LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, February 28, 2025

நவீன உலகின் நான்காவது தூண் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நவீன உலகின் நான்காவது தூண்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


குறிப்பிட்ட சில காட்சிகளைத்
திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிச் செய்திகள்.
ஒரு மனிதனை இருமுறை உதைத்த
காவல்துறை அதிகாரியின் கால்
திரும்பத்திரும்ப இருநூறுமுறைக்குமேல்
அதையே செய்துகொண்டிருக்கிறது இன்னமும்.
கோப்புக் காட்சி என்று தெரிவிக்காமல்
வசதியாக மறந்துவிடுவதில்
நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த கலவரம்
இன்று நடந்துகொண்டிருப்பதாய்
கிலிபிடித்தாட்டுகிறது பார்வையாளர்களை.
அதேசமயம்
பாமர மக்கள் வண்ணமயமாய்
விபத்துகளைக் கண்டுகளிக்க முடிகிறது.
வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களைக் காட்டி
அடியிலேயே
சரசரக்கும் பட்டுப்புடவை விளம்பரம்
இடம்பெறுகிறது.
குழந்தைகளின் உளச்சிக்கல்களை
ஒருபுறம்
மனோதத்துவ நிபுணர் எடுத்துரைக்க
மறுபக்கம்
சம்பந்தப்பட்ட ‘நியூஸ் சானலுடைய
எண்டர்டெயின்மெண்ட் சானலின்
மெகாத்தொடருக்கான ‘ டீஸரில்’
இரண்டு சிறுவர்கள்
ஒருவரையொருவர் குண்டாந்தடியால்
பின்மண்டையில்
ஓங்கியடித்துக்கொள்கிறார்கள்.
அது சும்மணாங்காட்டி காகிதக் கழி என்று
அரைச்சிரிப்போடு சொல்லும் அந்தத்
தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளுக்கு
பார்க்கும் பிள்ளைகளுக்கெல்லாம்
அது தெரியாதே என்ற உண்மை
ஒரு பொருட்டேயில்லை என்றும்.
’துல்லியமான புகைப்படம்
நல்ல கவிதைகள் நாற்பதுக்கு சமம்’
என்று சொன்னால்
’அது சரி அல்லது தவறு’ என்று
அடுத்த பட்டிமன்றம்
அல்லது மக்கள் மன்றம்
நடத்த
அலைவரிசைகளுக்கா பஞ்சம்?

கைவசமாகும் கருவிகளும் கூராயுதங்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கைவசமாகும் கருவிகளும் கூராயுதங்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’அகிம்சை என்பதும் வன்முறையின் வடிவமே
என்று
வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் விமர்சித்தவர்கள் _
டாட்டா பிர்லாவின் கைக்கூலி
என்று
அடிக்கொருதரம் வசைபாடியவர்கள் _
பெண்களை மதிக்கத்தெரியாத அயோக்கியன்
என்று
மிதிமிதித்துக் கசையடி தந்தவர்கள்_
மக்கள் போராட்டங்கள் முழுவெற்றியடைய வொட்டாமல்
உண்ணாவிரதமிருந்து குட்டிச்சுவராக்கியவர்
என்று குற்றஞ்சாட்டியவர்கள் _
ராமராஜ்யத்தைப் பேசி சனாதன தர்மத்தைப்
பரிந்துரைத்தவர்
என்று
சகட்டுமேனிக்குப் பழித்தவர்கள்_
பெற்றபிள்ளையைப் பேணாதவர் மகாத்மாவா
என்று
மட்டந்தட்டியவர்கள்_
எல்லோருமே இன்று கொண்டாடுகிறார்கள்
காந்தியை.
அவர்கள் எல்லோருக்கும் காந்தி தேவைப்படுகிறார்_
அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காயாய்......
அடுத்தவரை வெட்டிச்சாய்க்கக் கூர்தீட்டும்
அருங் கருவியாய்.

மனித நாகரீகமும் மூன்றாம் உலகப்போரும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மனித நாகரீகமும் மூன்றாம் உலகப்போரும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு
மோதலின்
துவக்கப்புள்ளி
மூன்றுபுள்ளிகள்
முற்றுப்புள்ளிக்கிடையே
மடிந்துவிடுபவர்கள்
பின்னெப்போதும் எழுந்துவருவதில்லை.
அறிந்தும்_
மரணப்படுக்கையில்
மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும்
மனிதம்
வெறுப்பும் வன்மமும் தோய்ந்த
வாசகங்களால் மட்டுமே
மீட்டுயிர்ப்பிக்கப்படும்
என்று
மறுபடியும் மறுபடியும்
மூளைச்சலவை செய்வோர்,
செய்யப்படுவோர்
மூன்றாம் உலகப்போரின்
கட்டியக்காரர்களாக…..

