LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, September 5, 2014

நன்றொன்று சொல்வேன் - கட்டுரை

நன்றொன்று சொல்வேன்

_ லதா ராமகிருஷ்ணன்

[* 2014, ஆகஸ்ட் மாத ‘பல்சுவைக் காவியம்’ இதழில் வெளியாகியுள்ளது]





நான் அந்தச் சிறுகதையை எழுதி இருபது வருடங்களுக்கும் மேல் இருக்கும். கதையின் தலைப்பு கூட உடனடியாக நினைவுக்கு வர மறுக்கிறது. ‘’போகவேண்டிய தூரம்’’ என்று நினைக்கிறேன். வெளியே எங்கோ வேலையாய் போய்விட்டு இரவு வீடுதிரும்பும் வழியில், வயிற்றில் கனக்கும்சிறுநீரைவெளியேற்ற முடியாமல் ஒரு பெண் தவிக்கும் அவலம்; ’அதற்காகஅருகில் பரிச்சயமானவர் வீடு ஏதாவது இருக்குமா, அப்படியே இருந்தாலும் இரவு நேரத்தில் அங்கே கதவைத் தட்டி உடனே சிறுநீர் கழிக்கக் கழிப்பறை எங்கே இருக்கிறது?’ என்று கேட்பது எத்தனை அநாகரீகமாக இருக்கும் என்றெல்லாம் அந்தப் பெண்ணின் மனம் பரிதவித்துப்போகும்.

இன்றும் கூட நிலைமையில் பெரிய மாற்றமொன்றுமில்லை. பெண்களுக்கு மட்டும் தான் இந்தப் பரிதவிப்பு; ஆண்கள் எல்லோரும் தெருவில் எங்கு வேண்டு மானாலும் ஒதுங்கிநின்று சிறுநீர் கழித்துவிட முடியும் என்று பொதுப்படையாகச் சொல்லிவிடுவது சரியல்ல. போதுமான அளவு பொதுக்கழிப்பறைகள் பெரிய நகர்ப்புறப் பகுதிகளில் கூட இல்லை. உதாரணத்திற்கு, அகன்று விரிந்த அண்ணாசாலையில் இந்த முனையில் கிண்டியிலிருந்து அந்த முனையில் ஹிக்கின்ஸ் பாத்தம் வரை எத்தனை பொதுக் கழிப்பறைகள் இருக்கின்றன, அப்படி ஏதேனும் இருக்கின்றனவா என்று பார்த்தாலே போதும். மேற்கு சைதாப்பேட்டை 18K பேருந்துநிலையப் பகுதியில் ஓட்டுநர்கள்  -நடத்துனர்கள் கூட, கழிப்பறை வசதியற்ற நிலையில் தெருவோரம் நின்று சிறுநீர் கழிக்கும் அவல நிலை இன்றளவும் தொடர்கிறது.

சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் போன்ற இயற்கை உபாதைகளைப் போக்கிக் கொள்ள உரிய வழிகள் இல்லையென்றால் அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவு கள் ஏராளம். மூன்று நான்கு வருடங்களுக்கு முன் புத்தகக் கண்காட்சி நடந்த சமயம் அரங்குகளில் காலை முதல் மாலை வரை இருந்த விற்பனைப் பெண்பிரதிநிதிகளில் எனக்குத் தெரிந்த சிலர் போதுமான கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் தங்களுக்கு ஏற்பட்ட வயிறு சார்ந்த உபாதைகளைப் பற்றி வருத்தத்தோடு குறிப்பிட்டார்கள். இது குறித்து சில கட்டுரைகள் கூட அப்போது வெளியானதாக நினைவு. தொடர்ந்து வந்த வருடங்களில் புத்தகக் கண்காட்சியில் கழிப்பறை வசதிகள் சற்றே மேம்பட்டன என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

ஜூன் 24 தேதியிட்ட தினமணி நாளிதழில்தமிழகத்த்தில் பாதுகாக்கப்பட்ட கழிவறையைப் பயன்படுத்துவது குறித்து அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் சாந்தா ஷீலா நாயர்திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடை செய்யும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்ததாகச் செய்தியொன்று வெளியாகியிருந் தது. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்களுக்குப் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர் ஒரு பகுதியில் எத்தனை கழிவறைகள் உள்ளன என்பதைவிட அவை எந்தளவுக்கு பராமரிப்புடன் பயன்படுத்தப்படுகின்றன என்பதே முக்கியம் என்று கூறியுள்ளது மிகவும் உண்மை.

மக்கள் நல அரசு என்பது கண்டிப்பாக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை யும் அவர்களுடைய வாழ்வாதாரங்களையும் உடல்நலனை யும் பாதுகாப்பதற்கான சுகாதார நலத்திட்டங்களை முழுமுனைப்போடு தொடர்ந்த ரீதியில் மேற்கொள்ள வேண்டியதையும் தன் தலையாய கடமையாகக் கொள்ளவேண்டும்.

