LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 14, 2026

உண்மை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உண்மை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
உண்மையெனும் ரோஜாவின் மணம்
ஊர்முழுக்கப் பரவும் என்றபடியே
இதழிதழாய்ப் பிய்த்துக்கொண்டார்கள்.
ஆளுக்கொரு பிடி யள்ளிக்கொண்டார்கள்.
சிலர் வாயில் போட்டு மென்றார்கள்
சிலர் மூடிய உள்ளங்கையில் முனைப்பாகக் கசக்கியெறிந்தார்கள்.
சுருங்கிக்கிடந்த இதழொன்றை யெடுத்து
இதுதான் முழு ரோஜா என்றார் ஒருவர்.
பின்னோடு வந்தவர்கள் ’அதேதான், அதேதான்’
என்றார்கள்.
வழியெங்கும் காலையில் இறைந்துகிடந்த
இதழ்களின் வண்ணம்
அந்தியில் வெளிறிப்போயிருந்தது.
இதுதான் அசல் ரோஜா நிறம் என்றார் ஒருவர்.
‘அதேதான் அதேதான்’ என்றார்கள்
அருகே நின்றிருந்தவர்கள்.
நூற்றுக்கு நூறு உண்மை
சில பத்திருபதுகள் குறைந்து திரிந்து
அரைகுறை உண்மையாகி
கரைகடந்து நகர்வலம் போய்க்கொண்டிருப்பதைக்
கண்ணால் பார்த்ததாய் யாரோ சொல்ல
யாரோ கேட்க..........

நீள அகல வரையறைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீள அகல வரையறைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பந்திப்பாயை விரித்துப்போட்டால்
நான் முந்தி நீ முந்தி என்று
பெரியவர் சின்னவர் பக்கத்துவீட்டுக்காரர்
உற்றமித்ர பந்துக்கள் ஊர்ப்பெருந்தனக்காரர்கள்
படித்தவர் படிக்காதவர்
பிடித்தவர் பிடிக்காதவரெல்லாம்
பாயாசம் சாப்பிட,
பப்படம் சாப்பிட
பிரியாணி லட்டு பாசந்தி பிஸிபேளாபாத்
வறுவல் பொரியல் வச்சதெல்லாமே
பிரமாதம் பிரமாதம் அருமையோ அருமையென
உருகிக்கிறங்கி
திரும்பத்திரும்ப கடைவாயில் எச்சிலொழுகியவாறு
உறங்கும்போதும் உச்சாடனம் செய்ய
விழுந்தடித்துக்கொண்டு வருவார்களெனக்
கச்சிதமாய்ப் போட்ட கணக்கெல்லாம்
பொய்யாக_
வந்தவர்கள் அன்போடு மாப்பிள்ளை – பெண்ணை
வாழ்த்திவிட்டு
வழக்கம்போல் சுந்தரத் தமிழினில் உரையாடியவாறே
சமோஸாவையும் சிங்கிள்-டீயையும் ருசிக்க
தெருவோர தேனீர்க்கடைக்காய் காலெட்டிப்
போடக்கண்டு
பட்டுவேட்டி ஜரிகை அங்கவஸ்திரக்காரர்
பத்துநூறு பவுன் தங்கச்சங்கிலிக்காரர்
காலிக் கூடத்தில்
ஓலமிட்டபடியே…….

மெய்த்தோற்றங்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்த்தோற்றங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
பிறவி நடிகர் திலகங்களும்
நடிகையர் திலகங்களும்
தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள்
புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக நம் முன் வைத்தவாறே.
அழும்போதும் ஆத்திரப்படும்போதும்
அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே யிருக்கும் நடிகையர் திலகங்கள்
இயல்பாக நடப்பதாய்
இடுப்புவளைவை எடுப்பாக்கிக் காட்டியவாறே
ஒயிலாக நடந்துகொண்டிருக்கிறார்கள்
இணையப்பக்கங்களில்.
அவர்கள் வெட்டியொட்டும் வாசகங்களை
யெல்லாம்
அவர்களுடையதாக மாற்றிவிடும் வித்தையை
வெகு இயல்பாகக் கைக்கொண்டவர்கள்
இருகைகளிலுமான இருபதுவிரல்களால் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இருக்கையை விட்டு இம்மியும் நகராமல்
வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்
இந்தத் திரைப்படம் ‘ஆர்ட்’ படமா ‘மசாலா’ப் படமா
என்று தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளும் நாள்
தொலைவிலோ அருகிலோ
இருக்கிறதோ இல்லையோ….