Thursday, February 27, 2025

மலைக்கவிதையும், மலைக்கவைக்கும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மலைக்கவிதையும், மலைக்கவைக்கும் கவிதையும்

- ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மலைக்கச் செய்வது மலை
மெய்யோ மெய்.
அதற்காய்
மலை மலை மலை மலை
யென்று அடுக்கிக்கொண்டேபோனால்
அது கலையாகிவிடுமா?
கவிதையாகிவிடுமா?
இல்லை
மலை கலை வலை தலை
என்று அடுக்கினால் மட்டும்?
(விலை உலையை விட்டுவிட்டீர்களே யென்று
எடுத்துக்கொடுப்பவரை என்ன செய்ய?)
மலை உயரமானது
மலையுச்சி மிக மிக உயரமானது
மலையில் கற்களும் பாறைகளும் உண்டு
அலையலையாய் வீசும் காற்றுண்டு
நீரூற்றுண்டு நெடுமரங்கள் உண்டு
என்று சொல்லிக்கொண்டே போனால் மட்டும்
சொக்கத்தங்கக் கவிதையாகிவிடுமா என்ன?
எத்தனை கவிதைகள் மலைகளைப் பற்றி!
இத்தனையும் உண்டு; இன்னமும் உண்டு அவற்றில்!
மிகு அன்பில் மலையை மன இடுப்பில் சுமந்தேன்
சிறுகுழந்தையாய் என்றுகூட எழுதப்பட்டுவிட்டது.
படிக்கத்தெரிந்தால் மலையுருகிப்போயிருக்கும்
பரவசத்தில்.
மலைமேல் வெய்யிலடிக்கும், மழைபொழியும்
மாடு ஆடுகள் மேயும் என்று
அரைத்த மாவையே அரைப்பதல்ல கவிதை!
ஒரே நேரத்தில் மலையின் குழந்தைமையையும்
விசுவரூப தரிசனத்தையும்
எனக்குணர்த்துவதாய்
அதன் ஒரு நுண் துகளின் மகத்துவத்தை எனக்கு
கட்டுரையாகாக் கவித்துவத்தோடு எடுத்துச்சொல்லி
நீயே அந்தத் துகளாய் மாறி
என்னையும் அந்தக் துகளுக்குள் அழைத்துச்சென்று
கணநேரமேனும் அங்கே உயிர்த்திருக்கச் செய்வதே
கவிதையென்றறிவாய்.
உன் கவிதையே அவ்வாறில்லையே என்கிறாய்.
உண்மை.
எனில், இல்லையென்பதை நான் அறிவேன்.
நீ அறியாய்.
இருப்பதாகப் பிரகடனம் செய்யமாட்டேன்.
நீ செய்கிறாய்.

மந்திரமாவது சொல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மந்திரமாவது சொல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

’மந்திரமாவது சொல்’ என்று சொல்லிச் சென்றார்கள் நம் முன்னோர்கள்.
இங்கே சொல்லை வைத்து ஏவல் பில்லி சூனியம் செய்துகொண்டிருக்கிறார்கள் நிறைய பேர்.
[மந்திரத்தைப் பெரிதென்று முன்வைத்து பில்லி சூனியத்தை மதிப்பழிக்கும் மேட்டிமைத்தனம் உங்களுடையது என்று யாரேனும் மேற்படி வரிகளைப் பொருள்திரிக்கலாம். வெறுப்பு மண்டிய அவர்களிடம் உரையாடல் சாத்தியமில்லை என்ற உண்மையின் விபரீதம் அச்சுறுத்துகிறது]
சில வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்லி கேட்பவர்கள் மனங்களில் அவற்றை இரண்டறக் கலக்கச்செய்த பின் _
(குழந்தைகள் வளரிளம்பருவத்தினரெனில் இந்த வேலை வெகு சுலபமாகிவிடும்)
அன்போடு அருந்தச்சொல்வதாய் வெறுப்பையும் வன்மத்தையும் அவர்களுடைய குரல்வளைகளுக்குள் திணித்துவிட _
அட, நம்மைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்களே என்ற நெகிழ்ச்சியோடு சிலரும்
அதன் மூலம் தனக்கொரு ஒளிவட்டம் கிடைத்த மிதப்பில் சிலரும்
அப்படி என்னதான் தனி ருசி யிதில் என்ற ஆர்வக்குறுகுறுப்போடு சிலரும்
அதை ஆற அமர மென்று தின்று அடுத்தவேளைக்கும் அது கிடைக்குமா என்று அலைபாய்கிறார்கள்;
அதற்காக தங்கள் அடிப்படை அன்பை தடியெடுத்து அடித்துத்துவைக்கவும் தயாராகிறார்கள்.
மற்றும் சிலர்
மூச்சுத்திணறலிலிருந்து தப்பிக்கவேண்டி வேகவேகமாக அவற்றை விழுங்கியும்
அவசரமாய் அருகிலிருக்கும் குடுவையிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகி உள்ளிறக்கியும்
வாகாய் அவற்றால் நிரம்பிவிடுகிறார்கள்.
வன்மமும் வெறுப்பும் அவர்கள் அடியாழ மனங்களை இறுகப் பற்றிக்கொள்ள _
பின், அவர்களும் விரைவிலேயே சொற்களைக்கொண்டு செய்வினை செய்யும் பில்லிசூனியக்காரர்களாகிவிடுகிறார்கள்.
’இந்தப் பொதுவிதிக்கு படைப்பாளிகள் மட்டும் விதிவிலக்கா என்ன’ என்று அழுதுகொண்டே கேட்கும் அசரீரியின் குரலை என்ன செய்ய.....

