LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, February 20, 2024

பாயுமொளி நீயெனக்கு பார்க்கும் விழி நானுனக்கு

 பாயுமொளி நீயெனக்கு

பார்க்கும் விழி நானுனக்கு


...........................................................


39 வயதில் முடிந்துவிட்ட பாரதியின் வாழ்க்கை. அதற்குள் எத்தனை உணர்ச்சிமயமான கவிதைகள்!

அவர் கவிதைகளுக் கான அர்த்தம் தருவோர் முடிந்த முடிவாக அவர் இதைத்தான் சொன்னார் என்று எப்படி சொல்கிறார்களோ, தெரியவில்லை.

அவர் அப்படி’இதை நினைத்துத் தான் இந்தக் கவிதை எழுதினேன்’ என்று எந்த ஒப்புதல் வாக்குமூலமும் தந்துசென்றதாகத் தெரிய வில்லை.
இங்கே தரப்பட்டுள்ள கவிதை காதல் கவிதை என்று புரிகிறது. ஆனால், அவருடைய எல்லாக் கவிதைகளும் அப்படியென்று சொல்லவியலாது.

உதாரணத்திற்கு, ‘ திக்குத் தெரியாத காட்டில்’ என்று தொடங்கும் கவிதை. அவருடைய பல கவிதைகள் ‘திறந்த முனை’க் கவிதைக ளாக ஒன்றுக்கு மேற்பட்ட வாசகப்பிரதிகளை உள்ளடக்கியவை.
எனவே, அவருடைய கவிதைகளுக்கு உரை எழுத முற் படாமல் அவற்றை வாசிப்பதே அவருக்கு வாசகராக நாம் செய்யும் குறைந்தபட்ச மரியாதை என்று தோன்றுகிறது.
.........................................................................................................................................
பாரதியார் கவிதை
பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!

குழந்தைகள் என்னும் கொத்தடிமைகள் _ லதா ராமகிருஷ்ணன்

 

_ லதா ராமகிருஷ்ணன்
(15.2.2024 தேதியில் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது)


குழந்தைகளை அடிப்பது கொடூர வன்முறைச் செயல்.  காலத்திற்கும் குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. சக குழந்தை அடிவாங்குவதைக் கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தையும் மனரீதியாக பாதிப்படையும் என்று பல உளவியல் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.

’அடியாத மாடு படியாது’ என்றும், ’அடிக்கிற கைதான் அணைக் கும்’ என்றும் குழந்தையை அடிப்பதை பலவாறு விதவிதமாக நியாயப்படுத்தும் பெரியவர்களை என்ன சொல்ல?

சில நாட்களுக்கு முன் ஒரு குறுகிய சந்தில் போய்க் கொண்டிருந் தேன். அங்கிருந்த பள்ளியொன்றிலிருந்து ஸ்கேலில் பளீர் பளீ ரென்று அடி விழும் சப்தமும், ஒரு சிறுவன் வீறிட்டழும் சப்தமும் தெருவரை வந்து கேட்டுக்கொண்டேயிருந்தது. தாங்கமுடியாமல் பள்ளிக்குள் சென்றேன்.


இருட்டான அறைகள். காற்று வசதியே கிடையாது. உள்ளறை யொன்றில் பருமனான பெண்மணி ஒருவர் கையில் ஸ்கேலோடு நின்று கொண்டிருந்தார். அவருடைய வகுப்பறையிலும் சுற்றிலு மிருந்த வகுப்பறைகளிலும் குழந்தைகள் - ஐந்தாம் வகுப்புவரை யான பள்ளி போலும் - பயம் மண்டிய கண்களோடு அமர்ந்திருந் தனர்.


’குழந்தைகளை அடித்தல் சட்டப்படி தவறு என்று தெரியாதா - இப்படியா காட்டுத்தனமாக அடிப்பது?’ என்று கேட்டதற்கு தலைமையாசிரியர் போலும் ஒரு பெண்மணி வந்து ”நாங்கள் அடிக்கவேயில்லையே”, என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகப் பொய்யுரைத்தார். 

இது குறித்து ஊடகங்களில் எழுதுவேன் என்று கூறி வெளியேறி னேன். எங்கள் பகுதியில் வரும் பத்திரிகைக்கு எழுதிப் போட்டேன். பிரசுரமாகவில்லை.

அந்தத் தெரு குறுகலாக இருந்ததால் எனக்கு அடிவாங் கும் குழந்தையின் அலறல் கேட்டது. அதுவே அகன்ற வீதியில் அமைந்திருந்தால்....? அந்தப் பள்ளிக்குள் என்னால் நேரடியாக நுழைந்து உள்ளே செல்ல முடிந்தது. வாயிற்காவலர் என்று ஒருவர் இருந்து வெளியிலேயே தடுத்திருந்தால்.... ? இத்தகைய கேள்விகள் எனக்குள் தொடர்ந்து எழுந்தவண்ணம்...?

பெரியவர்களுக்கு இருக்கும் வாழ்வியல் ஏமாற்றங்கள், மன அழுத்தங்களை யெல்லாம் குழந்தைகளை அடித்துத் தீர்த்துக் கொள்வதா தீர்வு? பல பெற்றோர்கள் கூட குழந்தைகளை வெகு இயல்பாக அடிப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒரு குட்டிக் குழந்தைக்கு அதன் தாயே வாயில் சூடு வைத்திருந் தார். கேட்டால், குழந்தை கெட்ட வார்த்தை பேசுகிறது”, என்றார். குழந்தைக்கு கெட்ட வார்த்தை என்று பகுக்கத் தெரியுமா? தன் அருகிலிருக்கும் பெரியவர்கள் பேசுவதைத்தானே அது பேசப்பழகு கிறது?

