LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label நேர்காணல் ............................................... ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label நேர்காணல் ............................................... ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Thursday, June 20, 2024

நேர்காணல் ...........’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நேர்காணல்
............................................................
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில்
மகா திறமைசாலி அந்தப் பெண் என்று
பார்த்தாலே தெரிந்தது.
மேலும்,
அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி
அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை
எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.
அழகாகவே இருந்தாள்.
அவளுடைய அடுத்த இலக்கு
வெள்ளித்திரையாக இருக்கலாம்.
அதில் எனக்கென்ன வந்தது?
கேட்ட கேள்விகளுக்கான பதில்களை
அவள் பொருட்படுத்தவேயில்லை.
அப்படி எதிர்பார்ப்பது நியாயம்தானா என்று தெரியவில்லை.
அந்தப் பெண்ணின் முகம் எதற்குப் புன்னகைக்கவேண்டும்
எதற்கு ஆர்வமாகத் தலையசைக்கவேண்டும், எதற்கு ‘அடடா ‘பாவ’த்தைத் தாங்கவேண்டும், எதற்கு உச்சுக்கொட்டி கன்னத்தைக் கையிலேந்த வேண்டும் என்று எல்லாமே ‘ப்ரோகிராம்’ செய்யப்பட்டிருந்தன.
அவள் பணி கேள்விகள் கேட்பது.
அறுபதாயிரத்திற்கு கூடக்குறைய இருக்கும்
மாதவருமானம்.
”எப்போது கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?”
”கி.மு. 300”
”நல்லது. உங்களுடைய அடுத்த கவிதை?”
”பி.கி 32”
”நீங்கள் இதுவரை எவ்வளவு கவிதைகள் எழுதி யிருக்கிறீர்கள்?”
ஒரு லட்சம்.
”மிக்க மகிழ்ச்சி. ஒரு கவிதைக்கு உங்களுக்குக் கிடைக் கும் அதிகபட்ச சன்மானம்?”
”ஆறு கோடி”.
”அவ்வளவா? வாழ்த்துகள்.” ”உங்களுக்குப்
பிடித்த கவிஞர் யார்?”
”நான் தான்”.
”அந்தப் புனைப்பெயரில் எழுதும் கவிஞரை நான் இதுவரை படித்ததில்லை” என்று அழகாகப் புருவத்தைச் சுளுக்கிய பேட்டியாளரிடம்
'உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?' என்றேன்.
'நிச்சயமாக நீங்களில்லை' என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.
'நிலாமுகக்கதிர்ச்சக்ரவர்த்தி நீலாம்பரன்' என்று
ஒரு நாலாந்தரக் கவிப்பெயரைச் சொன்னபோது
அந்த முகத்தில் தெரிந்த விகசிப்பைக்
காண சகியாமல்
அரங்கிலிருந்து எழுந்தோடிய என்னை _
அன்போடு துரத்திவந்து
என் கையில் நீலாம்பரனின் (அ)கவிதைத் தொகுப்பொன்றை
அன்பளிப்பாகத் திணித்துவிட்டுத்
நன்றி நவின்று திரும்பிச் சென்றாள்
நேர்காணல் நடத்திய அந்தப் பெண்.