LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 25, 2015

மதிப்புரையின் மறுபக்கம்! - சிறுகதை - அநாமிகா

மதிப்புரையின் மறுபக்கம்!

அநாமிகா

{*பன்முகம் ஜூலை-செப்டம்பர், 2006 இதழில் வெளியானது}





ந்தப் பாடலை நீங்கள் அடிக்கடியோ, அபூர்வமாகவோ கேட்டிருக்கக் கூடும். குறிப்பாக, பின்வரும் பத்தியை அல்லது பகுதியை:

பருவம் வந்த அனைவருமே காதல் 

கொள்வ தில்லை;

காதல் கொண்ட அனைவருமே 

மணமுடிப்ப தில்லை;

மணமுடித்த அனைவருமே சேர்ந்து

வாழ்வ தில்லை;

சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து 

போவ தில்லை.

இதையே சற்று நவீனமாக மாற்றிப் பாருங்கள். சந்தம் இல்லாவிட்டால் பரவாயில்லை.

பிரசுரமாகும் புத்தகங்கள் எல்லாமே 

மதிப்புரை பெறுவ தில்லை;

மதிப்புரை பெறும் எல்லாமே 

நியாயமான 

மதிப்புரை பெறுவதில்லை;

மதிப்புரையாளர்கள் எல்லாமே 

நடுநிலையாளர்க ளில்லை;

நடுநிலையானவர்களுக்கோ 

மதிப்புரைக்க வாய்ப்ப தில்லை.

‘அனைவருமே’ என்ற வார்த்தையில் உள்ள அர்த்தக் குழப்பமும் அப்ப டியே ‘எல்லா மே’யிலும் தொடர்வதையும் அடிக்கோடிட்டுக் காட்டியாக வேண்டும்.


திப்புரைக்கு உரியதாகும் வாய்ப்புப் பெற்ற நூல்களில் ஒன்று அந்த வட்டமேஜையின் மத்தியில் கிடக்க, அதைச் சுற்று அந்த நாலு பேரும் அவரவருக்கேயுரிய கோணங்களிலும் கோலங்களிலும் அமர்ந்திருந் தனர். தவிர்க்கமுடியாத தேனீர்க்கோப்பைகளும் அவர்களுக்காய் அந்த மேஜையில் ஆஜராகியிருந்தன.

சம்பந்தப்பட்ட புத்தகத்தை எழுதிய படைப்பாளி மேற்படிக் குழுவினரின் அருள்வட்டத்திற்குள் இடம்பெறாதவர் என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்க்குழுவினரின் அன்புக் கும் ஆளாகியிருப்பவர். எனவேதான், அவர் படைப்பை மதிப்புரைப்பதா, வேண்டாமா என்ற வாதப் பிரதிவாதம் அத்தனை முனைப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

“நம்முடைய இதழில் அந்தப் புத்தகத்தை மதிப்புரைக்கு எடுத்துக் கொள் வதே அதற்கு ஒரு இலக்கிய அந்தஸ்தை நாம் தருவதாகிவிடுகிறது.” என்பது ‘கலியுகவாதி’யின் வாதம்.

“ஆனால், தீவிர வாசக வட்டத்தின் பரவலான கவனத்தைப் பெற்றிருக் கும் இந்தப் புத்தகத்தை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் நம் குழு மனப்பான்மை அம்பலமாகி விடும்.” என்றாள் ‘திரிலோகசுந்தரி’.

“அதோடு, நம்மிடம் புத்தகம் குறித்து எதிர்க்கருத்து ஒன்றும் இல்லை என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அவ்விதமாய் புத்தகத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏற்பட்டுவிடவும் வாய்ப்பிருக்கிறது.” _ இது ‘அண்டசராசரன்’.

எதிர்ப்பதற்காகவே உருவாவதே எதிர்க்கருத்து என்பது இங்கே எழுதப் படாத விதி.

ஆனாலும், எல்லோரும் மக்களாட்சியில் மலர்ந்தவர்கள் என்பதால் ‘பெரும்பான்மைக் கருத்தை புறக்கணிக்கத் தலைப்படவில்லை.

நால்வரில் ’இரண்டேகால்’ பேர் அந்தப் புத்தகத்திற்கு ‘இதழில் மதிப்புரை வழங்கவேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததால், அப்படியே செய்வது என்று முடிவாயிற்று.

மூன்றாவது நபரின் மனசாட்சி கால்பங்கு இன்னும் உயிர்ப்போடிருந் ததால் அவர் ‘கால்’ நபராகக் கொள்ளப்பட்டார். மற்ற இருவரில் ஒருவர், சம்பந்தப்பட்ட படைப்பாளியை பழிக்குப் பழி வாங்க அந்த மதிப்பு ரையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று முன்கூட்டியே திட்ட மிட்டிருந்தார். அடுத்தவர் ‘ஜால்ரா’ தட்டித் தட்டிக் கைசோர்ந்து போன வராய் ‘போனால் போகட்டும் போடா’ என்று வேலையை விடத் தயாரா யிருந்தார். நியாயம், அதிநியாயம் என்று மலையுச்சியில் நின்று முழங்கும் அந்த இதழில் பணிபுரிவோருக்கு நாலு மாதங்களாக சம்பளம் தந்தபாடில்லை. மதிப்புரை வழங்கக் கூடாது என்று வெகு திட்ட வட்டமாகச் சொன்ன நபர் இதழின் நிறுவனர். நிறுவனர் குடும்பத்திற்கு நண்பராக இருக்கும் காரணத்தால் மட்டுமே இதழின் முக்கியக் கருத்துரை யாளர்களில் ஒருவராகப் பீடமேறியிருப்பவர். இப்போது மதிப்புரைக்கப்படவேண்டிய படைப்பாளி அந்தப் பீடத்தையே ஒருமுறை செம்புள்ளி, கரும்புள்ளி குத்தி கழுதைமேல் ஏற்றி அனுப்பியவர். குற்றத் திற்கு ஏற்ற தண்டனையாகவே அது பரவலாகக் கருதப்பட்டாலும்கூட அவ்விதத்தில் தான் தாழ்த்தப்பட்டுவிட்டவனாக்கப்பட்டுவிட்டதாகக் கொதித்துப்போனார், சமூகத்தில் உண்மையாகவே தாழ்த்தப்பட்டுவிட்ட வர்களாக்கப்பட்டு பலவிதங்களிலும் கேவலப்படுத்தப்பட்டுவரும் மக்க ளைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாத மேற்படி பீடாதிபதி முக்காலும் காலுமாய் பிளவுண்டுநின்ற மற்றொருவரின் ‘விழித்துக் கிடந்த’ கால் வாசி மனசாட்சி சம்பந்தப்பட்ட படைப்பாளியின் இலக்கிய வீர்யத்தை’த் துல்லியமாக உணர்ந்திருந்ததால் அது பேசப்பட்டவேண்டியதுதான் என்ற கருத்தைப் பிடிவாதமாக முன்வைத்தது.


