LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 22, 2018

எது ஆபாசம்?

எது ஆபாசம்?
லதா ராமகிருஷ்ணன்


கவிஞர்கள் என்றால் எந்த அதிகார வர்க்கத்தோடும் தங்களை இணைத்துக்கொள்ளாமல் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்காகக் குரல் கொடுத்தால் நலம். ஆனால் இங்கு தங்களை ஒரு அதிகார வர்க்கத்தோடு வெளிப்படையாக இணைத்துக்கொண்டு அதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை அனுபவித்துக்கொண்டு தங்கள் மத அடையாளங்களோடும் வளைய வருபவர்கள் இந்து மதத்தை எள்ளிநகையாடுவதுதான் வழக்கமாக இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது.

ஆண்மையற்றவர்கள் என்று சொல்வதுதான் ஆபாசமா? ஒரு பெயர்பெற்ற எழுத்தாளரின் வாரிசு இந்தியப் பிரதமர் மோடி ஏதோ கண்காட்சியில் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை தன்டைம்-லைனில்போட்டு இந்த சனி எப்பொழுதுதான் படமா தொங்கப் போகுதோ என்று எழுதுகிறார். இது அவரையும் அவரொத்தவரையும் பொறுத்தவரை முற்போக்கு சிந்தனை; அறிவுஜீவித்தனம்.

இப்படித்தான் இருக்கிறது இந்துமத நிந்தனையும்.

இன்று உலகமே ஒரு கிராமமாகிப்போன நிலையில் இந்தியாவில் மட்டுமே இருக்கிறது இந்துமதம். ஒருவகையில் இது சிறுபான்மையினத்தவர்களின் மதம். இதைத் திரும்பத்திரும்பக் கேவலப்படுத்திக்கொண்டேயிருப்போம், இது கருத்துச் சுதந்திரம் என்றால் எப்படி?
நாத்திகவாதம் பேசும் எத்தனை தலைவர்களின் வீட்டினர் கோயிலுக்குச் செல்லாமல் இருக்கின்றனர்? கடவுள் வேண்டா ஆனால், பேய், பிசாசு சீரியல்களாக வைப்பேன் என்றுதானே இவர்கள் நடத்தும் சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுகின்றன.

நயத்தக்க விதத்தில் நாத்திகக் கருத்துகளை முன்வைத்த எத்தனையோ உலக அறிஞர்கள் உண்டு. ஆனால் பொதுவாழ்வில் இருக்கும் திரு.வைரமுத்து போன்றோர் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இப்படியெல்லாம் கருத்துரைப்பது தெருச்சண்டை, வீட்டுச்சண்டைகளிலெல்லாம் உன் பெண்டாட்டி உத்தமியா, உன் அம்மா தட்டுக்கெட்டவ என்று பழிக்கும் ஆணாதிக்கசிந்தனைப் போக்கையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இதற்காக மேரி மாதாவைப் பேசுவார்களா, கதீஜாவைப் பேசுவார்களா, இந்திரா காந்தியைப் பேசுவார்களா என்று நான் கேட்கமாட்டேன். அப்படிப் பேசலாகாது, இப்படிப் பேசுவதுதான் ஆபாசம் என்பதே என் கருத்து.

இந்த நிகழ்வையும் இந்தியப் பிரதமர் மோடியைப் பழிக்கக் கிடைத்த வாய்ப்பாக சிலர் எழுதுவதைப் பார்க்க வேதனையாயிருக்கிறது. மோடியின் அப்பா, அம்மா யார் என்று (அவருடைய வயதான தாயார் உயிரோடிருக்கும் நிலையில்)கேட்ட அறிவுசாலிகள் நம்மிடையே உண்டுதானே.

மறைந்த எழுத்தாளர்-கவிஞர் சதாரா மாலதி ஆண்டாளின் பாசுரங்களை முன்வைத்து எழுதிய நூல் உயர்பாவை என்ற பெயரில் சந்தியா பதிப்பக வெளியீடாக பிரசுரமானது நினைவுக்கு வருகிறது. ஆய்வுநோக்கில், ஒரு சக பெண்ணாக ஆண்டாளைப் பார்த்து எழுதிய கட்டுரைகளடங்கிய நூல் அது.
எந்தவிதமான மாற்றுக்கருத்துகளையும் மற்றவர்களை மதிப்பழிக்காமல், கண்ணியமான வழிகளில் முன்வைக்க முடியும். அது பிற்போக்குத்தனம் என்று கருதியோ என்னவோ, அந்த வழியைக் கைக்கொள்ள சிலர் முன்வருவதில்லை. அதனால்தான் எல்லாப் பிரச்சினையும்.

