LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, July 3, 2011

உயிர் அறிய....

உயிர் அறிய....

_அநாமிகா



ஆற்றுக்கு மேலாக நீண்டுபோகும் அந்த ரயில்வண்டித் தண்டவாளங்களில் வழக்கம்போல் அன்றாடம் ஊற்றெனச் சுரந்தவாறிருக்கும் எண்ணங்களின் துணையோடு நடந்துகொண்டி ருந்தான். தன்னந் தனியாக மேலே ஆகாயமும், கீழே சுழித்தோடும் ஆறுமாக நடந்துபோகும்போது மனதிற்குள் தளும்பும் எண்ணங்கள், அவை எத்தனை சாதாரண விஷயங் களைப் பற்றியதாக இருந்தாலும், ஒருவித உன்னதத் தன்மை கொண்டு விளங்கும்.
உன்னதம் என்பதே ஒரு கற்பிதம்தான்என்பான் அருமை நண்பன். நம் வாழ்க்கையில் மீள முடியாத இயந்திரத்தனத்தால் மீட்சியற்று அமிழ்ந்து போய் விடாமலிருப்பதற்காக நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனை தான் உன்னதம்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு குழந்தை சிரிப்பதைப் பார்க்கும் போது ஏற்படும் பரவசநிலை, மழைச்சாரல் மேலே படும்போது, அருமையான இசையைக் கேட்கும்போது, ஒரு அரிய வகைப் பூவைப் பார்க்கும்போது, ஏன், சிட்டுக்குருவியை, குட்டி முயலைப் பார்க்கும் போதுகூட மனதில் பொங்கும் ஒருவித மகிழ்வும், நெகிழ்வும் உன்னதநிலை தான். மொழியிலும், உள்ளடக்கத்திலும் தேர்ந்த ஒரு கவிதையைப் படிக்கும்போது அதன் வரியிடை வரிகளில் அமிழும்போது நமக்குள் ஏற்படும் உணர்வுகூட உன்னதம்தான்...
இதையெல்லாம் நான் ஏற்கவில்லைஎன்பது போல் நண்பன் மெதுவாகச் சிரிப்பான். ஆனால், ஒரு போதும் விவாதத்தை, எதிர்க் கருத்தை அதன் ஆரோக்கியமான நிலையிலிருந்து வாய்ச் சண்டை யாக, கருத்துச் சுதந்திர மறுப்பாகக் குறுக்கிவிட மாட்டான், கொச்சைப்படுத்திவிட மாட்டான். நாம் மாறுபடுகிறோம் என்பதை மனதார ஏற்கிறோம்என்று மென்முறுவல் பூத்தவாறு சொல்லி வேறு விஷயத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்து விடுவான்.
எத்தனையோ விஷயங்களில் மாறுபட்ட கருத்து உடையவர்களாக இருந்தும் எப்படி இருவரும் இத்தனை வருடங்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் தந்தவண்ணமிருக்கும் நட்பினராக இருக்கிறோம் என்று இவனுக்கு சமயங்களில் ஆச்சரியமாக இருக்கும். யோசித்துப் பார்த்தால் எந்தவொரு விஷயத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்கள், பார்வைகள் இருக்க வழியுண்டு என்ற அடிப்படையான புரிதல் தங்களிடம் இருந்தது தான் தங்களுக்கிடையேயான நட்பு நீடித்து வருவதற்குக் காரணம் என்பது விளங்கும். இந்த அடிப்படை விஷயம் குறித்துக்கூட அவர்கள் காரசாரமாக விவாதிப்பது உண்டு.
எந்தவொரு விஷயத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பார்வைகள், கோணங்கள், அர்த்தச் சாத்தியப்பாடுகள் உண்டு என்பது உண்மைதான். எனக்கு நியாயமாகத் தெரிவது இன்னொருவருக்கு அநியாயமாகக்கூடத் தெரியலாம். அதே சமயம் அடிப்படையான நியாயம், நீதி, நேர்மை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடவியலாதது. மாறுபடலாகாதது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று ஒரு தீவிரதொனியில் கூறுவான் நண்பன்.
