LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, April 15, 2025

இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளில் எழுதப்படவேண்டிய குறுநாவல்- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளில் எழுதப்படவேண்டிய குறுநாவல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குறுநாவல் போட்டியொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கலந்துகொள்வதற்கான நிபந்தனைகள் அழுத்தமான எழுத்துருவில் அடிக்கோடிடப்பட்டிருந்தன.
அவற்றிலொன்று குறுநாவல் மொத்தம் இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது
என்று கறாராய் கூறியிருந்தது.
அதில் கலந்துகொள்ள ஆர்வமுற்றவன்
தனது கதையின் கதை, பாத்திரங்கள், நிகழ்வுகள்,
சந்தர்ப்பசூழல்கள், திடீர்த்திருப்பங்கள்
எல்லாவற்றையும் வார்த்தைகளின் எண்ணிக்கையாய் மட்டுமே
பார்த்தும் வார்த்தும் கோர்த்தும் போர்த்தும்
எழுதிமுடித்தான்.
பழுதடைந்திருந்தாலென்ன பரிசுவென்றால் போதும்
என்ற மனநிலை பக்குவமா பெருந்துக்கமா
என்ற வரிகளும் அவற்றின் வார்த்தைகளும்
போட்டிக்கான சட்டதிட்டங்களுக்கு அப்பால்
அந்தரத்தில் ஊசலாடியபடி…..

ஆல்டஸ் ஹக்ஸ்லியும் அருவக் கைக் கூர் ஊசியும் - லதா ராமகிருஷ்ணன்

 ஆல்டஸ் ஹக்ஸ்லியும்

அருவக் கைக் கூர் ஊசியும்

- லதா ராமகிருஷ்ணன்

(2017இல் எழுதியது. மீள்பதிவு)


“In spite of language, in spite of intelligence and intuition and sympathy, one can never really communicate anything to anybody. The essential substance of every thought and feeling remains incommunicable, locked up in the impenetrable strong room of the individual soul and body. Our life is a sentence of perpetual solitary confinement.”

