LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 19, 2018

பாவமும் பாவமன்னிப்பும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


 பாவமும் பாவமன்னிப்பும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது?

நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால்
கண்களைத் துடைத்துவிடக்கூடும்….

கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள்
சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும்

மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து
வாய்நிறைய சிரிக்கக்கூடும்….

நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால்
தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி
தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்…..

அதுவும்

அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _

அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?


அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள் - லதா ராமகிருஷ்ணன்

அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள்  
 லதா ராமகிருஷ்ணன்





வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது என்பார்கள்.

இங்கே காது கேளாத வாய் பேசவியலாத சிறுமியொருத்தியை systematic ஆக மாதக்கணக்கில் சீரழித்த கொடூரன்களை அடித்தட்டு ஆண்களின் பிரதிகளாக்கி, பிரதிநிதிகளாக்கி, அவர்கள் சார்பில் வாதாடும் வழக்குரை ஞர்களாக, ஆளாளுக்கு உளவிய லாளர்களாகி சில எழுத்துலகப் பெருந்தகை யாளர்கள், பேரறிவுசாலிகள், ஈடு இணையற்ற மனிதநேயவாதிகள் முன்வைக்கும் சில கருத்துகளைப் படிக்கும்போது அந்தக் குழந்தையை அதன் ரணவலியை, கையறுநிலையை இதைவிட மோசமாகக் கேவலப்படுத்த முடியுமா, இதைவிட இலகுவாகக் கடந்துபோக முடியுமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

இவர்கள் யாருக்காகப் பேசுவதாக இப்படியெல்லாம் வக்கிரமாகக் கருத்துரைக்கிறார்களோ அந்த சமூகத்தட்டு மக்களிடம் போய்க் கேட்கட்டும் – எந்த சாதியைச் சேர்ந்தவளா யிருந்தாலும், எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவளாயிருந்தாலும் ஒரு பெண்ணை, சிறுமியை, வாய் பேச முடியாத காது கேளாத குழந்தையை இப்படிச் சீரழிப்பவர்கள் மனிதர்கள்தானா என்று

யார் சார்பாகவோ பேசுவதாக, வாதாடுவதாக சிலுப்பிக் கொண்டு இப்படியெல்லாம் அநாகரீகமாக, அராஜகமாகக் கருத்துதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் தமக்கான சுயமதிப் போடும், வாழ்நெறிக ளோடும் வாழும் அந்த மக்களை உண்மையில் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள், மனித நேயம், சமூகப் பிரக்ஞை என்ற பாவனையில் தங்கள் மன வக்கிரங்களையெல்லாம் அம்மக்கள் மீது வலிந்தேற்றி அவர்களை மதிப்பழித்துக்கொண்டிருக் கிறார்கள் என்பதை உணரவியலாதவர்களாய் இப்படித்தான், இறுதிவரை புண்மொழி உதிர்த்துக் கொண்டேயிருப்பார்களோ இவர்கள்?

 



Saturday, July 14, 2018

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சிலபல நேரங்களில்

சிலபல மனிதர்கள்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)






சிலருக்கு இவரைப் பிடிக்காது;
அசிங்க அசிங்கமான வார்த்தைகளில்
வசைபாடுவார்
ஆங்காரத்துடன் 
அதிமேதாவித்தனத்துடன் _
கவிதை கட்டுரை கதை விமர்சனம் 
முகநூல் பதிவு
இன்னும் நிறைய நிறைய 
நுண்வெளிகளில்.

அவருக்கு இவரைப் பிடிக்காது
அதனினும் அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார்
அதனினும் அதிகமான ஆங்காரத்துடன்
அதிமேதாவித்தனத்துடன்
அதே யதே நுண்வெளிகளில்.

அவர்கள் செய்வது சமூகப்பணி;
அவர்கள் காட்டுவது மனிதநேயம்.

அறிந்துகொண்டு அங்கீகரிக்க முடியாதவர்கள்
அலைகடலில் மூழ்கி மாளவேண்டியவர்களே.

மெத்தப்படித்தவர் அவர் _
சத்தம்போட்டுத் தூற்றிக்கொண்டேயிருக்கிறார்
இந்த நாடு நாசமாய்ப் போகட்டும் என்று.

