்.
இடைமறிக்கும் கேள்விகள் இருந்தும்.
‘இந்தக் கணங்கள் தருவது எந்தச்
சந்தையிலிருக்கும்?
‘இன்னும் கேவிக்கொண்டிருக்கும் பிள்ளைக்குரல்
நிழலா? நிஜமா?
ஜம் ஜம் குதிரை, ஜாராட்டும் குதிரை...
‘காட்சியின் நிஜமெல்லாம் கமர்ஷியல் வரை...

*  a mouthful of sky என்ற தொலைக்காட்சித்தொடரின் ஒரு காட்சியைப் பார்த்ததில் உருவான கவிதை

44]எண்ணின் பின்னங்கள்
உருகியுருகி அஞ்சலி செய்யும்
குரலருவிக்குள்
கூடு விட்டுக் கூடு பாய்கிறது மனம்.
செதுக்கப்படவேண்டியது இக்கணம்.
விதிக்க்ப்பட்ட உளி வரிகளாக_
மறுகும் உள்.
திரும்பத் திரும்ப வரைந்தென்ன?
அரைவட்டங்களே நிறைகின்றன.
பருகும் உதடுகளுக்கும் பழக்கோப்பைகளுக்குமான
இடைத்தூரம் ஏழு கடல் மலையாக
வாதப்பிரதிவாதங்களுக்குள்  அடங்கா
வழக்காழம் மொழிநழுவிப் போக
விட்டு விலகியவாரிருக்கும் வட்ட
முழுமை, யதன்
உட்புள்ளி, வெளிச்சுற்று
பரப்பெல்லை, ஆரம், வட்டம், வடிவம்
நிறம்_
வேறேதும் ஒருபோதும்
உள்ளது உள்ளபடி சொல்ல வல்லாமல்
களைத்துச் சோரும்
கை வடித்திருக்கும்
காலந் தோறும்.


45]குருவியும் காபூலிவாலாவும்
வளர வளர வெட்டுப்படும்
சிட்டுக்குருவியின் சிறகுகள்.
கால்கட்டிப் பறக்கவிட்டுச்
சுண்டியிழுக்கும் காலம்.
இனி காற்றின் கதை கேட்க
வரமாட்டான் குட்டித்தோழன்.
வரவர குறுங்கொம்பும், வாயுலகும்
வாலும் விடைபெறும்.
நாலிரண்டில் தரை தட்டும் நடை
பழகவேண்டும் தோள்சுமை.
“விளையாட்டில் எல்லாம்தான் உண்டு!
_எளிதாகப் பகர்ந்தார் நகர்ந்தார்.
தெளிந்தும் களைத்திருக்கும் அகம்.
கன்னிப்பெண்ணுக்குச் சின்ன பொம்மை
கொண்டுதரும் அன்பு
கையறுபடும்.
வில்லடியும் கல்லடியுமான வாழ்வில்
சொல்ல வல்லாமல்
இட்ட கோட்டின் இப்புறமாய் சில
காபூலிவாக்கள்.

Wednesday, June 27, 2012

எனக்குப்_பிடித்த_என்_கவிதைகள்_2

எனக்குப் பிடித்த என் கவிதைகள் - 2

- ரிஷி

[*முதல் தொகுப்பு-அலைமுகம்]




30.அச்சும் பண்டமும்
சிந்துபாத் பயணம்
ஆக்டோபஸ் முதுகில்.

ஆயிரங் கால்கள் வருடுவதாயறைந்தபடி.

உயிரருகும்.

பலமனைத்தும் திரட்டி சில கால் பிரித்தெடுக்க

இறுக்கும் பிறசில.

அடி முதல்  முடி வரை படர் சாட்டை வரி

வடுவாயும், கசிந்தபடியும்...

சிரசில் பதிந்தொரு கால் நிரந்தரமாய்.

கண் தின்னும் மண்.

சூரிய சந்திரன் சதுரமா செவ்வகமா?