வேலை நிமித்தம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வடநாட்டின் வடகோடிக்கோ, தென்கோடிக்கோ ரயிலேறிச் சென்றவன். சமவயதினர் என்பதால் மட்டும் ஒருவரோடு சிநேகமாகிவிட முடிகிறதா என்ன? நண்பன் இடம் அவனால் மட்டுமே இட்டு நிரப்பப் படக் கூடியதாய், அவனுடைய மின்னஞ்சல்களாலும், கைபேசிக் குறுஞ்செய்திகளாலும், சமயங்களில் அவனுடைய மௌனங்களாலும்கூட இட்டு நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.
இன்றோ, நாளையோ ஒரு வாரம் விடுமுறையில் ஊருக்கு வருவதால் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் காலையில். குறுஞ்செய்தியைப் படித்தது முதல் மன திற்குள் ஒரு பரபரப்பும், தழுதழுப்பும் நெகிழ்வாகி யிருந்தது. அத்தகைய அரிய மனநிலை உருவாகும் போதெல்லாம் அவன் இந்த ஆற்றுப் பாலத்தின் மீது நடக்க ஆரம்பித்துவிடுவான். அவ்வேளையில் இதுவும் ஒரு உன்னத உணர்வுதான். அப்படி நடக்கும் போது சில சமயங்களில் ரயில் வரும் ஓசை கேட்கும். உடனே பாலத்தில் பக்கவாட்டுப் பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கக்கூடிய சதுரவடிவ, மூன்று பக்கங்களிலும் கம்பிக் கிராதியிட்ட மேடையில் ஏறி நின்றுகொண்டு விடுவான். அண்மையேகி வரும் ரயில் தன்னைக் கடந்து போகும்போது அடி முதல் முடி வரை அதிரும். பாதுகாப்பாய் நின்று கொண்டிருக்கிறோம் என்ற தெளிவில் அந்த அதிர்வு கூட அச்சத்தைத் தராமல் ஆனந்தமாக இருக்கும்.
இப்பொழுதுகூட ரயில் வரும் நேரம்தான். ஆற்றுப் பாலத்தைக் கடந்து போனால் சிறிது தொலைவில் வரக்கூடிய ரயில் நிறுத்தத்தில் ஐந்து நிமிடங்கள் நின்றுவிட்டுச் செல்லும் அந்த வண்டியில்தான் நண்பன் வரக்கூடும். ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டிலுள்ள சதுர வடிவ மேடையில் மேலே ஆகாயமும், கீழே ஆறுமாக தான் நின்று கொண்டிருக்க தன்னைக் கடந்து போகும் ரயிலிலிருந்து நண்பன் எட்டிப் பார்த்து ஆச்சரியத்தில் கூவியவாறு தலையசைப்பதாய்க் கற்பனை செய்து கொண்டான். புன்னகையோடு சதுரவடிவ மேடைக் காய்த் திரும்பிய போது தான் சுரீரென உறைத்தது.
இருப்புப் பாதையின் பக்கவாட்டுப் பகுதிகளில் அந்தச் சதுரவடிவ மேடைகள் எங்கேயும் இல்லை. சே, காலையில் தான் ஊரெங்கும் ஒலி பெருக்கியில் அறிவித்துவிட்டுச் சென்றார்கள். ஆற்றின் மேலுள்ள இருப்புப்பாதை வழியாக யாரும் போக வேண்டாம். பலவீனப்பட்டுப் போயுள்ள சதுரவடிவ மேடைகள் அகற்றப்பட்டுள்ளன. நாளை அல்லது மறுநாள் புதிய, உறுதியான மேடைகள் பொருத்தப்பட்டுவிடும். அதுவரை சுற்றுவழிச் சாலையைப் பயன்படுத்தவும். ஒத்துழைப்பைத் தரவும்.
இப்பொழுது அந்த வாசகங்கள் அத்தனை தெளிவாக, அட்சர சுத்தமாக உட்செவியில் கேட்டது. உடலெங்கும் வியர்க்க ஆரம்பித்தது. உதறலெடுக்க ஆரம்பித்தது. சே, இதை எப்படி மறந்து போனோம். திரும்பிவிடலாமா என்று பின்னால் திரும்பிப் பார்த்தான். பாதிவழி வந்தாயிற்று. எந்நேரமும் ரயில் வந்துவிடும். திரும்பிச் சென்றாலும் ஆபத்து, முன்னேறிச் சென்றாலும் ஆபத்து. என்ன செய்வது...