படிப்பும் இலக்கியமும் மனிதனைப் பண்படுத்தவேண்டும்; மேம்படுத்த வேண்டும். அப்படித்தான் செய்யும் என்று இன்றுவரை நம்பிக்கொண்டிருக் கிறேன்.

மனிதர்களிடையே மாற்றுக்கருத்துகள் இருக்கலாம். வெறுப்புகூட இருக்கலாம். ஆனால், திட்டமிட்டரீதியில் மக்களின் உணர்வுகளோடு விளையாடி ஊர் இரண்டுபட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல் படுபவர்கள் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறர்கள்.

சமீபத்தில் நியூஸ்18 தமிழ்நாடு சேனலின் சார்பில் சமீபத்திய ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நடைபெற்ற தொலைக்காட்சி விவாதமொன்றில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப்பிரவேச்தை பெரியார் அவர்கள் எதிர்த்தார் என்று சொல்லப்பட்ட கருத்து இப்போது முன்னும் பின்னும் வெட்டப்பட்டு வலம்வந்துகொண்டிருக்கிறது. தமிழின் பெயர்பெற்ற கவிஞரும் இதைப் பகிர்ந்திருக்கிறார்.

இப்படி மக்களிடையே வெறுப்பை விதைப்பவர்கள் தங்கள் கோபுர மாளிகைகளுக்குள் பாதுகாப்பாய் இருப்பார்கள். வீதியில் எளிய மக்கள் இரண்டுபட்டுப் பகைமை பாராட்டி மோதிக்கொள்வார்கள். எத்தகைய போலி மனிதநேயக் காவலர்கள் நம்மிடையே என்று நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.

Friday, January 19, 2018

இன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்னொரு வாழ்வு
 ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 (*from my forthcoming 11th poem-collection எதிர்வினை)


வழிதவறி தொலைந்த குழந்தையாய்,
நம்பிக்கைத்துரோகத்துக்கு ஆளான
காதல்வயப்படவர்களாய்,
நாய்வாலின் நிமிராச் சுருளாய்,
மஞ்சளாகிக்கொண்டே வரும் இலையின்
அலைக்கழிப்பாய்,
மொழியறியாப்பாடலொன்றின்வழி யான
மனத்தளும்பலாய்
கண்முன்னே களவுபோகும் காலம் வரவாக்கும்
கையறுநிலையாய்
ஆழ்மனதில் குழம்பித்தவிக்கிறது
கவிதைபோல் ஒன்று.

v       

குற்றச்சாட்டல்ல கவிதை;
குறுக்குவிசாரணையல்ல.
கூண்டுக்கைதியல்ல கவிதை;
கடுங்காவல்தண்டனையல்ல.
வாதப்பிரதிவாதங்களல்ல கவிதை;
வழக்காடுமன்றமல்ல.
வாக்குமூலமல்ல கவிதை;
விலங்கிட்ட கரங்களல்ல.
முகமூடியல்ல கவிதை;
மூதுரைகளுமல்ல.
முத்துமணிவயிரமல்ல கவிதை
முழக்கயிறல்ல.
பகையல்ல கவிதை;
போருமல்ல;
வியூகமல்ல கவிதை;
வெற்றியுமல்ல.
விழவல்ல கவிதை;
விழிநீரல்ல;
வித்தகமல்ல கவிதை;
விளம்பரமல்ல…..

அரைத்தூக்கத்தி லாழ்ந்துபோன மனதில்
கணநேரக் கனவாய் கரையுமோர் அசரீரி:
உடல் பொருள் ஆனந்தி…..’


v 

உறக்கக் கரையோரம்
இருக்கும்போதும்
தண்ணீரில் மிதந்துவரும் புட்டியும்
அதனுள்ளிருக்கும் காகிதத்துண்டும்
தவறாமல் தெரிகிறது
விழிக்குள்ளான விழிகளுக்கு _
விரியுங் காட்சியின் கருணை
யருங் கவிதையாக.


v 

குறுக்கே மறிக்கும் உறக்கத்தை
கைகளால் சுருட்டியெடுத்துக்
கக்கத்தில் இடுக்கிக்கொண்டு
மனமும் விரலும் மணத்துயிர்க்க
மறுபிறவியெடுக்கவேண்டும் கவிதையில்


v 

முளைவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

                        முளைவிதை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
 (*From my forthcoming 11th poem-collection எதிர்வினை)

மனம் வனம்
பிருந்தாவனம்
பாலைவனம்
பச்சையம்
பளபளக்கும் கானலும்.
பூக்களுமிலைகளும்
குடுகுடுவென ஓடும் பிள்ளைகளும்
ஒட்டகங்களும்
சுட்டுப்பொசுக்கும் மணற்பரப்பும்
கனவேபோல் தட்டுப்படும்
காலடித்தடங்களும்
விடுபட்டுப்போனதா
லானதா
ஆகாமலானதா

கவிதை…..