_ ALDOUS HUXLEY (Noteworthy English writer, novelist, philosopher)
மேற்கண்ட வரிகளில் ஆல்டஸ் ஹக்ஸ்லி வரைபடமிட்டுக் காட்டியிருக்கும், தனிவழிப் பாதையில் போய்க்கொண்டிருந்தார் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்).
மனதிற்குள் நிறைந்து தளும்பி நிற்குமோர் உணர்வு, அதை வாய்மொழியாக வெளிப்படுத்துவதற்கு சரியான வார்த்தைகள் அல்லது எண்ணத்தெளிவு கிடைக்காமல் தொண்டைக்குழிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சடைத்துக் கொண்டிருக்கையில் ஆல்டஸ் ஹக்ஸ்லி அதை அத்தனை அனாயாசமாக, அத்தனை துல்லியமாக வெகுகாலத்திற்கு முன்பே எழுதிவைத்துவிட்டுப் போயிருப்பதை ‘கூகுள் சர்ச்’இல் கண்டெடுக்க நேர்ந்தது புதையல்களிலெல்லாம் தலையாய புதையலாக மனதை நெகிழச் செய்து நிலைகுலையவைத்ததில் ஏற்பட்ட நிறைவுக்கு ஒரு வாசகராகிய தன்னால் என்ன கைம்மாறு செய்துவிட முடியும் என்று எண்ணி யெண்ணிப் பரிதவித்துப் போனார். அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)
ஒரு மொழிபெயர்ப்பாளராக அந்த வரிகளைத் தமிழாக்கம் செய்யும் ஆர்வம் தவிர்க்கமுடியாமல் எழுந்தது....
எங்கு பார்த்தாலும் அருவமாய்க் காத்திருக்கும் கல்லெறிகைகள் (கல்லெறி கைகள் / கல்லெறிகைகள்) ஒரு சொல்லைச் சுட்டியே மொழிபெயர்ப்பு மொத்தத்தையும் சொத்தையாக்கிக் காட்டுவதில் கருமமே கண்ணாயினர்.....
ஒரு கணம் சற்றே தயங்கிய கை மறுகணம் தன் கைவசப்பட்ட மொழியாக்கத்தைச் செய்து முடித்தது.
”மொழி, அறிவு, உள்ளுணர்வு இரக்கம் எல்லாம் இருப்பினும் ஒருவரால் ஒருபோதும் எதையும் எவர்க்கும் சொல்லிவிட இயலாது. எந்தவொரு எண்ணத்தின் அடிப்படையான சாரமும் உணர்வும் பிறரிடம் தெரிவித்துவிட முடியாததாகவே இருக்கின்றன; ஒவ்வொரு தனி ஆன்மா, உடலின் ஊடுருவ முடியாத உறுதியான அறையில் பூட்டப்பட்டிருக்கின்றன. நம் வாழ்க்கை என்றுமானவொரு தனிமைச் சிறைவாச தண்டனை.”
மொழிபெயர்த்ததைத் திருப்பி வாசிக்கும்போது அதை இன்னும் நன்றாக மொழிபெயர்க்க முடியும், மொழிபெயர்க்கவேண்டும் என்று தோன்றியது. அடுத்தமுறை - நாளையோ, நான்கு வருடங்கள் கழித்தோ – மொழிபெயர்க்கும்போது இப்போதைய மொழிபெயர்ப்பு நிச்சயம் வேறுவிதமாக மாறியிருக்கும் என்று தோன்றியது.
தன் மொழிபெயர்ப்பு குறித்த அரைகுறை நிறைவு ணர்வோடு மீண்டும் நடக்கத்தொடங்கியபோது தன்னை யாரோ பின்னுக்கிழுத்து சுரீரென்று எதையோ தன் மேற்கைக்குள் தைப்பதுபோல் உணர்ந்தார் அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)
வழக்கம்போல் ஓர் அருவக்கை. ஆனால், வழக்கத்திற்கு மாறாக அந்த அருவக்கையில் கல்லுக்கு பதிலாக கூரான ஊசியிருந்தது.
தன்னையுமறியாமல் பின்னுக் நகர்ந்துகொண்டவர் ”என்ன செய்கிறீர்கள்?” என்றார்.
“பார்த்தால் தெரியவில்லை? உன்னைப் பொருட்படுத்து கிறேன்.”
ஒன்றும் புரியாமல் முகமென்று தோராயமாகக் கணக்கிட்டுக்கொண்ட ஒரு வெற்றிடத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தவாறு கூறினார்: “என்ன சொல்கி றீர்கள்?”
“என்ன கருமாந்திரத்துக்கு எழுதுகிறாய் நீ? எட்டியுதைத்தால் எகிறிப்போய் எங்கேயோ குப்புற விழுவாய் – செய்யவா?”
அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய படைப்பாளி (ஒரு மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.) “எனக்கு எழுதப் பிடிக்கும் , எழுதுகிறேன் _” என்று சொல்லி முடிப்பதற்குள்