ம்பந்தப்பட்ட படைப்பை மதிப்புரைக்கு எடுத்துக்கொள்வது என்று முடி வாகிய பின், மதிப்புரையாளராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

“நாசநாக்கரசந்தான் சரியான நபர்.”

“அவர் அனாவசியத்திற்கு விஷம் கக்குவாரே…”

“அதுதான் நமக்கு வேண்டியது.”

”இல்லை. அவர் விஷம் கக்குவது அப்பட்டமாகத் தெரியும். அப்படித் தெரிந்தால் காரியம் கெட்டுவிடும்.”

“அப்படியானால், வஞ்சப்புகழ்ச்சியாக எழுதுவதில் சக்கரவர்த்தியான ‘உட்புறத்தான்’ஐ எழுதச் சொல்லலாம். மனுஷன் சந்தர்ப்பம் தரச் சொல்லி காலில் விழாத குறையாகக் கெஞ்சுகிறார்.”

“உட்புறத்தான் ஒத்துவராது. புகழ்ச்சியோ, வஞ்சப்புகழ்ச்சியோ – இரண் டுமே வெளிப்படையாகத் தெரியக்கூடாது.”

“ஆமாம், ஆழ்ந்த இலக்கிய வாசிப்புக் கூடிய பார்வையுடனான பார பட்சமற்ற அவதானிப்பு மிக்க மதிப்புரையாகக் காணவேண்டியது அவசியம்.”

“ஆமாமாம், அப்படி இருக்கவேண்டியது அவசியமில்லை. காணவேண்டி யதுதான் மிக அவசியம்!”

“ஹ!ஹ!ஹ!ஹ! – உண்மை கசக்கும் என்று சொல்வது தவறு. உண்மை எத்தனை வேடிக்கையானது!”

“பரவாயில்லை. வாழ்வின் இத்தனை நெரிசலிலும் நம்மிடம் இன்னமும் நகைச்சுவையுணர்வு எஞ்சியிருப்பது எத்தனை அற்புதமான விஷயம்!”

இங்கு ஒரு விஷயம் சொல்லித்தான் ஆகவேண்டும். இப்பொழுதெல்லாம் நகைச்சுவை உணர்வு என்பதே “பன்னி மூஞ்சி,” “பரங்கித் தலையா” என்பதையெல்லாம் தாண்டி, மூக்கு – காதுகளிலிருந்தெல்லாம் ரத்தம் கொப்புளித்துப் பெருகியோடும்வரை ஆயுதமற்ற அல்லது ஆயுதமுற்ற கைகளால் அடித்து நொறுக்குவதும், ஒருவன் தவறுதலாக இஸ்திரிப் பெட்டி யின் மீது உட்கார்ந்து பெருஞ்சூடு போட்டுக்கொள்வதும், அல்லது, ‘குண்டு’ வெடித்து புதைக்குவியலாக எழுந்துநடப்பதும் என்று ஆகிவிட் டதே. அப்படிப்பட்ட நகைச்சுவையுணர்வின் பிரதிபலிப்புத்தான் நம்மிடம் உள்ளதுவுமா? என்ற கேள்வி நம்முள் தவிர்க்கமுடியாமல் எழத்தான் செய்யும். இலக்கிய விமர்சனங்களில்கூட இத்தகைய நகைச்சுவையுணர் வின் வெளிப்பாடுகளை நம்மால் இனங்காண முடியும்…..


லக்கிய இதழ்களில் உமி மெல்லும் வாயால் அக்கப்போர் எழுதியே விமர்சன வித்தகராகத் திகழும் நபரைக்கொண்டு சம்பந்தப்பட்ட புத்தகத் தைப் பற்றி மதிப்புரை எழுதச் செய்வது என்பதாய் முன்வைக்கப்பட்ட கருத்திற்குப் பரவலான வரவேற்பிருந்தது.

வட்டமேஜையைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களில் ஒருவருடைய  ‘முன் சொன்ன’ கால்வாசி மனசாட்சி ஆட்சேபம் தெரிவித்தது. “அந்த மனிதருக் கும் நவீன இலக்கியத் திற்கும் என்ன சம்பந்தம்? அவரால் எப்படி இந்தப் படைப்பிற்கு விமர்சனம் எழுதமுடியும்?”

“அவரால் எந்தப் படைப்பிற்கும் விமர்சனம் என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுத முடியும் என்பதுதான் விஷயமே!”

மறுபடியும் ‘கால்வாசி’ மனசாட்சி அந்தத் தேர்வை மறுதலித்தது.

“இல்லை, அவரைக்கொண்டு எழுதச்சொல்வது சரியல்ல. ’பின் – நவீனத்துவம் என்ன ’பிசாத்து’ என்று பிதற்றிக்கொண்டிருப்பவர் அவர்.”

“அதுதானே நமக்கு வேண்டியது!”

“எது?”

“பின் – நவீனத்துவம் பற்றித் தெரியாமல் பிதற்றுபவர் ஒருவரைக் கொண்டு இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசவைப்பது. தவிர, இவருக்கு ‘பின் – நவீனத்துவம்’ தெரியாது என்பதை இப்போது மதிப்புரைக்கப்பட உள்ள படைப்பாளி முன்பு ஒருமுறை ’புட்டுப்புட்டு’ வைத்துவிட்டார். அதைப் படித்ததுமுதல் அந்த விமர்சகர் படைப்பாளிமீது சாபமிட்டே தீருவது என்று சபதமெடுத்துக்கொண்டிருப்பதாகக் கேள்வி.”