கால்கள் நடுங்க ஆரம்பித்ததில் நடை தடுக்கியது. பக்கவாட்டு மேடை இருக்கும் பாதுகாப்புணர்வு தரும் தெம்பில் இருப்புப் பாதையின் இடையிடையே அமைந்துள்ள சிறு இடைவெளிகளை அநாயாசமாகக் கடக்க முடியும். இப்பொழுது அந்த இடைவெளி களினூடாய்த் தெரிந்த ஆறு ஏதோ ஒரு பயங்கர காந்த சக்தியோடு அவனுடைய பாதங்களைக் கீழிழுப் பதிலேயே குறியாக இருந்தது. வளைவில் ரயில் வந்து விட்டால் பின் இவனிருக்குமிடம் வர இரண்டு நிமிடங்கள்தான். வளைவில் அதன் இரும்பு முகம் எந்த நிமிடத்திலும் தெரியும்.
என்ன செய்வது... அப்படியே கட்டையாக இருப்புப் பாதையின் நடுவில் கண்களை இறுக மூடிப் படுத்துக் கொண்டு விட்டால்... திரைப்படங்களில் காண்பிப்பது போல் தப்பித்துவிட முடியுமா...? அல்லது, நடுவிலுள்ள கட்டையை அடிப்புறத்திலிருந்து இறுகப் பற்றியவாறு தொங்கினால்...? கையும், விரல்களும் தாங்குமா... மடமடவென்று கயிறு கட்டித் தொங்கினால்...? இடுப்பில் அரைஞாண்கயிறுகூட இல்லை. என்ன செய்வது... கைபேசியை எடுத்து யாருக்கேனும் விவரம் தெரிவிக்கலாமா... என்னவென்று தெரிவிப்பது... கைபேசி காற்சட்டைப் பையில் இருக்கிறதா, இல்லையா...
யோசிக்க நேரமில்லை. இந்தத் தருணத்தை நடந்து தான் கடக்க வேண்டும். பறக்க வழியில்லை. ஆற்றில் குதித்தால்... நீந்தவும் தெரியாது... ஆற்றில் பாறைகள் நிறையவுண்டு எனவும் கேள்விப்பட்டிருக்கிறான்...
உடல் வேகமாக உதறலெடுக்கத் தொடங்கியதில் ஓரெட்டு எடுத்து வைப்பதே பிரயத்தனமாகிவிட்டது. என்ன செய்வது... யோசனையில் நிற்கலாகாது... நடந்து தான் கடக்க வேண்டும் இந்த இக்கட்டான தருணத்தை... கடப்பேனோ... காவு கொள்ளப்படுவேனோ... கடவுளே...! நான் யாருக்காவது, ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எனக்காகவும், மற்றவர்களுக் காகவும் நான் வாழ எனக்கிருக்கும் நாட்கள் இல்லா மலாகிவிடக் கூடாது...
உயிர் வெல்லம்என்பான் நண்பன். உயிர் அதைவிட மேல்... உயிர் அனையஎன்பார்கள். எல்லாமே உயிர் அறியத்தான்... நான் வாழ வேண்டும். என் மனவீச்சில் ஏதோ காரணத்தால் அந்த ரயில் தாமதமாகி விடலாகாதா... நான் வாழ வேண்டும்... நான் வாழ வேண்டும்...
ஒரு அரைமயக்க நிலையில் ஆற்றின் மேலிருந்த இருப்புப் பாதையைக் கடந்து கீழிறங்கி அதீதக் களைப்பை மனமும், உடலும் துல்லியமாக உணர வீடு நோக்கி நடக்க ஆரம்பித்து, வீட்டின் வாசலை அடையும் போதுதான் அவன் அறிவு மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஏன், அந்த ரயில் வர வில்லை... எதனாலோ தாமதமாகியிருக்கிறது. நான் தப்பித்தேன்... உயிர் அறிய நான் பிழைத்திருக்கிறேன்... வாழப் போகிறேன்.
வீட்டினுள் நுழையும்போது கூடத்திலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் தென்னிந்திய ரயில் வண்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ரணகளமாகி விட்டதாகச் செய்தி அலற ஆரம்பித்தது.


