LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 19, 2018

மலையின் உயரம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மலையின் உயரம்
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)
(* From my forthcoming eleventh poem -collection எதிர்வினை)



ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள்,
மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக 
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார் கோரஸ்களோடு.
கலி முத்திப் போச்சுஎன்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள் என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால் அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால் 
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன் 
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச் 
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்என்ற
குழந்தைக்குதூகலமாய்
விளையாட வாயேன்என்று வெள்ளந்தி பாவனையில் 
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீ உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ சேதாரம் உன் தலைக்கு.


Top of Form

புவியீர்ப்பு விசை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புவியீர்ப்பு விசை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*வரவிருக்கும் எனது 11வது கவிதைத்தொகுப்பு எதிர்வினையில் இடம்பெறும் கவிதைகளில் ஒன்று - ரிஷி)


நான் பார்த்த நீயல்லாத நீ
பார்க்கும் நானற்ற நான்
தான் நான் தானா வலி ஆணா பெண்ணா
விடை தெரிந்து ஆவதென்ன
காலத்தீயில் கடையெரிந்து கரிந்து
உடல் வெந்து சாம்பலாகிப் போன பின்
வந்ததென்ன வருவதென்ன….


Ø  

லையென்ன காலென்ன முண்டமென்ன
குலைகுலையாய் முந்திரிக்கா காய்த்த
மரத்தைக் கண்டதுண்டமாய் வெட்டிய கை
நட்ட செடிகளும் நிறையவே உண்டுதான்.
சுட்ட பழமும் சுடாத பழமும்
கட்புலனுக்கானதோ? அவரவர் கைப்பக்குவமோ…..


Ø  


நாத்தம் பிடித்த ஊத்தைக்குழியென்று
பாட்டுப் படித்தவாறே
காத்தடிக்கும் திசைபாத்து
நாளுமொன்றில் நாத்து நட்டுப் பாத்தி கட்டி
நீர்வார்த்துப் பூப்பறித்துப் போகும்
பெருந்தவ வித்தகத்தின் முன்
பேரன்பு எம்மாத்திரம்?


Ø  

ட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
எதற்கடீ நடந்தாய் அத்தனை காததூரம்?
உருவேற்றப்பட்ட ஊருக்கா உனக்கா, இல்லை _
உணர்வார்த்த நிறைவுக்கா?
அயர்விலூறிய உன் மனதை உள்சுமந்திருக்கும் கனம்
மாற்றியிருக்கிறது என்னை
யொரு மாபெரும் சுமைதாங்கிக்கல்லாய்.


Ø  

புண்ணியமா புருஷார்த்தமா என்று
கண்ணடித்துக் கேட்பவரிடம்
வலி புலப்படாதவாறு விடைதருவாள்:
எண்ணும் எழுத்தும் எழுத்துப்பிழையும்
எல்லாமும்தான்; எல்லாருக்கும்தான்.’


Ø  

னமாகியிருந்த உடல்
தினங்கடந்து தினங்கடந்து
நடந்து கிடந்து நடந்து கிடந்து
இடமாகி
வரைபடமாகி
இன்றுறையும் வெறும்
இன்னொரு குறையுடம்பாய் ..…..


Ø  

துவானாலும் யோகம்
என்றொரு மனநிலை வாய்க்காது போனதில்
ஏகமாயிருந்த தாகம் தீராது
நாவறள நெஞ்சுலர நீரளைந்தபடியிருக்கும் பெண்ணை
களைப்பாற்றவேண்டி யிழுத்துத் தன்
மடியிருத்திக்கொள்ளும்
காலத்தின் அன்பிற்கு யார் என்ன கைம்மாறு செய்யவியலும்?


Ø  


ரலாறு வரள் ஆறாகியும் வறள் ஆறு வரலாறாகியும்
விட்டகுறை தொட்டகுறையாய் வாழ்க்கை....