“ஓர் இதழின் சுவாரசியத்திற்கு இத்தகைய ’ஆல் - இன் – ஆல் விமர் சகர்கள் இன்றியமை யாதவர்கள்!”

”அந்த இதழ் ‘ஊத்தி மூடுவதற்’கும் இவர்களே காரணமாகிறார்கள் என் பதை நாம் மறந்து விடக் கூடாது,” என்று மீண்டும் கண்டிப்புடன் சுட்டிக் காட்டியது ‘கால்வாசி’ மனசாட்சி!

ஆனால், மீண்டும் பெரும்பான்மைக்கருத்திற்குத் தலைவணங்க வேண்டி வந்தது. பெரும்பான்மைக் கருத்து அந்த ‘திறனாய்வுத் திருவாளருக்கே ஆதரவாக அமைந்தது.

அந்த அவர்களுடைய ஒருமித்த தேர்வு குறித்த் ஒவ்வொருவரிடமும் அவரவருக்கான தனித்தனிக் காரணங்கள் இருந்தன:

  • “பின் – நவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரால் சம்பந்தப்பட்ட படைப்பின் வெளிப்படையான உயர்வுகளைக் கூட உணர முடியாது; உரைக்கவும் இயலாது.”

  • “இலக்கியத்தில் உத்வேகமாக இயங்கிவரும் ஒருவரைக்கொண்டு மதிப்புரை எழுதவைப்பதைவிட, இத்தகைய ‘வெத்து’களைக் கொண்டு எழுதவைப்பது நம்பிக்கைக்குரிய விஷயம். ஏனெனில், படைப்பாளிகளைக் கண்டால் என்றுமே இத்தகைய ‘வெத்துவேட்டுக ளு’க்கு எக்கச்சக்கத் தாழ்வு மனப்பான்மை. எனவே, படைப்பாளியை விட தன்னை ஒரு படி மேலாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பில் மதிப்புரை, படைப்பாளியை படைப்புக்குப் புறத்தளவாய் மட்டம் தட்டு வதாகவே முதலும் முடிவுமாய் அமையும். எனவே, படைப்பைப் பற்றி ஒரு நல்ல வார்த்தையும் மதிப்புரையில் இடம்பெறாது!”

தற்குமேலும் காலதாமதமின்றி, தொலைபேசியில் அவர் தொடர்பு கொள்ளப்பட்டார். மதிப்புரைக்கப்பட வேண்டிய படைப்பாளியின் பெயர் இரண்டுமுறை அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்படுவதாய் அழுத்தமாய் எடுத்துரைக்கப்பட்டது. மதிப்புரையாளரை முன்பொரு சமயம் அந்தப் படைப்பாளி (நியாயமாய்) மூக்குடைத்தது நைச்சியமாய் நினைவுகூரப் பட்டது. கூடவே, விமர்சகப் பெருமகனாரை விரைவிலேயே தங்கள் இதழில் ஆஸ்தான விமர்சகராக்கிக்கொள்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் தகவல் தரப்பட்டது. பின்குறிப்பாய், விரைவிலேயே அண்டார்ட்டிக்காவில் பனிக்கரடி பக்கத்தி லிருக்க இலக்கியப்பயணம் மேற்கொள்ளவும் விமர்சகருக்கு ஆவன செய்யப் படும் என்றும் கோடிகாட்டப்பட்டது!

சிக்கெனப் புரிந்துகொண்டு பரபரவென்று எழுதிக்கொடுத்துவிட்டார் விமர்சன வேந்தர். இணைய வெளியில் எல்லையற்று எழுதிப் பழகி யதில் இங்கே சிக்கனமாக எழுபது பக்கங்கள் மட்டுமே மதிப்புரை எழுதவேண்டியிருந்ததுதான் சற்று சிரமமாக இருந்தது. ‘எடிட்டிங்’ என்ற பெயரில் அறுபது பக்கக் கட்டுரை அரைப் பக்கமாவதும், அதுவே ‘’நேரிடை’யாகவும், ’‘எதிரிடை’யாகவும்,  நடைபெறுவதும், அதாவது, வேண்டியவர்களாயிருப்போர் விஷயத்தில் அரைப் பக்கம் அறுபது பக்கமாவதும் இலக்கிய நடப்புதானே! ‘தனி மனிதத் தாக்குதலைத் தவிர்க் கவும்’ என்று அந்த ‘நால்வர் குழாம் – இன்னும் சரியாகச் சொல்வ தென்றால்,  ’இரண்டேகால்வர் குழாம்’ வேண்டுகோள் விடுத்திருந்தது விமர்சனக் கோமகனை அதிர்ச்சி யடையச் செய்தது என்றாலும் அதை யடுத்து அடைப்புகுறிகளுக்குள் தரப்பட்டிருந்த {தனிமனிதத் தாக்குதலாக வெளிப்படையாகத் தெரியாத அளவில் தனிமனிதத் தாக்குதலைக் கட்டமைக்கவும்} என்பதான விளக்கம் ‘தன்னிலை விளக்கமாகவே’ தோற்றம் கொண்டு அவரை ஆசுவாசமாக உணரச் செய்தது.


மதிப்புரையிலிருந்து (ஒரு) ‘மாதிரி’ வரிகள் சில:

  • முன் – நவீனத்துவம் என்று ஒருமுறைகூட சொல்ல முனைவ தில்லை. படைப்பாளி. பின் – நவீனத்துவம் என்று பிடிவாதமாய்ச் சொல்லிக்கொண்டே போவது அவருடைய படைப்பாற்றலின் பின்தங்கிய நிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறது;

  • கதையின் நான்காவது அத்தியாயத்தின் ஆரம்பப் பத்தி ‘எல்லோரும் நல்லவர்களே’’ என்று தொடங்குகிறது. ‘எல்லாமும் நல்லவையே’ என்றோ, ‘எல்லாம் நன்மைக்கே’ என்றோ ஆரம்பிக்காதது ஏன்?

