LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, September 5, 2014

மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு

மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில்
ஜூன் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு

-லதா ராமகிருஷ்ணன்

 [*28 ஜூலை, 2014 திண்ணை இணைய இதழில் வெளியானது]





சொல்லவேண்டிய சில.....

வாழ்க்கைக்குக் கவிதை தேவையா? வாழ்க்கைக்குக் கவிதையால் என்ன பயன்? வாழ்க்கைக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு? கவிதையைப் படிப்ப தால் என்ன கிடைக்கிறது? கவிதை எழுதுவதால் என்ன கிடைக்கிறது _ இவற்றிற்கும்  இவையொத்த பிறவேறு கேள்விகளுக்கும் நம்மிடம் உள்ள ஒரே பதில்  “காற்றைப் போன்றது கவிதை   

மனதுக்கும் அறிவுக்கும் இடையே பாலம் அமைப்பது கவிதை. மனதின் காயங் களுக்கு மருந்தாவது கவிதை. கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வண்ணமும் வடிவமும் தருவது கவிதை. நேற்று இன்று நாளையைக் கூட நொடியில் இரண்டறக் கலந்துவிடுவது, இடம் பெயர்த்துவிடுவது கவிதை. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தொலைக்க வழியமைத்துக்கொடுப்பது கவிதை. அன்பின் மொழியாவது கவிதை. திரவத்தை திடமாக்கி, திடத்தை திரவமாக்கி _ ஐயோ, இந்தக் கவிதை என்னவெல்லாம் மாயம்   செய்கிறது! ஒரு நல்ல கவிதை எனக்கு மொழியைப் பிழையறப் பழக்குகிறது, மொழியின் அளப்பரிய சாத்தி யக்கூறுகளை அறிமுகப்படுத்துகிறது, வாழ்க்கை பயண மாகும் பல்வேறு வழிகளைப் பரிச்சியமாக்குகிறது, வாழ்வின் மகத்துவத்தை எனக்கு உணர்த்துகிறது, தன்னுள் ததும்பும் பரிவதிர்வின் காரணமாக என்னுள் இரண்டறக் கலந்துவிடுகிறது.....

அதென்னவோ தெரியவில்லை, கவிதையென்றாலே மனம் உருகத் தொடங்கி விடுகிறது. அதனால்தான் கலைஞன் பதிப்பகம் தமிழ்-மலாய் கவிஞர்கள் சந்திப்புக் கருத்தரங்கை நடத்த உள்ளதாகவும், அதை ஒருங்கிணைத்துத் தரும்படியும், கருத்தரங்கில் இடம்பெறும் கவிஞர் களின் கவிதைகள் மூலத்திலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இடம் பெறும் தொகுப்பு ஒன்றை உருவாக்க தமிழ்க் கவிஞர்கள் ஏறத்தாழ 25 பேரிடம் கவிதைகளைக் கோரிப் பெறும்படியும் என்னிடம் கேட்டுக்கொண்டபோது மிகுந்த மகிழ்ச்சியோடு ஆர்வமாக ஒப்புக் கொண்டேன். இன்னொரு காரணம், தமிழில் தரமான கவிஞர் கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தபோதும் ஒரு சிலரைத் தவிர மிகப் பலர் தமிழ் மண்ணைத் தாண்டி [தமிழ் மண்ணிலேயே கூட] அறியப்படாத வர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்க்கவிஞர்கள் போதுமான அளவு அயல் மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத நிலையே இதற்குக் காரணம். இந்த நிலையை மாற்ற என்னால் முடிந்த அளவு முயற்சி செய்யவேண்டும் என்ற எண்ணமும் எனக்குக் கிரியாவூக்கி..

அடர்செறிவான கவிதைகளுக்குத் தமிழில் என்றுமே பஞ்சமிருந்ததில்லை. தொன்று தொட்டு இன்று வரை. எனக்குத் தெரிந்த, என்னிடம் தோழமை கொண்ட தரமான கவிஞர்களே குறைந்தபட்சம் 100 பேர் உண்டு! இதில் 25 பேரைத் தெரிவு செய்து கொள்வது என்பது உண்மையாகவே கடினமான காரியமக இருந்தது. ஒரு வசதிக்கு சில அடிப்படைகளை மனதில் கொண்டு கவிஞர்களைத் தேர்ந்தெடுத்த பின் அவர்களிடம் தொலைபேசியிலும், மின்னஞ் சல் மூலமாகவும் கவிதைகள் அனுப்பித்தரும்படியும், கருத்தரங்கில் பங்கேற் றுச் சிறப்பிக்கும்படியும் கேட்டுக்கொண்ட போது அத்தனை ஆர்வத்தோடு சம்மதம் தெரிவித்து கவிதைகளை அனுப்பித்தந்த அவர்களுடைய அன்பும், தோழமையும், கவிதையின்பால் அவர்கள் கொண்டிருக்கும் அளவிலா பற்றும் ஈடுபாடும் என்னை உண்மையிலேயே நெகிழ்ந்துபோக வைத்தது!

