LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, June 7, 2021

இலக்கிய ஆர்வலர் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  இலக்கிய ஆர்வலர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நீங்கள் என்ன புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள்
என்று கேட்டார்
என் புத்தகங்களைக் கேட்டுச்சொல்கிறேன்
என்றேன்
என்ன பதில் இது என்று விசித்திரமாய்
என்னைப் பார்த்தவர்
இலக்கியக்கூட்டங்களில் உங்களை நான் பார்த்ததேயில்லை என்றார்
நான் பங்கேற்ற இலக்கியக்கூட்டங்களின் போது
அவர் பிறந்திருக்கக்கூடும்.
பட்டியலிடும் உத்தேசமில்லாததால்
’பார்த்திருக்க வாய்ப்பில்லை’யென்று மட்டும்
சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
நின்று திரும்பி
நீங்கள் என்னைப் பார்க்கவில்லையென்பதால்
நான் இந்த உலகத்தில் இல்லையென்றாகிவிடாது
என்று சொல்லத்தோன்றியது.
சோம்பலாயிருந்ததால் சும்மாயிருந்துவிட்டேன்!

விரிவு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


விரிவு


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




 நூலின் ஒரு முனை என் கையில் 

சுற்றப்பட்டிருக்க

அந்தரத்தில் அலைகிறது காற்றாடி

செங்குத்தாய்க் கீழிறங்குகிறது;

சர்ரென்று மேலெழும்புகிறது

வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது

தென்றலின் வேகம் அதிகரிக்க

தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு

உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம்

அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின் பலகணிக் கம்பிகளில்

சிக்கிக்கொண்டுவிடுகிறது.

எத்தனை கவனமாக எடுத்தும்

காற்றாடியின் ஒரு முனை கிழிந்துதொங்குவதை

ப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது.

ஆனாலும் தரைதட்டாமல் தன் பறத்தலைத் 

தொடரும்

காற்றாடியின் பெருமுயற்சி

கையின் களைப்பை விரட்டியடிக்கிறது.

காற்றாடிக்காக வானம் மேலே மேலே போவது போலவும்

கீழே கீழே வருவது போலவும்

கண்மயங்கிய நேரம்

நூலின் ஒரு முனையைப் பிடித்திருக்கும் கை

வாழ்வாக மாற

காற்றாடியாகிறேன் நான்.

 

 

கவிதையின் விதிப்பயன் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் விதிப்பயன்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நீங்கள் மர்மம் என்றால் அது மர்மம்;

அதுவே இன்னொருவர் சொன்னால்

அதர்மம்.

மர்மமெனக்கோருணர்வென்றால்,

மனநிலையென்றால்

உங்களுக்கு அது கத்தி கபடா கொலை

துப்புத்துலக்கலாக

இருக்கக்கூடாதா என்ன?

உயிரின் ஊற்றுக்கண் ஆகப்பெரிய

மர்மமென்றால்

பர்மா நீரல்ல நிலமென்கிறீர்கள்!

கவிதையின் சர்வமும் நானே என்று

எத்தனை தன்னடக்கத்தோடு

கர்வங்கொள்கிறீர்கள்!

அதைக் கண்டு மலைத்துயர்ந்த

என் இருபுருவங்களும்

இன்னமும் இறங்கி இயல்புநிலைக்குத்

திரும்பியபாடில்லை.

கர்மம் கர்மம் _

இல்லையில்லை உங்களைச்

சொல்லவில்லை.

வர்மக்கலை பயின்ற நல்லறிவாளி நீங்கள்

நயத்தக்க வார்த்தைகளால்

வையத்தொடங்கினாலோ

நான்கைந்து வட்டுகள்

நிச்சயமாய் நகர்ந்துவிடும் முதுகெலும்பில்

நன்றாகவே அறிவேன்

மற்றெல்லோரையும் முட்டாள் எனச்

செல்லமாகவும் சினந்தும் குட்டியும்

இட்டுக்கட்டியும்

தன்னைத்தானே அரிதரிதாமெனக் கட்டங்கட்டிக்

காட்டுவோர்

பலரையும்கூட பரிச்சயமுண்டெனக்கு

என்பதுதான் பிரச்சினையே.

கர்மவினையென்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே

நான் குறிப்பிடும் கர்மமும் அதுவேயென்று

எங்குவேண்டுமானாலும்

துண்டுபோட்டுத் தாண்டிவிடுகிறேன்.