[*19 மே 2011 10:43, தேதியிட்ட உங்கள் நூலகம் இதழில் வெளியான சிறுகதை]

எல்லோரும் இந்நாட்டு மன்னர்!

சிறுகதை
எல்லோரும் இந்நாட்டு மன்னர்!

_அநாமிகா














வழக்கமாக குழந்தைகளுக்கும் பள்ளி விடுமுறை இருக்கும். சனி ஞாயிறு நாட்களில் மதியம் 11 மணி சமயம் அந்த பலூன்காரர் பல  நிறங்களில்பல வடிவங்களிலான பலூன்களைக் கொண்டு வந்து அந்த சந்தையைச் சுற்றியுள்ள தெருக்களில் “பலூன்பலூன் - பளபளப்பான பலூன் - புதுசு புதுசான பலூன் - தினுசுதினுசான பலூன் பட்டென்று வெடிக்காது...   ‘புஸ்ஸென்று சுருங்காது... பெரிய பலூன்... சிறிய பலூன்... சட்டென்று வாங்குங்கள் சிறப்படையுங்கள்...பணம் கொடுத்து வாங்குங்கள் பெருமை கொள்ளுங்கள்...

 பிள்ளைகளுக்கு அந்த பலூன்காரர் கையில் இருக்கும் பலூன்கள் எந்த அளவுக் குப் பிடிக்குமோ அதைவிட அதிகமாய் அவருடைய வாயி லிருந்து முத்துமணி ரத்தினங்களாய்ச் சிதறும் அலங்கார வார்த்தைகள் பிடிக்கும். அலங்கார வார்த்தைகள்   மட்டுமல்ல,   அவரிட மிருந்து அர்த்தம் செறிந்த  வார்த்தைகளும் இயல்பாய்,  குழந்தைகள் மீது கொண்ட மெய்யன்போடு   வெளிப்படும். எனவேஅந்த பலூன்காரரின் குரலைக் கேட்டதுமே அவர்   நடந்துகொண் டிருக்கும் தெருவிலிருந்தும்அக்கம்பக்கத்துத் தெருக்களிலிருந் தும் ஏழெட்டு வயது முதல் பதினான்குபதினாறு வயது வரையிலும் கூடப் பிள்ளைகள்  அவரைச் சூழ்ந்துகொண்டு பின் தொடர ஆரம்பித்து விடுவார் கள்.

ஒரு ஊர்வலம் போல் அவரைத் தொடர்ந்து செல்வார்கள். பலப்பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அவரோடு செல்வார்கள். அவரும் தனக்குத் தெரிந்த பதில்கள்விவரங்களையெல்லாம் பிள்ளைகளுக்கு   எடுத்துக் கூறிக் கொண்டே வியாபாரத்தையும் கவனிப்பார்.கையில் காசுள்ள   பிள்ளைகள்,பலூன் வாங்குவார்கள்.சில பெரிய பிள்ளைகள் அப்படி பலூன்களை வாங்கி  காசில்லாத சிறிய பிள்ளைகள் எவருக் கேனும் அவற்றைத் தந்து மகிழ்வார்கள். ஓரிரு மணி நேரங்கள்  அலைந்து திரிந்து விற்ற பிறகு அந்தத் தெருக் களின் மையப்புள்ளியாய் அமைந்திருக்கும் ஒரு ஆலமர நிழலில் பலூன்காரர் அமர்ந்து கொள்ளபிள்ளை களும் அவரைச் சுற்றி அமர்ந்துகொள்வர். அவர்களில் ஒருவன் அல்லது ஒருத்தி ஓடிச்சென்று அருகிலிருக்கும் வீட்டிலிருந்து சொம்பு நிறைய தண்ணீரோநீர் மோரோ வாங்கிக் கொண்டு வந்து அவரிடம் தருவான். 

தாகம் தீர அவர் அதைக் குடிப்பதைப் பார்த்துப் பிள்ளை களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.  சில சமயங்களில் பலூன்காரர்   அரிசிப்பொரி,  வேர்க் கடலைபட்டாணி என்று ஏதாவது கொண்டுவருவார்.  அதை அந்தக் குழந்தை களில் சற்றே பெரியவனாகபெரியவளாக இருப்பவர்களிடம் கொடுத்து மற்றகுழந்தைகளுக்குச் சரிசமமாகப் பங்கிட்டுத் தரச் சொல்வார். சில சமயங்களில் விற்காமல் தங்கிவிட்ட பலூன்களை  ஆளுக்கு ஒன்று அல்லது இரண்டு என்று அவரே பங்கிட்டுத் தருவார்.    பட்டாணியோ,  பலூனோ எத்தனை குறைவான அளவேயானாலும் அந்த மனிதர்மேல் கொண்டிருந்த அன்பில் பிள்ளைகள் அதை அரிய சொத்துபோல் இருகைகளையும் விரித்து வாங்கிக்கொள்வார்கள்.  பிறகு அவர்களுடைய கலந்துரையாடல் அல்லது கேள்வி - பதில் அமர்வு ஆரம்பமாகும்.