  • படைப்பாளி சின்னப் பையனாக இருந்தபோது அவருக்கு ‘பம்பரம்’ விடக் கற்றுக்கொடுத்தது நான். ஆனால் அவரோ ‘சின்னப் பையன்’ என்று எழுதாமல் ‘சிறுவன்’ என்றே எழுதுகிறார். இதை அவர் திருத்திக்கொண்டால் அவருடைய படைப்புத்திறனும் இலக்கிய வெளியாகிய பேரண்டத்தில் சுழன்றுகொண்டேயிருக்கும் மாய பம்பரமாய் முத்திரை பதிக்கும்! இந்த படைப்பில் அந்த முயற்சிக் கான ஒளிக்கீற்றைக் காணமுடிகிறது. அல்லது, முடியவில்லை (’என, அவர் என்னிடம் நடந்துகொள்ளும் முறையை வைத்துத்தான் தீர்ப்பளிக்க முடியும்’ என்பன வரியிடை வரிகள்!)

  • ‘தக்க திமி தா’ என்று எழுதாமல் ‘தக்க மிதி தா என்று சொற்குற்றம், பொருட்குற்றத் தோடு ஒரு படைப்பை உருவாக்கலாமா? தொல்காப் பியருக்கு துரோகம் செய்யலாமா? மேற்குறிப்பிட்ட இமாலய மொழிப் பிழையை அச்சுப்பிழையாக வாசகர்கள் இனங்காணலாம்.. அதுதான் ‘பாமர’ வாசகருக்கும், விவேகம்நிறை விமர்சகருக்கும் உள்ள வேறு பாடு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை!

  • என் இளமைக் காலத்திலிருந்தே இங்கிதமும் இலக்கியமும் என்னு டைய இரண்டு கண்களாக விளங்கிவருகின்றன. இருந்தாலும், மூன்றாவது கண்ணைத் திறந்து எரிக்கவேண்டிய விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, இந்தப் படைப்பு. அதனால்தான், இந்தப் படைப்பைப் படித்துப்பார்த்து என் மனதை விகாரமாக்கிக்கொள்ளாமல் விமர்சனம் எழுதுகிறேன் நான்!

  • நானே படித்துப் பார்த்து இந்தப் படைப்பு குறித்த சுயமான முடிவுக்கு வருவேன் என்று நீங்கள் சொல்ல முற்பட்டால் நாசமாய்த்தான் போகும் இலக்கியம். நீங்களும்கூட.


Ø   








Saturday, June 6, 2015

இன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}காலத்தின் சில தோற்ற நிலைகள் - 10

கவிதை                
இன்மையின் இருப்பு
{சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}

காலத்தின் சில தோற்ற நிலைகள்
ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு


 வெளியீடு: காவ்யா பதிப்பகம். 2005



ஆறடி ஆகிருதியின் திடகாத்திரம்
1500 டிகிரி செண்டிகிரேட் நெருப்புப் பிழம்புக்குள் செலுத்தப்பட்டு
சிறிதுநேரம் வரை சலனமற்றிருந்தது ஆகாயம்.
பின், போக்கியின் வழியாய் சன்னமாகக் கிளம்பத் தொடங்கியது புகை.
உள்ளே உடல் இறுதியாக ஒருமுறை துடித்தெழுந்து
அடங்கிக்கொண்டிருக்கும்.
வெப்பத்தில் விரியும் எலும்புகள் வெளியே துருத்திக்கொண்டு வருவதுபோல்….
எங்கு இடம்பிடிக்கும் ஒரு நூறாண்டும், கூட மூன்றாண்டுகளுமான
அந்த வாழ்வின் நிலவறைகளிலிருந்த எல்லாமும்….?
திருத்தமாய் நினைவடுக்குகளில் வரிசைப்படுத்தி
வைத்திருந்த அந்தப் பள்ளிப்பாடல்கள்;
ஷேக்ஸ்பியர் வாசகங்கள்;
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் புள்ளிவிவரங்கள்,
சில வார்த்தைகளால் வரவான தழும்புகள்,
சார்புநிலை கொண்டுவந்து சேர்த்த சலிப்பும் இழப்புகளும்,
உறவுகளின் மீது தேக்கிவைத்திருந்த பிரியம்,
ஒருபோது தாக்கியிருந்திருக்கலாகும் காமத் தினவு,
ஆட்கொண்ட வேட்கைகள், தேட்டங்கள்,
பல தலைமுறைகளின் ஞாபகப் பெருந்திரள்,
நனவோடை வண்டல், அக்கக்கோ பறவையின் தனிமை,
பொக்கைவாய்க்குள் புதைத்துவிட்ட சொல்லும் பொருளும்
பிறவும்….

ருள் மனம் மீட்சியற்று சிதறும்
இருளின் ஆழத்திலிருந்து எதிரொலிக்கிறது
“அக்கா” என்று அன்போடு என்னை அழைக்கும் குரல்….


0







காலத்தின் சில தோற்ற நிலைகள் 6 - 9 - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

காலத்தின் சில தோற்ற நிலைகள்
(ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு) [வெளியீடு: காவ்யா பதிப்பகம். முதல் பதிப்பு 2005


கவிதை 6 - 9

















6. பெரியவர்களுக்கான குழந்தைக் கதை


ஏழு கடல்களையும் ஏழு மலைகளையும் எப்படியோ கடந்தாகிவிட்டது.
வழியில் எதிர்ப்பட்ட விஷங்கக்கும் பாம்பை வாய்கிழித்தாகிவிட்டது.
முட்ட வந்த காட்டெருமையின் கொம்புகளை முறித்தாயிற்று.
புதைகுழிக்குள் கழுத்தளவு காணாமல் போய் பிழைத்தெழுந்தாயிற்று.
வழுக்குப்பாறை உச்சிமீதிருக்கும் வீடடைந்து
உள்ளிருந்த இருபது அறைகளையும் துருவிப் பார்த்ததில்
இல்லாத இருபத்தோராவது அறைக்கூண்டில் அடைபட்டிருந்த
கிளியின் எதிரிலிருந்த கிண்ணத்து அரிசிமணிகளில்
சரியானதைப் பொறுக்கியெடுத்து அதைத்
தரையில் தேய்க்கத் தேய்க்க
கிளியுருவி லிருந்த அரக்கன் தலை சாய்ந்தது.
கூடவே அவள் தலையும்…..