போனால் நானும் அவரும் என்னாவது என்று கேட்டால்
என்னைப் போன்ற சுயநலவாதியும் இருக்கமுடியுமோ?

இவருக்கு முன் இன்னொருவர்
’இந்த நாடு நாசமாய்ப்போகட்டும்,
இருக்கும் ஆறுகளெல்லாம் வறளட்டும்’
என்று அடுக்கிக்கொண்டே போய்
இறுதியில்
’குழந்தைகள் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கட்டும்’ என்றார்.

அதெப்படி முடியும் என்று எத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை எனக்கு
அன்றும் இன்றும்.

ஆகச்சிறந்த அறிவீலி நான் என்று
ஏகமாய் துக்கம் சூழ்ந்ததுதான் மிச்சம்.



இச்சகம் பேசிப்பேசியே .
கச்சிதமாய்க் காரியத்தை முடித்துக்கொள்பவர்
’இச்சகத்திலோரெல்லாம் எதிர்த்துநின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’
என்று பாரதியைத் துணைக்கிழுத்துக்கொள்வதைக்
கேட்கப் பொறுக்காமல்
உச்சிமீது வானிடிந்து வீழ _

வச்ச சோறு வாய்க்குள் போவதற்கு முன்
விரைந்தோடிவந்து அவரை
அப்பால் இழுத்துதள்ளிக் காப்பாற்றியவர்
அடிபட்டுக்கிடப்பதைக் கண்டுங்காணாமல் அப்பால் நகர்ந்தவர்
மெச்சிக்கொண்டார் தன்னைத்தானே.




கிச்சுகிச்சுமூட்டினாலும் சிரிக்கவைக்கமுடியாதவர்களெல்லாம்
சாப்ளினைத் தம் குருவாகச் சொல்லிக்கொள்கிறார்களென
மிச்சம் மீதி இல்லாமல் திட்டித் தீர்த்தவர்
தன் கவிதையை புல்தடுக்கிப்பயில்வானொத்த கோமாளியாக்கி நடத்திக்கொண்டிருக்கும்
சர்க்கஸைக் காணக்
கட்டணமுண்டு கட்டாயம்.

ரொக்கமாகத்தான் தரவேண்டும் என்றில்லை…….

என்றாலும்
அவர் சகாக்களுக்கு மட்டும்
என்றுமுண்டு இலவஸ பாஸ்கள்..

Ø  

முகநூலில் நீலப்படங்களும் நட்புக்கோரிக்கைகளும் - லதா ராமகிருஷ்ணன்


முகநூலில்
நீலப்படங்களும்
நட்புக்கோரிக்கைகளும்
லதா ராமகிருஷ்ணன்
(14.07.2018)















நாளும் நிறைய பேர் நட்புக்கோரிக்கை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். பலரைப் பற்றி அவர்களது முகநூல் பக்கத்தில் எவ்வித விவரக் குறிப்பும் இல்லை. அத்தகையோர் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சிலருடைய முகநூல் பதிவுகளில் அநாகரீகமான ஆபாசமான பதிவுகள் சொல்லாடல்கள் மண்டிக் கிடக்கின்றன. மாற்றுக்கருத்துடைய வர்களை இத்தனை கேவலப்படுத்திக்கொண்டே பேச்சுரிமை, கருத்துரிமை என்றெல்லாம் முழங்குவதில் உள்ள போலித்தனமும் அதிகாரத்தொனியும் என்னால் நட்புகொள்ள முடியாதவை.

நான் சாதாரண ஆள். எந்த இலக்கியக் குழுவிலோ, அரசியல் கட்சியிலோ அங்கம் வகிக்காதவள். எனக்கு சரியென்று பட்டதை என் முகநூலில் கண்ணியம் குறையாமல் பதிவிடுகிறேன். அத்தகை யோரிடமே நட்பு பாராட்டவும் விரும்புகிறேன். இதுபோதும் எனக்கு. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்பவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இன்று காலை TAMI L என்பவரிடமிருந்து நட்புக் கோரிக்கை வந்திருந்தது. அவரைப் பற்றி விவரம் அறிய அவருடைய முகநூல் பக்கத்தில் சென்றால் அப்பட்டமான நீலப்படம் ஓட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதைப் பார்க்க கூகுளில் எத்தனையோ வழிகள் இருக்கின்றனவேஇவரிடம் நட்பு பாராட்டித் தான் பார்க்கவேண்டுமென்பதில் லையே என்று நினைத்துக்கொண்டேன்.