பயன்படுத்திய பழையது போதுமா?

புதிதாக வாங்கவேண்டுமா?

நிர்மலமும் மலமும் வேறுவேறென்று

உறுதியாகத் தெரியுமென்றாலும்

கர்மமும் கருமமும் ஒன்றா அல்லவா என்று

சொல்லமுடியாதிருக்கிறது.

துர்மரணமோ கல்யாணச்சாவோ _

இருத்தலும் இருபதுவரிக் கவிதை

இயற்றலும்..

திருத்தமான இருபதுக்கும்

குறியீடாகும் இருபதுக்குமிடையேயான

பிரிகோடுள்ள வரை _

எவர் மறுத்தால் என்ன?

அவரவர் மர்மம் அவரவருக்கு.

நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உனக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியை
உனது வரிகளிலெல்லாம் உயர்த்திப்பேசியவாறே
எனக்குள்ளிருப்பதை எள்ளிநகையாடுகிறாய்.
ஒரு சொல் ரகசிய உயிரியாய் எவரொருவருடைய
ரத்தவோட்டத்திலும்
மிதந்துகொண்டிருக்கலாகும் சூட்சுமம் அறிந்திருந்தும்
அறவேயதை மறுதலித்தாகவேண்டிய அவசியமென்ன?
அதோ _
ஒருவர் அருவ இடக்கையால் ரகசிய உயிரியைத்
தான் போகுமிடங்களுக்கெல்லாம் அழைத்துச்
சென்றவண்ணம்…..
இன்னொருவர் தன் இடுப்புவளைவில்
அதைஏந்தியபடியே…….
வேறொருவருக்கு அதன் அருவத்தலையைத்
தடவித் தீரவில்லை….
நீயுங்கூடத்தான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்த்
தாவியபடியே;
ஆனான அந்தரத்திலும் சுவடு பதித்தபடியே….
அப்போதெல்லாம் உன்னை வழிநடத்துவது
உன்னுடைய அந்த ரகசிய உயிரிதானே!
நாமொரு உயிரியாக இருப்பதே
நமக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியால்தானே!
ரகசியம் என்பதோ உயிரி என்பதோ
கெட்ட வார்த்தைகள் அல்லவே!
நமக்குள்ளிருக்கும் நாமறிந்த அறியாத
ரகசியம்
உயிர்த்திருக்கும் காலம் வரை
அதுவுமோர் உயிரிதான்.
நினைத்துப் பார்த்தால்
நாமேகூட ரகசிய உயிரி நமக்கு.
அறிந்தவர்களுக்குள்ளிருக்கும்
ரகசியம்
உயிரி _
ரகசிய உயிரி.

யார் நீ? - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 யார் நீ?

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஓர் அதி அழகிய பசும் இலை
அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே
வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _
அத்தனை இனிமையான பாடல்
அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே
அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல் _
பட்டுப்போன்ற குட்டிப்பாப்பா மளமளவென்று வளர்ந்து
பொறுக்கியாகி அலையத் தொடங்குவதுபோல் _
கட்டித் தொடுத்த மல்லிகைகள் கணத்தில்
கொட்டும் தேள்கொடுக்குகளெனக் கூர்த்துக் கருத்துவிடு வதைப்பொல் _
சாலையோர நிழலின் கீழ் பாதுகாப்பாய் நடந்துகொண்டிருக்கும்போதே
நேர்மேலே நிமிர்ந்திருக்கும் மரமொன்று இரண்டாகப் பிளந்து உச்சிமண்டையில் விழுவதைப்போல் _
இன்னும் என்னென்னவோபோல்
உன் கவிதைவரிகளின் நுட்பத்தோடு கூடவே வரும்
வன்மம் நிறை உரைநடையில்
கொச்சைப் பேச்சில்
கோணல்வாய்ச் சிரிப்பில்
அரசியல் சார்ந்த பொய்ப்பித்தலாட்ட வரிகள்
பேசப்படுவதும் எழுதப்படுவதுமாய் _
அய்யோ.....