மாஜிக்கல் ரியலிஸமும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மதிப்புரைகளும்

மாஜிக்கல் ரியலிஸமும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


‘மிகவும் அருமையான கதை யிது
இருக்கும் எட்டு பக்கங்களில் ஏழிலுள்ளவை
ஏற்கெனவே எழுதப்பட்டிருப்பதே யென்றாலும்’
என்கிறார் ஒரு விமர்சகர் _
‘ரேட்டிங்’குக்கான ஐந்து வட்டங்களை யடுத்து
இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டு
பத்தாவதில் ’டிக்’ கொடுத்து.
’பார்த்துக்கொண்டிருக்கும்போதே முளைத்த பரு
புதுமையான கதைக்கரு’
’முளைத்த’ என்பதற்கு பதில்
’இளைத்த’ என்று எழுதியிருக்கலாம்.
மற்றபடியெந்தக் குறையுமில்லை’
என்று இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டபடியே
வலிக்காமல் குட்டுகிறார் ஒரு திறனாய்வாளர்.
வலித்தாலும் பரவாயில்லை யென்று
எல்லா விரல்களிலும் வகைவகையாய்
மோதிரங்களை அணிந்தபடி.
ஒரு கதையை யொருவர் எழுதினால்
அது அருமையாவதும் புதுமையாவதும்
அதை யின்னொருவர் எழுதினால்
கழுதையின் பின்னங்காலால்
உதைக்கப்படவேண்டியதாவதும்
மதிப்புரைகளின் மாஜிக்கல் ரியலிஸமாக…..

அறிவாளி – அறிவீலி - அரசியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அறிவாளி – அறிவீலி - அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




தன்னை யறிவாளி யென்று சொல்கிறவரின் சொல்கேட்டு
சொல்லமுடியாத ஆனந்தத்தில் சொக்கிநிற்கிறார்கள்;
சுற்றிச் சுழல்கிறார்கள்; சுடரொளி வீசுகிறார்கள்;
சுநாதமிசைக்கிறார்கள்….
சொல்பவர் அந்தச் சொல்லைச்
சொல்லத் தகுதியானவராவென்றெண்ணத்
தலைப்படாமல்
சொல்பவரின் சொல்படி தானே அறிவாளி யென்று சுற்றுமுற்றுமுள்ளவர்க்கெலாம் தன்னைச்
சுட்டிக்காட்டும் முனைப்பில்
காரணகாரியங்களோடு மறுத்துப்பேசுவோரை
கோமாளிகளாகச் சித்தரித்து
சொந்த சகோதரர்களுக்கு முட்டாள் பட்டம்
கட்டப்படுவதை கைதட்டி ரசித்து _
சிறகசைத்துப் பறக்காத குறையாய்
சீக்கிரசீக்கிரமாய் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து
வரிசையில் நின்று
வாழ்நிலத்தைத் தன் வம்சாவளிச் சொத்தாக பாவிக்கும்
வெள்ளி ஸ்பூனோடு பிறந்தவர்க்கே
வாக்களித்துவிட்டு வந்தார்கள்
வெற்றிப்புன்னகையோடு.
அந்த வாக்காளர்களேே அறிவாளிகள் என்று அறைகூவலிட்டவாறே
அறிவாளிக்கெல்லாம் அறிவாளி
அரியணையில் அமர்ந்துகொள்ளுமோர் நாளில்
அவருடைய தன்னலத்தால் அறிவாளிகளாக
போற்றிப் பாடப்பட்டு
அடுத்தவர்களை முட்டாள்களாய் மட்டுமே
அடையாளங்காணப் பயிற்றுவிக்கப்பட்ட
பரிதாபத்துக்குரிய உண்மையான அறிவீலிகள்
அடிமையாய் அந்த வேலியிட்ட திறந்தவெளியில்
அம்மணமாய்
ஒருவர் பின் ஒருவராய் அனுப்பிவைக்கப்பட
காட்டெருமை சிங்க வகையறாக்கள் எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து
அவர்களைக் குதறத் தொடங்கும்.
சக்கரவர்த்திகளின் அட்டகாசச் சிரிப்பைக் கேட்டவாறே விழுந்துகிடக்கும் குற்றுயிர்கள்.

[காலநிலை என்ற தலைப்பிட்ட எனது ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து (2010ஆம் ஆண்டு வெளியானது) சில கவிதைகள்

...................................................................................................................................
[காலநிலை என்ற தலைப்பிட்ட எனது ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து (2010ஆம் ஆண்டு வெளியானது) சில கவிதைகள்
...............................................................................................................