அன்றும் அப்படித்தான் ஆரம்பானது.  எல்லாப் பிள்ளைகள் கைகளிலும் இரண்டி ரண்டு பலூன்கள் இருந்தன.  அந்த பலூன்களை அந்தச் சிறு வியாபாரி  அவர்க ளுக்குத் தரவில்லை.  மேலும் பலூன்கள்  மட்டுமல்லாமல் அந்தக் குழந்தைகளின் சின்னஞ்சிறு தலைகளிலெல்லாம் வண்ண  வண்ணக்   காகிதத்திலும்அட்டை யிலும், ஜிகினாத்தாள் களிலும் செய்யப்பட்ட  கிரீடம்பொருந்தியிருந்தது.    அதை அணிந்திருந்த குழந்தைகள் முகங்களில் பொலிவும்,பெருமிதமும் அழுத்தமாகப்படர்ந்திருந்தன.அவ்வப்போது கையால்  கிரீடத்தைத் தொட்டுப்பார்த்தபடிநீவிவிட்டபடிசரி செய்தபடி புன்னகைத்துக்   கொண்டி ருந்தார்கள் பிள்ளைகள்.   குழந்தைகளின் சிரிப்பைக் கண்டு நிறைவாக இருந்தது பலூன்காரருக்கு.  அந்தக் குழந்தைகள் எல்லோரையும் கனிவாகப் பார்த்தபடி, “எல்லோரும் இந்நாட்டு  மன்னர்கள்,”  என்று தனக்குத் தானே கூறிக் கொள்வதாய் மெல்லிய குரலில் முனகினர்.

அதைக் கேட்டுக் குழந்தைகள் ஆரவாரமாகக் குதித்துக் கூச்சலிட்டுக் கைதட்டி னார்கள்.  “பலூன் ஐயா இதையே தான் அவர்களும்  கூறினார்கள்.

எவர்கள்?”

இன்று பள்ளிக்கு வந்து இவற்றையெல்லாம் எங்களுக்கு வழங்கினர்களே.  தேர்தலுக்காக பள்ளிப் பிள்ளைகளை வீடுவீடாகச் சென்று கொள்கைப்பரப்புத் திட்டப் பதிவைத் தர வைக்க வேண்டுமென்று அனுமதி கேட்டு எங்கள் தலைமை யாசிரியரிடம் பேசிய பிறகு ஒவ்வொரு வகுப்பாக வந்து இந்த பலூன்களையும் அட்டைக் கிரீடங்களையும் மாணாக்கர் களிடம்   விநியோகித்தார்கள்.

ஒரு சிறுவன் ஆர்வமாகச் சொல்ல அவன் வகுப்புத் தோழி தொடர்ந்தாள்.

இந்தக் கிரீடத்தை அணிந்துகொண்டுமன்னர்களாகவும் ராணிகளாகவும் நாங் கள் நகர் வலம் வர வேண்டும்.  ஊரும்நாடும் நலம் பெறுவதற்கான,  வளம் பெறுவதற்கான நல்ல வாசகங்களை நாங்களே எங்கள் பலூன்களில் உத்தரவுகளாக எழுதி ஒட்டிக் கொண்டுவர வேண்டும்.அதற்காகத் தான் ஆளுக்கு இரண்டு பலூன்கள் தந்திருக்கிறார் கள்

அப்படியாசரி.அதுதான் ஏற்கனவே உங்களுக்குபலூன்கள் கிடைத்தாயிற்றே. பின்,  ஏன்  என்னிடம் வந்திருக்கிறீர்கள்?”பலூன்காரர்  சிரித்துக்கொண்டேதான்  கேட்டார்.  என்றா லும்குழந்தைகள் முகம் வாடி விட்டது.