“ என்னது? எழுதப் பிடிக்குமா? என் அனுமதி கேட்காமல் எப்படி எழுதுவாய் நீ. அத்தனை ‘தில்’லா உனக்கு?” என்ற கேள்வி ஓர் அணுகுண்டுபோல் பாய்ந்துவந்து தாக்கியது.
அதிர்ச்சியில் உறைந்துபோன அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)க்கு எதுவும் புரியவில்லை.
“என்ன இப்பிடிப் பேயடித்தாற்போல் பார்க்கிறாய்? உன்னுடைய அந்தப் புத்தகத்தில் ‘சொன்னான்’ என்று எழுதாமல் ‘கூறினான்’ என்று எழுதியிருக்கிறாயே கூறுகெட்டு… வெட்கமாயில்லை?”
“கூறினான் என்று எழுதினால் என்ன தப்பு?” என்று இவரால் கேட்காமலிருக்க முடியவில்லை.
“எதிர்த்துப் பேசினால், ஒரே அப்பு அப்பிடுவேன். அதுசரி, மூலநூலில் பேச்சுவழக்கில் இருக்கும் உரையாடலை செந்தமிழில் மொழிபெயர்த்திருக்கிறாயே – என்ன திமிர் உனக்கு”
சன்னக் குரலில் பதிலளித்தார் இவர். “இதில் என்ன திமிர் இருக்கிறது? மூலமொழியில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு எனக்குத் தெரியாது. நான் இலக்குமொழியில் எனக்குத் தெரிந்த வட்டாரவழக்கில் எழுதினால், மூல நூலில் இடம்பெறும் வட்டார வழக்கு இது இல்லை என்று திட்டித் தீர்ப்பீர்களே!”
“திட்டித் தீர்ப்போம்தான் – இரண்டு தட்டு தட்டவும் செய்வோம். ஒண்டியாளாக, எந்தக் குழுமத்தையும் சேராதவர்களாக இருந்தால் எங்கள் வேலை இன்னமும் சுலபம். தேவைப்பட்டால் ஒரே போடாப் போட்டு ஆளைத் தீர்த்துக்கட்டுவதும் உண்டுதான். என் பலத்தைப் பார்க்கிறாயா_”
அருவக்கை இவரின் தோளைப் பிடித்துத் தள்ள, நிலைகுலைந்து விழப்பார்த்தார் . அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)
“இந்தா, நட்புக்கரம் நீட்டுகிறேன். பிடித்துக்கொள். இதோ, இன்னொரு கையால் இன்னொரு முறை ஊசியால் குத்தப்போகிறேன். நான் எந்த அளவுக்கு உன்னை ஊசியால் குத்துகிறேனோ அந்த அளவுக்கு உன்னைப் பொருட்படுத்துகிறேன் என்று அர்த்தம். புரிந்துகொள்”
ஊசி குத்திய இடம் வலித்தது. தன்னை நோக்கி நீண்ட ஆனானப்பட்ட நட்புக்கரத்தை ஏற்காமல் தட்டிவிட்டார்.
“நாலெழுத்து எழுதிவிட்டால் உன் தலையில் கிரீடம் ஏறிவிட்ட மிதப்பா?” அருவக் கையின் குரல் சீறியது.
சீக்கிரம் போயாகவேண்டும். செய்யவேண்டிய எழுத்துவேலையை இன்றே செய்துகொடுத்தால்தான் இரண்டு பிறவிகளுக்குப் பிறகாவது ஏதாவது சன்மானம் கிடைக்க வழியுண்டு….
.“நீ ஒரு எழுத்தும் எழுதாமலேயே நொடியில் நீதிதேவன் ஆகிவிட்ட மிதப்பில் பேசுகிறாயே – அது மட்டும் நியாயமா? – தன்னை மீறிக் கேட்டுவிட்டார் அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.)
அருவக்கைக்குரிய புருவங்கள் நெரிந்து கண்களில் தீப்பொறி பறப்பதை சுற்றிலும் பரவிய வெப்பக்காற்றால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
“முதலில் இதற்கு பதில் சொல். மூலநூலில் ஆப்பிரிக்காவில் கதை நடைபெற்றால் மொழிபெயர்ப்பில் அந்த வட்டார வழக்கை நீ கொண்டுவரத்தான் வேண்டும். அதைச் செய்தால்தான் மரியாதை”
“விமானத்தில் ஆப்பிரிக்காவிற்குச் செல்ல எனக்குப் பணவசதியில்லை. ரயிலில் செல்வதுபோல் விமானத்தில் ’வித் அவுட்’இல் செல்லமுடியுமா தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் என் புரவலராக மாறி எனக்கு நிதியுதவி செய்ய முன்வந்தாலும் வயதான அப்பாவையும்,நோயாளி வாழ்க்கைத்துணையையும் தவிக்கவிட்டு என்னால் ஆப்பிரிக்காவுக்கெல்லாம் செல்ல முடியாது” என்று இவர் உதடுகளுக்குள்ளாய் முணுமுணுத்துக் கொண்டபடி, “அது மிகவும் சிரமம்” என்று பலவீனமாய் முனகினார்.