நடப்பாண்டு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் கிராமப்புறப் பகுதிகளில் மேம்பட்ட சுகாதாரம், உடல்நலனை சாத்தியமாக்கும் பொருட்டு கூடுதலாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை சிறந்த  முறையில் கொண்டாடும் நோக்கில், 2019க்குள் கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக் கும் முழு நிறைவான உள்கட்டமைப்புவசதிகளும், நலத்திட்டங் களும் கிடைக்க போய்ச்சேர வழிவகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கழிப்பறை வசதியும் அடக்கம். ஆனால், ஒவ்வொரு நிதி ஒதுக்கீட்டிலும் இந்த வாசகம் இடம்பெற்றுவருகி றதுதான். எனில், இந்த முயற்சிகள் ஏன் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.

இப்பொழுது வட மாநிலங்களில் மலங்கழிக்க அதிகாலை வேளையில் திறந்த வெளிக்குப் போகும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக வெளிவந்த ஓரிரு செய்திகளுக்குப் பிறகுதான் அரசுகளின் கவனம் இதுகுறித்துத் திரும்பியிருக்கிறதென்று சொல்லப்படுவது உண்மையெனில் அது எத்தனை அவலமான நிலை.

மத்திய மாநில அரசுகள், அவர்களுடைய மொழிவழக்கில், போர்க்கால நடவடிக்கையாக, போதுமான அளவு பொதுக்கழிப்பறை வசதிகளை மக்களுக்கு உருவாக்கித் தருவதிலும், கழிப்பறைகளை தூய்மையாக சுகாதாரமாக வைத்திருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி, அதை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான வழிவகைகளை யும் ஏற்படுத்தித் தர முன்வருவதில்லை என்பதே இத்தனை கால நடப்புண் மையாக இருந்துவந்திருக்கிறது.

பார்வையிழந்தவர்களுக்கான விடுதியொன்றில் கழிப்பறைகள் எத்தனை அசுத்த மாக இருந்தன என்று முன்பு ஒரு கூட்டத்தில் மிகவும் வேதனையோடு தெரிவித் தார் திரு.கிறிஸ்துதாஸ் ..எஸ். பள்ளிகள், கல்லூரிகள் முதலான கல்விக் கூடங்களில் கழிப்பறைகள் எத்தனை மோசமான நிலையில் உள்ளன என்பது குறித்த செய்தியொன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது. ரயில் நிலையங்கள், ரயில்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பொதுவாக, கழிப்பறை வசதி என்பதில் போதிய கவனம் செலுத்தாத போக்கையே, அதற்கான தேவையை உணராத போக்கையே, அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள், நிறுவனங்களிலும் சரி, தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள், நிறுவனங்களிலும் சரி அதிகம் காண நேர்கிறது. (சமீபத்தில் ஓய்வூதிய அலுவலகம் ஒன்றில் அங்கு வருகின்ற மூத்த குடிமக்கள் அமர நாற்காலிகளே இல்லை, சரியான கழிப்பறைவசதியே இல்லை என்பதைப் பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது).

இவற்றில் விதிவிலக்குகள் உண்டுதான். ஆனால், அவை விதிவிலக்குகளாகவே இருக்கின்றனவே என்பதுதான் நம் ஆதங்கம். பல அலுவலகங்களில் உயர் அதிகாரிகளுக்கென ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகள் அத்தனை துப்புரவாக இருக்கும். ஆனால், மற்ற ஊழியர்கள், பொதுமக்களின் பயன் பாட்டிற்காக உள்ள கழிப்பறைகள் ஏனோதானோவென்று பராமரிக்கப்பட்டு வரும் நிலையைப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இதில் இன்னொரு மிக வேதனையான விஷயம், பள்ளிகளில் மிகச் சிறிய குழந்தைகள் சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் என்பதை அவமானகரமான விஷயமாக, தண்டனைக்குரிய விஷயமாகப் பார்க்கும்படி நடத்தப்படுவதுதான். மூன்று வயது முதலே இன்று குழந்தை பள்ளிக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க வேண்டிவந்தால் உடனே ஆசிரியைகளும், ஆயாக்களும் அதற்காக முகஞ்சுளிப்பதும், குழந்தையை வசைபாடுவதும், அதன் முதுகில் ஒன்று போடுவதும், அதன் கையை கரகரவென்று இழுத்துக்கொண்டு போவதும் பரவலாகக் காணக்கிடைக்கும் காட்சி. இது குழந்தையின் உளவியலை மிகவும் பாதிக்கக்கூடியது. ஆரம்பப்பள்ளிகளில்( குறிப்பாக அரசுப் பள்ளிகளிலும், மற்றும் அரைகுறை ஆங்கில மீடியம் பள்ளிகளிலும் இது அதிகம்.