ஒரு சிறுமி கோபமும்,வருத்தமுமாய் அவரை நெருங்கிவந்து கேட்டாள்.உங்களைப் பார்க்க வருவது பலூனுக்கு  மட்டும் தானா?  எங்கள் மீது என்றும் அன்பு வைத்திருக்கிறீர்கள் என்ற காரணத்தினால் தானே... எப்பொழுதும் எங்கள் மீது அன்பு வைத்திருப்பவரையும் ஏதோ ஒரு நாள்அதுவும் தேவைப்பட்ட நேரத்தில் மட்டும் எங்கள் மீது அன்பு காட்டுபவரையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாத  அளவு  நாங்க ளொன்றும்  பலூனுக்காகப் பல்லிளிப் பவர்கள் அல்ல.

அந்தச் சிறுமியின் ஆதங்கத்தில் விளைந்த ஆத்திரத்தைக் கண்டு பலூன்காரர் முகத்தில் நெகிழ்ச்சி  தோன்றியது.   அவளுடைய வருத்தத்தைப் போக்க வேடிக் கையாகக் கேட் டார்.    ஆக, கிரீடங்கள்   அணிந்து கொண்டிருக்கிறீர்கள்.  எனவே நீங்கள் எல்லாம் மன்னர்கள்ராணிகள்... அப்படித் தானே...?!”

இப்பொழுது பின்வரிசையிலிருந்து சற்றே பெரியவனாகக் காட்சியளித்த ஒரு மாணவன் வேகமாக முன்னோக்கி  வந்தான்.

அதெப்படி ஐயாகிரீடம் அணிந்துவிட்டால் மட்டும் நான்  மன்னனாகி விட முடியுமா என்னஎனக்கு அரியணை வேண்டும்செங்கோல் வேண்டும்அரசவை  வேண்டும்,  சாமரங்கள் வேண்டும்...

மூச்சுவிட அவன்  நிறுத்தியவுடன் இன்னொருவன் தொடர்ந்தான்.   மந்திரிகள் வேண்டும்படை வீரர்கள் வேண்டும்தளபதிகள் வேண்டும்... படைக்கலன்கள் வேண்டும்...

இன்னொருத்தி தொடர்ந்தாள்.மிக முக்கியமாக சாம்ராஜ்யம் வேண்டும்அதிகாரம் வேண்டும்எதிரிகள் வேண்டும்... குடிமக்கள் வேண்டும்...

இவையெல்லாம் இருந்துவிட்டால் நீங்கள்   மன்னர்களாகவும்,  ராணிகளாகவும் ஆகிவிடு வீர்கள்!  அப்படித்தானே?” - பலூன்காரர் குறுஞ்சிரிப்போடு  கேட்டார்.

ஆனால்,அவர் கேட்டவிதமே பட்டியலிடப்பட்ட  விஷயங்களின் போதாமையைப் பிள்ளை களுக்கு உணர்த்திவிட்டன.

ஹாமிக முக்கியமான ஒன்றை நாம் மறந்து  விட்டோம்,” என்று ஒரு பையன் தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டு தன் ஞாபக மறதிக்காய் தன்னைத் தானே கடிந்து கொண்டவனாய்உரக்கக்கூவினான்.   “நாட்டை வளமாக வைத்தி ருப்பவரே,  குடிமக்களை அடிப்படைத்தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டுகல்வி – கேள்வியில் சிறந்தவராய் அவர்களை  வளர்ச்சிப் போக்கில் வழி நடத்துபவரே ஆளத் தகுதி வாய்ந்த மன்னர்.

குடிமக்களுக்குப்பெற்றோராய்,புரவலராய்,  நல்லநண்பராய்,  காட்சிக்கு எளியராய்,  கடுஞ் சொல் அற்றவராய் இருப்பவரே சிறந்த மன்னர்.

பசிபட்டினி,பஞ்சம்,சுரண்டல்,  பாதுகாப்பின்மைகலவரம்குரூரம்,வன்முறை ஆகிய பலவற்றிலிருந்தும் தன் குடிமக்களைக் காத்திருப் பவரே சிறந்த அரசரும்அரசியுமாவர்.

குழந்தைகள் அத்தனை ஆர்வமாய்க் கூறியதைக் கேட்டு பலூன்காரரின் முகம் பூரித்தது.

