LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, April 14, 2014

கருகத் திருவுளமோ?
ரிஷி


ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் வைதேகி.
வைகை நதிப்படுகையில் புதையுண்டு கிடந்தாள் பிணமாக.
காதலித்துக் கைப்பிடித்தவன் தலித் என்பதால் அவன் உயிர் வலிக்க
அருமை மகளின் உயிரும் உடலும் வலித்துத் துடித்தடங்க
ஆளமர்த்திப் பெண்ணைக் கொலை செய்து
தன் கௌரவத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறாள் தாய்.
மகனும் சகோதரர்களும் இழிதுணையாய்.

உண்டாயிருக்கும் செய்தியைத் தாயிடம் ஆசைஆசையாய் தெரிவித்தவளை
பாசாங்குப் பாசம் காட்டிப் பிறந்தவீட்டுக்கு வரவழைத்து
கருவைத் துண்டாக்கும்படி கட்டாயப்படுத்தியதில் குலைந்துபோனது
தாய்மையின் கௌரவம்.
விரும்பி வரித்தவனைத் துறந்துவிட்டு வரும்படிக் கட்டாயப்படுத்தியதில்
தொலைந்து பறிபோயிற்று தாலியின் கௌரவம்;
தாம்பத்தியத்தின் கௌரவம்.
தமயன், தாய்மாமன்களின் குரூரத்தில் கரிந்துபோனது உறவுப்பிணைப்பின் கௌரவம்.
இத்தனை வெறித்தனத்திலா இடம்பிடித்திருக்கிறது
சாதியின் கௌரவம்?
சமூகத்தின் கௌரவம்?

அன்பின் வெளிப்பாடு இது என்று கூடக் கூறலாம் சிலர்..
பெற்றோரும் பலிகடாக்களே என்று பேசலாம்..
மனுவின் நாசவேலை என்று சொல்லி முடிக்கப் பார்க்கலாம்……

ஊரெங்கும் ஒலிவாங்கிகள் ஓயாது அதிர்ந்தபடி
காரோடும் வீதிகளின் இருமருங்கும் வாக்குறுதிகள் சிதறியபடி..
தொடரும் கௌரவக்கொலைகளைக் கண்டனம் செய்து
ஏன் எந்தக் கட்சியுமே ஒரு சுவரொட்டியும் ஒட்டவில்லை?
தேர்தல் மும்முரத்தில் கிராமம் கிராமமாய் சென்றவண்ணம்
வேட்பாளர்களும் தலைவர்களும்.
ஆம், வேறு வேறு சாதிகளாய் வாக்காளர்களைப் பிரித்தால்தான்
வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க முடியும்.
சமூக சீர்திருத்தவாதச் செம்மல்கள் சினிமாத்துறையினர்
சும்மாயிருப்பது ஏன்?
சாதிப்பிரிவினையே விறுவிறுப்பான கதைக்களம்.
வசூலை அதிகரிப்பதே குறியாய்
ஆதலினால் காதல் செய்வீர் என்று நீதி கூறி
அவர்பாட்டுக்குச் சென்றுவிடுவார் அடுத்த படமெடுக்க.
ஒருவேளை எங்கேனும் அதிசயமாய் மக்கள் எதிர்த்தெழுந்தால்
அவர்களை எதிர்மறையாய் ஆய்ந்தலச முற்படுவார் சில அறிவுசாலிகள்.

காதல் திருமணங்கள் சாதியொழிப்புக்கு வழிகோலும் என்போரின்
வாக்காளர்கள் என் வணக்கத்திற்குரிய ஆசான்கள் என்போரின் _
அரசாங்கங்கள், அதிகார பீடங்களின்
பாராமுகங்களின் நேரேதிரே பூதாகாரமாய் வளர்ந்துவருகின்றன
கௌரவக் கொலைகள்.

பல்கிப் பெருகிப் புரையோடி வளர்கிறது மனித நாகரிகத்தையே பழிக்கும் நச்சுவிதை; மனம் பிளக்கும் வதை _
இனியும் எத்தனை காலம் தொடர அனுமதிக்கப்போகிறோம்
இதை?


* டெக்கான் க்ரானிக்கள் நாளிதழ் ஏப்ரல் 1,2014 சென்னை / ராமநாதபுரம் மார்ச் 31.