7. நீளந்தாண்டுதல்



அதிகமாகிக்கொண்டே போகும் இடைவெளி.
ஊக்கமருந்து சாப்பிட்டுப் பெறும் வெற்றி
வெட்கக் கேடு.
வலு குன்றாதிருக்கலாம் கால்க ளெனில்
வாழ்க்கை ‘நீளந்தாண்டுதல்’ அல்லவே.





8. இரவின் ஏழு மலைகள்

இரவின் பிடியில் நான் தப்பித்தலின்றி
புறத்தே கப்பிக் கிடக்கும் இருள்
அகத்துள்ளும் தப்பாமல் கள்ளுண்டவன்போல்
அனத்திக்கொண்டிருக்கும் நினைவின் மண்டையில்
அழுத்தித் தேய்க்க இருக்க லாகுமோ
ஓர் அபூர்வத் தைலம் பயணம்
ஏழு கடல் ஏழு மலை தாண்டி யேக
வழியற்று எதையும் உறுதியாக மொழியக்
கழியா கையறு நிலையில் காலம் எனை
யின்னும் சில காதங்கள் தொலைவாக்கிடு முன்
அண்மையை இழுத்துப் பிடிக்கும் வண்ணமாய்
உருக்கொள்ளு மிவ் வரிகளுக்கா யருகில்
பொறுமையாய் காத்திருக்கும் தற்காலிகச் சாவு.



9. ஈர்ப்புவிசையும், இலையின் அசைவும்

கரடுமுரடான செங்குத்துப் பாறையதன் பிளவொன்றில் துளிர்த்திருந்தது அந்தச் சிற்றிலை.
கதிரொளியில் துலங்கும் அதன் நரம்புகளில்
பாறையின் தடித்த வரிகள் பிணைந்திருக்கக் காணும்.
அத்தனை சன்னமான தளிரின் அடிப்பாகம் ஒற்றைப்புள்ளியில்
இறுகப்பற்றியிருக்கும் பாறை மீது
காற்றின் ஒவ்வொரு அசைவுக்கும்
படீரென மோதிக்கொள்ளும் இலையில்
பொத்தல்கள் சேகரமாகியபடி….
மென்மையாக முடியாமலும், வழுவழுப்பாக வழியில்லாமலும்
தன் போக்கில் பாறை….
வந்து வந்து மோதுகையில் தளிரை முத்தமிட்டோ புண்ணாக்குகிறது….?
தெளிவான பதிலற்ற கேள்வியும் வந்து வந்து மோத
மேலும் புண்ணாகியபடி, விட்டு விலகாதவாறு
காற்றின் விசையில் அசைந்து மோதிய
பாறையின் கரடுமுரடுகளில்
பின்னும் நெருங்கிப் பதிந்துகொள்ளும்
இலை
அலைக்கழிந்தவாறு…..



0

Friday, June 5, 2015

சிறுகதை அருங்காட்சியகம்

சிறுகதை

அருங்காட்சியகம்

‘அநாமிகா’

[லதா ராமகிருஷ்ணன்]

( * பன்முகம்  ஜூலை – செப்டம்பர், 2003 இதழில் வெளியானது)




னாதி காலம் தொட்டு அது இருந்துவருவதாகக் கூறினார்கள். ’அதென்ன ‘அனாதி காலம்?’ அதற்கென்று ஒரு கணக்கு வழக்கு இல்லையா’ என்றால் ”அதெல்லாம் சரிவரத் தெரிந்தவர் யார்தான் இருக்க முடியும்? அனாதி காலம் என்றால் அநாதி காலம். அவ்வளவுதான்,” என்று கூறி முடித்துக்கொண்டார்கள். இல்லை, ‘அதுவா முக்கியம்…. இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு அது எத்தனை காலம் முந்தையது என்பதில் இல்லை. அது எல்லாக் காலத்திற்குமானது என்பதிலும், எப்போதும் புராதனமாகாதது என்பதிலும்தான் இருக்கிறது என்று எரிச்சலோடு தெளிவுபடுத்துவதாய் காட்டினார்கள்.

அருங்காட்சியகத்தின் தனித்தன்மை அதன் சுவர்களி லிருந்தே பிடிபடலாயிற்று. கருஞ்சிவப்பு நிறத்தில் சாயம் தீட்டப்பட்டிருந்த சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக மெலிந்தும் தடிமனாயும் ஒரு பிரத்யேக வலைப்பின்னல் அமைப்பாகக் காணப்பட்டவை உண்மையான மனித நரம்புகளும், இரத்தநாளங்களும்தான் என்று சுற்றுலா வழிகாட்டி குறிப்பிட்டபோது நம்பமுடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. ‘அப்படியென்றால்…. ஒருவேளை அந்தச் சுவர்களின் சாயம்….’ தன்பாட்டில் மனதில் ஒரு உள்ளுணர்வு குமிழ, ‘இதென்ன அபத்த எண்ணம்’ என்று அறிவைக்கொண்டு அசட்டை செய்ய முயன்றாலும் முடியாமல், திகிலுடன் அண்ணாந்து பார்க்க, “ஆம், உங்கள் ஊகம் சரிதான்,” என்று உடனடியாகக் கூறினார் வழிகாட்டி. 

“அது அசல் மனித ரத்தம்தான்.” அனிச்சையாக முகத்தை மூடிக்கொண்ட கைகளின் விரலிடுக்குகள் வழியாய் ஆங் காங்கே கீற்றுகளாய் கசிந்துகொண்டும், கோடுகளாய் வழிந்துகொண்டும் இருப்பதைக் காண முடிந்தது.

குமட்டலெடுத்தது. இது என்ன குரூரம்…? போரில் வெற்றிவாகை சூடியவன் தோற்ற எதிராளியைக் குத்திக் கிழித்ததோடு திருப்தியடையாமல் அவனுடைய தலையை வாளில் செருகி ஊர்வலம் வருவானாமே…. அப்படி வந்து வந்து அலுத்துப்போய் புதிதாய் வேறு ஏதாவது செய்யவேண்டும் என்று இவ்விதமாய் வெற்றியைக் கொண்டாட ஆரம்பித்தார்களோ….’