கலைடாஸ்கோப் கோலங்களாய் அவர்களுடைய கவிதைகளிலும், [அவ்வாறே மலாய் கவிஞர்களின் கவிதைகளிலும்] விரிந்த வாழ்க்கைவெளியில் அலைந்து திரியும் பெரும் பேறு பெற்றவளானேன்!

TRANSLATION CAN BE AT BEST APPROXIMATION   என்ற கூற்று முற்றிலும் உண்மை. மூலமொழியின் அழகும் அர்த்தமும் தொன்மமும் உட்குறிப்புகளும் உவமான உவமேயங்களும், பேச்சுவழக்கும் இலக்குமொழியில் பாதி வெளிப் பட்டாலே அதிகம். தமிழில் எழுதும் என் சக-கவிஞர்களையும், மலேய மொழிக் கவிஞர்களையும் [தமிழாக்கத்திலிருந்து] ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது என்னால் இதை அனுபவரிதியாக உணர்ந்துகொள்ள முடிந்தது. முப்பது வருடங்களுக்கும் மேல் சமகாலத் தமிழ்க்கவிதையோடு பரிச்சயங் கொண்டவள் என்ற அளவில் கவிதைகள் எனக்கு அர்த்தமான வகையில், என் ‘வாசகப் பிரதிகளையேஅடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்த்து முடித்தபோது  ஏற்பட்ட மனநிறைவைக் காட்டிலும் இன்னும் நன்றாக மொழிபெயர்த்திருக்கலாமே என்ற எண்ணமே மேலோங்கியது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இந்த மனக்குறை ஏற்படுவது இயல்பு. என்றாலும் முடிந்தவரை மூலக்கவிதைக்கு நியாயம் சேர்க்கும்படியாகவே என் ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கும் என்ற நம்பிகையும் எனக்கு உண்டு.

TRANSLATION IS BI-LINGUAL AS WELL AS BI-CULTURAL என்பார்கள். மலேயக் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்பட்ட பண்படு-கலாச்சாரம், சொல்வழக்கு, உவமான உவமேயங்கள் போன்றவற்றை என்னால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிந்ததாகச் சொல்ல இயலவில்லை. என்றாலும், மானுட ஏக்கங்களும், துயரங்களும், லட்சிய வேட்கைகளும் எங்கும் ஒருபோலத் தானே! அந்த வகையில் மலாய் மொழிக் கவிஞர்களுடைய கவிதைகளுக்குள்ளும் என்னால் ஒரு வாசகராக உள்நுழைய முடிந்தது; பரிவதிர்வை உணர முடிந்தது! அந்த அடிப்படையில் அவர்களுடைய கவிதைகளையும் ஆங்கிலத் தில் என்னால் முடிந்த அளவு நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறேன்

மலாயாக் கவிஞர் முகமது லுட்ஃபி இஷாக் எழுதியுள்ள கவிதை போருக்குப் பின்னான நகரையும், மனித மனநிலையையும் கவிநயத்தோடு படம்பிடித்துக் காட்டுகிறது. துவா சுஜானா எழுதிய கவிதை உலகம் ஒரு கோலி உருண்டை தான் அதற்குமேல் ஒன்றும் இல்லை. வெறும் ஒரு விளையாட்டு. அவ்வளவேஎன்று கச்சிதமாய் வாழ்க்கையை அர்த்தப்படுத்திவிடுகிறது! நிம் யோர்ஸாவின் கவிதை இன்றைய பாசாங்குத்தனமான வாழ்க்கையை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறது. ஸை ஃபுலிழான் யோர்ஸாவின் கவிதை உருவிலும் உள்ளடக்கத்திலும் மிக நுட்பமான நவீன கவிதையாய் மிளிர்கிறது. இப்படி மலாய்க் கவிஞர்கள் ஒவ்வொருவருடைய கவிதை குறித்தும் நிறையவே அடிகோடிட்டுக் காட்ட முடியும். மலாய் கவிஞர்களின் கவிதைகளை வாசிப் பதும், மொழிபெயர்ப்பதும் எனக்கு அர்த்தமுள்ள அனுபவமாயிற்று.

