LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, November 30, 2025

பாவம் அவர்கள்,,,,,, ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாவம் அவர்கள்,,,,,,

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மூன்றாமவருக்குத் தெரியாத இருவர்
அல்லது முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள்
அறியாத இருபதுபேர்
அல்லது மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர்
மில்லியன்களாகத் தம்மை பாவித்துக்கொண்டு
எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
இலக்கியம்
அரசியல்,
நடனம்,
ஓவியம்,
ராப் இசை,
கர்நாடக இசை
ஊர், உறவு, நாடு,
பிரபஞ்சம், தாராளமயம்
புரட்சி, பட்சி, காட்சி,
விரகம், நரகம், மீட்சி
ஆட்சி சாட்சி
அருமை சிறுமை பெருமை கருமை
என்று அவர்கள் பேசிக்கொண்டேயிருப்பதைக் கண்ட
சிறு பறவையொன்று தாங்கமுடியாமல்
அவர்கள் மீது எச்சமிட்டது
அவர்கள் பறவை எச்சத்தைப் பற்றி
அகல்விரிவாகப் பேச ஆரம்பித்தார்கள்.

PROCLAMATION OF THE ARROGANT AND POMPOUS - ' Rishi ' (Latha Ramakrishnan)

 PROCLAMATION OF

THE ARROGANT AND POMPOUS

' Rishi '
(Latha Ramakrishnan)

In the name of tolerance....


I can afford to be arrogant;
that is my birthright
but if you choose to be so
you will be straightaway branded intolerant.
In the name of 'freedom of speech'....
i can afford to express an opinion;
but if you dare open your mouth
you will be abused with words uncouth.
In the name of rational thinking
i can afford to denigrate
all that you hold sacred
but if you react even mildly
you will be attacked all too wildly
(hopefully, verbally)
In the name of Intelligence
i can afford to view all others as fools
but if you dare to call it unfair
you will be called - oh, what all! beware!

கவியும் கவிதையும் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவியும் கவிதையும்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சிரித்துச் சிரித்து மாளவில்லை யவருக்கு
’முன்னாடி’ யென்றொருவர் எழுதியதைப் பரிகசித்து மூன்று பக்கங்கள் எழுதியவர்
’பின்னாடி’ யென்றொருவர் எழுதியதைப் பத்து பக்கங்கள் பகடி செய்தபின்
’அன்றொருநாள்’ என்று முன்னாடி யொருவர் எழுதியதையும்
’இன்றொரு நாள்’ என்றொருவர் பின்னாடியெழுதியதையும்
எண்ணியெண்ணிச் சிரித்துக்கொண்டேயிருக்கிறார்.
ஓடி யோடி தேடித்தேடி யிளைக்கும் மனதை ரோடுரோடாய் ஆடியாடி என்றவர் கலாய்ப்பதைக் கேட்டு
இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்க நினைத்தும் நினைக்காமலும்
இன்னுமின்னுமென சிரித்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்களுமவர்களுமெவர்களும்.
கண்ணாடிவீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்துகொண்டிருக்கிறவரைக்
கவலையோடு பார்த்துக்கொண்டிருக்கின்றன
சொற்களும்
கவிதையும்.

இருமொழித்தொகுப்புகள் சில.......

வணக்கம்.

நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் கவிஞர்களில் 10க்கு மேல் கவிதைகளை மொழிபெயர்த்துள்ள கவிஞர்கள் சிலருடைய மூல கவிதைகளும் அவற்றுன் எனது ஆங்கில மொழிபெயர்ப்பு களும் இடம்பெறும் சிறு இருமொழித் தொகுப்புகளை எனது அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் மூலம் வெளியிட முனைந்துள்ளேன்.

இருமொழித்தொகுப்பு. விலை ரூ150. முன்பதிவுக்கு ஜிபே அனுப்பவேண்டிய அலைபேசி எண் 78455 76241. விலாசத்தையும், அலைபேசி எண்ணையும் உள்பெட்டியிலோ அல்லது lathaa.r2010@gmail.comஇலோ தரும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி





சரிநிகர்சமானமாய் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சரிநிகர்சமானமாய்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பீடங்கள் வேண்டியிருக்கிறது பப்பலருக்கு.
பீடங்களில்தான் எத்தனையெத்தனை வகைகள்!
வெளிப்படையான பீடங்கள் தகதகத்தொளிரும்
தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும்
அதில் ஆரோகணித்திருப்பவரின் அகங்காரமும்
அடங்காப்பிடாரித்தனமும்
அராஜக அட்டூழியங்களும்
அப்பட்டமாய்க் காணக்கிடைக்கும்.
அதைக்கண்டு பிரமித்துப்பார்ப்பதும்
பயப்படுவதும்
ஒதுங்கிப்போவதும்
எளிது.
புல்நுனிப்பீடங்களும் உண்டு
காற்றின் கனிவோடு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்லுமவை
வெகு கவனமாய் நம்மை
விருப்பத்தோடு மண்டியிடவைக்கும்.
நம் விடுதலைக்காகக் குரல்கொடுப்பதாய் அவை
நம்மை நம்பச்செய்து
நடக்கமுடியும் தனியாக என்பதையே மறக்கச்செய்து
நீளும் அவர் கையைப் பெருவரமாகப் பற்றிக்கொள்ளச் செய்யும்.
அந்தக் கை இழுத்த இழுப்புக்கெல்லாம் போகச்செய்யும்.
”நீ பரிதாபத்திற்குரியவள் நீ பலியாடாக்கப்பட்டவள்
(நாம் பரிதாபத்திற்குரியவர்கள் நாம் பலிகடாவாக்கப் பட்டவர்கள் )
என்று சொல்லிச்சொல்லியே
நான் கருணைமிக்கவன், நான் உனக்கு சாபவிமோசனம் தருபவன்
(நாங்கள் கருணைமிக்கவர்கள், நாங்கள் உங்களுக்கு சாபவிமோசனம் தருபவர்கள்)
என்று தன் மேலாண்மையை உறுதியாய்
நிறுவிக்கொள்ளும்.
அதுவேயாகுமாம் திட்டவட்டமாய்
சக கவிஞரைப் பாலின அடைமொழிக்குள்ளிட்டுக்
கட்டுடைத்தலும்.