தலித் இளைஞர் சுரேஷ், அவர் மனைவி வைதேகி (வயது 23) கடந்த ஆகஸ்டு மாதம் மனம் விரும்பித் திருமணம் செய்துகொண்டனர். பெண் உயர் சாதியை சேர்ந்தவர் எனப்தால் அவர் வீட்டில் எதிர்த்தனர். ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணான வைதேகி தான் கருவுற்றிருக்கும் நல்ல செய்தியைத் தாயோடு பகிர்ந்துகொள்ள விரும்பி தாயோடு தொலைபேசியில் தொடர்புகொண்டதன் விளைவாக, தாய்க்கு உடல்நலம் சரியில்லை என்று பொய் கூறி வைதேகியை  வீட்டிற்கு வரவழைத்து ஐந்து மாத கருவைக் கலைத்ஹ்டுவிடும்படியும், கணவனை விட்டு வந்துவிடும்படியும் வீட்டார் கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். மறுத்ததால் ஆள்வைத்து வைதேகியை கொலை செய்திருக்கின்றனர். கணவர் சுரேஷ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்ததன் பேரில் எடுக்கப்பட்ட விசாரணையில் இது தெரியவந்துள்ளதாக டெக்கான் க்ரானிக்கள் ஏப்ரல் 1 தேதியிட்ட நாளிதழில் செய்தி வந்துள்ளது.
Description: Print Friendly


’ரிஷி’ கவிதைகள்

1.   சாக்கடையல்ல சமுத்திரம்
ஒவ்வொரு நதிக்கும் உயிருண்டு என்றுதான் உண்மையாகவே எண்ணியிருந்தேன்.
உயிரோடு ஒட்டிவரும் உடம்பும், உள்ளமும், உணர்வும் எல்லாமும்தான்...
வெக்கையைப் போக்கி, தவித்த வாய்க்குத் தண்ணீர் தந்து
இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையே எத்தனையோ காற்றுப்பாலங்கள் உருவாக்கி
அள்ளும் கொள்கல அளவுக்கேற்பத் தன்னை தகவமைத்துக் கொள்ளும் நதியின் நன்னீர்
பொங்குமாக் கடலின் மங்கலத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கும்;
இனங்கண்டுகொள்ளும் தன்னை அத னோர் அங்கமாய் என்றே இன்றுவரை நம்பியிருந்தேன்.
தன்மேற் செல்லும் தோணியிலிருந்தும் படகிலிருந்தும்
சாகரப்பரப்பில் சவாரி செய்யும் கப்பலின் பிரம்மாண்டத்தைப்
புரிந்துகொண்டிருக்கும் என்று உறுதியாயிருந்தேன்.
வரம்புக்குட்பட்ட தன் நீரளவிலிருந்து விரிகடலின் அகல்விரிவை
விளங்கிக்கொண்டிருக்கும் என நினைத்தேன்.
சிறுகுழந்தையாய் தன்னில் வந்துசேரும் நதிநீர்களை
அரவணைக்கும் சமுத்திரத்தின் அருமை பெருமையை
ஆராதிக்க அதற்குத் தெரிந்திருக்கும் என்று தீர்மானமாயிருந்தேன்.
நதியோ இன்று சமுத்திரப் பிறப்பைச் சாக்கடையாக்கிப் பழித்து
காறித்துப்பிய வன்மத்தில்
விண்விண் என்று வலிக்கிறது; கண்கலங்குகிறது....
கடந்துவிடும் இதுவும்.
வறண்டுபோகலாம்; வரலாற்றில் மட்டுமே காணக்கிடைக்கலாம்
நதியொரு நாள்;
நிரந்தரம் சாகரம் நான் வாழுங்கால மெல்லாம்.
 இதுநாள் வரை நதிக்கரையோரமிருந்தேன் நல்விருந்தாடியாய்....
உரித்தாகும் அதற்கு என் அன்பும் நன்றியும்.
சாகரப் பிரவாகத்தில் நான் இரண்டறக்கலந்துவிட்ட சிறுதுளி யென்றும்.


2.   பிறவிப் பெருங்கடல்

சமுத்திரத் தண்ணீர் சாப்பாட்டிற்கு சரிவராது என்பாய்;
சதாசர்வ காலமும் சுனாமியைக் கக்கக் காத்துக்கொண்டிருக்கிறது என்பாய்.
சாப்பாடு மட்டுமல்லவே வாழ்க்கை!
சத்தியத்திற்குக் கட்டுப்பட்டதேபோல்
தரையரண் தாண்டி ஊரில் புகா சமுத்திரம்
உத்தமம் தான்.
வெளித்தள்ளிய ஆழிப்பேரலைகளினூடே
நேராப் பிரளயம் என் நெஞ்சில் தளும்புகிறது.
நன்றிக்குரியது.
சிறியதும் பெரியதுமாய்
சமுத்திர உயிரிகள் லட்சோபலட்சம்
சொல்லித் தீரா கவிதைவரிகளாய்.
என்றேனும் எழுதிப் பார்ப்பேன்…
சென்று வருகிறேன் நதியே
சாகர சங்கமம் பிறவிப் பயனாக.






