LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, July 25, 2023

அம்பலம் _ ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

அம்பலம்

_ ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
 //2016, ஜூலை 25இல் பதிவேற்றப்பட்டது//


பெருந்தகை யவர் அருமருந் தெழுத்தாளர்
தனக்கு முன்பாகப் பேச வேண்டியவரை மனிதநேயத்தோடு
மிக லாவகமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டுப்
பேசஎழுந்தபோது
அலைகளின் சலசலப்பும் சிறகுகளின் மென் படபடப்பும்
இடி முழக்கமும் பூமாரிப் பொழிவும்
நிலநடுக்கமும் பாறைச்சரிவும் பிரளயமும்
புது உலகப் புறப்பாடும்
கேட்கக் கிடைக்கிறதோ என்று
சிலர் செவிகளைக் கூர்மையாக்கிக் கொள்ள
சிலர் கேட்டதாகவே நம்பத் தொடங்க
இன்னும் சிலர் அந்தப் பாதங்கள் தரையில் பதிந்துள்ளனவா
அல்லது அவர் உண்மையில் தேவதையே தானோ வென
திகைப்பும் பிரமிப்பும் சேரக் குனிந்துபார்க்க
நேரமில்லை என்றாலும் வந்தேன்
எந்தக் கூட்டத்திற்கும் போவதில்லை என்றாலும்வந்தேன்
என்றாலும் என்றாலும் என்றாலும்
என்று அடுக்கிக் கொண்டே போனதில் சுரந்திருந்த
‘போனால் போகட்டும் என்று’
பேரருள் பாலிப்பாய்புரிந்து கொள்ளப்பட்டிருக்குமோ
அல்லது சுட்டிருக்குமோ சுளீரென
யாமறியோம் பராபரமே
அன்றி அதையும் கவித்துவ வரியாகப்
பரவசங் கொள்வோர் என்றும் உளர் தானோ ஏனோ
என்றும் உளறிக்கொண்டிருக்கும் வாயிலிருந்து ஒழுகுவது
தேனோ நெய்யோ தீர்த்தம் தானோவென
சிலர் மயங்க
சிலர் மருள
உன் முன் னோர் என் முன்னோர் அவர் முன்னோர்
இவர் முன்னோர்
உன் ரசனை என் அறிவு அவர் தெரிவு இவர் பரிவு
எல்லாமே
வெத்துவேட்டுபித்தலாட்டம் நச்சுப்பாம்பு நாராசம் என
மிச்சம் மீதி வைக்காமல் ஒரு கச்சிதக் கணக்கோடு
கண்ட தலை விண்ட தலை கண்கொள்ளாத் தலை
விள்ளவியவியலாத் தலை
சொட்டைத் தலை மொட்டைத் தலை
அறுவைச் சிகிச்சைக்கு ஆளான தலை
பிறந்த பிறவா இறந்த இறவா வாரிய வாரா
இன்னும் ஏராளம் ஏராளம் தலை களை யெல்லாம்
தனி அடை யாளங்களை அழித்துக் கூழாக்கி
வெட்டிச்சாய்த்துக் காணாப் பொணமாக்கிய பின்
தன் இடம் உறுதிப்பட்டுவிட்ட திருப்தியோடு
தரையில் மிதக்கும் பல்லக்கே போன்ற அசைவுடன்
புறப்பட்டுச்சென்றவர்
பன்னாட்டுப் பெருமுதலாளி தயாரிக்கும்
திரைப்பட விழா வொன்றின்
குளிரூட்டப் பட்ட பேரரங்கிற்குள் நுழைந்து
மேடையேறிப் பொருந்தி யமர்ந்துகொண்டார்
கட்டாயம் இடையில் கிளம்பிப் போகமாட்டார்
இறுதிவரை அங்கேயே தான் இருப்பார்.