“சைத்தானே, சொல்வதைச் சப்தமாகச் சொல். இல்லையென்றால், நீ செத்தாய்”, என்று இரைந்தது அந்த அருவக்கையின் குரல்.
“நான் சொல்லவந்தது இதுதான்: நான் மொழிபெயர்த்தி ருக்கும் அந்தக் கதை கனவுக்குள்ளான கனவுக்குள் நிகழ்கிறது”
”புத்திசாலித்தனமாக பதிலளிப்பதாக நினைப்பா? இந்த வழியாக எத்தனையோ பேர் போகிறார்கள் – வருகிறார்கள். எவராவது உன்னைச் சீந்த்தியிருக்கி றார்களா. நான் தான் உன்னைப் பொருட்படுத்துகிறேன். புரிந்துகொள். என்னிடம் நன்றிபாராட்டாமல் எதிர்ப்பு காட்டி எகிறி குதிக்கிறாயே, முட்டாளா நீ” என்று சீறியது அருவக்கைக்குரல்.
வலியையும் மீறி, பசிமயக்கத்தையும் மீறி இவர் முகத்தில் ஒரு புன்முறுவல் பூக்கிறது.
“என்ன எழுதிக்கிழித்துவிட்டாய் என்று, அல்லது மொழிபெயர்த்துக் கிழித்துவிட்டாய் என்று இளிக்கிறாய்?”
அருவக்கையின் குரலில் தொனித்த ஆங்காரமும் அகங்காரமும் இவருடைய புன்முறுவலை அதிகப் பிரகாசமாக்கின.
“கோபிகிருஷ்ணனின் ஒரு கதையில் வரும் பாத்திரம் அடிக்கொருமுறை ‘ரிலாக்ஸேஷன்’ என்ற வார்த்தையை தன் போக்கில் சொல்லிக்கொண்டிருக்கும். அது நினைவுக்கு வந்தது.”
”இதை நான் சொல்லவில்லை கூமுட்டை. நான் மதிக்கும் படைப்பாளி கூறினார். ஒரு படைப்பை ஒட்டுமொத்தமாகப் புறமொதுக்கிவிடும் சூழலில் அதை யாராவது வசைபாடினால், அதன்மீது யாராவது சேற்றை வாரியிறைத்தால் – நம் எழுத்தை இவராவது பொருட்படுத்துகிறாரே என்று எழுத்தாளர் நன்றி பாராட்டவேண்டுமே தவிர கோபத்தில் எகிறிக் குதிக்கலாகாது என்று சொல்லியிருக்கிறார் தெரியுமா?”
அயர்ந்துபோய்விட்டார் அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.) தன் காலை இடறிவிட்டு ‘நன்றியில் மண்டியிட்டுத் தெண்டனிட்டதாக’க் காட்டப்பட்டுவிடுமோ என்ற திகில் பரவ, தன்னிச்சையாக ஓரடி பின்னால் நகர்ந்து கொண்டார். அருவக் கையின் அருவ முகமிருக்கும் வெற்றிடத்தைக் குத்துமதிப்பாக ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே சொன்னார்:
“நீங்கள் மிகவும் மதிக்கும் அந்தப் படைப்பாளி எந்தத் தருணத்தில் அப்படிச் சொன்னார் என்று நீங்கள் அவசியம் எண்ணிப்பார்க்கவேண்டும். அதைவிட அவசியம், நீங்கள் மிகவும் மதிக்கும் அந்தப் படைப்பாளி எந்தத் தருணத்தி லாவது உங்களை மாதிரி ஊசி குத்திக்குத்தி ’பொருட்ப டுத்தியிருக்கிறாரா’ என்றும் நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்…”
“எனக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு நீ பெரிய ‘பிஸ்தா’வா? வருகிறேன், அடுத்த தடவை துருப்பிடித்த ஊசிகளாக எடுத்துக்கொண்டு வந்து உன்னை இன்னும் நான்குமுறை ஊசியால் வலிக்க வலிக்கக் குத்தி நான் ‘பொருட்படுத்தினால்தான் உனக்கு புத்தி வரும்…”
”இன்னுமொன்றும் சொல்லவேண்டும். நான் எகிறி குதிக்கிறேன் என்று சொல்லும் நீங்கள் இப்படி எகிறி எகிறி குதிக்கலாமா? உபதேசம் ஊருக்கு மட்டும்தானா?” என்று அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாள ராகவும் இருக்கலாம்.) கேட்க, எரித்துவிடுவதாய் முறைத்து அப்பாலேகியது அருவக்கை.
பின்னால் ஆல்டஸ் ஹக்ஸ்லி நிழலாய்த் தொடரும் நிம்மதியில் அந்தக் கவிஞர் அல்லது கதாசிரியர் அல்லது புதின எழுத்தாளர் அல்லது எல்லாமாகிய ஒரு படைப்பாளி. (மொழிபெயர்ப்பு ஒருவகைப் படைப்பாக்கமாகக் கொள்ளப்படும் பட்சத்தில் அவர் மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கலாம்.) மேலே நடக்கலானார்.