இணையக் குற்றங்கள், அவற்றிற்கான தண்டனை கள் என்று எத்தனை பேசப்பட்டாலும் இத்தகைய அநாகரீகங்கள், அத்துமீறல்கள் இருந்துகொண்டு தானிருக்கும் போலும். அந்த முகநூல் கணக்கைஸ்பாம்செய்துவிட்டேன்.

நட்பினரின் நட்பினர் தான் எனக்கு நட்புக்கோரிக்கை அனுப்பவியலும். எனவே, என் நட்பினர் யாரோ ஒருவரின் நட்பினர்தான் இந்த முகநூல் கணக்கை வைத்திருப்பவர்கள். சம்பந்தப்பட்ட என் நட்பினர் இதுகுறித்து அவருக்கு எடுத்துரைக்கவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன்.

நீலப் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்த்துக் கொள்ளலாம். நிறைய பேருக்கு அது வடிகாலாகக் கூட அமையலாம். அது குறித்து நீதிநெறி புகட்டுவது என் நோக்கமல்ல. ஆனால் என்னளவில் இந்த நீலப்படங்கள் ஆண்-பெண் உறவை வெறும் உடல் ரீதியானதாக்கி, காட்சிப் பொருளாக்கி் கொச்சைப் படுத்துகின்றன. ஒரு பெண் எத்தனை ஆண்களால் வேண்டுமானாலும் என்னென்ன வக்கிரமான வழி களிலும் புணரப்படலாம் . எந்தப் பெண்ணும் அதை உள்ளூர விரும்புவாள் என்ற எண்ணத்தையே இந்த நீலப்படங்கள் எல்லாவழிகளிலும் உருவேற்றிக் கொண்டே யிருக்கின்றன.

இந்தப் படங்களில் ஒரு பெண்ணின் உடல், மன ரீதியான விருப்பம், விருப்பமின்மை குறித்த பிரக்ஞை அறவே ஓரங்கட்டப்படுகிறது. ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் தொழிலாளியை அவளது முதலாளி தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்துவது வெகு இயல்பானது என்பதாய், அதில் அந்தப் பெண் உள்ளூ றப் பெருமையடைவதாய் திரும்பத்திரும்பக் காட்டப் படுகிறது.

அவள் உடலில் இதனால் ஏற்படும் ரணகாயங்கள், தாங்கமுடியாத வலி குறித்த பிரக்ஞையை இவை கச்சிதமாக ஓரங்கட்டிவிடுகின்றன.

இதன் சாதக பாதகங்கள் தெரியாத இளம்பருவத் தினர் வாழ்வுகளில் இந்தப் படங்கள் எத்தனையோ விதமான அக,புற பாதிப்புகளை ஏற்படுத்திவருகின் றன.

இந்தப் படங்களில் இடம்பெறும் பெண்கள் எப்படி யெல்லாம் வலைக்குள் சிக்கவைக்கப்படு கிறார்கள், இத்தகைய படங்களைக் காட்டி இளம் பெண்களும், ஆண்களும் எப்படியெல்லாம் தூண்டப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள் என்பதையெல்லாம் தினசரி பார்க்க, கேட்க நேர்கிறது.

இன்று தனிநபர்களாலும், கும்பலாலும் நடத்தப்படும் வன்புணர்ச்சிகள் அதிகமாக முக்கியக் காரணம் கைபேசி வழியாகவும் இணையம் வழியாகவும் காணக்கிடைக்கும் இத்தகைய நீலப்படங்களே என்று தோன்றுகிறது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிக ரித்துவர இந்த இணைய, கைபேசி நீலப்படங்களும் ஒரு முக்கியக் காரணம்.

இத்தகைய படங்கள் கைபேசியிலும் இணையத்தி லும் மலிந்துகிடப்பது குறித்த சமூகப்பிரக்ஞை இன் னும் பரவலாகவேண்டும்.

இனியும் மேற்குறிப்பிட்ட நபரோ, நபரொத்தவர் களோ எனக்கு நட்புக் கோரிக்கை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் வன்மங்களுக்கும் வக்கிரங்களுக்கும் என் முகநூல் பக்கத்தில் இடம்தேடிக்கொள்ளும் நோக்கில் அப்படி அனுப்பினால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிவரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்.