பார்வை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பார்வை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

வேறு வேறு நவீன உத்திகளைக் கையாண்டு
நூறு யானையின் பசியோடு
பழிபாவத்திற்கு அஞ்சாமல்
ஊருப்பணத்தையெல்லாம் விழுங்கித்தீர்ப்பவர்கள்
விழியிழந்தவர் யானையைத் தடவிப் புரிந்துகொண்ட
வழக்கொழிந்த கதையை
முழங்கிக்கொண்டிருக்கும் வெட்கக்கேட்டை யெண்ணி
ஆரம்பப்பள்ளியிலேயே யானையின் முழு உருவை
அவர்களுக்கேயான வரைபடத்தில்
தொட்டுத்தடவித் தெரிந்துகொண்டவர்கள்,
ஆசிரியர் விரித்துரைக்க காதுகளெல்லாம் கண்களாக
விரியக் கேட்டிருந்தவர்கள்,
கல்விச் சுற்றுலா சென்ற பூங்காவிலிருந்த
குட்டி யானைச் சிலையை பேர்பேராகச் சுற்றிவந்து
தொட்டுணர்ந்து தொட்டுணர்ந்து
சரியாக முதுகிலேறி
தந்தத்தைப் பிடித்துக் கீழிறங்கியவர்கள்,
அடிக்கொரு பள்ளத்தைத் தாண்டி
அவ்வப்போது தடுக்கி விழுந்து
அடிபட்டுக்கொண்டும் முன்னேறி
இன்று கணினியில் சுயமாய் உலகத்தைச் சுற்றிவரும்
பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் _
‘உங்களால் மட்டும்
பூமிப்பந்தின் மொத்தப்பரப்பையும் பார்க்கமுடிகிறதா?
உங்கள் பார்வைகளுக்கு எல்லைகளே யில்லையா
இருவிழிகளிருந்தும் நீங்கள் எப்படியெல்லாம் வழுக்கிவிழுந்துகொண்டிருக்கிறீர்கள் .....
கொழுப்பெடுத்த அழுக்குப்பிடித்த உங்கள் நெறிப்பிறழ்வுகளுக்கெல்லாம்
எங்களையேன் குறியீடாக்குகிறீர்கள்....?
என்று கேட்டால்
ராஜாக்கள் தங்கள் தவறுணர்வார்களோ,
இல்லை, அவர்களைக் கொன்றுவிடுவார்களோ…….

புரியும்போல் கவிதைகள் சில….. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) - ’இப்போது’ தொகுப்பிலிருந்து

2016இல் சிறிய அளவில் ஒரு பதிப்பக முயற்சியை ஆரம்பித்தேன். ‘அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்(Anaamikaa Alphabets). முதல் நான்கு நூல்கள் ஜூன் 11ஆம் தேதி கைக்கு வந்தன. அதில் என்னுடைய கவிதைத்தொகுப்பும் ஓன்று. தலைப்பு - இப்போது அதிலிருந்து ஒரு கவிதை. 

...................................................................................

புரியும்போல் கவிதைகள் சில…..

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


(1)
 

குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம்
இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள்
எல்லாமும் மழையுமாய்
எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான்
தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும்
எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத்
தெரியுமோ
ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும்
அவற்றின் அலை-துகள் நிலையும்
களி நடனமும் பிறவும்….?

(2)

ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து….
ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன்
என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன்
இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின்
ஆறான ஐந்தின் பத்தான எட்டின்
நேர்க்கோடுகள், நெளிவு சுளிவுகள்
வாத்தின் எலும்பு மார்பக வளைவு
வாலுடன் காத்தாடி சிரசாசன நிலை
உள்வாங்கிய சறுக்குமரம்
இருவட்டச்சிறைகளுக்குள்ளிருந்து
வெளியேறும் வழி –
என எண்ணிப்பார்த்துக்கொள்ள
எத்தனையோ இருக்கு பார்.

(3)

சிட்டுக்குருவி காக்கை புறா கோழி குயில் கழுகு மயில்
வான்கோழி இன்னுமுள ஈராயிரத்திற்கு மேலான
பறவையினங்களில்
விரும்பித் தேன்குடிப்பது எது
தேன்குழலைக் கடிப்பது எதுவெனத்
தெரியுமோ எவருக்கேனும்…?
அட, தெரியாவிட்டால்தான் என்ன?
ருசியறியாதவரை தேன் வெறும்
பிசுபிசுப்பானஅடர்பழுப்புநிற திரவம்தான்.
அருந்திய பறவை ஆனந்தமாய்ச் சிறகடிப்பதைப் பார்த்து
அடித்துப்பிடித்து உண்டிவில்லைத் தேடிக்கொண்டிருப்போர்
கண்டிலரே வெளியெங்கும் பறத்தலின் காற்றுத்தடங்களை.
உண்டல்லோ அவ்வண்ணமாய் புரியாக் கவிதையும்!