Pazhanivell’s poem

 Pazhanivell’s poem

rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



My well drawn with thousand pulleys
Today also the noon commenced with sweat oozing.
Beside the waterfront with mirage overflowing
and roads floating all over
in the house tied in chains RAAJAA was unleashed.
The day was nowhere to be seen
In the evening hours when fumbling and tumbling I attempt to escape
At the other end of the chain – REHMAAN.
Despite saying ‘don’t want’ they keep plucking and offering slices of Music
Enough, why don’t you take leave
This is an earthen house
The fragrance of cow-dung turns intense
The hens without getting inside baskets keep blabbering
“O fella, won’t you switch off the ‘Ladio’ says the old woman
In the backyard house.
The thousand pulleys didn’t halt at all
Will they be hauled throughout the night
screeching non-stop

ஆயிரம் ராட்டிணங்களால் இறைக்கப்படும் என் கிணறு
இன்றும் பிற்பகல் கசியும் வியர்வையோடு ஆரம்பமானது நீர்நிலையொட்டி கானல் வழிந்தோட சாலைகள் மிதந்தலைய சங்கிலியால் கட்டிவைத்த வீட்டில் ராஜா திமிறிக்கொண்டிருந்தார்
பகல் காணவில்லை
மாலை வேளை தட்டுத்தடுமாறி தப்பிக்க முனைய சங்கிலியின் இன்னொரு முனையில் ரஹ்மான்
வேண்டாம் என்றாலும் கேட்காமல் நாதத்தின் நறுக்குகளை கொய்து போட்டவண்ணம் உள்ளனர்
போதும் கிளம்புகிறீர்களா
இது மண்சுவர் வீடு
சாணத்தின் வாசனை கூடுகிறது
கோழிகள் அடைபடாமல் பினாத்துகின்றன
பின்வீட்டு கிழவி லேடியோவை அணையம்பா என்கிறாள்
ஆயிரம் ராட்டிணங்கள் நிற்கவேயில்லை
இரவு முழுக்க இழுபடுமா
கீக்கொலியோடு