சரியாகாது நாணலாகிவிட்டதென்று

முதுகெலும்பைச் சொல்லுவதும்.

ஆற்றுப்போக்கில் ஆங்காங்குறும் சுமைதாங்கிகளில்

சற்றே சாய்ந்து

சிரம பரிகாரம் செய்யப்போக

தாங்கிக் கல் தாவி

முதுகேறியது.

ஆக்டோபஸின் மேல்

ஆக்டோபஸ்...

மேலின் மேலின் மேலின்....


31. மொழித்துவம்

நீலம் சிகப்பு மஞ்சள் பச்சை

கருப்பு வெளுப்பு மா பூ பலா

கண் மருந்து பால் ஈ புறா

அது இது எது எது

தினம் கணம் நிரந்தரம்

மரணம்

ஜனனம் புனரபி

ஸாம்ஸன் தலைமுடி

தகர்தூணுறு[ரு] வரு[று]

தேவ தரிசனம்!

தந்தீச்சுட ரொளிர்

தேஜோமயம்!

நிர்விசாரம் பெருகும்

விரிவெளிக் கதவருகாய்

இருகைப்புலிரோஜா சிரித்திருக்க

காற்றுக்கடிகாரம் கூறும்

நாளை படித்தாயிற்றென!

நிலவூறி யினிக்கும் நா!

நதியெல்லாம் நெஞ்சுள்ளாய்!

நட்டதழிந்தோட ஓட

விட்ட இடம் விடியும்!

சிறுகாற் பெருவளத்தான் ஆட்சியில்

செக்குமாடுயர்த்திய சிறகெங்கும்

பட்டொளி வீசிப் பறக்கும் காட்சி

காணப் போதுமோ கண்கோடி?!


[சமர்ப்பணம்: குட்டித்தோழனுக்கு]



32. மனவந்தனம்


பாதிக்கிணற்றின் மேல் அந்தராத்மா பேதலித்த நாழி

காலடி பதிந்த மரப்பாலமாய்

காலந்தப்பாது வந்தடைந்ததுன் வாழ்த்துமடல்!

சாகரங் கடந்த அகர இகரங்களில்

சஞ்சீவிப்புதர்கள் செழித்திருந்தன பக்கங்களில்.

எழுதிய, எழுத்துக்கோர்த்த ஏராளங் கூடு பாய்ந்து

காடு மலை கடல் கடந்து

வரியிடை வரி வலம்புரிக்காய் மீண்டும் மீண் டும்

முழுகி மூச்சுத்திணறி நீயலைந்த கதை யுரைக்கும்

மெய் யுயிரெழுத்துக்கள் மிக நிறைய.

கடந்து வந்த பகலிரவுகளில் அதிர்ந்துதிர்ந்தது

எண்ணிறந்தது போக

இன்னமும் கனிந்த சுடராய் கூடவரும் நீ.

இரண்டனுப்பி யென்னைப் புரந்த காருண்யம்

எண்ண எண்ண

மயிலிறகின் சுமையேறிய வண்ணம்.

அச்சிறும் போல்...

பாரந் தாங்கலாற்றாமல் பதில் மரியாதை செய்யப்

பதறும் மனது.

வேறென்ன தரலாகும் _

ஒரு கற்றுக்குட்டிக் கவிதையைத் தவிர?

[சமர்ப்பணம்: தேவிக்கு]                                                                           


33. பதிலாகும் கேள்விகள்


எங்கிருந்து பிராணவாயு இந்தக் கண்ணாடிக்

கூண்டுக்குள்

எனக் கேட்பவர்களுக்கு

எப்படிப் புரியவைப்பது

வானம் நாற்புறமுமான திறந்தவெளி அரங்கிது

என்பதை?


அதிரும் செவிப்பறைகள் வேறாக

உள்மரச் சலசலப்புகளை உணர்த்துவதெவ்வாறு?


மாறும் தாகத்து மனிதர்களுக்கு

என் நதிநீர் கானலாகக் காண்பதில்

என்ன வியப்பு?