(4)

ஸ்கூட்டி, பைக், கார், லாரி, குப்பை லாரி
மினி பஸ், மாம்பலம் – டு – லஸ் மாக்ஸி பஸ்
ரயில் கப்பல் ஆகாயவிமானம்……
எல்லாம் இருந்தும் கடற்கரையில்
கையைத் தலைக்கு அண்டக்கொடுத்தொருவன்
அண்டவெளிக்குள் பல உன்னதங்களைக் கண்டவண்ணம்
படுத்திருக்கிறானே….
அந்த வேளையில் பயணம் என்ற சொல்லின் அர்த்தம்
அவனுக்குப் பிரத்யேகமானது.
அவன் நகர்வதாகவே தெரியவில்லையே என்று
அங்கலாய்த்து
அத்தனை முனைப்போடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கற்களைத் திரட்டி
அவன் மீது குறிபார்த்து எறிவதில் காட்டும் அக்கறையில்
ஒரு துளி கவிதை மீது காட்டினாலும் போதும் –
நிறையவே புரிந்துவிடும்.

(5)

திருக்குறள் நாலடியார் குறுந்தொகை
நற்றிணை தேவாரம் திருவாசகம்
சித்தர் பாடல்கள் சிலப்பதிகாரம்
எல்லாம் புரிந்துவிட்டதுபோலும்
புரியாக் கவிதை எழுதுகிறான் என
புகார் மேல் புகார் அளித்தவண்ணம்
அண்டவெளியைக் கூண்டிலேற்றி
குறுக்குவிசாரணை செய்ய
முடிந்தால் நிலவறைக்குள் அடைத்துவிடவும்
அன்றும் இன்றுமாய் அவர்கள்
ஆயுதபாணிகளாய் வந்தபடி வந்தபடி…..
காக்கும் கவிதை காக்க
அகாலத்தின் விரிபரப்பில்
காற்றுச்சித்திரங்களைத் தீட்டிக்
களித்திருப்பானே கவிஞன்!

(6)

இந்த வாசகருக்குப் புரியுமென்று
வெந்த சாதம் பற்றி எழுதினார்’
வந்ததே கோபம் வேறொருவர்க்கு.
பச்சைக் காய்கறிகளே சத்துள்ள உணவு
என்று கடித்துக்குதறிவிட்டார்.
வம்பெதற்கு என்று
நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தொரு
கவிதை எழுதினார்.
பாகற்காயைப் பற்றிப் புனையத் தோன்றவில்லையே என்று
கண்டனத்தைப் பதிவு செய்தார் இன்னொரு வாசகர்.
ஆகா மறந்துவிட்டேனே என்று அளப்பரிய வருத்தத்துடன்
மருந்துக் கசப்புக்கோர் எடுத்துக்காட்டு பாகற்காய்
எனக் கவிதையெழுத
சுண்டைக்காயின் கசப்பைச் சொல்லாமல் விட்ட பாவி
என மண்ணை வாரித் தூற்றிச் சென்றார்
மா வாசகரொருவர்.
என்ன செய்வதென்றே தெரியாமல்
எழுதியவற்றையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு
உறங்கச் சென்றார் கவிஞர்.
கனவிலும் அந்த வாசகர்கள் வந்து
அவர் உருகியுருகி யெழுதியதையெல்லாம்
உள்வாங்க மனமின்றி
கருகக் கருகக் கண்களால் எரித்து
சாம்பலை காலால் கெந்திவிட்டு
கெக்கலித்துக்கொண்டிருந்தார்கள்.

