LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, March 31, 2025

கவித்துவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கவித்துவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கணம் வருடம்
காற்று இரும்புமரம்
வனம் உள்
வெளி ஊஞ்சல்
ஈர மனம்
நீரதன் மேல் நெளியும் கனவு
இல்லாத அகராதிகளின்
சொல்வளம்
முந்தும் உணர்வழுத்தச்
சிந்தனைத்திறன்
அழுகையின் புன்னகை
ஆனந்தக்கண்ணீர்
ஒருவரில் பலர்
பலரில் ஒருவர்
என்றோ இறந்தும்
இன்று புதிதாய் பிறப்பதுபோலவே
இன்று அழிந்தும்
நாளை நிகழும் பிறப்பு
முதுகின் இருவிழிகள்
மூக்கின் மூன்றாம் துவாரம்
மூளைக்கிளி
மனக்குறளி
முனகாப் பேரோலம்
முணுமுணுப்பின் இடிமுழக்கம்
அந்தரத்தில் நடைபழகும்
ஆயிரங்கால் உயிரி
வசப்படும் வானம்
விரல்களுக்கிடையில்
நழுவும் காலம்
அர்த்தார்த்தம்
அன்புமயம்.

(*சமர்ப்பணம்: கவிதைக்கும், சக கவிஞர்களுக்கும்)

அன்றும் இன்றும் என்றும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

  அன்றும் இன்றும் என்றும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒன்றுமேயில்லை யிதில்
என்றார்.
ஒன்றுமில்லாததைப் போய்
எல்லாமிருக்கிறது என்கிறாயே
என்றார்.
ஒன்றிப்போக முடியவில்லையே
என்றார்.
நன்றாகவேயில்லையே
என்றார்.
கண்றாவி யென்றார்.
காறித்துப்பினார்.
கரித்துக்கொட்டினார்.
ஒன்றிலிருந்து நாம் பெறும்
ஒன்று
அந்த ஒன்றை விட அதிகமாக
நம்மையே அடையாளங்காட்டுகிறது
என்றே
என் வழி சென்றேன்.

//வாசகர்// அன்னா அக்மதோவாவின் கவிதை [தமிழாக்கம் : லதா ராமகிருஷ்ணன்]

 //வாசகர்//

அன்னா அக்மதோவாவின் கவிதை
[தமிழாக்கம் : லதா ராமகிருஷ்ணன்]


ஒரு கவிஞர் உதவாக்கரையாக உணரலாகாது,
வருந்தக்கூடாது உள்ளுக்குள்.
மக்கள் தன் இதயத்தையடைய
வேண்டுமென்று விரும்பினால்
தன் மனதைத் திறந்துகாட்டவேண்டும்.

அரங்கின் நெருப்புப்புள்ளிகளனைய ஒளிவட்டங்கள்
அவர் இடத்தைக் குறிக்கின்றன -
வெறுமையான தனியிடமொன்றில்;
புகழ் வெளிச்சத்தின் தண் தழல்
துல்லியமாக வெளிக்காட்டுகிறது
அவருடைய பலவீன வெளிர் முகத்தை..

ஒவ்வொரு வாசகரும் பூமியின் ஆழத்தில்
மறைந்திருக்கும் பெரும் புதையல் –
அவர் அடையாளங்காணப்படாதவராக,
அணுகப்படாதவராக, இருந்தாலும்,
தன் வாழ்நாளெல்லாம் பேசாமலேயிருந்தாலும்

அங்கே புதைக்கப்பட்டிருக்கின்றன,
மறைத்துவைத்திருப்பதே மேல் என்று இயற்கை
முடிவுசெய்யும் எதுவும்.
யாரோ அழுகிறார்கள் அநாதரவாய்
அழும் நேரம் வரும்போது – அது வந்தே தீரும்

அங்கே, இரவின் துயரிலிருந்து எழுகின்றன
நிழலுருவங்கள் மெல்ல மெல்ல,
வீசுகின்றன கடுங்குளிர் காற்றுகள்;
முகமறியா மனிதரொருவரின்
எண்ணிறந்த கண்கள்
என்னிடம் உரையாடுகின்றன
விடியலின் முதல் ஒளிர்வு வரை.