1. அரைக்கண காலவெளிகளும்

உனது அறைகூவல்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



கொஞ்சம் பொறு
தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறேன்.
இன்னமும் நிலா வரவில்லை.
அழைத்தபடியிருக்கிறேன்.
விண்மீனின் கண்சிமிட்டலைக் கண்டு ரசித்தபடி
அண்ணாந்திருக்கிறேன்…..
கண்ணீர் பாதையை மறைக்கிறது.
தத்தளித்துக்கொண்டிருக்கிறேன்.
கடும்புயல் – வெள்ளத்தில்
கலகலத்துச் சரிந்தவண்ணமிருக்கிறேன்.
காலன் எதிரில் கையறுநிலையில்
மண்டியிட்டவாறு….
‘கிட்டாதாயின் வெட்டென மற’வின் உட்பொருளைத்
துருவிக்கொண்டிருக்கிறேன்.
எட்டாக்கனி எதற்கெல்லாம் குறியீடாகும் என்பதையும்.
உடனடியாக எதிர்வினையாற்றவில்லையென்பதால்
உன் அறைகூவலைக் கேட்டு பயந்துவிட்டதாக அர்த்தமல்ல.

2.முதிர்வயதின் மகத்துவம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

யாராலும் பார்க்கப்படாமல்,
பார்க்கப்படுகிறோமோ என்ற தர்மசங்கடவுணர்வோ
பார்க்கப்படவில்லையே என்ற பரிதவிப்போ
இல்லாமல்
ஒரு சிற்றுண்டிவிடுதியில் வெகு இயல்பாய் நுழைந்து
சீராகச் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் கீழ்
எனக்கான இடத்தைத் தேடிக்கொண்டபோது
முதிர்வயதின் மகத்துவம் புரிந்தது.

Monday, February 9, 2026

அவரவர் – அடுத்தவர் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் – அடுத்தவர்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

* சமர்ப்பணம்:
கவிதைப் பிதாமகர்களுக்கும்
‘க்ரிட்டிஸிஸ’ப் பீடாதிபதிகளுக்கும்
....................................


‘ஆவி பறக்கக் காப்பியருந்தினேன்’ என்று
அதிநவீனமா யொரு வரி எழுதியவர்
‘அருமையின் அரிச்சுவடியும் அகராதியும் இஃதே’ என்று
ஆட்டோகிராஃப் இட்டு முடித்தபின்
'தன் வலியை உலகக்கண்ணீராகப் புலம்பினால்
கவிதையாகிடுமா'வென
அடுத்த கவியை இடித்துக்காட்டி
‘நிலம் விட்டு நிலம் சென்றாலும்
நகம்வெட்டித்தானேயாகவேண்டும்’ என்று
தன் கவிதையின் இன்னுமொரு வரியை எழுதிவிட்டு.
பின்குறிப்பாய்,
‘கவிதைவரலாற்றில் க்வாண்ட்டம் பாய்ச்சல் இதுவென்றால்
ஆய்வுக்கப்பாலான சரியோ சரியது கண்டிப்பாய்’
எனச் சிரித்தவாறு முன்மொழிந்து வழிமொழிந்து
"வந்துபோன என் வசந்தம் தந்ததொரு தனி சுகந்தம் என்று
சொத்தை ‘க்ளீஷே’க்களைக் கவிதையாக்கி
தத்துப்பித்தென்று உளறி வதைக்கிறாரெ"ன
சக கவியைக் கிழிகிழித்து
சத்தான திறனாய்வைப் பகிர்ந்த கையோடு
"முத்தான முத்தல்லவோ, என் முதுகுவலி
உலகின் குத்தமல்லவோ" என
கத்துங்கடலாய்க் கண்கலங்கிப்
பித்தாய் பிறைசூடிப் பிரபஞ்சக் கவிதையாக்கி
மொத்தமாய் மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்
வெத்துக்காகிதத்தை!
(*தனிமொழியின் உரையாடல் – கவிதைத் தொகுப்பிலிருந்து)

அடியாழம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடியாழம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உண்மை சுடும் என்றார்கள்
உண்மை மட்டுமா என்று உள் கேட்டது
உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்
எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.
ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்
யாரோடுமா – அது எப்படி என்று உள் கேட்டது.
காரும் தேரும் வேறு வேறு என்றார்கள்
நான் சொன்னேனா ஒன்றேயென்று
என்று உள் கேட்டது.
மௌனம் சம்மதம் என்றார்கள்
உனக்கா எனக்கா என்று உள் கேட்டது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார்கள்.
முற்பகல் செய்தா பிற்பகல் விளைகிறது என்று உள் கேட்டது.
தர்க்கம் குதர்க்கம் என சொற்கள் சரமாரியாக சீறிப்பாய
அர்த்தம் அனர்த்தத்தை அசைபோட்டபடி
உறக்கத்தில் ஆழத் தொடங்கியது உள்.
All reactions:
2