LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 21, 2018

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…. ரிஷி(latha Ramakrishnan)



  

ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த
இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த
ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி
எனக்கென்ன கவலை யென்றிருந்தான்
எத்தனாதி யெத்தனொருவன்_
என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி.
மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு
ஒரு லாப்-டாப்பை மட்டும் கொடுக்க_
கூகிள்-சர்ச்சில் தேடி தன் குடலுக்கு பாதிப்பில்லாமல்
கிழித்து ரகசியத்தை வெளியே எடுத்த கிளி _
அதை குகைக்கு அருகாமையில் ஓடிகொண்டிருந்த
நதியின் பளிங்குநீரில் காட்ட_
ஆறு அதன் பிரதிபலிப்பைத் தன்னோடு எடுத்துச்சென்று
மனிதவடிவில் இருந்த தெய்வத்திடம் சேர்ப்பித்தது.
ஆயிரங்கைகளால் அதைப் பிரதியெடுத்து
சுற்றுக்கு விட்ட
மனிதத் திருவருளால்
சிறகு முளைக்கிறது பறவைக்கு!


பாரதி யார்? (நாடகம் குறித்து சில கருத்துகள்) லதா ராமகிருஷ்ணன்


பாரதி யார்




இந்த நாடகத்தை தி.நகரி லுள்ள வாணிமகால் அரங் கில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது.

(வீணைக் கலைஞர், அமரர் எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியுள்ள இந்த நாடகத் தில் பாரதியாகஇசைக்கவிரமணன் நடிக்கிறார். நாடக வசனங்கள் எழுதியவரும் அவரே.)

 நாடகத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சங்கள்.

1.பாரதியாரின் பல கவிதைகளை நாடகம் முன்னிலைப்படுத்தியிருந்தது.

2.பாரதியார் புதுச்சேரிக்குப் போனதால் அவர் கோழை என்று சிலரால் முன்னிறுத்தப் படும் வாதம் பொய் என்று காட்டியது.

3.பாரதியாரின் வறிய நிலை என்பதையே பெரிதுபடுத்திக் காட்டுவதில் முனையாதது.

4.பாரதியாரின் மனைவி செல்லாம்மாவை வெறும் இல்லைப்பாட்டு பாடும் மனைவி யாகக் காண்பிக்காதது. அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் இயல்பாகச் செய்தார்.

5.ஒவ்வொரு காட்சிக்குமான பின்புலத்தை திரையாக அல்லாமல் நிழற்படமாக அமைத்திருந்த விதம்.

6.நடனங்களின் அசைவுகளிலும், பாடல்களின் இசையிலும் சினிமாத்தனம் கவனமாகத் தவிர்க்கப்பட்டிருந்தது.

 கொஞ்சம் நெருடல்களை மனதில் ஏற்படுத்திய அம்சங்கள்:

1.பாரதியாராக நடித்திருந்தவர் சமயங்களில் மிகைநடிப்பை வெளிப்படுத்தியது. எடுத்துக்காட்டாக, பாரதியின் தன்மதிப்பை, கவிதாகர்வத்தை சற்று மிகைப்படுத்திக் காட்டினாலும் அது வெற்று கர்வமாகி விடும் அபாயமுண்டு. அப்படி சில இடங்களில் ஆயிற்று.

2.ஏழு வயது செல்லம்மாவைப் பார்த்து பாரதி நினைப்பதாக ஒலித்த பாரதியார் பாட்டு (பாரதி அந்தக் கவிதையை தன் பதின்ம வயதில் எழுதவில்லை) தற்காலச் சூழலில் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டியது.

3.ஓராசிரியர் பள்ளிகள் குறித்து அறிய வாய்ப்பு கிடைத்தது மனதிற்கு நிறைவளித்தது. அதேசமயம், விருதுபெற்ற ஆசிரியைகள் அனைவரும் அந்தப் பொதுமேடையில் விருது வழங்கியோர் காலில் விழுந்து வணங்கியது சிறிது நெருடலாக இருந்தது. பெரியவர்கள் காலில் விழுந்து வணங்குவது தவறில்லைஆனால் அந்த ஆசிரியைகள் அனைவரும் நலிந்த பிரிவினர் என்பதை எண்ணாதிருக்க முடிய வில்லை. அல்லது, அந்த ஆசிரியைகள் காலில் மாணாக்கர்களை விழுந்து வணங்கச் செய்திருந்தால் மேடையில் அந்த ஆசிரியைகளுக்கு அளிக்கப்பட்ட கௌரவம் பூரணமாகியிருந்திருக்கும்.

4.மேடையில் பேசிய பெண்மணி ஒருவர் தமிழில் பாரதிக்குப் பிறகு கவிஞரேயில்லை என்று பொத்தாம்பொதுவாகக் கருத்துரைத்தது கண்டனத்திற்குரியது. பாரதியாராக நடித்தவர் நவீன தமிழ்க்கவிதை அறிந்தவர். அவருக்குத் தெரியும் நான் சொல்வதில் உள்ள உண்மையும் என் ஆதங்கத்தின் நியாயமும்.

நாடக ஆக்கத்தில் பங்குபெற்ற அனைவருக்கும், ஓராசிரியர் பள்ளி இயக்கத்திற்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.



புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்




 (நன்றி: திண்ணை)











பள்ளிப்பருவத்தில் பாடங்களை உரக்க வாசித்து உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கு இருந்ததுண்டு. இலக்கியக் கூட்டங்களில் உரையாற்றுபவர் பலரின் சிந்தனையோட்டங்களை சரிவர பின் தொடரமுடியாமல் போவதுண்டு.