அவர்கள் என்னைக் குறைகூறுகிறார்கள்
என் கடந்தகால அத்துமீறல்களுக்காக
பாராட்டுகிறார்கள் எனது செய்கைகள் சிலவற்றிற்காக….
இவ்வாறாக சுழித்தோடுகிறது மௌனமாய்
இந்த ஏற்பு வாக்குமூலம்;
இந்தஆனந்தக் கூடலின் வெப்பம்

குறைவே நம் வாழ்நாள்
விரைவாக வந்துவிடும் முடிவு
ஆனால், எப்போதும் கூடவேயிருப்பார் _
கவியின் அந்த அநாமதேய, விசுவாச நண்பர்

A POEM BY AKHMATOVA
THE READER
A poet must not feel a wretch,
Nor should he in secrecy grieve.
if he wants his public to reach
His heart he must wear on his sleeve.
The footlights in fiery dots mark
His place in a bare, lonely space.
The limelight’s cold flame throws in stark
relief his defenceless pale face.
Each reader is a treasure-trove
hidden in fathoms of earth –
even if He is undistinguished, unbidden,
and has been mute all of his life.
And buried there, everything lies
that nature deems best to conceal.
And somebody helplessly cries
when crying time comes – as it will.
There, out of nocturnal gloom rise
slow shadows, and chilly winds blow;
And lone strangers’ myriad eyes
talk to me until dawn’s first glow.
They blame me for my past transgressions,
They praise me for some things I did….
Thus flows on this silent confession,
This blissful communion’s heat.
Too brief is our earthly life’s span
And only too soon comes the end,
But he is forever on hand _
The poet’s unknown, loyal friend.
Summer 1959
Komarovo
Translated by Sergei roy.All reactions:

சொற்களும் சொல்பவர்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சொற்களும் சொல்பவர்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
'நீங்கள்' - 'நாங்கள்' என்ற இரண்டு வார்த்தைகளில்
தம்மைப் போற்றற்குரியராகவும்
பொதுவுடைமையாளராகவும்
பேரறிவாளராகவும்
பெருமதிப்புக்குரியராகவும்
பேரன்புடையோராகவும்
பென்னம்பெரிய சமூகப்பிரக்ஞை
யாளராகவும்
பின்னும் என்னென்னவோவாளராகவும்
படம்பிடித்துக்காட்டி
போற்றி போற்றி போற்றிப்
பாடிக்கொள்வதோடு
நில்லாமல்
மற்றவர்களை
சொற்ப அறிவுக்காரர்களாகவும்
சுயநலமிகளாகவும்
சுத்தமாய் சமூகப்பிரக்ஞை
யற்றவர்களாகவும்
சிறிதும் சொரணையற்றவர்களாகவும்
இன்னும் என்னென்னவோவாளராகவும்
தூற்றி தூற்றி தூற்றிக்
கட்டங்கட்டி மட்டந்தட்டும்
மட்டந்தட்டிக் கட்டங்கட்டும்
எட்டு பதினாறு நாற்பத்திநான்கு வரிகளில் புகுந்துபுறப்பட்டு
வெளியேறிவிடும் வழியறியாமல்
திருதிருவென்று விழித்துக்கொண்டிருக்கும்
சொற்களைத்
தரதரவென்று இழுத்துக்கொண்டோடும்
கவிதை
பன்னாட்டு இலக்கியப் பரிமாற்ற
பவள விழா மண்டபத்திற்கு

நோய்மை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நோய்மை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அகன்று விரிந்த சாலையில் ஓரமாகக் கிடக்கும்
வறிய வாழ்வுகளைக்கண்டுங்காணாமல் விரைந்துகொண்டிருந்தவர்கள்தான் நாம்.
அடுத்தவரைக் குறைபேசியே
நம்மாலாகும் கடுகளவு சகமனிதக்
கடமையைக்கூடச் செய்யாமல்
காலெட்டிவைத்து அப்பால் போய்க்கொண்டிருக்கப்
பழகிவிட்டவர்கள்….
பாதிக்கப்பட்டவர்கள் பாவம் தாங்குவதில்
நடிப்புக்கு நோபெல் விருது இருந்தால்
அது கண்டிப்பாக நமக்குத்தான்.
ஆள்பவர்களையெல்லாம் ஆக்ரோஷமாகப்
பழிப்பதும் சபிப்பதுமே
நம் மனிதநேயத்தின் ‘அக்மார்க்’ முத்திரையாக _
அதைத் ஸெல்ஃபி எடுத்துப்போடுவதைக் காட்டிலும்
ஆகப்பெரிய சமூகப்பணி இருக்கமுடியுமா என்ன?
ஒரு பேரவலத்தின் பிடியில் அகப்பட்டு
சிறிய அறையில் முடங்கிக்கிடக்கும் நேரம்
திரும்பத்திரும்ப துயருரும் வறியவர்கள்
சிறிய இன்னும் சிறிய சதுர,நீள்சதுரக் கண்ணாடிப்பெட்டிகளிலிருந்து
அத்தனை நெருக்கத்தில் கண்ணீர்பெருக்கும்போது
தன்னையுமறியாமல் மேலெழும்பும் மனசாட்சி
நம்மைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறது.
அவசர அவசரமாக அதன் வாயை மூடி
பாதிக்கப்பட்டவராக நம்மை முன்னிறுத்தும் முயற்சியில்
உரக்கக் கூவுகிறோம்; கதறுகிறோம்
தாவி குதித்துத் தரையில் புரண்டு துடிக்கிறோம்;
தெரிந்தே பொய் பேசுகிறோம்.
பறந்துகொண்டிருக்கும் பணக்காரர்களால் வந்தது
இந்தப் பேரிடர்
என்று அடித்துச்சொல்கிறார் நம்மில் ஒருவர்
அடிக்கடி அவர் பல நாடுகளுக்குப் பறந்தவர்; பறந்துகொண்டிருப்பவர்;
பறக்கப்போகிறவர்