(7)

இரவு இரண்டுமணியைத் தாண்டிவிட்டது.
உறக்கம் வந்தும் உறங்க முடியாமல்
வரிகள் சில மனதிற்குள் குறுகுறுக்கின்றன.
கொஞ்சுகின்றன.
ஏந்திக்கொள்கின்றன.
வெளியே கூட்டிக்கொண்டுபோயேன் என்று கையைப்
பிடித்திழுக்கின்றன.
எழுதத் தொடங்கும் நேரம்
எழுதும் நேரம்
எழுதி முடிக்கும் நேரம்
நானே கவிதையின் பாடுபொருளாய்
இலக்கு வாசகராய் –
விலகிய பார்வையில்.
அதிவிழிப்பு நிலையில்…..
சாதியின் பெயரால் சக கவிஞர்களைச் சிரச்சேதம் செய்பவர்கள்
தமிழ்க்கவிதைத் தாளாளர்களாய்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிச் சென்றவண்ணம்.
இன்னும் ராமேசுவரத்தைக்கூடக் கண்டிலேன் நான்.
என்றாலும், ”குறையொன்றுமில்லை” எனச் சொல்வேன் –
மறைமூர்த்திக் கண்ணனிடம் இல்லை -
மனம் நிறைக்கும் கவிதையிடம்.
பின் ஏன் திண்ணைக்கு அனுப்புகிறாய் என்பார்க்கு:
”கல்லுக்குள் தேரைக்கு உணவிருக்கையில்
என் கவிதைக்குள் கரைபவரும் எங்கோ இருக்கக்கூடும்தானே!”

(8)
அனா, ஆவன்னா, இனா ஈயன்னா உனா
ஊவன்னா
ஏனா ஏயன்னா ஐயன்னா ஃன்னா….
ஆனா,, ஏனாம் அட, ஆவலா, இக ஈயமா
உர, ஊதா, எர, ஏற, ஐய, ஃப்பா இல்லை
யென்ற கேள்வியின்
எல்லைக்கப்பால் என்னைத் தள்ளிக்கொண்டு
செல்கையில்
எதிரே வந்த சிறுமி
“உய்னனக்கு இய்னிந்த பேய்னச்சுப்
பிய்னடிக்குமா?”
என வினவிச்
சென்றாளே, சென்றாளே….

வாக்குமூலம் - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) - ‘இப்போது’ தொகுப்பிலிருந்து

 


2016இல் சிறிய அளவில் ஒரு பதிப்பக முயற்சியை ஆரம்பித்தேன். ‘அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்(Anaamikaa Alphabets). முதல் நான்கு நூல்கள் ஜூன் 11ஆம் தேதி கைக்கு வந்தன. அதில் என்னுடைய கவிதைத்தொகுப்பும் ஓன்று. தலைப்பு - இப்போது அதிலிருந்து ஒரு கவிதை.


வாக்குமூலம்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….......
ஊகூம், ஏலேலோ உய்யலாலா….

உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்;
உதார்விட்டுக்கொண்டிருப்பேன்
ஒருபோதும்
உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்….

ஊ….......லல்லல்லா…………ஊ…......லல்லல்லா…….....
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..

வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….?
எச்சில் வழியக் கேட்பவன் இறுதியில்
‘‘உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’ என்று சொல்லித்
தப்பித்துவிடும் உலகில்
பதிலளிக்காமல் போக்குக் காட்டுவதெல்லாம் மிக எளிது.

ஊ….........லல்லல்லா……….ஊ…....லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…

இணையற்ற என்னைப் பார்த்தா வினவத் துணிகிறாய்?
இல்லாத நூலிலுள்ள எழுதாத பக்கங்கள் எனக்கு மனப்பாடம் தெரியுமா?
பார்த்தாயல்லவா – மார்க்வெஸ்ஸின் ஒரு வரியில்
(மாங்காய் மடையர்களிடம்) என்னை மேல்தாவியாக்கிக் காட்டும்
மேலான வித்தை தெரிந்துவைத்திருக்கிறேன்.

ஊ…......லல்லல்லா………......ஊ…...லல்லல்லா….......
ஊகூம், ஏலேலோ உய்யலாலா...

தர்க்கநியாயங்களை கணமேனும் எண்ணிப்பார்ப்பேன் என்றா நினைக்கிறாய்?
அநியாயம், அக்கிரமம் என்றே அலறுவேன் அரற்றுவேனே தவிர
தப்பித் தவறியும் தெளிவா யொரு பதிலைத் தரமாட்டேன்.
பின்வாங்கலை கடந்துபோவதாய் பொருள்பெயர்த்துவிட்டால் போயிற்று.

ஊ…........லல்லல்லா………..ஊ….லல்லல்லா…...............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா....

துணிவிருந்தால், தில்லாலங்கடியோ, கேட்டுப் பார் கேள்வியை
திரட்டிவைத்திருக்கும் கருத்துமொந்தைகளை
விறுவிறுவென விட்டெறிவேனே தவிர
மறந்தும் பதிலளிக்க மாட்டேன்.