ஆசை – பேராசை – நிராசை ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஆசை – பேராசை – நிராசை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஆசை யாரை விட்டது?
ஆசைக்கு அளவில்லை.
ஆசையே அலைபோலே நாமெல்லாம்
அதன்மேலே......
அத்தனையும் அவர் அறிந்ததே.
ஆனாலும் –
ஆயிரம் கட்டுரைகளை எழுதிய
அபூர்வ சிந்தாமணியான அவர்
இன்னொருவர் எழுதிக்கொண்டிருந்த
இருபது கதைகளையும்
அதற்கு அவருக்குக் கிடைக்கும்
அமோக வரவேற்பையும் பார்த்து
தானும் எழுதத் தொடங்கினார்.
அதுவும் அவரைவிடப் பெரியாளாகப்
புலப்படவேண்டும் என்ற
ஆறா வெறியோடு
அவரைக் கீழிறக்கவேண்டுமென்ற
குறிப்பான இலக்கோடு.
பானை வனைபவரைப்பார்த்து ஏன் இப்படி
போட்டியிடத் தோன்றவில்லையெனக்
கேட்டபோது
பல்லைக் கடித்துக்கொண்டு
பொறுக்கியெடுத்த
கெட்டவார்த்தைகளைக்
கொட்டித்தீர்த்தார்.
தனது கதைகளை யாரும் கண்டுகொள்ளவே
யில்லையென்பதைப் பார்த்து
ஆத்திரத்தின் உச்சாணிக்கொம்பில்
ஏறிநின்றவரை
வேடிக்கைபார்த்தவாறே
கடந்துசெல்கிறது
இன்று
No photo description available.
All reactions:
Sivarasa Karunakaran and Pon Elavenil B

Sunday, November 2, 2025

பாவமும் பாவமன்னிப்பும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பாவமும் பாவமன்னிப்பும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(* ’தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)


.................................................................................................................................
குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது?
நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால்
கண்களைத் துடைத்துவிடக்கூடும்….
கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள்
சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும்.
மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து
வாய்நிறைய சிரிக்கக்கூடும்….
நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால்
தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி
தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்…..
அதுவும் _
அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _
அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?

உயிர்வலி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

உயிர்வலி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



அபயம் கேட்பதாய் தலைக்குமேலே உயர்ந்திருக்கின்றன
அந்தக் குட்டிக்கைகள்;
பூமிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே
வாழ்வின் அடியாழ அந்தகார இருளைப்
பார்க்க நேர்ந்துவிட்ட
அந்தப் பிஞ்சுமனதை என்ன சொல்லித் தேற்றுவது?
எப்படி மன்னிப்புக் கேட்பது?
அந்தப் பூவடம்பில் இன்னமும் தொக்கிநிற்கும்(?)
வாழ்வுச்சூட்டை எப்படிக் காப்பாற்றுவது?
ஒரு குழந்தையில் தெரியும் பல குழந்தைகளின்
ஒடுங்கிய உடலங்களை
தினந்தினம் எதிர்கொண்டு பதறும்
மனம்
நொறுங்கிச் சிதறும்.


பிறவி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிறவி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கைக்கும் வாய்க்கும் இடையிலான தொலைதூரத்தைக் கடக்கக்
காலமெலாம் முயன்றவண்ணமேயிருக்கிறது மனம்.
There is many a slip between the cup and the lip என்று
சற்றே பெரிய வகுப்பின் பாடப்புத்தகம் போன்ற ஒன்றிலிருந்து
எழுத்துக்கூட்டி உரக்க வாசிக்கும் சிறுமி
ஓடிச்சென்று ஒரு கோப்பை நீரை எடுத்துவருகிறாள்.
பின், தன் பையிலிருந்த திறப்புகளுக்குள் கையை நுழைத்து பலப்பலவாறாய்த் துழாவித் தேடியெடுக்கிறாள் ஸ்கேலை.
ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி மறுகையால் மேற்சொன்ன தொலைவை அளக்கத்தொடங்குகிறாள்.
நீர்க்கோப்பையின் கனத்தில் கை நலுங்குகிறது.
மறுகையிலுள்ள ஸ்கேல் மிக நெருங்கிவரும் போதெல்லாம்
அரண்டுபோய் தம்மையுமறியாமல் மூடிக்கொள்கின்றன விழிகள்.
அதன் அச்சத்தை அதிகரிப்பதாய்,
ஒருமுறை ஸ்கேலின் மேற்பகுதி உதடுக்கு மேல் ஏறி
விழிமீதூர்ந்து புருவத்திலேறிவிடுகிறது.
ரணமாகிச் சிவந்த கண்களின் வலிநீக்க முன்வருவார் வரிசை யென்று என்றாவதிருந்திருக்கிறதா?
ஆனாலும் திரும்பத்திரும்ப முயன்றவண்ணமிருக்கிறாள் சிறுமி.
ஒவ்வொரு முறையும்
அவளுடைய இன்னொரு கையிலிருக்கும் கோப்பையிலிருந்து
தரையில் சிந்திக்கொண்டிருக்கிறது நீர்.