“இது வேறுவகையான போர்” என்று இடைமறித்தார் வழிகாட்டி. “இதம் வழிமுறைகளும் விதிமுறைகளும், அவ்வளவு ஏன், போரில் தான் வஞ்சகமாய்க் கொல்லப்பட்டுக்கொண்டிருப்பதே சம்பந்தப்பட்டவருக்கு இறுதிக்கணங்களில்தான் தெரியக் கிடைக்குமாம்….”

“புரியவில்லை”

“தாஜ்மகால் என்பதைக் காதல் சின்னமாக எடுத்துக் கொண்டால் இதை ‘தாஜாமகால்’ அல்லது ‘அ-தாஜ்மகால்’ எனலாம்.”

“ஆனால், தாஜ்மகாலே உண்மையில் காதல் சின்னம் இல்லையே….”

“நமக்கு ஏதாவது ஒரு சின்னம் காதலுக்குத் தேவைப் படுகிறது. வேறு எதுவும் கைவசம் இல்லை. எனவே, தற்சமயத்திற்கு தாஜ்மகாலையே காதல் சின்னமாகக் கொள்வோம்.”

“சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருந்த, இப்போது பகுதி பகுதியாக வெட்டி வேறொரு மாநிலத்தில் ஒட்டிவைக்கப்படப்போகும் அந்த ‘நகல்’ தாஜ்மகாலை நாம் சின்னமாக்கிக்கொண்டால் இன்னும் பொருத்தமாயிருக்கும்.”

“தாஜ்மகாலை நாம் காதல் சின்னமாகக் கொண்டால், அதில் அசல் என்று ஏதேனும் இருக்கிறதா என்ன?”

“இருப்பதாகவும் வைத்துக்கொள்ளலாமே…. சரி, இந்த விவாதம் நீண்டுகொண்டே போகும். நீங்கள் இந்தத் ’தலபுராணத்தை’க் கூறுங்கள்-” கடுப்பாக ஒலித்த என் குரலை அவர் உற்றுக்கேட்டவாறிருந்தார்போல் காணப் பட்டார். சில நிமிடங்கள் மௌனமாக நின்றிருந்தார்.

பின், “இங்கே பாருங்கள்” என்று கூறியவாறே சுவரின் மீது ஒன்றிரண்டு இடங்களில் கை பதித்துக் காட்டினார். அவர் கையை மீட்ட போது அவர் கைப்பதிவு கண்ட இடத்தில் மனித இதயம் துடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. உடலில் நடுக்கம் பரவியது.

“அது ஆணின் இதயமா? பெண்ணின் இதயமா?”

“பெயர்களிலும், பிறப்புறுப்புகளிலும்தான் அந்த பேதங்க ளெல்லாம். இதயத்தில் ஆணென்ன, பெண்ணென்ன….”

“அப்படியென்றால்…?”

“ஏதொன்றும் காயப்படும், காயப்படுத்தும். அழும்; அழ வைக்கும். உடைக்கும், உடைபடும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இருவர்க்கிடையேயான உறவில் இந்த இருதரப்புகளும் கட்டாயம் இருக்கும். இருபாலரும், இரு நிலைகளிலும்  இடம்பெறக்கூடும்.”

வழிகாட்டி பெருமூச்செறிந்ததில் சுவர் மீது கண்ட இதயப் பதிவில் புதிதாய் சில ரத்தக்குமிழ்கள் கொப்பளித்தன.

“சரி வாருங்கள், உள்ளே போகலாம்.”

சில அடிகள் முன்னே சென்றவர், நான் தயங்கிநிற்பதைப் பார்த்து முறுவலித்தார். “பயப்படாதீர்கள், சீரான தரையில்தான் நடப்போம், சடலங்கள் மீது அல்ல!”

அவர் சொன்னதுபோல் தண்ணெனக் குளிர்ச்சி பொருந்திய சமதரையில்தான் நடந்தோம். அது ஒரு நீண்ட கூடம். மேற்கூரை மிக உயரத்தில் இருந்தது. கூடத்தின் இருமருங்கும் ஆளுயரக் கண்ணாடிப் பெட்டிகள் நீள் செவ்வக வடிவில் செங்குத்தாய் நின்று கொண்டிருந்தன. ஒவ்வொன்றின் உள்ளேயும் ஒரு மனித உடல். உடல் என்றால் இறந்த உடல் அல்ல. உயிரோ டிருக்கும் உடல். ஒவ்வொரு முகமும் ஒரு விவரிக்கவியலா வலியில் கோணியிருந்தது; சுருங்கியிருந்தது; வீங்கி யிருந்தது. சில முகங்களின் கண்களிலிருந்து கன்னங்கள் வழியாய் ஒரு நீண்ட வெட்டுப்பிளவு காணப்பட்டது. கண்கள் உயிரோடிருக்க, தேகம் ஒரு கையறு நிலையில் உறைந்திருந்தது.

“அன்பின் வழி நேரும் அலட்சியம், அவமானம், நம்பிக்கை துரோகம், அடிப்பதாய் வீசப்படும் வார்த்தைப் பிரயோகம் முதலியவை மனித மனதால் தாங்கமுடியாமல் போகும்போது இந்த உறைவுநிலை சம்பவிக்கிறது. அப்படித் தாக்குண்டவர்கள் அதற்குப் பிறகு ‘இருந்தும் இல்லாதவர்’களாகிவிடுகிறார்கள். உயிர்ச்சவமாயிருக் கும் அத்தகையோர் பற்றித் தகவல் தரப்பட்டால் இங்கி ருந்து ஆட்கள் போய் எங்கள் பிரத்யேக வண்டிகளில் அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து இங்கே இப்படி நிறுத்திவைப்போம்.”

“பிரத்யேக வண்டிகள் என்றால்…?”