ஊ….....லல்லல்லா………...ஊ…......லல்லல்லா….............
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா....

மீண்டும் அறிவுறுத்துகிறேன், புண்ணாக்கு விடைவேண்டி
வலியுறுத்தினாலோ
மளமளவென்று கிளம்பும் என் அய்யய்யோ வென்ற அலறல்கள்;
அதி வன்மம் நிறை உளறல்கள்.

ஊ….......லல்லல்லா………..ஊ….......லல்லல்லா…...........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா....

காலோ, அரையோ முக்காலோ, தெக்காலோ வடக்காலோ
எங்கெங்கு காணினும் தமிழ்க்கவிதைக் காவல்தெய்வம் நானாகி
ஊனாகி உயிராகி பேனாகி அரிக்கும் பணியில்
இருபத்திநான்குமணிநேரமும் என்னை இயக்கிக்கொண்டிருப்பது
வன்மம் என்பார் உன்மத்தர்கள் ஆம்.

ஊ…........லல்லல்லா……… ஊ…......லல்லல்லா…...........
ஊகூம், ஏலேலோ உய்யலாலா…..

அடுத்தொரு கேள்வி கேட்டால் பின்னும் எட்டியுதைப்பேன் வெட்டிப் புதைப்பேன்….
இன்னும் பல செய்தவாறு செய்வதெல்லாம் நீயே என்பேன்
தின்பேன் என்னென்னவோ இவ் வின்னுலகம் உய்யவே.
என்னையா கேள்வி கேட்கிறாய் அப்போதைக்கப்போது?
இந்தா உனக்கொரு பெப்பே;. இப்போதைக்கு இது.