நானென்பதும் நீயென்பதும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நானென்பதும் நீயென்பதும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அதெப்படியோ தெரியவில்லை
அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு
உடன்பட்டிருந்தபோதெல்லாம்
அறிவாளியாக அறியப்பட்ட நான்
ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும்
குறுகிய மனதுக்காரியாக,
கூமுட்டையாக
பாலையும் நீரையும் பிரித்தறியத் தெரியாத பேதையாக
பிச்சியாக,
நச்சுமன நாசகாரியாக
ஏவல் பில்லி சூனியக்காரியாக
சீவலுக்கும் பாக்குக்கும்
காவலுக்கும் கடுங்காவலுக்கும்
வித்தியாசம் தெரியாத
புத்திகெட்ட கேனச் சிறுக்கியாக
மச்சு பிச்சு மலையுச்சியிலிருந்து
தள்ளிவிடப்படவேண்டியவளாக
கள்ளங்கபடப் பொய்ப்பித்தலாட்டப்
போலியாக
வேலி தாண்டிய வெள்ளாடாக
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்
நாசகாரியாக
பள்ளந்தோண்டிப் புதைக்கப்படவேண்டியவளாக
வெள்ளத்தில் வீசியெறியப்படத்தக்கவளாக
சுள்ளென்று தோலுரித்துக் குருதிபெருக்கும்
கசையடிக்குகந்தவளாக
அக்கிரமக்காரியாக
அவிசாரியாக
துக்கிரியாக
தூத்தெறியாக
உங்கள் தீராத ஆத்திரத்திற்குப்
பாத்திரமாகிவிடுகிறேன்.
ஆனாலுமென்ன?
நீங்கள் என்னை நோக்கி
எனக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது
என்று சொல்லும்போது
அது உங்களுக்குமானதாகிவிடுகிறது!

வாய்ச்சொல் வீரர்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல் வீரர்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட
பிரம்மாண்ட மேடையில்
வெள்ளிக்கேடயம்
தங்கவாள்
வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம்
விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன.
Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும்
ஒருமணி நேரம் முன்பாக தனி விமானத்தில் வந்திறங்கியவர்களும்
புடைசூழ வந்த பிரமுகர்
மேடையேறி நேராக மைக்கின் முன் சென்று
முழங்கத் தொடங்கினார்.
”பல்லக்குத்தூக்கிகளும்
பல்லக்கிலேறிப் பயணம் செய்பவர்களும்
என்ற பாகுபாடு ஒழிக்கப்படுவதே நம் குறிக்கோள்”.
படபடவென்று கைத்தட்டல் விண்ணைப் பிளக்க
நலத்திட்டங்களைப் பெற வெய்யிலில் வரிசையில் காத்திருந்தவர்களைப் பார்த்துக் கையாட்டியவாறே
கப்பலென நீண்டிருந்த காரிலேறிச்
சாலையின் இருமருங்கும் வெயிலில் சுருண்டுகிடந்த பிச்சைக்காரர்களைப் பார்த்தும் பாராமலே
விரைந்தார்
தனது பல்லக்குத் தயாரிப்புத் தொழிற்சாலையின்
உற்பத்திப் பெருக்க வழிமுறைகள் மாநாட்டிற்குத்
தலைமை தாங்கவும்
பன்னாட்டு நிறுவனமொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புது மாடல் பல்லக்குகளைப்
பார்வையிடவும்.......