திரைத்துறையும் சின்னத்திரையும் இன்றைய சமூகத் தில் கணிச மான அளவு தாக்கம் செலுத்துவது வெளிப்படை. சின்னத்திரை யின் முக்கியப் பெண்மணி ஒருவர் தன் தாய் தனக்குத் தந்த தண்டனைகளை சர்வசாதாரணமாகப் பட்டிய லிடுகிறார்.


சமீபத்தில் பிக்-பாஸ் ஸீஸன் 7 - தமிழில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் பள்ளிக்காலங் களில் மதிப்பெண் குறைந்தால் தன் தாய் ஊதுபத்தி, வத்திக்குச்சி போன்ற சாதனங்களால் கையில் அங்கங்கே சூடுவைப்பார் என்று சொல்ல அந்தத் தாய் அதைக் கேட்டு மகிழ்கிறார்.

 இதையெல்லாம் கேட்கும் பார்வையாளர்கள் மனங்களில் குழந்தைகளை அடித்துத் தண்டிப்பதே சரியான தாய்மை, வளர்ப்புமுறை என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.

வாழ்க்கைத்தத்துவங்களாக எழுதிக்குவிக்கும் படைப் பாளிகள் பலர், மற்றவர்களின் புறக்கணிப்பால், அடக்கு முறையால் தங்களுக்கு நேர்ந்த மன அழுத்தங்களை, பாதிப்புகளைப் பற்றி பக்கம்பக்கமாக எழுதிக்குவிப்பவர்கள் குழந்தைகளை அடிப்பது அவசியம் என்பதாகவே எழுதுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் தன் சகோதரர் மக னைத் தான் அக்கறையாக வளர்த்தது பற்றி எழுதும் நோக்கில் ”என்னால் கடுமையாக அடிக்கப்பட்டு ஆங்கி லம் சொல்லிக் கொடுக்கப்பட்டவன்” என்று பெருமையாக சொல்லிக் கொள்வ தாக எழுதுகிறார். 


வளர்ந்த மனிதர்கள் யாருக்குமே குழந்தைகளிடம் இப்படி நடந்துகொண்டது, கொள்வது குறித்து எந்தவிதமான குற்ற வுணர்வோ, கூச்சநாச்சமோ இருப்பதில்லை என்பதைப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது.

சமீபத்தில், விவாகரத்து செய்துகொண்ட கணவன் - மனைவி விஷயத்தில் கணவனிடம் குழந்தையை வாரத்திற்கொரு முறையோ மாதத்திற்கொரு முறையோ அழைத்துச்செல்ல வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவு பிடிக்காமல் தன் நாலு வயது ஆண் குழந்தையையே கொலை செய்த படித்த வசதியான தாய் குறித்த செய்தி யொன்றைப் படிக்க நேர்ந்தது.

பெண் குழந்தைகள் மட்டுமல்லாமல் ஆண் குழந்தைக ளும் வீடுகளிலும் பள்ளிகளிலும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களிலும்கூட சில இடங்களில் பாலியல் அத்துமீறல் களுக்கு ஆளாகும் செய்திகளைப் படிக்க நேர்கிறது.

எல்லாவிடங்களிலும் இது நடைபெறுகிறது என்று பொதுப் படையாகப் பேசுவது சரியல்ல. முறையுமல்ல.

அதேசமயம், குழந்தைகள் தொடர்பான விஷயத்தில் எந்த விதமான அத்துமீறல்களும், வன்கொடுமைகளும் நிகழாமல் இருக்க அரசுகளும், உரிய துறைகளும் தொடர்ந்தரீதியில் கண்காணிப்பில் ஈடுபடவேண்டியதும், இது குறித்த பிரச்சார இயக்கங்களை மேற்கொள்ள வேண்டியதும் மிக மிக அவசியம்.

மனசாட்சிக்கு பயப்படாதவர்கள் சட்டத்திற்காகவது பயப்படு வார்கள் என்று நினைக்கிறேன். இது குறித்த சட்டங்கள் கீழே தரப்பட்டுள்ளன. சின்னத்திரை நாடகங்கள், திரைப்படங்களி லெல்லாம் ‘ குடிப்பதாக, புகைபிடிப்பதாக வரும் காட்சியில் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று சின்னதாக ஒரு வரி நெளியும். அப்படி, குழந்தைகளை அடிக்கும் காட்சிகள் இடம்பெறும் போதெல்லாம் அது சட்டப்படி தவறு என்ற வரி கட்டாயம் தரப் பட வேண்டும்.

ஆனால், சின்னத்திரை மகா சீரியல்களிலெல்லாம் பெரியவர் களே ஒருவரை யொருவர் - மாமியார் மருமகளை, அப்பா மகனை, கணவன் மனைவியை - இப்படி - சரமாரியாக அறைந்துகொள்வதான காட்சிகள் மிகப் பரவலாக இடம்பெறும் நிலையில் குழந்தைகள் அடிபடுவதைப் பற்றியெல்லாம் அவர் கள் கவலைப்படப் போகிறார்களா என்ன?

ஆனால், சமூக அக்கறை உள்ளவர்கள் பெரியவர்களை அண்டி வாழும் குழந்தைகள் நலன் குறித்து இன்னும் அதிகமாக கவனம் செலுத்தவேண்டியது, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது மிக மிக அவசியம்.

* Legal ProvisionsSection 17 (1) of the Right of Children to Free and Compulsory Education Act, 2009 expressly bans subjecting a child to mental harassment or physical punishment. Cruelty to children is also prohibited under Section 23 of the Juvenile Justice (Care and Protection of Children) Act, 2000. *

INSIGHT - BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POETRY - NOV-DEC,2023

 INSIGHT

a bilingual blogspot for contemporary tamil poetry

www.2019insight.blogspot.com