ஊ…........லல்லல்லா……….....ஊ…......லல்லல்லா…..........
ஊகூம்,ஏலேலோ உய்யலாலா ….
0

Thursday, July 20, 2023

குழந்தைகளின் நிலை - கையறுநிலை லதா ராமகிருஷ்ணன்

குழந்தைகளின் நிலை - கையறுநிலை


லதா ராமகிருஷ்ணன்
............................................................................
 சொல்லத் தோன்றும் சில…..
ஒரு குற்றம் நடந்திருப்பதாகச் செய்தி வந்தால், உடனேயே குற்றம் இழைத்தவர், குற்றம் இழைக்கப் பட்டவர் ஆகிய இரு தரப்பினரின் சாதி, பொருளாதார நிலை மதம், அரசியல்கட்சி சார்பு – இப்படி பல விஷயங் களை அறிந்து அவற்றின் அடிப்படையிலேயே அந்தத் தவறை அணுகுவது இப்போது சமூக சிந்தனையாளர் களாக, போராளிகளாக அறியப்படும் பலரின் அணுகு முறையாக இருக் கிறது.
இது வேண்டத்தகாத போக்கு.
நேற்றிலிருந்து தொலைக்காட்சி சேனல்களிலும், இன்று தினமணி, டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளிதழ்களிலும் வெளியாகியுள்ள ஒரு செய்தி. தர்மபுரியைச் சேர்ந்த 19 வயது நபர் 6 வயதுச் சிறுவனை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி கொலை செய்திருப்பதாக அந்தச் செய்தி.
தெரிந்த சிறுவன். ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக அழைத்துச் சென்று மிக உயரமான, பயன்படுத்தப்படாத தண்ணீர் டாங்கிற்கு ஏற வைத்து அங்கே நடந்திருக்கிறது இந்தக் கொடுமை. சிறுவன் அழுததும் கொலை செய்யப்பட்டிருக்கிறான்.
காவல்துறையினர் வந்து விசாரித்தபோது நரபலி கொடுக்கப்பட் டிருக்கலாம் என்று இந்த குற்றமிழைத்த நபர் காவல்துறையின் கவனத்தை திசைதிருப்பப் பார்த்திருக்கிறார். இப்போது இந்த நபர் சிறையில்.
(உடனே ஊரை குறைகூறத் தயாராகிவிடுவார்கள் சிலர். எதையும் பொதுமைப் படுத்திப் பேசுவதற்கான தேவை யும் உண்டென்றாலும் எல்லா நேரமும் அதையே செய்வது பிரச்சனையை திசை திருப்புவதாகவே அமையும்)
பழக்கமான நபர் என்றால் பெரும்பாலும் ஒரே சாதியைச் சேர்ந்த வர்களாகத் தான் இருப்பார்களா?
அலைபேசியில் சரளமாகப் புழங்கும் நீலப்படக் காட்சிகள் வளரி ளம் பருவத்தினரிடம் அதைப்போலவே செய்து பார்க்கும் ஆசை யைக் கிளறச் செய்வதாலா?
சிறுவர் சிறுமியருடனான பாலுறவுக் காட்சிகளுக்கு உலகம் முழுக்க நல்ல பணம் கிடைப்பதாலா?
முன்பு இளங்குற்றவாளிகளுக்கான சீர்நோக்குப் பள்ளி யொன்றில் சில காலம் அவர்கள் படைப்பாற்றலை வளர்க்கும் பகுதிநேர வேலை பார்த்தபோது முதல் நாளே அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் ‘ பார்க்க பாவமாயிருப்பார்கள் – இரண்டு கொலை, மூணு ரேப் செய்திருப்பார் கள்’ என்று 15 முதல் 18 வயது வரையான இளங்குற்ற வாளிகளை(அவர்களை மற்ற சிறுவர்களிடமிருந்து பிரித்து தனி பிரிவில் வைத்திருந்தார்கள்) என்று சொன்ன போது என்னவோபோலிருந்தது. ஆனால், போகப்போக அந்தக் கூற்றி லிருந்த யதார்த்த உண்மை புரிந்தது.
சிறுவர்கள், வளரிளம்பருவப் பையன்கள் பற்றிய அக்கறை நம்மிடம் போதுமானதாக இல்லை. அரசுப் பள்ளிகளில் சில ஆயாக்கள் மழலையர் வகுப்பிலுள்ள குழந்தைகள் கொண்டுவரும் சாக்லெட், பிஸ்கெட்டு களை சர்வசாதாரணமாக எடுத்துச் சாப்பிடு வது வழக்கமாம். குழந்தை மூத்திரம் போகவேண்டுமென்று கேட்டல் அடி. அடக்கியடக்கி ஒரு கட்டத்தில் வகுப்பிலேயே போய்விட்டால் அதற்கும் அடி. இதையெல்லாம் பற்றி புகார் செய்தால் அந்த ஆயா பாவம் கணவன் கைவிட்டு விட்டான் என்று அந்தப் பெண்ணுக்காகப் பரிந்துபேச ஆரம்பித்துவிடுவார்களாம் பொறுப்பிலுள்ளவர்கள். அப்படியானால் அந்தக் குழந்தைகள் பாவமில்லையா?
இதேபோல்தான் திரைப்படங்களில் காட்டப்படும் stalking முதலான பல விஷயங்கள்.
ஒளி ஊடகங்கள், சமூக ஊடகங்களெல்லாம் பெரும்பாலும் ஒரு விஷயத்தைப் பரபரப்புக்காகவே பேசுகின்றன. நடிக நடிகைகளைப் பற்றி எத்தனை மஞ்சள் பத்திரி கைகள் யூட்யூப் காணொளிகளாக வலம் வருகின்றன.
சீரியல் நாடகங்களைக் கேட்கவே வேண்டாம். இந்து மதம் என்றாலே வேண்டாத சடங்குகள் என்று திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். கோவில்களில் தான் பெரும்பாலும் கொலைக்கான திட்டங்கள் தீட்டப் படுகின்றன.