“தாங்கமுடியாத அளவு அன்பினால் விளையும் அலட்சி யமும், அவமானம், துரோகம், துக்கம் போன்றவற்றால் தாக்குண்டவர்களை இந்த வண்டிக்குள் ஏற்றும்போது அந்த உச்சபட்சத் தாக்குதல் சொல் வடிவிலான நினைவாய் அவர்களுடன் ஏறிக்கொள்கிறது. இங்கே, இந்தப் பெட்டிகளைப் பாருங்கள். இதில் ஏதாவது வழக்கத்திற்கு மாறாகத் தென்படுகிறதா உங்களுக்கு? உற்றுப்பாருங்கள்.”

உலோகத் தன்மையுடன் இருந்த அந்தக் குரல் வசியம் செய்வதாய் தலையசைத்தார். “இந்தக் கண்ணாடிகள் வழக்கமான கண்ணாடிகளல்ல. மனித உடம்பின் நிணநீர்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. ஹிட்லரின் வதை முகாம்களிலும், அதற்குப் பிறகான ஏராளமான சின்ன, பெரிய இனக்கலவரங்கள், சாதிச் சண்டைகள் மற்றும் பெரும் போர்களிலெல்லாம் இறந்துபட்டு அனாதைப்பிணமாக கூட்டுச்சிதையேற்றப்படுபவர்களை, அதிகாரிகள் சென்ற பிறகு, நெருப்பணைத்து வெளியே இழுத்துவந்த உடலங்களின் உறைவுநிலையைத் தற்கா லிகமாகப் போக்கி உள்ளோடும் நீர்களை மீண்டும் ஓட வைத்து அவற்றை வெளியே குடுவைகளில் சேகரித்து, அவற்றில் சில துளிகள் காற்றையும், காலத்தை யும்,காதலையும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத் தில் சேர்த்து இருளுக்கே உரிய அதிவெப்ப நெருப்பில் கொதிக்க வைத்து உருவாக்கிய கண்ணாடி இது. இன்னும் சில விஷயங்களும் சேர்க்கப்படும். எல்லாவற் றையும் சொல்லிவிட்டால் பின் ஆளுக்கொரு அருங்காட்சியகம் என்று ஏற்படுத்திக்கொண்டுவிடக் கூடும். பின், இங்கே யார் இத்தனை அதிகக் கட்டணம் கொடுத்துப் பார்க்கவருவார்கள்….?

“அதுவும் சரிதான். நான் துருவிக் கேட்கப்போவதில்லை. இந்தக் கண்ணாடியின் பிரத்யேகத் தன்மைக்கும், இந்தப் பெட்டிகளின் கதவின்மைக்கும் என்ன தொடர்பு?”

“அப்படிக் கேளுங்கள். நல்லவேளை, காதல் இன்னமும் உங்களை முழுமுட்டாளாக்கிவிடவில்லை.”

“அதில் ஆனந்தப்பட ஒன்றுமில்லை. எல்லா உறவுக ளிலும் முட்டாளாக இருப்பதுதான் சௌகரியம்.”

“சொரணையில்லாமல் இருப்பதும்.”

“தோ-தோ-நாய்க்குட்டியாக”

“தூக்கமின்மையில் தூங்கி…”

“தொலைபேசி அழைப்பிற்காய் தவம் செய்து…”

“நிஜம் போலும் பொய் பேசி.”

“பூசனைகள் செய்து…”

”வாசனை புனைந்து…”

“ஹப்பா, கவிதையிலேயே இந்த பூசனை, வாசனை நடையைக் கைகழுவியா யிற்று. நீ பேச்சுவழக்கிலும் அதைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறாயே!”

“எதையேனும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கத்தானே வேண்டியிருக்கிறது…”

“எத்தனை காலம்தான் தொங்க முடியும்?”

பேசிக்கொண்டே போனதில் ஏதோ ஒரு கட்டத்தில் அது தனிமொழியா, உரையா டலா என்று குழம்பிப்போனது. எதிரே கண்ட காலிப் பெட்டியின் கண்ணாடிப் பரப்பில் ஏதோ அலைவு கண்டதுபோல் தோன்றியது.

“அங்கே பாருங்கள், அந்த அலைவு தெரிகிறதா? அதுதான் பெட்டிக்குள் போவதற் கான வழி அல்லது திறப்பு. உங்களுடைய கேள்விகளும் என்னுடைய பதில் களும் அல்லது என்னுடைய கேள்விகளும் உங்களுடைய பதில்களாகவும் இருக்கக்கூடிய இந்த உரையாடலின் ஊற்றுக்கண் உங்கள் மனதில் ஊறியிருக்கும் துக்கம். இந்தத் துக்கத்தின் உச்சப்புள்ளிக்குக் காரணமான சம்பவம் அல்லது வார்த்தைகளை நீங்கள் மீண்டும் பேசிக் கொண்டே வந்தால் உள் மனதின் வலி தாங்கமுடியாத உச்சத்தை எட்டும் கணம் இந்தக் கண்ணாடிச் சுவரில் ஒரு பெரிய திறப்பு ஏற்பட்டு உங்களை உள்வாங்கிக் கொள்ளும்….”

அந்த வசியக்குரல் எனக்கு அச்சமூட்டியது. ‘இது என்ன பயித்தியக்காரத்தனம்…. இந்த மனிதனின் மோடி மஸ்தான் பேச்சை யார் நம்புவார்கள்…’

என் மனதைத் துல்லியமாகப் படம்பிடித்துப் புன்முறு வலித்தார் அவர். “நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை யல்லவா? என்னால் நிரூபிக்க முடியும். ஆனால், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.”

“சொல்லுங்கள், நான் என்ன செய்யவேண்டும்?”

“உங்களுடைய துக்கத்தின் அந்தத் தாங்கமுடியாத கட்டத்தை உருவாக்கிய உரையாடலை நீங்கள் ஞாபகப் படுத்தி மீண்டும் ‘ஓரங்க நாடகம்’போல் பேசவேண்டும்.”

எத்தனை தாங்கமுடியாத கட்டங்கள்…. பாதி கற்பனை யாகவும் பாதி நிஜமாகவும் எட்டியவை…. கயிற்றரவாய் மனதை கிலி பிடித்தாட்டும் அந்தக் கேள்வி… “உனக்கு நான் காதலியா, இல்லை, வெறும் ‘கான்க்வெஸ்ட்’ (conquest) மட்டும்தானா?”