அருகிலுள்ள ஒரு பள்ளியில் மலங்கழித்த பின் குழந்தையின் பின்புறம் தென்னந்துடைப்பத்தால் அழுத்தி இழுத்து அரைகுறையாய் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிடுவாராம் ஆயா. கேட்கவே மனம் பதறியது. [அதன் மென்மையான புட்டத்தில் சிவந்து காணப்படும் கோடுகளே எங்களுக்கு என்ன நடந்தது என்பதை உணர்த்திவிடும். சமயங்களில் குழந்தைகளும் அழுதுகொண்டே விஷயத்தைச் சொல்லும். குழந்தைகளுக்கெனக் கொடுத்தனுப்பும் தின்பண்டங்களைக் கூட சில ஆயாக்களும், ஆசிரியைகளும் எடுத்துச் சாப்பிட்டு விடுவதுண்டு. ஏதாவது கேட்டால் குழந்தையை இன்னும் அடித்துவிடப்போகிறார்களே என்றுதான் வாயை மூடிக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறதுஎன்று வருந்திச் சொல்லும் பெற்றோர்கள் நிறையவே உண்டு).திட்டு வாங்கக் கூடாதே, அடி வாங்கக் கூடாதே என்ற அச்சத்தில் குழந்தை சிறுநீர் கழிக்கவேண்டிய தேவையை வெளிப்படுத் தாமல் வகுப்பில் பரிதவித்துக்கொண்டிருக்கும். இறுதியில், அடக்கவொட்டாமல் வகுப்பறையிலேயே சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டாலோ அதிக அடியும் அவமானமுமே அதற்குக் கிடைக்கும். அகவலியும் புறவலியுமாய் கூனிக்குறுகிப் போகும் குழந்தை. மேலும், எப்பொழுதுமே துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் கழிப்பறையும் சிறுநீர் கழித்தல், மலங்கழித்தலை ஒரு பெரிய அவமானகரமான செயல்களாகவே குழந்தைகளுக்குப் புரியவைக்கிறது.

ஆயாக்கள் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம். ஒரு ஆசிரியர் ஒரு ஆயா அதிகக் குழந்தைகளைக் கவனிக்கவேண்டிய நிலை இருக்கலாம். ஆனால், இந்தக் காரணங்களெல்லாம் வேறு மட்டங்களில் நிவாரணம் தேடிக் கொள்ளப்படவேண்டியவையே தவிர இதற்காய் குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவதை, அலட்சியமாக நடத்துவதை, மதிப்பழிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த நிலை ஏற்படாதிருக்க ஆயாக்களுக்கும் ஆசிரியை களுக்கும் இது குறித்த அவசியம் கடைப்பிடித்தாக வேண்டிய வழிகாட்டிக் குறிக் கோள்களும், நுண்ணுணர்வுகளும் கற்றுத்தரப்பட வேண்டியது அவசியம். அவற்றை அவர்கள் மீறினால் அதற்கான பதிலளிக்கும் பொறுப்பை அவர்கள் ஏற்கும்படி செய்யவேண்டும்.

கழிப்பறை தொடர்பான பிரச்னை ஒன்றிரண்டு கட்டுரைகளால், கருத்தரங்கு களால் முடியக்கூடிய விஷயம் அல்ல.. சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறைகளின் அவசியம், அவை போதுமான எண்ணிக்கையில், போதுமான சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட்டுவரவேண்டிய தேவை, அவற்றிற் கான தேவையை மக்கள் உணரச் செய்தல், விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கங்கள், கல்விக்கூடங் களிலேயே இது குறித்த புரிதலை ஏற்படுத்தவேண்டிய தேவை என ஒரு முழுநிறைவான அணுகு முறையே நேரிய பயனை அளிக்கும்.

அந்தந்த துறைகளில் அர்ப்பணிப்போடு இயங்கிவரும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களிடமும் அரசு இத்தகைய பணிகளை ஒப்படைக்கலாம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றால் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டுவரும் கழிப்பறைக் கூடத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறமுடியும். PPP என்று சுருக்க மாகச் சொல்லப்படும் PUBLIC - PRIVATE PARTICIPATION என்ற வழிமுறையை, அரசுகள் பின்பற்றி இந்த சமூகப் பிரச்னைகளை அரசுகள் விரைவாகத் தீர்த்துவைக்க முடியும். இன்றுகார்ப்பரேட்டு கள்தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மக்கள் நலத் திட்டச் செயல்பாடுகளுக் காகப் பயன்படுத்தியாக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில் மக்கள் நலப்பணியில் இந்த வழிமுறையைக் கையாண்டு நிறைய நலத்திட்டங்களை நிறைவேற்ற வழியுண்டு.

மக்கள் நலனே முக்கியம் என்னும்போது அரசின் செயல்திட்டங்கள், கொள்கைத்திட்டங்கள் CLOSED DOOR ACTIVITY என்பதாக இல்லாமல் கட்சிபேதங்களைக் கடந்த அளவில் தகுதி\வாய்ந்த நிறுவனங்கள், வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பைக் கோருவதாகவும், வரவேற்பதாகவும் அதற்கு வழிவகுப்பதாகவும் அமையவேண்டியது அவசியம்.




No comments:

Post a Comment