தனிமைச்சிறைத் தாழ்வாரங்களாய் தட்டுப்படுவது

உப்பரிகையிலிருந்து தாழப் பார்க்க

உன்னத ராஜா பவனிவரும் உற்சவச் சாலையாக

தெளிவதென்றுமக்கு?


நான் நீயாக நீ நானாக

நிர்பந்தம் யார் ஆக்கியது?


நியமங்கள் ஒன்றாய் ஏன்

நிறம் பலவாயிருக்க...?



34. ஆகுதி


மனதி ஒளிப்பாய்ச்சலுக்கு முன்

முட்டி போட்டு நடக்கும் உடல்

ஓடான மாடாக நுரைதள்ள

உட்பரவும் காட்டுத்தீயில்

வெளியெல்லாம் வெளிச்சக்காளியாக்கி

வியப்பும் பயமும் வார்க்கும்

ஓங்கி உலகளந்த ஜ்வாலையாய்

விரிதலையாடச் சிரித்தது அந்த வரி:

தீக்குள் விரல் வைக்கும் சிரமம் தரலாகாதென்றா

எனக்குள் தீயை வைத்தாய் நந்தலாலா?!”

வரித்துச் சேர்த்தணைகும் பெருவிருப்பு

நெருப்பைப் படரும் பெருநெருப்பாய்...

ஆள்விழுங்கப் பார்க்கும் அடர்வெப்பம்.

சுவர் சித்திர படிமம் துரத்த

தூரம் போகிறேன்

உருக்குலையாமல் உலை புகுந்து மீளும்

தருணம் பார்த்தவாறு.



குறுங்கவிதைகள்

35.விடுகவிதை


ஒன்றிரண்டுமூன்றுநான்கு

ஐந்தொன்பதிருபதாங்கு

முக்கோடி முப்பத்து பூஜ்யம் சூழ

மூவேழுலகும் எட்டு மாறும்

வகுத்துப்பெருக்கிகூட்டிக்கழி

என்கணக்காகுமென்வழி



36. காணிநிலந் தாண்டி...


ஆறு கால்களும் எட்டு கைகளும் இருந்தால் போதும்

வாழ்வை நடந்து கைக்கொண்டு விட ஏலும் போலும்.

மறவாமல் இரு பாதை பிரியவேண்டும் பார்வை.

கண்ணிரண்டு கூட வேண்டும் பின்மண்டையில்.

விரல்கள் அதிகமாக, வாரக் கூடுமோ காலத்துகள்களை?

இரவல் மனம் இருபது  வேண்டும், ஒரு நாள்

இருபத்திநானூறு மணிநேரம் வேண்டும்...

இன்னும்.... இன்னென்னவும்... இன்னும்...



37.அடையாளம்


இந்தக் கைக்கடிகாரம்

நிச்சயம் என்னுடையதுதான்.

இன்றை நேற்றாக்கி நிற்கிறது.

என்றாலும், ஓரிரண்டு நிமிடங்கள்

அதிகமாயும்,

நேரங்காட்டுகிறது

மிகச்சரியாய்!

38.பறை

நானே வாள்சுழற்றி

நானே விழுந்துபட்டு

நானே அசோக பௌத்தனாய்

ஆங்கில மொகலரசர்களுமாகி

கால் மாற்றி நிற்பதாய் மாறி மாறி

வெற்றி தோல்வி பெற்றும் பெறாமலும்

வளரும் பெரும்போர் ஆளரவமற்று.

காற்றோடு கடிதமும் வீசுஜன்னல் களமாக.





39.தோற்றம்


காற்று வீசும்

சூரியவொளி வரும்.

மழைவெயிலுக்கு நிழலாய்

மேற்கூரை.

மனிதர்களுமுண்டு

சுற்றுப்புறத்தில்....

கதவும் சாளரமும் பக்கச்சுவர்களும்

தரைப்பரப்புமாய் _

வீடு போலவே இருக்கும் சிறை.