LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, July 17, 2023

குழந்தைகளும் கவிஞர்களும் - லதா ராமகிருஷ்ணன்

 குழந்தைகளும் கவிஞர்களும்

லதா ராமகிருஷ்ணன்


*கலீல் கிப்ரானின் மிகச் சிறந்த கவிதைகளில் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

குழந்தைகள்
கலீல் கிப்ரான்
(*தமிழ் மொழிபெயர்ப்பு : லதா ராமகிருஷ்ணன்)

உங்களுடைய குழந்தைகள் உங்களுடைய பிள்ளைகளல்ல
அவர்கள் வாழ்வின் தனக்கான தாகத்தின் மகன்களும் மகள்களுமாவர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள் ஆனால் உங்களிடமிருந்து அல்ல.
அவர்கள் உங்களோடு இருப்பினும் உங்கள் உடைமைகள் அல்ல.
நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்,
ஆனால் சிந்தனைகளைத் தர இயலாது.
ஏனெனில் அவர்களுக்கென்று சுயமான எண்ணங்கள் இருக்கின்றன.
அவர்களுடைய உடல்களுக்கு நீங்கள் உறைவிடமாகலாம்
அவர்களுடைய ஆன்மாக்களுக்கு இயலாது.
காரணம், அவர்களுடைய ஆன்மாக்கள்
உங்களால், கனவிலும், செல்லவியலாத
நாளையெனும் இல்லத்தில் வசிக்கின்றன,
நீங்கள் அவர்களைப்போலாக முயலலாம்
ஆனால் அவர்களை உம்மைப்போலாக்க எண்ணவேண்டாம்.
ஏனெனில் வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதில்லை;
நேற்றிலேயே தயங்கிநிற்பதில்லை
நீங்கள் விற்களைப்போல
உங்கள் குழந்தைகள் உயிருள்ள அம்புகளாய் அவற்றிலிருந்து
விசையுடன் அனுப்பப்படுகிறார்கள்
வில்லாளி எல்லையின்மையின் பாதைமீதான
குறியிலக்கைக் காண்கிறார்
அவர் உங்களைத் தன் முழுவலிமையோடு வளைக்கிறார்
தன் அம்பு வேகமாய் வெகுதூரமாய்ச் செல்ல.
வில்லாளியின் கையில் வளைவது
மகிழ்வானதாகவே அமையட்டும் உமக்கு
ஏனெனில் பறந்துசெல்லும் அம்பை அவர்
பெரிதும் விரும்புவது போலவே
நிலைகொண்டிருக்கும் வில்லையும் நேசிக்கிறார்.
_______________________________________________

கலீல் கிப்ரானின் ’குழந்தை’ ஒரு குறியீடு
லதா ராமகிருஷ்ணன்
கலீல் கிப்ரான் 1883 ஜனவரி 6இல் லெபனான் நாட்டில். பிறப்பு. 1931 ஏப்ரல் 10இல் 48ஆவது வயதில் அமெரிக்காவில் இறப்பு. ஓவியர் கவிஞர் சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், தத்துவ, இறையியல் சிந்தனையாளர்.
1923இல் வெளியான இவருடைய படைப்பு The Prophet, கவித்துவமான ஆங்கில உரைநடையில் எழுதப்பட்ட தத்துவார்த்த கட்டுரைகளின் தொகுப்பு.
இளமைப்பருவத்திலேயே அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து விட்ட கலீல் அராபிய மொழியிலும் ஆங்கிலத்திலும் படைப்புகளைத் தந்தார். அராபிய உலகில் கலீல் இலக்கிய, அரசியல் புரட்சியாளராக பார்க்கப்படுகிறார்.
Shakespeare and Laozi(சீன தத்துவஞானி)க்குப் பின் இவருடைய கவிதைத்தொகுப்பே எல்லாக் காலத்திலும் அதிகம் விற்பனையாகிறது. The Prophet 110 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இங்கே தந்துள்ள அவருடைய கவிதையின் பிற்பகுதி இறையியல் சார்ந்த தாக இருக்கிறதென்றாலும் இதன் முதல் பகுதி மிகச் சிறந்த வாழ்க்கைத் தத்துவமாக விரிகிறது.
ஒருவரின் குழந்தை என்பது அவருடைய உடமையல்ல என்று அத்தனை கவிநயத்தோடு எடுத்துரைக்கிறது.
இந்த வரிகளிலுள்ள குழந்தை என்ற வார்த் தைக்கு பதில் எழுத்தாளர் அல்லது படைப்பாளி அல்லது கவிஞர் என்று போட்டுக்கொண்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும், அப்பட்ட உண்மையாக இருக்கும் என்று அடிக்கடி தோன்று வதுண்டு.
ஒரு குடும்பத்தில் பிறந்தவரென்றாலும் எந்த வொரு எழுத்தாளரும் அந்தக் குடும்பத்தின் உடைமையல்ல. அவர் உலகம் முழுமைக்கு மானவர். அவரை, அவர் படைப்புகளை உள்ளன்போடு கொண்டாட உண்மையான வாசகர்கள் எல்லோருக்கும் உரிமையிருக்கிறது.
















No comments:

Post a Comment