இல்லாதிருக்குமொரு முயல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இல்லாதிருக்குமொரு முயல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நள்ளிரவைத் தொடும் இந்நேரம்
நேர்கீழே ஒரு முயலைக் கண்டால்
நகைப்பேனா நடுங்குவேனா நெக்குருகுவேனா…
சிறு முயலின் பாதங்களில் என்னைப்
பொருத்திக்கொள்ள இயலுமோ என்னால்…
குறுகுறுவென்று பார்க்குமதன்
கண்ணின் கருமணிக்குள்
விரியுமோ ‘ALICE IN WONDERLAND’
அல்லது, போர்ஹேயின் ‘THE BOOK OF SAND’
இரண்டையும் நான் படித்திருக்கிறேனா
பார்த்திருக்கிறேனா
படித்ததும் படிக்காததும்
பார்த்ததும் பார்க்காததும்
கேட்டதும் கேட்காததும்
கேள்விப்பட்டதும் படாததுமாய்
கலந்துகட்டிக் குழம்பும் வாழ்வில்
முயல்குட்டி மாய யதார்த்தமாய்…..
பெருவிருப்பிருப்பினும்
ஒரு முயலை மிகச்சரியாக என்னால்
தூக்க முடியுமா
எனக்கு 'மிகச்சரியாக' முயலுக்கு
என்னவாக இருக்கும்?
முயலொரு குறியீடு
முள்ளங்கிபத்தை யொரு குறியீடு
இரண்டும் ஒருசேர இன்னுமொரு குறியீடு
குறியீடுகளுக்கப்பால் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது
தன்னைத்தானே
மானே தானே என்று சேர்த்துக்கொள்வதே நம்மாலானதாக……
காணாதவரை கண்டதாகிவிடாது
கண்டதாலேயே கொண்டதாகிவிடாது
என்றுணர்ந்தபின்னும் வேறு வேறு
கண்டுகொண்டிருக்கும் மனது
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
என்று கவிதையெழுதியவாறு

ஆழிசூழ் உலகும் ஆயிரமாயிரம் அனர்த்தங்களும் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 ஆழிசூழ் உலகும்

ஆயிரமாயிரம் அனர்த்தங்களும்

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
’மந்திரமாவது சொல்’ என்றேன்
’மனப்பாடமாகத் தெரியாதே’ என்கிறார்கள்.
’கற்றது கையளவு’ என்றேன்
’சற்றே பெரிதாயிருக்கும் என் புத்தகம்’
என்கிறார்கள்.
’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்றேன்
’நாளை உனக்கு அறுபத்திநான்கு வயதாகப்போகிறது
– மறந்துவிடாதே’
என்கிறார்கள்.
’வானம் வசப்படும்’ என்றேன்
’வேணாம் விலைபோகாது’
என்கிறார்கள்.
’உடுக்கை இழந்தவன் கைபோல’ என்றேன்
’படுக்கை என்று தொடங்கவேண்டுமல்லவா
அடுத்த வரி’
என்கிறார்கள்.
’மாங்காய் மடையா’ என்றேன்
’இல்லை, மூலைக்கடையில் கிடைக்கும் காய் – இது கூடவா தெரியாது’
என்கிறார்கள்
இதற்குமேல் தாங்காது என்று
வாய்மூடி
வழிசென்றவாறு.
ஆழிசூழ் உலகென்றானபின்
நீரைக்கண்டு பயந்தழுது
ஆவதென்ன? கூறு……

மர்மக்கிளிவாழ்க்கை ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  மர்மக்கிளிவாழ்க்கை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
”எத்தனை காலம் என்று தெரியவில்லை
ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும்
ஒரு குகையில்
சிறைப்பிடிக்கப் பட்டிருந்தேன்.
எப்படியோ தப்பித்துவந்திருக்கிறேன்.
எனக்கு உண்ண கொஞ்சம் தானியம் கொடு –
நான் அவசியம் உயிர்வாழவேண்டும்’
என்றது அந்தப் பச்சைக்கிளி.
ஒரு கிண்ணத்தில் அரிசியும் பருப்பும்
கொண்டுவந்து தந்த பின்பு
’அவசியம்’ என்பதை விளக்கமுடியுமா?’
என்று கேட்டதற்கு
’வசியத்தின் எதிர் அல்ல’ என்று
கீச்சுக்குரலுயர்த்தி விளக்க முற்பட்டு
பின் தன் குட்டி மண்டையை இப்படியு
மப்படியும் ஆட்டி
"உன் வாழ்க்கை உனக்கு அவசியம் போலவே
எனது எனக்கு" என்று
நறுக்கென்று சொல்லிக் கிளம்பி
வேகம் கூட்டி
விர்ரென உயரே பறந்த பறவைக்கு
சிறகுகளிருக்கவில்லை யென்பது
சிறிதுநேரத்திற்குப் பிறகே உறைக்கிறது.....