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய ’புனைவு என்னும் புதிர் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெறும் கதைகளையும் அவை எப்படி இலக்கியப் படைப்புகளாகின்றன என்று எழுத்தாளர் அடர்செறிவாக முன்வைக்கும் கருத்துகளையும் என் தோழி பத்மினி கோபாலனுக்காக படித்துக்காட்டும்போது என்னாலும் சிந்தனையைச் சிதறவிடாமல் நூலில் ஒன்றிவிட முடிந்தது.

அதற்கு முக்கியக் காரணம் எழுத்தாளர் மாமல்லன் தேர்ந்தெடுத்துள்ள கதைகளும். அவற்றின் சிறப்பம்சங்களை அவர் எடுத்துரைக்கும் முறையும். அருமையான கதைகள். அவற்றை அத்தனை ரசித்து முழுக்க முழுக்க ஒரு வாசகராய் அவற்றைப் பற்றிக் கூறுகிறார் ஆசிரியர்.

ஓரிடத்திலும் கூட ’நான் எழுதியிருக்கிறேன், இப்படி எழுதியிருக் கிறேன்’ என்று தன்னை ஒரு படைப்பாளியாகக் காட்டிக்கொள்ள, முன்னிறுத்திக்கொள்ள (blowing one’s own trumpet என்று சொல்வார்களே – நிறைய படைப்பாளிகள் இதை more often than not செய்வதைப் பரவலாகப் பார்க்க முடிகிறது) கொஞ்சமும் முனையாமல் தான் பெற்ற வாசிப்பின்பம் பெறுக இவ்வையகம் என்பதே நோக்கமாய் இந்த நூலிலுள்ள கதைகளின் தேர்வும் அவை குறித்த ஆசிரியரின் கட்டுரைகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

கட்டுரைகள் கனகச்சித அளவில், ரத்தினச்சுருக்கமாக, அதேசமயம் பேச எடுத்துக்கொள்ளப்பட்ட கதையின் சிறப்பை ஒன்றுவிடாமல் எடுத்துக்காட்டிவிடுகின்றன.

கதைகளைவிட அவை குறித்த ஆசிரியரின் கட்டுரைகள் அதிக சுவாரசியமாக இருக்கின்றன. இதுதான் கதை, இதுமட்டுமே கதை என்றெல்லாம் அவர் முடிந்த முடிவாக கதை குறித்த தன் கருத்தை நம்மீது திணிப்பதில்லை. ஒரு கதையை வாசிக்கும் வழியை, ஒரு தேர்ந்த வாசகனாக திரு.விமலாதித்த மாமல்லன் கோடிட்டுக் காட்டுகிறார்.

அவருடைய கட்டுரைகள் நூலில் இடம்பெற்றிருக்கும் தமிழின் சிறந்த படைப்பாளிகளுக்கு, அவர்களுடைய இலக்கியப் பங்களிப்புக்குச் சொல்லப்படும் மனமார்ந்த நன்றி; செய்யப்படும் சிறந்த பதில் மரியாதை.

இப்போது அச்சு வடிவில் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் இந்நூலில் கதைகள் குறித்த ஆசிரியரின் கட்டுரைகள் அந்தந்தக் கதைக்குப் பிறகு இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமே, கதைக்கு முன்பாக வெளியிடப்பட்டிருப்பது கதை குறித்த ஆசிரியரின் பார்வையை ஒட்டியே கதையை நாம் உள்வாங்கிக்கொள்ளச் செய்வதாகிவிடுமே என்று எண்ணினேன். எழுத்தாளர் மாமல்லன் கதைக்குப் பிறகுதான் அது தொடர்பான தன் கட்டுரை இடம்பெற வேண்டும் என்று விரும்பினார் என்று தெரிகிறது. அதுதான் சரியாக இருக்கும்.

அச்சுப்பிழைகளும் கணிசமாக உள்ளன. ஆசிரியர் கொண்டுவரவுள்ள பதிப்பிலும், Kindle பதிப்பிலும் அவை இருக்காது என்று நம்புகிறேன்.

எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் இடையேயான உறவு நெகிழ்தன்மைகூடியது; பரஸ்பர நட்பு, நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது. ஆனால், எழுத்தாளரைப் பதிப்பாளர் சுரண்டுவதையோ, மதிப்பழிப்பதாக நடத்துவதோ எவ்வகையிலும் ஏற்கமுடியாது. எழுத்தாளர்களின் e-book உரிமைக்காகப் போராடிவரும் திரு. விமலாதித்த மாமல்லனுக்கு சக-படைப்பாளிகளி ஆதரவு துணையும் அவசியம் இருக்கவேண்டும்.

சினிமா ரசனை என்பதுபோல் இலக்கிய ரசனைக்கான பாடநூலாக அமையத்தக்க நூல் விமலாதித்த மாமல்லனின் ‘புனைவு என்னும் புதிர்’.

இந்த நூலின் மூலம் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகளின் தேர்ந்த படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பும் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைக்கிறது.

இந்த நூலைப் போல் சமீபகாலம் வரையான சிறந்த தமிழ்ப் படைப்பாளிகளின் கதைகளையும் அவை குறித்த கட்டுரைகளையும் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் எழுதுவார் என்ற எதிர்பார்ப்பை இந்த நூல் ஏற்படுத்துகிறது.

”புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்க ளையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஓவ்வொரு கதையாக ஆராய்கிறது.” என்று நூல் குறித்த blurb வாசகம் முற்றிலும் உண்மை.