LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label இன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label இன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Friday, January 19, 2018

இன்னொரு வாழ்வு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்னொரு வாழ்வு
 ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 (*from my forthcoming 11th poem-collection எதிர்வினை)


வழிதவறி தொலைந்த குழந்தையாய்,
நம்பிக்கைத்துரோகத்துக்கு ஆளான
காதல்வயப்படவர்களாய்,
நாய்வாலின் நிமிராச் சுருளாய்,
மஞ்சளாகிக்கொண்டே வரும் இலையின்
அலைக்கழிப்பாய்,
மொழியறியாப்பாடலொன்றின்வழி யான
மனத்தளும்பலாய்
கண்முன்னே களவுபோகும் காலம் வரவாக்கும்
கையறுநிலையாய்
ஆழ்மனதில் குழம்பித்தவிக்கிறது
கவிதைபோல் ஒன்று.

v       

குற்றச்சாட்டல்ல கவிதை;
குறுக்குவிசாரணையல்ல.
கூண்டுக்கைதியல்ல கவிதை;
கடுங்காவல்தண்டனையல்ல.
வாதப்பிரதிவாதங்களல்ல கவிதை;
வழக்காடுமன்றமல்ல.
வாக்குமூலமல்ல கவிதை;
விலங்கிட்ட கரங்களல்ல.
முகமூடியல்ல கவிதை;
மூதுரைகளுமல்ல.
முத்துமணிவயிரமல்ல கவிதை
முழக்கயிறல்ல.
பகையல்ல கவிதை;
போருமல்ல;
வியூகமல்ல கவிதை;
வெற்றியுமல்ல.
விழவல்ல கவிதை;
விழிநீரல்ல;
வித்தகமல்ல கவிதை;
விளம்பரமல்ல…..

அரைத்தூக்கத்தி லாழ்ந்துபோன மனதில்
கணநேரக் கனவாய் கரையுமோர் அசரீரி:
உடல் பொருள் ஆனந்தி…..’


v 

உறக்கக் கரையோரம்
இருக்கும்போதும்
தண்ணீரில் மிதந்துவரும் புட்டியும்
அதனுள்ளிருக்கும் காகிதத்துண்டும்
தவறாமல் தெரிகிறது
விழிக்குள்ளான விழிகளுக்கு _
விரியுங் காட்சியின் கருணை
யருங் கவிதையாக.


v 

குறுக்கே மறிக்கும் உறக்கத்தை
கைகளால் சுருட்டியெடுத்துக்
கக்கத்தில் இடுக்கிக்கொண்டு
மனமும் விரலும் மணத்துயிர்க்க
மறுபிறவியெடுக்கவேண்டும் கவிதையில்


v