இன்னுயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்னுயிர்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

எனக்கிருப்பது ஓருயிரில்லையென்று நன்றாகவே தெரிகிறது.
ஈருயிர்மட்டுமேயென்றிருக்கவும் வழியில்லை……
இருகைகளின் பத்துவிரல்களுக்கும்
மனக்கைகளின் ஏராளம் விரல்களுக்கும்
சிக்காத எண்ணிக்கையை எதைக்கொண்டு கணக்கிட
வெனும் கேள்வி கொன்றுகுவிக்கும்
எனதின்னொருயிரின் வயது
சின்னக்குழந்தையினுடையதா
உன்மத்தக்கிழவியினுடையதா
இன்று புதிதாய்ப் பிறக்கும் என்னுயிர்கள் எவையெவை
எதுவாயினும்
என்றுமே
என் ஓருயிரைக் காப்பாற்ற
என் இன்னொரு உயிரை நான்
கொன்றாகவேண்டியிருக்கிறது.

வெறும் வானமும் வளர்கவிதையும் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வெறும் வானமும்

வளர்கவிதையும்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

வெறும் வானிருந்தொரு திடீர் மின்னல்
பளீரிடுவதுபோல்
இருந்தாற்போலிருந்து உருவாகிக்கொண்டிருக்கிறது கவிதை.
சிறிதும் பெரிதுமாய் வரிகளோடியவண்ணம்.
இரு நிறுத்தற்குறிகள் தம்மைத்தாமே
இடம்பொருத்திக்கொண்டுவிடுகின்றன.
ஓர் ஆச்சரியக்குறி அங்குமிங்குமலைந்துகொண்டிருக்க
அந்தரத்தில் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருக்கின்றன சில கேள்விக்குறிகள்.
திருத்தேர் வீதியுலா வரும்நேரம் இறையுருவை மறைத்து
ஏராளம்பேர் இருந்தும்
இருவிழிகளும் தாமாய் மூடிக்கொள்ள
உறுகைகள் அனிச்சையாய் கன்னங்களில் தட்டிக்கொள்ள
உள்ளே தெரிந்தும் தெரியாமலுமாய்
உறையலாகுங் கடவுள்
சிறுகணம் என்னில் இரண்டறக் கலத்தலாய்
சிதம்பர ரகசியமாய்
சித்திரத்துச் செந்தாமரைக்கு
சிறகு முளைத்ததாய்
முழம்போடும் வெறுங்கையெலாம்
வாசமல்லி பூப்பதாய்
வாய்கொள்ளா தாகத்தோடு
வெற்றிடத்திலிருந்து வாரியெடுக்கிறது
கவிதை.
பாயுமொளியில்லையென்றாலும்
பறவைகள் இல்லையென்றாலும்
ஓயாப்பெருங்கடலலைகளின் மேலாய் காணும்
வெறும் வான் வெறும் வான் அல்லவே!

இயல் – இசை - நாடகம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இயல் – இசை - நாடகம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஆளுக்கொரு ஆயத்தக் குழு வைத்திருக்கிறார்கள்
ஆட்களும் ஆட்களின் எண்ணிக்கையும் அடிக்கொருதரம்
மாறிக்கொண்டேயிருக்கும்.
எதிர்த்துத் தாக்கி வீசவேண்டிய எறிகணைகளுக்கேற்ப
முன்பின்னாகக் குழுவினர் இடம்மாற்றி நிற்பது இயல்பு
போலத் தெரிந்தாலும் அது தெளிவான திட்டமிடல்; ஆயத்தம்.
இயல்புபோல் இயல்பல்லாததைச் செய்வதே
இன்றைய இயல்பாகும் தகிடுதித்தம் கைவசப்படாதார்
கற்கால மனிதர்களுக்கும் முற்காலத்தவராக.
மாறி மாறித் தாக்கியும் தழுவிக்கொண்டும்
குழுக்கள் தனிநபராகி தனியொருவர்கள் குழுக்களாகி
பொழுதெல்லாம் அரத்தை சீவிக் கூர்தீட்டி
அறம் வளர்த்தபடி.....