சொல்லத்தோன்றும் சில - லதா ராமகிருஷ்ணன்

 p

சொல்லத்தோன்றும் சில

லதா ராமருஷ்ணன்

ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு.
இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி யாகத் துன்புறுத்தியிருக்கும் செய்திகளை அடிக்கடி படிக்க நேர்கிறது.
பெண் களுக்கெதிரான வன்கொடுமைகளுக்காகக் களத் தில் போராடுபவர்கள், இது குறித்த ஆய்வலசல்கள் மேற் கொள்வோர் குடும்பங்களுக்குள், உறவுக்காரர்களால் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆணவத்தால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுக ளைப் போல் இப்போது அதைப் படம்பிடித்து விற்றுக் காசுபார்க்கும் காரணத்திற் காகவும் நிறைய வன்புணர்வு கள் அந்நிய ஆண்களாலும், அந்நியோன்யக் காதலர்களா லும், அக்கம்பக்கத்துக் காமுகர்களாலும், வீட்டுப்பெரிய வர்களாலும்(?) நிகழ்த்தப்படுகின்றன என்று செய்திகள் வருகின்றன.
அதேசமயம். இதைப் பொதுமைப்படுத்திப் பேசிவிட முடி யாது; பேசிவிடலாகாது. வீட்டு ஆண்களே இப்படித்தான் என்று காமாலைக் கண்களோடு எல்லா ஆண்களையும் பார்ப்பதோ, அப்படிப் பார்த்து அஞ்சும்படி வீட்டிலுள்ள சிறுமிகளைச் செய்துவிடுவதோ சரியல்ல.
எனக்குத் தெரிந்த தபால்காரர் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் – அவர்களில் இருவர் பெண்கள், தனது 95 வயதுத் தாயையும் அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப் பட்டிருந்தபோது செலவை சமாளிக்க வெற்றுக் காசோலைகளில் கையெழுத்திட்டு வாங்கிய கடன் இன்று அவரை அப்படி வாட்டிக்கொண்டிருக் கிறது.
எல்லா சம்பளத்தையும் வட்டி, முதலை வசூலிக்கிறோம் என்ற பெயரில் எப்போதோ அடைந்துவிட்ட கடனுக்காக இப்போதும் வெற்றுக் காசோலைகள் மூலம் அவருடைய சம்பளத்தை நினைத்தபோதெல்லாம் வழித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி சமயங்களில் இரவில் எங்காவது பெயிண்ட் அடிக்கும் வேலை என்று ஏதாவது செய்வது வழக்கமாம்.
கேசு, கோர்ட்டு என்று அலைந்துகொண்டிருக்கிறார். தெலுங்கு அவருடைய மொழி. குழந்தைகளை ஆந்திரா வில் உள்ள பள்ளி விடுதியில் சேர்த்திருக்கிறார்.
தாய்க்கு 95 வயது. இப்போதும் ஊரில் இட்லி சுட்டு விற்கி றாராம்!.
தபால்காரத் தோழருக்கு சென்னையிலிருந்து மாற்றல் கிடைக்கவில்லை. தெலுங்குப் பள்ளி அதிகம் சென்னை யில் இல்லையென்பதால் அவருடைய பிள்ளைகளை இங்கே படிக்கவைக்கமுடியாத நிலை.
கடந்த வருடம் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்த பெரிய மகள் வயதுக்கு வந்துவிட, ஊரிலிருக்கும் தாயாரி டம் தொலைபேசி இல்லையென்பதால் இரவு எனக்கு போன் செய்து என்ன செய்வது என்று கேட்டார். சில ஆலோசனைகள் கூறினேன். சென்னையில் அவர் வீடு எங்கேயோ தொலைவில். அங்கிருந்த பெண்கள் வந்து உதவினார்களாம்.
பிள்ளைகளைப் பார்க்க ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அவர் ஊருக்குப் போகும்போதெல்லாம் தெருவிலுள்ள சில வீடுகளில் புதிய, பழைய துணிமணிகள், முடிந்த பணம் என்று கொடுத்தனுப்புவோம்.
பலவீனமான உடல் அவருக்கு. ஆனால், ஒரு மகனாக, தகப்பனாக அவருடைய பாசமும் நேசமும் அத்தனை உறுதியானது!
அவருடைய கடன் தொல்லை தீர்ந்து அவருக்கு எப்படி யாவது ஆந்திராவுக்கு மாற்றல் கிடைக்கவேண்டும் என்பது என் என்றுமான பிரார்த்தனைகளில் ஒன்றாய்…...