LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 20, 2025

தொடுவானம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொடுவானம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’ஒரேயொரு வார்த்தையை மட்டும்
துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்;
ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத்
தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’
என்ற நிபந்தனையோடு _
அந்தரவெளியிலிருந்த தீவு ஒன்றிற்கான
இலவசப் பயணச்சீட்டு் ஒன்று
அலைபேசிவழியே நீட்டப்பட்டது.
எவரிடமும் கேட்கவில்லை;
எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளவுமில்லை.
என்று
யாரிடம் சொன்னாலும்
உனக்கே தெரியாமல் நீ கேட்டிருப்பாய்
என்றோ
உறக்கத்தில் நீ அந்தப் போட்டியில் கலந்துகொண்டிருப்பாய்
என்றோ
அத்தனை உறுதியாக அவர்கள் சொல்வதில்
உதறலெடுத்துவிடும்
சித்தங்கலங்கிவிட்டதோ என்று.
கலங்கிக்குழம்பித்தெளிந்துமினுங்கி சொற்கள்
சூழ்ந்துகொண்டன:
நான்
நீ
காற்று
உயிர்
காபி
குருவி
பாட்டு
நேயம்
மாயம்
மேலும்…..
’உனக்கான நேரம் முடிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டு
மறுமுனை அழைப்பு துண்டிக்கப்பட்டது.
கைகொள்ளாமல் சொற்களை அள்ளிக்கொண்டபடி
தரையிறங்கிய தனிக்கோளில் ஏறிக்கொண்டு
அந்தரத்தில் நீருருவில்
தட்டாமாலை சுற்றத்தொடங்கியது
கவிதை.

HAPPY WORLD POETRY DAY! - MARCH 21

 










உற்சவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உற்சவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குரலின் திருக்கோலம் காண்பதொரு
கொடுப்பினையாய்
இரு கரம் கூப்பிக் கண்மூடித்
தெருநீள வழிபார்த்து
இருகால்களும் நிலம் பாவாமல்
பரந்து விரிந்த வெளியெங்கும்
பறந்து பறந்து
பரவசத்தில் கண்கிறங்கிக்
கிடந்ததொரு காலம்……
உருகும் உள்ளெங்கும் இசை
நிறைத்துப் பெருகி
வித்தாகிப் பித்தாகி கத்துங்கடல்
முத்தாகி
யெத்தாலும் அழியாச் சொத்தாகி
செத்தாலும் மறவாத நினைவாகி
மொத்தமாயெனை ஆட்கொண்டிருந்த
தொரு காலம்.....
வரமனைய இசையின் பிசிறுகளும்
பேதங்களும்
சிறுகச்சிறுகப் புரிய
புரிதலுக்கப்பால் சில நிரவல்களும்
நிறுத்தங்களும்
வெறும் பேரிரைச்சலாக
பத்தோடு பதினொன்று
அத்தோடு இதுவுமொன்றாய்
குரலின் திருக்கோலம் காணும்
பேரார்வம்
நத்தையோட்டுக்குள் சுருண்டு
முடங்கியதொரு காலம்……..
திருவீதி யுலா நாளும்….

அடையாளம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அடையாளம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
மேகப்பொதியொன்றை அடையாளம் வைத்து
பயணத்தைத் தொடங்கியிருந்தேன்....

பகலிரவாய்
மனோவேகத்தில்
ஏக தூரம் சென்ற பின்
ஒரு காலை
திரும்ப
அண்ணாந்து பார்க்க
காணவில்லை
வானத்தையும்.

(*காலத்தின் சில தோற்றநிலைகள்’ – கவிதைத்தொகுப்பி லிருந்து)

பூவின் வாசனைக்குத் தூலவடிவம் தருபவன்! -‘ ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பூவின் வாசனைக்குத்

தூலவடிவம் தருபவன்!