இவர்கள் இப்படித்தான் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இவர்கள் இப்படித்தான்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு கலவரத்திற்காகக் காத்திருக்கிறார்கள்
தங்கள் இரும்புக் கதவங்களுக்கு அப்பால் இவர்கள்.
கன்னுக்குட்டியளவு நாய் வைத்திருக்கக்கூடும்.
பெரும்பாலும் அது சிறுநீர் கழிக்க
அவர்கள் வீட்டுக்காவலாளிதான்
தன்னைத்தான் சபித்துக்கொண்டே
தெருவோர வீட்டுக் ’காம்பவுண்ட்’ சுவர்வரை
அழைத்துச்செல்வது வழக்கம் என்றாலும்
ஒரு கலவரநாளில் நாயின் விசுவாசம்
எஜமானருக்காக மட்டுமேயாகும்படியாக
‘ப்ரொக்ராம்’ செய்தாயிற்று.
கையில் காபி அல்லது வேறு பானக்
கோப்பையோடு
வசதியாக இருக்கையில் சாய்ந்தவண்ணம்
அவர்கள் சில அபாயகரமான சிந்தனைகளைப் பதிவேற்றிய பின்
அருகிலேயே அழைப்புவிடுத்துக்கொண்டிருக்கும்
படுக்கையில் சாய்ந்து
இரண்டு மணிநேரம் உறங்கிவிடலாம்.
‘வைரலாகிவிட்ட’ தங்கள் நெருப்புச் சிந்தனைகளால்
எங்கேனும் நிஜ நெருப்பு மூட்டப்பட்டிருக்குமானால்
பின், எழுந்ததுமே நெஞ்சு நிமிர்த்தி
வீட்டு வெளிவாயிலுக்குள்ளாகவே
வீர நடை பழகி
அதை ஒரு ஸெல்ஃபி எடுத்துப் போட்டுவிட்டால்
அப்பாடா! அதில் கிடைக்கும் நிம்மதியும் பெருமிதமும்
அருமையோ அருமை!
அரசியல்வாதிகளாவது ஐந்துவருடங்களுக் கொருமுறை accountable.
அறிவுசாலிகளுக்கோ அவர்கள் வாழும் நாளெல்லாம்
FREEDOM OF EXPRESSION available.
அப்படித்தான் இன்றிங்கே யொரு கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களில்
ஒருவர் சொன்ன காரணம்
கொஞ்சம் நியாயமானதாகவே இருந்தது:
”கலவரம் ஏற்பட்டால் ஒருவேளை நான்
காத்திரமான கவிதை யெழுதக்கூடும்”

பழுதடையும் எழுதுகோல்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பழுதடையும் எழுதுகோல்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
[ “படித்தவன் சூதும் வாதும் செய்தால்... போவான் போவான் அய்யோன்னு போவான்”
-பாரதியார்]

மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……
அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.
‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி புர்கா’ என்று
தர்க்கரீதியாய் (பேசுவதான நினைப்பில்)
பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’
என்று
நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
மதிப்புரை யெழுதியும்
எழுத்தில் மனிதநேயத்தை முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்
பெண்ணியவாதப் படைப்பாளிகள் சிலர்……
அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்?
மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?