இப்பொழுது இன்னொரு சிறுவன் கேட்டான்.ஐயாஎங்கள் பள்ளியைக் கட்டியவரின் கட்சிக்காரர்கள்தான் இன்று அவர் சார்பில் எங்கள் தலைமையாசிரியரை  வந்து பார்த்து  இந்தக் கிரீடங்களையும் பலூன் களையும் விநியோகித்து நாளை  மன்னர்களாக எங்களை  பாவித்து  ‘நாடு வளம் பெறத் தேவையான கட்டளை வாசகங்களைஉத்தரவுகளாக அவரவர் பலூன்களில் பலூனுக்கொன்று என்ற அளவில் எழுதி வரச்சொல்லியிருக்கிறார் கள். ஆனால்அவர்களையும் கண்டித்து நாங்கள் எழுதினால்பொறுத்துக்கொள்வார்களா? ”

அந்தச் சிறுவனின் அறிவு பூர்வமான கேள்வியைக் கேட்டு பலூன்காரர் அவன் தலையில் அன்போடு வருடியவாறே இவ்வாறு கூறினார்.

திறமையான மன்னர்கள் மக்களுக்கு நல்லதே  கூறுவார்கள். சமூகத்திற்கு நன்மை பயக்கும் உத்தரவுகளைசுயநலம் கருதியோ,அரசவையில்உள்ள,குடிமக்கள் மத்தியில் உள்ள யாருக் கேனும்   பயந்தோ எடுத்துச் சொல்லாமல் இருக்க மாட்டார்கள்.  எனவேநீங்கள் ஒவ்வொ ருவரும் உங்களை நீதிநேர்மை  தவறாத, செங்கோல் வழுவாத மன்னராகராணியாகப் பாவித்துஉங்கள் குடிகள் மீது உண்மையானஅக்கறையோடு,யார் என்னசொல்வார் களோ என்ற பயமின்றி உங்களுடைய உத்தரவுகளை அவரவர் பலூன்களில் எழுதிக்கொண்டு நாளை ஊர்வலத்தில்  கலந்துகொள்ளுங்கள்.உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மறுநாள் தத்தம் பலூன்களில் எழுதி ஒட்டப்பட்ட வாசகங்களோடு வந்து நின்ற பிள்ளை களில் பலருடைய வாசகங்கள் அவர்களுடைய பெற்றோர்களால், வீட்டுப் பெரியவர் களால்வகுப்பாசிரியர்களால் வழக்கமானபழமொழிகளும், சொல்வழக்கு களுமாக  அமைந் திருந்தன.

மாதிரிக்கு இரண்டு:

மன்னர் நாமேஆள்வோம் நலமே!

அரசன் எவ்வழி - குடிகள் அவ்வழி!

பலூன்காரரோடு பேசிய பிள்ளைகளின் வாசகங்கள் மட்டும் வித்தியாச மாகத் தெரிந்தன.  அந்தப் பிள்ளைகளை,அவர்களின் வாசகங்களை ஊர்வலத்தில் இடம் பெற  அனுமதிப்பதாவேண்டாமா என்று பள்ளிப்பொறுப்பாளர்களிடையே காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது.  அந்த வாசகங்களில் சில இங்கே தரப்பட்டுள்ளன.

1.அட்டைக் கிரீடம் எமக்குஆயிரங்கோடி பெறும் அணிமகுடம் உமக்கா?

2.மக்களிடம் மெய் அக்கறை.  அதுவே அரச முத்திரை.

3.மக்கள் மன்னர்களாகலாம்மந்தைகளாகலாகாது.

4.மக்களைத் தட்டிக் கேட்கலாம் மன்னர்வெட்டிச் சாய்க்கலாகுமோ?

5.எமக்கு உணவளித்தல் உம் கடமைஅதற்காய் உம்மை நீரே பாராட்டுதல்  மடமை.

6.அரையடி குடிசைக்குள் என்னை அரசாளச் செய்து அடிவானம் வரை நீளுகின்றன உம் எல்லைகள்.

7.நாளைய மன்னர்கள் நாங்கள் என்கிறீர்.  இன்றேன் எம்மை மதிப்பழக்கிறீர்?

8.மன்னராயிருத்தல் பெருமை பீற்றிக் கொள்ள அல்ல.  மக்களைப் பேணும் மாபெரும்  பொறுப் பேற்றுக் கொள்ள.

9.கொளுத்தும் வெயிலில் எங்கள் வீதி ஊர்வலம்குழந்தைத் தொழிலாளர் கொடுமையை ஒழிப்போம்!

*[உங்கள் நூலகம் ஏப்ரல்2011 இதழில் வெளியானது]