(*சமர்ப்பணம்: இசைமேதை இளையராஜாவுக்கு)
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இசை உனக்குள் கருக்கொள்ளும்போது
நீ உருவிலியாகி
ஒரு காற்றுப்பிரியாய் பிரபஞ்சவெளியில்
அலைந்துகொண்டிருப்பாய்…...
இசையை முழுமையாய் உருவாக்கி
முடிக்கும்வரை
நீ மனிதனல்ல _ தேவகணம்தான்.
உன் உயிரில் கலந்த இசை
என்னை ஊடுருவிச் செல்லும் நேரம்
காலம் அகாலமாகும்;
காணக்கிடைக்கும் சிந்தா நதி தீரம்……
இதயம் எல்லோருக்கும் இருக்கிறது;
மனமும்; ஆன்மாவும்
அப்படியெனில்
இசையென்பது உன்னில் என்ன?
அழகிய பூவுக்கு வடிவம் உண்டு.
வரையலாம்.
அந்தப் பூவின் நறுமணத்திற்குத்
தூலவடிவம் தருவதுதான்
உன் இசையென்னும் அருவமாக _
ஆகிறாய் நீ
ஆன்ற புத்துயிர்ப்பை அருள்பாலிக்கும்
பெருமானாய்!
உன் கையில் இசையொரு
அட்சயபாத்திரமாக
அன்றாடம் எத்தனையெத்தனை பேரின்
உறுபசியாற்றிக்கொண்டிருக்கிறாய்!
நேற்றும் இன்றும் நாளையும்
ஊற்றுநீராய் சுரந்தபடியே இருக்கும்
உன் இசையில் தாகமாற்றியபடி
முன்னேகும் வழிப்போக்கர்களுக்கு
நிழல்தரவும் நீயே உன் இசையை
அங்கங்கே நட்டுவைத்திருக்கிறாய்
நெடுமரங்களாய்!
நாள் முழுக்க நடந்து கடந்த களைப்பு மீற
நாங்கள்
எங்கள் அவமானங்களின், ஆற்றாமைகளின்
கன்றிச்சிவந்த காயங்களோடு
கட்டாந்தரையில் தலைசாய்க்கும் நேரம்
தூணோரமாய் நின்றபடி
கனிவோடு எங்களைப் பார்த்துப்
புன்முறுவலிக்கும் உன் இசை
தன் மயிற்பீலி வருடலால்
எங்களுக்குக் களிம்பிட்டு வலியாற்றி
கலிதீர்த்துக் காப்பாற்றிக் கரைசேர்க்கிறது.
கரையில் ஓடமாக அசைந்துகொண்டிருப்பதும்
உன் இசையல்லாமல் வேறேது?
கண்ணெதிரே காணும்
காணக்கூடாதனவற்றிலிருந்து
ஒரு கவசமாய் எம்மைக் காப்பதும்
இந்த கொரோனா வைரஸ் காலத்தில்
கைவசமாகும்
நோய் எதிர்ப்புச்சக்தியாவதும்
உன் இசையொன்றே யாக _
என்றுமான நன்றி யொன்றே
என்னாலாகும்
எளிய கைம்மாறாக….…

நிலைத்தகவல் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நிலைத்தகவல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



உயிர்மணம் ருசிக்கும் கவிதைகளைக்
கட்டுச்சோறாக முடிந்துகொண்டு
தீராப்பயண வேட்கையில் கிளம்பியவாறே.
இலக்கு இங்கிருந்து வெளியே.
அடியில் சுழித்தோடும் நீர்ப்பிரவாகம்.
கரணம் தப்பினால் மரணமோ மார்க்கண்டேயமோ…
கூடுவிட்டுக்கூடு பாயக் கிடைப்பதொரு கொடுப்பினை.
நல்வினைப்பயனாய் செல்வழியெங்கும்
புதிதுபுதிதாய்ப் பிறந்தவண்ணம்!
காலடியில் தட்டுப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன
கல் முள் கனவு காலம் மேலும்….
ஆலமர நிழலுண்டு;
அக்கக்கோ குருவியுண்டு;
ஆலகாலவிஷமுண்டு;
ஆச்சர்யப் புத்துயிர்ப்புண்டு….
அற்புதம் நிகழ்த்தும் மாயக்கோல் சொற்கள்
நடுகற்களாய் அங்கிங்கெனாதபடி ….
அவ்வப்போது காற்று வந்து களைப்பாற்ற
சூர்ய சந்திர உதயங்களைக் காணக் கிடைத்த
கண்கோடியில்,
அக்கரைப் பச்சை இக்கரையில் துளிர்க்க _
ஏகியபடி இதயத்தால்
இருமொழிப்பாலம் மேல்….All reactions:

எளிய உண்மைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எளிய உண்மைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அட்சரலட்சம் பெறும் எழுத்துகளை
அரையணா எழுத்தென்பான்
கோடீசுவரனாயிருந்தாலும்
கேடுகெட்ட முட்டாளே!
ஊரிலுள்ள நூலகங்களை
ஏலத்தில் எடுப்பதால்
உலக இலக்கியங்களைப்
படி(டை)த்ததாகிவிடுமா என்ன!
கால அவதியாகிவிட்ட
மிட்டா மிராசுதாரெல்லாம் ஒன்றைக்
காலாவதியாகிவிட்ட படைப்பென்றால்
அது கட்டாயம் மேலானதே!