இது கலைஞன் பதிப்பகத்தின் 60வது ஆண்டுநிறைவு. கலைஞன் பதிப்பகத்திற்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கருத்தரங்கு – மொழி பெயர்ப்புப்ப் பணியை நம்பிக்கையோடு என் கையில் ஒப்படைத்தமைக்காக கலைஞன் பதிப்பகத்தாருக்கு,  என் என்றுமான நன்றி உரித்தாகிறது.


இந்த வருடம் ஜூன் மாதம் 10, 11 தேதிகளில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பின் போது வெளியான நூலில் நான் எழுதியுள்ள என்னுரை தான் மேலேயிருப்பது. இந்தக் கருத்தரங்கை ஒருங்கிணைத்துத் தரவேண்டும், 20, 25 தமிழ்க் கவிஞர்களிட மிருந்து கவிதைகள் கேட்டு வாங்கி அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் என்று கலைஞன் பதிப்பக இயக்குநர் திரு.நந்தன் மாசிலாமணி கேட்டுக்கொண்டபோது நான் ஒப்புக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள். முதற்காரணம் மேலே உள்ளது. இரண்டாவது காரணம், கலைஞன் பதிப்பகம் தான் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான அலைமுகம் நூலை வெளியிட்டது .[’என்னைத் தாண்டி என் கவிதைகள் வாழக்கூடாது. அநாதர வாய் அவை அபத்தமான விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடாது என்றெல் லாம் கருத்துரைத்தபடி திரு. கோவை ஞானி போன்றோர் என் கவிதைகளைத் தொகுப்பாக்க முன்வந்த போது மறுத்துக்கொண்டிருந்தேன். “அத்தகைய பயமெல்லாம் உங்களுக்கு வேண்டாம், நீங்கள் உயிர்வாழும் போதும் சரி, போனபின்னாலும் சரி, அப்படியெல்லாம் யாரும் உங்கள் கவிதைகளைப் பொருட்படுத்தப்போவதில்லை!” என்று நண்பரொருவர் அனுபவ பூர்வமாய் தைரியம் சொன்ன பிறகு தான் சரி என்று ஒப்புக்கொண்டேன்! ].

கலைஞன் பதிப்பகத்தின் 60ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் பொருட்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட கலைஞன் பதிப்பக நிர்வாக இயக்குனர் திரு. நந்தன் மாசிலாமணி புத்தக விற்பனை என்பது வெறும் வியாபார மல்ல; அது நல்ல விதைகளை சமுதாயாத்தில் தூவுவதற்கு ஒப்பானது என்று தன் தந்தையும் கலைஞன் பதிப்பக நிறுவருமான திரு.மாசிலாமணி அடிக்கடி கூறுவதை நினைவுகூர்ந்து அந்த நோக்கிலான ஒரு செயல்பாடாகவே இந்த தமிழ்-மலாய் கவிஞர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாய் தெரிவித்தார். மலேஷியத் தமிழ்க்கவிஞர்கள் இந்தியாவுக்கு வந்ததுண்டு என்றாலும் மலேயமொழிக் கவிஞர்கள் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார்.

கவிஞர்கள் தேர்விலும், கவிதைகள் தேர்விலும் எனக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது திரு.நந்தன் உடனடியாக சரி என்று சொன்னார். இறுதி வரை சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்.