….” கன்க்வெஸ்ட் என்றால் உன்னைவிட அழகான வேறு எத்தனையோ பெண்களை என்னால் கைக்கொண்டிருக்க முடியும்.”

“இந்த பதில் எனக்கு நிவாரணமளிக்கும் என்று நீ நினைக் கிறாயா?”

“நீ எனக்கு நேர்ந்த ஒரேயொரு காதலி என்று என்னால் பொய் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய முதன் மைக் காதலிகளில் நீயும் ஒருத்தி.”

“கான்ஸலேஷன் ப்ரைஸ் தருகிறாய். கூடவே, கங்கிராட்ஸ் சொல்லவேண்டுமே! எனக்கு அந்த ஷர்மிலி பட காதலன்தான் ஆதர்ஷம். தன் காதலியின் முகம் தவிர மீதிப் பெண்களின் முகங்களெல்லாம் வெறும் பலூன் மொந்தைதான் அவனுக்கு!”

“நீங்கள், பெண்கள் எல்லோருமே மிகையுணர்ச்சிக் காரர்கள்; தொட்டாற்சுருங்கிகள்!”

“நீ தொட்டு நான் என்றாவது சுருங்கியிருக்கிறேனா? அபூர்வமாக மட்டுமே நீ தொடுகிறாய் என்பதுதானே என் நஷ்டக்கணக்கு”

“அது ஐயாவோட மகிமை!”

“நீ இப்படி மார்தட்டிக்கொள்வது என்னை இன்னும் அவமானப்படுத்துகிறது. வேண்டாம், ப்ளீஸ்…”

“ஹா, ப்ளீஸ் என்ன “ஸ்பெல்லிங்’, சொல்லு பார்க்க லாம்?”

“Please.”

’அட, இப்ப சரியா சொல்றியே. ஆனா, உன் கட்டுரை யிலே தப்பா எழுதியிருந்துதே! PLESEன்னு அதில் இருந்ததை சுதாதான் பார்த்துச் சரிசெய்தாள்.”

“சுதா?”

”என்னுடைய கஸின். அவளுக்கு என் மேல் ஒரு ‘இது’. யாரு புதுவரவுன்னு உன் கட்டுரையைப் படிச்சுக்கிட்டே கேட்டா! PLESE”ன்னு எழுதியிருந்ததைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சா…”

“நீயும் சிரிச்சே இல்லியா?”

“பின்னே!”

“எனக்குத் தெரிந்தவரை நீ ’ஸென்ஸிடிவ் ஹ்யூமன் பீயிங்’ தான் ஆனால், இந்த உன்னுடைய கேலியிலும் கெக்கலிப் பிலும் நீ கொடூர அரக்கனாக மாறியிருப்பது உனக்குத் தெரியவில்லையா…. நான் அலுத்துவிட்டேன் என்றால், அதை எடுத்துச் சொன்னால் போதாதா… ஒரு காற்றிழை போல் நான் தடமின்றி போயிருப்பேன். இப்படி, சமயம் கிடைத்தபோதெல்லாம் அடித்துத் துரத்தவேண்டுமா….? உன்னிடம் மட்டும்தான் இப்படி ‘வாலாட்டிக்கொண்டிருக் கும் நாய்க்குட்டியாக நான் பின்னோடிவருகிறேன் என்று உனக்குத் தெரியாதா? உன் எட்டியுதைக்கும் கால்களில் மிதிபடவேண்டியது தான் என் தகுதியா? அவமானம் எப்படி அன்பாகும்… ஏதோவொரு எல்லைமீறிய இழப்புணர்வு என்னை முழுவதுமாக விழுங்கித் தீர்த்துக் கொண்டிருக்கிறதே… நான் அழக்கூடாது…. அழுதால் அது என்னை நான் மேலும் அவமானத்திற்கு ஆளாக்கிக் கொள்வதாகும்… என் அன்பின் தெரிவு எனக்கு அவமா னத்தை வரவாக்குவதாக இருக்கலாகாது…. எது கயிறு….? எது வரவு…? எத்தனைக் கையறுநிலையில் என்னைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறாய்…. நீ என்னை நேசிக்கிறாய்தானே…? இல்லையா….? ஆமாமா….? சரியாகக் கேட்கவில்லை…. சத்தமாகச் சொல்…. இல்லை, நெஞ்சையெல்லாம் கிழித்துக்காட்ட வேண்டாம்… உன் வார்த்தை போதும்… நான் நம்பு கிறேன்… நம்ப முயல்கிறேன்… நான் உனக்குத் தேவை தானே….? இல்லை, அன்பைப் பிச்சையாகப் போட்டிருக் கிறாயா…? ஐயோ, அதை மட்டும் செய்யாதே… நான் உயிரோடு இறந்துவிடுவேன்…”

அந்த வார்த்தைகள் என் ஆன்மாவிலிருந்து வெளிக் கிளம்பிய கணம் யாரோ என்னைச் சடாரெனப் பற்றி யிழுப்பதுபோல் உணர்ந்தேன். மறுகணம், நான் அந்தக் கண்ணாடிச்சுவருக்குள்ளாய் பெட்டிக்குள் நுழைந்து கொண்டிருந்தேன். நான் உள்ளே வலியில் கோணிய முகத்துடன் உறைவுநிலைக்கு வரவும், அந்தக் கண்ணா டிச் சுவரில் எற்பட்ட திறப்பு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது!

மறுபடியும் வெளியே வர என்ன செய்வது என்று புரியாமல் வழிகாட்டியை நோக்கியதில், அவன் நிதான மான விரைவுடன் நானிருந்த பெட்டியை விட்டு விலகிச் சென்றுகொண்டிருப்பது கண்டது. ஒரு பார்வைக்கு அந்த மனிதனுடைய முதுகுப்புறம் மிகப் பரிச்சயமான ஒரு தேகவடிவமைப்பில் தெரிய, இன்னுமொரு உச்சத்தை எட்டியது வலி.



Ø