சொல்லாமலிருக்க முடியவில்லை – 4

 சொல்லாமலிருக்க

முடியவில்லை – 4


எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
_ திருவள்ளுவர்

ஓரிரண்டு வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன். முன்னாள் நீதிபதி சந்துரு டாஸ்மாக் கடைகளில் நிலவும் சுகாதாரமற்ற சூழலைப் பற்றி விரிவாக ஒரு வார இதழில் எழுதியிருந்தார். அங்கே பணிபுரிபவர்கள் பெரும் பாலும் பட்டதாரிகள். (இப்படிச் சொல்வதால் படிக்காதவர்கள் பணிபுரியும் இடங்களில் சுகாதாரமான சூழல் தேவையில்லை என்று சொல்வதாக அர்த்த மாகிவிடாது. அந்த சுகாதாரமற்ற, போதுமான வெளிச்சமும், காற்றும் அற்ற நிலவரம் அங்கு பணிபுரிபவர்களுக்கு உண்டாக்கும் நுரையீரல் சம்பந்தமான நோய்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார்.

தனது கட்டுரையொன்றில் எழுத்தாளர் சாரு நிவேதிதா வெளிநாடுகளில் அரசினால் நடத்தப்படும் மதுக்கடைகள் எத்தனை நேர்த்தியாக, தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன என்பதை விவரித்து எழுதி அதன் விளைவாக அங்கே மதுவருந்த வருபவர்கள் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தாமல் கண்ணியமாகக் குடித்துவிட்டுச் செல்கிறார்கள் என்பதையும், அப்படியில்லாமல் இங்கே தமிழகத்தில் தூய்மையாக இல்லாமல் இருட்டும் அழுக்கும் படந்த நிலையில் இயங்குவதால் அங்கு வந்து கைக்காசை செலவழித்து மது அருந்துபவர்கள் கூச்சலிட்டும் சண்டையிட்டும் வீதியில் விழுந்துபுரண்டும் நடந்துகொள்கிறார் கள் என்றும் அங்கு வருபவர்களை மதித்துநடத்தும் விதமாக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளைப் பராமரிக்கவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

குடி குடியைக் கெடுக்கும் என்று இக்குணூண்டு எழுத்துகளில் அவசர அவசரமாகத் திரையில் ஓடவிட்டு அமர்க்களமாக டாஸ்மாக் கடைகளை நடத்திவரும் அரசு(கள்) அங்கே மதுவருந்த வரும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சுகாதாரமான சூழலை உருவாக்கித் தராமல் இருப்பதும். ஏழை மக்கள் தரும் பணத்தில் பெருங்கொள்ளையடித்து ஐந்து நட்சத்திர ஓட்டல் களில் தங்களுடைய மதுக்கேளிக்கைகளை பிரம்மாண்டமாகக் கொண்டாடிக் கொள்வதும் நியாயமா?

சொல்லாமலிருக்க முடியவில்லை.... 3

 சொல்லாமலிருக்க

முடியவில்லை.... 3

மனமொப்பி உடலுறவுகொள்வதும் பாலியல் வன்கொடுமையும் ஒன்றல்ல என்று சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பணியிடங்களில் பாலியல் சீண்டல், அத்துமீறல்களெல்லாம் சட்டப்படியான குற்றங்களே. ஆனால், ஊடகங்கள் திரு.சீமானைக் குதறியெடுக்கின்றன. தன் அக்காவைப் பார்த்துக் கொள்ளவேண்டியிருக்கும் நடிகை விஜயலட்சுமியை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்கின்றன.

அதற்கு பதிலாக அவருக்குத் தங்கள் ஒளி ஊடகங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தரலாம். அவருடைய அக்கா இப்படி படுத்த படுக்கை யாகக் காரணமாகச் சொல்லப் படுகின்ற நடிகை ஜெயப்ரதாவைப் பேட்டி கண்டு நியாயம் கேட்கலாம். அதையெல்லாம் செய்ய முற்படாதது ஏன்?

அதே சமயம் பணியிடத்தில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானதாக பல பெண்களால் குற்றஞ்சாட்டப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு சமீபத்தில் தமிழக முதல்வர் தலைமையில் வைரமுத்தியம் பன்னாட்டுக் கருத்தரங்கம் கோலாகலமாக நடந்தேறியிருக்கிறது. நீதிபதி அரங்க. மகாதேவன் உட்பட பல இலக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றிருக்கிறார்கள்.