மலாய் கவிஞர்களை வழிநடத்திக்கொண்டுவந்தவர்கள் திரு. கிருஷ்ணன் மணியம், மலாய் பல்கலைக்கழக, இந்திய ஆய்வுக்கல்வித் துறைத் தலைவராக இயங்கி வருபவர், முனைவர், மோஹனதாஸ், மற்றும் மலேஷியாவிலுள்ல PENA என்ற அமைப்பைச் சேர்ந்த முனைவர் முகமது சலீஹ் ரஹமத் ஆகியோர். சென்னையைச் சேர்ந்த கவிஞர்கள் 25 பேரும். மலாய் கவிஞர்கள் பேரும் இந்த இரு நாள் நிகழ்வில் கவிதைகள் வாசித்தனர். அவரவர் தாய்மொழியில் கவிஞர்கள் ஒன்றிரண்டு கவிதைகள் வாசிக்க பின்னர் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசிக்கப்பட்டது. திரு.கிருஷ்ணன் மணியமும், திரு.மோஹனதாசும் மிகச் செறிவாக மலாய்க் கவிஞர்களின் கவிதைகளையும், உரைகளையும், கேள்விகளையும் மொழிபெயர்த்துத் தந்த விதம் குறிப்பிடத்தக்கது. மிகவும் உத்வேகத்தோடு, சிரித்த முகத்தோடு தங்கள் பணிகளைச் செய்தார்கள். அதேபோல், சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித்துறையைச் சேர்ந்த இணைப்பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் இந்த இருநாள் நிகழ்வு நல்ல முறையில் நடந்தேற ஆரவாரமில்லாமல் உறுதுணைபுரிந்ததும் கட்டாயம் குறிப்பிடவேண்டியது. இருநாள் விழாவின் துவக்க விழா, நிறைவு விழா நிகழ்ச்சிகளைத் தன் இனிமையான குரலில் சிறப்பு விருந்தினர்களை ரத்தினச் சுருக்கமாக அறிமுகம் செய்துவைத்தார் முனைவர் அபிதா சபாபதி.[தலைவர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலைக் கல்லூரி]

துவக்கவிழாவின் போது சிறப்புவிருந்தினர்களாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு, தாண்டவன், சென்னையிலுள்ள மலேஷிய தூதர் திருமதி சித்ரா ராமையா, தமிழக அரசுச் செயலர்கள் இருவர் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழின் குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர் யாரையேனும் சிறப்புவிருந்தினர்களாக சென்னைப் பல்கலைக்கழகம் கூப்பிட்டிருந்திருக்கலாமே, ஏன் கூப்பிடவில்லை என்று வருத்தமாக இருந்தது. அதிலும், சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பிரமுகர் ஒருவர் ‘புரியும் படி கவிதை எழுதவேண்டும் என்ற ரீதியில், வைரமுத்துவை உதாரணங்காட்டிப் பேசிய போது பெண்ணியத்தைப் போலவே ஏன் நவீன கவிதையையும், [அவற்றின் வளர்ச்சி நிலைகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ள மறுப்பவர்களாய்] மிகவாரம்பத்திலிருந்தே பேசப்புகுவேன் என்று பிடிவாதம் பிடித்துவருகிறார்கள் சிலர் என்று கோபம் வந்தது. என்னுடைய முறை வந்த போது, தமிழ்நாட்டில் நவீன கவிதை வெளியில் இயங்கிவருபவர்களுக்கு பெரிய அந்தஸ்து என்றைக்குமே இருந்ததில்லை, எதிர்ப்பும் புறக்கணிப்புமே என்றும் பரிசாகக் கிடைத்துவருகிறது என்றும் [’மிடில் மாகஸீன்ஸ்’ எனப்படும் இதழ்கள் நிறைய வெளியாகத் தொடங்கியதும்  நவீன கவிதை வெளியில் இயங்கிவருவோருக்கு நிறைய இடம், அங்கீகாரம் கிடைக்கும்என்று மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், மேல் சாதி, ஆணாதிக்கம் என்று பல்வேறு காரணங் கற்பிக்கப்பட்டு நவீன கவிதை வெளியில் அமைதியாக எந்த அங்கீகாரமுமில்லாமல் இயங்கிவந்தவர் களெல்லாம் அடக்குமுறையாளர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள் என்றோ, அவ்விதமாய் அவர்கள் வெகு எளிதாக வெளியேற்றப்பட்டு இந்த விரி கவி வெளியை சிலர் தமக்கு மட்டுமானதாக்கிக் கொண்டுவிடக்கூடும் என்றோ அப்போது முன்னூகிக்க முடியவில்லை] அதையும் மீறி இயங்கிவருபவர்கள் கவிதைபால் உள்ள அன்பு, ஈர்ப்பின் காரணமாகவே தொடர்ந்து இயங்கிவருகிறார்கள் என்றும் புரியாக்கவிதை தான் எழுதுவேன் என்று எந்தக் கவிஞரும் கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுவதில்லை என்றும் நிறைய அழுத்தமாய் எடுத்துரைத்தேன்.  ஆனால், நான் பேசுமுன்பே அந்தப் பிரமுகர் அவசர வேலை நிமித்தம் எழுந்துபோய்விட்டார்!