மிக மிக மோசமான வார்த்தைகளால் (மோசமான வார்த் தைகளென்றால் நாம் வழக்கமாக ‘கெட்ட வார்த்தைக ளா’கச் சுட்டும் வார்த்தைகள்தான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஆனால் நாகரீகமான வார்த்தைகளாகக் கொள்ளப்படும் எத்தனையோ மோசமான விஷந் தோய்ந்த வார்த்தைகள் இந்த சீரியல்களில் புழக்கத்தி லிருக்கின்றன.
தொலைக்காட்சி சேனல்களுக்கு கொஞ்சமேனும் சமூகப் பொறுப்பு ணர்வு இருந்தால் மேற்குறிப்பிட்ட மிக அவலமான நிகழ்வைப் பற்றி அகல்விரிவாகப் பேசவேண்டும். அது குறித்துப் பேசத் தகுதி யான வல்லுனர்களை வரவழைத்துப் பேசவேண்டும்.
தினமும் குழந்தைகளுக்கு சில அத்தியாவசிய விஷயங் களைச் சொல்ல ஆரம்பிக்கவேண்டும். (GOOD TOUCH, BAD TOUCH என்பதுபோல்) ஆனால், தொலைக்காட்சி சேனல்களே சிறுவர் சிறுமியரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது (எத்தனையோ விரசமான பாடல்களை சூப்பர் சிங்கர், சரிகமப நிகழ்ச்சி களில் சின்னக்குழந்தைகள் பாடுகிறார்கள் - அதற்கேற்ற அசிங்க அபிநயங்களில்) அவர்கள் இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொள்வார்கள் என்று நம்பிக்கை கொள்ள வழியில்லை.
கோர விபத்துகளை ‘நடந்தது நடந்தபடி’ காட்டுவதில் தான் அவர்களுக்குப் பெரும் ஆர்வம். இந்தக் காட்சிகளையெல்லாம் ஊடகங்களில் காட்டவே கூடாது. இதய பாதிப்பு எத்தனையோ பேருக்கு ஏற்படச் செய்யும் காட்சிகள். அதைப்பற்றியெல்லாம் தொலைக்காட்சி சேனல்களுக்கும் சமூக ஊடகங்களுக்கும் என்ன கவலை?
தருமபுரியில் நடந்திருக்கும் இந்தக் கொடூர நிகழ்வு ஆண்குழந்தை கள் மீதும் இத்தகைய அத்துமீறல்கள் நிகழ்த்தப்படுகின்றன என்பதை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது. இனியேனும் பள்ளிகள், கல்லூரிகள், பொதுவிடங்கள், சமூக ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஆண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் போதுமான கவனம் செலுத்தப்படவேண்டும்.
இப்படிச் சொல்வதால் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து போதுமான அக்கறை செலுத்தப்படுகிறது என்று சொல்வதாக அர்த்தமில்லை. சமீபத்தில் ஒருவர் தன் மகளிடமே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முதலில் புகார் செய்த எட்டு வயது மகளும், அந்த நபரின் மனைவியும் அந்த நபர் இல்லையென்றால் சாப்பாட் டுக்கே வழியில்லாத நிலை புரிய இப்போது பிறழ்சாட்சி யாகிவிட்டார்களாம். ஆனாலும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார்.
குடும்பத்தில் நிகழும் இத்தகைய அத்துமீறல்களை மிக அதிக மாகப் பேசி, வெளிச்சம் போட்டுக்காட்டும்போது மற்ற குழந்தைகள் தங்கள் வீட்டு ஆண்களையெல்லாம் பார்த்து சந்தேகப்படும், அச்சப் படும் சூழலும் உருவாகிவிடக்கூடும்.
அதேபோல் சமீபத்தில் தன் கணவன் தங்களுடைய மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பொய்ப்புகார் கொடுத்த மனைவியைப் பற்றியும் அதன் விளைவாக ஆறேழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து தற்போது விடுதலையாகியிருக்கும் தந்தையைப் பற்றியும், அதேபோல் மகள் தந்தைமேல் பொய்ப் புகார் கொடுத்த செய்தியையையும் படிக்க நேர்ந்தது.
வீட்டில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகும் சிறுமியை குழந்தை களுக்கான பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்க, அங்கும் அவளை சில பணியாளர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக ஒரு அவலச் செய்தி.
எங்கேதான் அந்தக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்?
இறந்துவிட்ட ஆறுவயது ஆண்குழந்தைக்கு எத்தனை வலித்திருக்கும்? அது எத்தனை கதறியிருக்கும்?
குற்றமிழைத்த 18 வயது இளைஞன் இனி அது குறித்து வருந்து வானா? வருந்தி என்ன பயன்?
தொலைக்காட்சி சேனல்களிலும் நாளிதழ்களிலுமாக எதிர் கொள்ளவேண்டியிருக் கும் இத்தகைய செய்திகள்/ தகவல்கள் மனதில் ஒரு மிகப்பெரிய கையறுநிலை யுணர்வை ஏற்படுத்தி விடுகின்றன.