தந்திர வணிகம், அம்பலம் _ ரிஷியின் கவிதைகள்

    ரிஷியின் கவிதைகள் 

1.  தந்திர வணிகம்


அறிவார்த்தமாய் பேசுவதான பாவனையில்
விலாவரியாய் வர்ணித்துக்கொண்டே போகலாம்
OUT OF CONTEXT_இல் வரிகளைக் கடைவிரித்தால்
விற்பனை அமோகம் தான்.
அரசுப்பேருந்தில் பெண்ணை இடிப்பவனை சாடிக்கொண்டே
அவனை இடம்பெயர்த்துவிடும்
பேராண்மையாளர்களை நிறையப் பார்த்தாயிற்று.
பெண்ணுரிமை முழக்கமிட்டு கூடவே
பெண்ணைப் பொருளாக்கும் வழக்கத்தை வலியுறுத்தும்
ஒளி-ஒலி ஊடகங்களின் இரட்டைவேடம் அருவருப்பூட்டுகிறது.
அங்கங்கே ஒப்பனை கலைந்தொழுக
அம்பலமாகிவிடும் பொய்முகங்கள்.
பொங்கியெழவும் புறக்கணிக்கவுமாய் என்றுமுண்டு
அற்பத்தனங்கள் அன்றாடம் அற்பப்பதர்கள் அனேகம்


4.   அம்பலம்

ஆரூடக்காரியல்ல நான்;
உளவியல்நிபுணரும் அல்ல தான்.
அது ஏதோ தெய்வசக்தி ஒன்றுமில்லை.
என்றாலும் சிலர் எதிரே வரும்போதே
அவர்கள் கேட்கவிருப்பதும்
அந்தக் கேள்விகளுக்குள் கரந்துகிடப்பதும்
தெளிவாகிவிடுகிறது!
காலை வைப்பதற்கு முன்பாகவே கண்வழியே
உணரக் கிடைக்கும் நீரைப்போல் எனலாமா?
வேண்டாம்- சின்னத்தனங்களுக்கும் கல்மிஷங்களுக்கும்
தண்ணீரை உவமையாக்குவது முறையல்ல.
குப்பைத்தொட்டி யிருக்குமிடத்தை நெருங்குகையிலேயே
குமட்டிக்கொண்டுவருவதைப்போல் என்று சொல்லலாமா?
துப்புரவுப் பணியாளர்களைக் கேவலப்படுத்துவதாய்
திரிக்கப்பட்டுவிடலாம். வேண்டாம்.
உள்ளுணர்வோ, பட்டறிவோ, காலமோ, கனிந்துவரும் ஞானமோ……
இன்னும் சில நாட்களில் விரியப்போகும் புத்தகத்தின்
நஞ்சுநிறை பத்திகள் அல்லது பக்கங்கள் இரண்டை
நன்றாகவே வாசிக்கமுடிகிறது என்னால் இன்றே!











0

ரிஷி கவிதைகள் _ மச்சம், பசி, உயிர், அதில் எதில், பழிக்குப்பழி

ரிஷி கவிதைகள் _  மச்சம், பசி, உயிர், அதில் எதில், பழிக்குப்பழி






















1.மச்சம்
 இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம் 
புதிதாக முளைத்த மச்சத்திற்கும்
ஆரூடங்கள் உண்டுதான்.
நிலைக்காத போதிலும்
நாளையே அழிந்துபோகுமென்றாலும்
ஒவ்வொரு புதிய மச்சமும்
பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய்
புதியதோர்(தலை) எழுத்தாய்
உருமாறிக்கொள்ள,
மீள்வரவாகக்கூடும்
குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள்
புதிய விரல்களை நாடியவாறு


2. பசி
தச்சன் கை உளி செதுக்குவதும்
பிச்சைப்பாத்திரத்தை நிரப்பக்கூடும்
அன்னதானங்களால் ஆகாதவாறு
ஒன்றாகவும் பலவாகவும் ஆகிய
காதலே போல்
அவரவர் பசியும் அவரவருக்கேயானதாக.


3.உயிர்
வெல்லம்;
அல்ல-
வெண்கலம்;
இன்னும்-
வெங்காயம்;
வேறு-
பெருங்காயம்
சமரில் பட்டதோ?
சாம்பாரிலிட்டதோ?


4. அதில் எதில்?
வெயில் தணிய விட்டிருக்கும் நீர்
கிளைபிரியும் ஆறாய் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது
அறையெங்கும்.
அசந்தநேரம் என் காலைக் கவ்வியிழுத்து
என்னைக் கவிழ்த்துவிடக் காத்திருக்கும் ஒரு துளி
அதில் எதில்?


5. பழிக்குப்பழி
 சின்னத்திரையில் ஒரு நிழலுருவம்.
சித்தியோ மாமியோ
அண்ணனோ மருமகனோ
தென்னை மரத்தடியில் இளநீரை
ஆணெனில் சீவிக்கொண்டும்
பெண்ணெனில் சீவச் சொல்லிக்கொண்டும்.
யார் தலையையோ வெட்டப்போவது
பார்வையாளர்களுக்குக் குறிப்புணர்த்தப்படுகிறது.
காற்று ஒரு சுழற்று சுழற்றிக் கண்டுபிடித்துக்
கொண்டுவந்து நிறுத்தியது அதே மரத்தடியில்-
மெகா சீரியல்
மகானுபாவ
கதாசிரியரையும்
இயக்குனரையும்.
மடமடவென்று
குறிபார்த்துக் காய்களை கீழே வீசியெறிந்தது
தென்னை.