நவீன தமிழ்க் கவிதையின் தோற்றமும் வரலாறும், நவீன தமிழ்க்கவிதை வளர்ச்சியில் சிறுபத்திரிகைகளின் பங்கு, நவீன தமிழ்க்கவிதையில் சமூகம், நவீன தமிழ்க்கவிதை யும் மொழிபெயர்ப்பும் என்ற தலைப்புகளில் கட்டுரைகள்[சி.மோகன், எஸ்.சண்முகம், லதா ராமகிருஷ்ணன்]வாசிக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகள் ‘கவிதையாய் விரியும் வாழ்வு தொகுப்பில் இடம்பெறவில்லை என்பது வருத்தம் தருகிறது. நேரமின்மையே காரணம்.

மலாய்ப் பிரதிநிதிகளும் தங்கள் மண்ணில் கவிதை வளர்ந்த விதம் பற்றி, மலாய் கவிதைகளின் தற்காலப் போக்குகள் குறித்து அதற்கு அரசு அளித்துவரும் ஊக்கம் குறித்து கட்டுரைகள் வாசித்தனர். முனைவர் கிருஷ்ணன் மணியம் மூன்று இனங்கள் வாழும் தங்கள் நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பிரிவினை உண்டாக்க முயற்சி செய்தபோது முத்தரப்பு மக்களும் ஒன்றாகி அந்த முயற்சியை முறியடித்ததை எடுத்துரைத்த அவர் மலாய் மக்களில் மூத்த தலைமுறையினருக்கே நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் மகத்தான பங்களிப்பு குறித்துத் தெரிந்திருக்கிறது எனவும் இப்போதுள்ள தலைமுறையினர் தமிழர்களை வந்தேறிகளாகப் பார்க்கத் தலைப்படுவதும் நடக்கிறது எனவும், தமிழகத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வருகைபுரியும் பிரமுகர்கள் சிலர் நம் நாட்டைப்பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி கேலிபேசி விமர்சிக்கிறார்கள் எனவும் வருத்ததோடு குறிப்பிட்டார்.

                               
தமிழகக் கவிஞர்களின் கவிதைகள் ஆளுக்கு மூன்று வீதம் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன; அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளன. மலாய்க் கவிஞர்களைப் பொறுத்தவரை ஆளுக்கு ஒரு கவிதை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம்பெற்றுள்ளன. நேரமின்மை காரணமாக மலாய்க் கவிஞர்களோடு பெரிய அளவு கவிதை பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் கவிஞர் இன்பா சுப்பிரமணியன், முபீன் சாதிகா, நந்தமிழ் நங்கை, கடற்கரை, அய்யப்பமாதவன் போன்றோர் அன்பும் அக்கறையுமாக நேரம் கிடைத்தபோதெல்லாம் அவர்களோடு அளவளாவிக்கொண்டிருந்தனர். கவிஞர் கவின் மலர் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் வந்திருந்தார். இளங்கவிஞர் சபரிநாதன் சால்வை போர்த்த அழைத்த போது வேண்டாம் என்று அன்போடு மறுத்தபோது நினைவுப்பாதையில் பின்னோக்கி நடந்தேன்! கவிஞர் கிருஷாங்கினி தன்னில் ஒரு கவிதை எவ்வாறு உருவாகிறது, உருப்பெறுகிறது என்பதை அழகாக எடுத்துக் கூறினார். நவீன தமிழ்க் கவிதைகள் திரும்பத் திரும்ப மனதிற்குள்ளாகப் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியவை என்பதால் கவிதை வாசிப்பு என்பது கொஞ்சம் சடங்கார்த்த மாகவே அமைந்ததாய் தோன்றியது. மலாய் கவிஞர்களும், நம் கவிஞர்களும் இரண்டு நாட்களும் உற்சாகமாகவும், சினேகபூர்வமாகவும் இருந்தனர். நிறைவு விழாவுக்கு முன்பு ஒரு மணிநேரம் இரு தரப்புக் கவிஞர்களின் கருத்துப்பகிர்வு நடந்தது. நம் தரப்பிலிருந்து கவிஞர்கள் கடற்கரை, கிருஷாங்கினி, துவாரகைத்தலைவன் முதலியோர் கருத்துரைத்தார்கள். நிறைவு விழாவில் கவிஞர்கள் இன்பா சுப்ரமணியன், தமிழ் மணவாளன் முதலியோர் நிகழ்வு குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண் டார்கள். கவிஞர் முபீன் சாதிகா இந்த இருநாள் நிகழ்வுகளின் வீடியோப்பதிவுகளை ஆர்வத்தோடு YOUTUBEல் பதிவேற்றியிருக்கிறார்.






0

No comments:

Post a Comment