மனக்கணக்கு ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

மனக்கணக்கு
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
 (*From my forthcoming 11th poem-collection எதிர்வினை)


மொழிப்பகட்டல்ல கவிதை,
மொந்தைக்கருத்துக
ளல்ல ;
புதிர்விளையாட்டல்ல கவிதை,
பொய்புரட்டுகளல்ல;
சொற்தூவலல்ல கவிதை,
சொகுசுக்கார் பயணமல்ல;
தற்காப்புக்கவசமல்ல கவிதை,
தெனாவெட்டுத் திமிரல்ல;
எள்ளல் எகத்தாளமல்ல கவிதை,
ஏகபோக உரிமையல்ல;
கள்ளம் கபடமல்ல கவிதை,
காறித்துப்பலல்ல.
தெய்வமல்ல, தேவகணங்களல்ல கவிதை,
துர்தேவதைத்துக்கிரியுமல்ல;
வள்ளலோ பக்கிரியோ அல்ல கவிதை,
வரிக்கோடுகள் அல்லவேயல்ல;
மிச்சம் மீதியல்ல கவிதை,
அட்சயபாத்திரமல்ல ;
நட்பல்ல பகையல்ல கவிதை,
நல்லாசானுமல்ல;
நினைவின் நினைவல்ல கவிதை,
ஞாபகமறதி யல்ல;
நல்லதல்ல கெட்டதல்ல கவிதை,
நாலும் தெரிந்ததல்ல;
வாலுமல்ல தலையுமல்ல கவிதை,
வெட்டி முண்டமல்ல;
தண்டமோ அண்டமோ அல்ல கவிதை,
உண்ட சோறின் ஏப்பமல்ல.
சீப்பல்ல சிகையல்ல கவிதை;
மோப்பநாயுமல்ல;
இன்னுமுண்டு சொல்லச் சொல்ல
இன்னும் இன்னும் இன் _.
பின் என்னதான் கவிதை?
என்றெனக்குத் தெரியும் நாள்
So near yet so far.

Top of Form

Bottom of Form


உன்னதாற்புதம்! ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

உன்னதாற்புதம்!
 ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)
(*From my forthcoming 11th poem-collection எதிர்வினை)


உன்னதத்தைக் கண்டதுமே உள்ளுணர்வுக்குத் தெரிந்துவிடும்.
உடனே உதறலெடுக்கத் தொடங்கும் முகமூடி மனிதர்களுக்கு.
உடனே அவசரக்கூட்டம் நடத்தி
‘மகோன்னதம் யாம்’ என்ற விளம்பரப் பதாகைகளை
மேற்கு, கிழக்கு, வடக்கு தெற்கெல்லாம்
நட்டுவைக்கும் ஏகோபித்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடுகிறார்கள்.
நாற்புறமிருந்து அதன்மீது காறித்துப்பவென்றே
நிதமும் நாலுபேரை வேலைக்கமர்த்திவிட்ட பிறகும்
நிம்மதியின்றி
அலைபாய்ந்தவண்ணமிருக்கும் அவர்கள்
அத்தனை வலிவேதனையிலும் அதெப்படி அழாமலிருக்கிறது இந்த உன்னதம்
என்ற ஆங்காரத்தில்
கூலிப்படையைக்கொண்டு அதை அடையாளமற்றுச் சிதைக்கப் பார்த்தார்கள்.
தக்க தருணத்தில் நல்லவர்கள் பார்த்துவிட்டதால்
ஒரு பல் உடைந்ததோடு தப்பித்துவிட்டது உன்னதம்.
தோல்வியைத் தாங்கமுடியாதவர்களாய்
ஓட்டைப்ப, ஓட்டைப்பல் அய்யய்யே ஓட்டைப்பல்
என்று உரக்கக்கூவி
‘பல்லிழந்த உன்னதம் பாவம் பரிதாபம்’
என்று எள்ளிநகையாடுபவர்களை
எட்டநின்று பார்த்தவாறு
வருத்தத்தோடு சிரித்துக்கொண்டிருக்கிறது

எல்லோருக்குள்ளுமிருக்கும் உன்னதம்.