LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, December 30, 2014

மற்றும் சில திறவாக் கதவுகள் : கவிதைகள் 13 - 18

மற்றும் சில திறவாக் கதவுகள்

ரிஷியின் 3வது கவிதைத் தொகுப்பிலிருந்து
கவிதைகள் 13 _ 18

(மகிழம் வெளியீடு. 2005)



13. ஜடவுயிர்

வளைவுப்பாதையிலான ஓட்டப் பந்தயம்
மியூஸிக்கல்சேர் மும்முரமாய் நடந்தவண்ணம்….
வாத்திய இசை நிற்கும்போதெல்லாம்
வதைபடுகின்றன இருக்கைகள்.

ஒவ்வொன்றாய் அறைந்து மூடப்பட
முடிவாய்
தனிமையில் உறையும் ஒன்று.

இனி
வின்னர், ரன்னர் அப், வெள்ளி கப்….

மூலையில் சாய்ந்திருக்கும் நாற்காலிகளுக்காய்
தாலாட்டுப் பாடத் தோன்றுகிறது.




14.ராமேஸ்வரம் போகலாமா?

அழுக்கேறியிருந்த அரசாங்கப் பேருந்தை
யெனக்காய் அழகிய ரதமாக்கி
சாரதம் செய்தான்.
ஆர்வமாய்
தான் அறியாத ஜெர்மானிய வீதிகளில்
என்னோடு பயணம் மேற்கொண்டான்.
குண்டு குழிகள் நிரம்பிய தார்ச்சாலையை சீராக்கி
வண்டி யோட்டிய அந்தக் கரங்களின் வீர்யம்
வணக்கத்திற்குரியது.
முறுக்கிக் கண்ட நரம்புகளில்
பிரத்யேக வாத்தியமொன்றின் தந்திகள்
அதிர்ந்த வண்ணம்.
இருவிழித் தேடலின் நீட்சியாய்
பிறந்த அழைப்பொரு
வரம் போலும், சாபம் போலும்.
கரந்திருந்தது காமமா? காதலா?
போற்றலும் தூற்றலுமா யெத்தனை காதங்கள் _
ஏற்றிருப்பின்?
உரிய மனோநிலை வேண்டும் சிறு
முத்தம் பகிர்தலுக்கும்அழைப்பை
மறுதலித்த மனதில் நாட்பட
கேட்டவன் மறந்து போக,
கேள்வியின் நெரிசலில் நான்
மாட்டிக் கொண்டேனாக.




15.அரசியல்

சேடிப் பெண்கள் புடை சூழ
சரசமாடிக் கொண்டிருந்தது அரச ஜோடி.   
மன்னவன் கை ராணியை மேய
தன்னவனுக்கான விரகத் தீயில்
வெண்சாமரம் தவறவிட்ட கை
துண்டிக்கப்பட்டது தண்டனையாய்.





16.          செங்கோல்

அந்தப்புரத்தின் அறுநூறு சுந்தரப் பெண்டிரில்
அன்றைக்கெனத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களை
ஆசை தீர தின்று முடித்த பின்    
இந்தப்புறம் வரும் மன்னர் தப்பாமல்
ஒப்பிட்டுப் பார்ப்பார் எப்போதும் போல்:
அடைக்கட்டை விரலதிகம் அவள் முலைவிட்டம்.
குறையாழமே குட்டித் தொப்புள். இன்னொருவள்
மறைவிடத்தில் தட்டுப்படும் மருவழகோ
புறையேறக் கள்வெரி யூட்டுவது திட்டம்.
மல்லிகைப் பூ மணம் மேனியெங்கும்.
துல்லியத் தனி நிறத்தில் துலங்கும் அல்குல்.
கருக்கல் வரை கலவி செய்தும்
களைக்க மாட்டாள் கனகாம்பிகை.       .
வளைக்கரத்தாள் வடிவுக்கரசியின்
துடியிடை அருட்கொடை.
நித்திலவல்லியின் நிதம்பமேடு
புத்தம் புது சுகம்
என்பதோடு
இன்னுமின்னுமின்னுமாய்
பட்டமகிஷியோடு கட்டிப் புரண்டபடி
சொன்ன சொல் லொவ்வொன்றும்
வன்புணர்ச்சியாக _
வேய்ங்குழலியின் யோனிவாய்
ராணியில் ஈனமாக,
இருவிழியோரம் தோயும் நீர்
திரிவேணியினுடையதாக….




17.உள்வெளி

குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன.
அணுகுண்டாய் ஒன்றுவிர்ர்ரோடித் துளைக்க
அருகிருந்தது பாவனையாய் சாய்கிறது சுருண்டு….
மருள் மனக் காட்சியில்
வழக்கம்போல்
முதல் குழந்தை பூவாய் அபிநயிக்க
விழுந்த பிள்ளையும் மலரச் சிரிக்கிறது.




18.தான்தோன்றித் தருணங்கள்

அபிமானம் அவமானம் பிடிமானம் வெகுமானம்
செரிமானம் வருமானம் வேறு மானாதி மானமெலாம்
சிறுதுளி மூச்சுவெளியேற்றமன்றிப் பிறிதொன்றில்லை யாக
போகும் வேகத்தில் தார்ச்சாலை நாகத்தின்
மாணிக்கங்கள் மினுமினுங்கச்
சிணுங்கும் மனச் சொப்பனங்கள் சொல்லாமல்
பதுங்கிக் கொள்ளும்
பூங்கொத்துக்களின் முதுமக்கட்தாழிப் பாழுக்குள்
முகிழ்த்து மேலெழும்பும் மூலாதார வலி தீண்ட
வேண்டும் வேண்டும் பதுங்கு குழி தோண்ட வேண்டும்
செய்யும் தொழிலே தெய்வம் அன்பு தவமாக
என்னென்ன பொய்புனைசுருட்டுகள் வனைய வேண்டும்
எத்தனை கிலோ செய்ய வேண்டும்
குறிப்புகள் உண்டா வகுப்புகள் உண்டா
கந்தா கடம்பா கார்த்திகேயா நின்
குமரிமுனைகள் நிணத்தாலானதா மனதா லானதா
நிஜமா பொய்யா உன் recipe எனக்கு கந்ததா
என் recipe உனக்கு உகந்ததா
எனக்குப் பிடிக்குமா உனக்குப் பிடிக்குமா
மனம் கீறல் விழுந்த இசைத்தட்டாய்
தினம் பாடியபடியிருக்கும்
அந்தக் காலக் காதற்பாட்டின் அதே வரிகளின்
பிசகிய சுருதியில்.
குருதியப்பிய சுவர்க்கடிகார முட்கள்
என் சிறகுகளை யெப்போதும் அரிந்துகொண்டிருக்க
மழித்தலும் நீட்டலும் வாழ்க்கையென் றான பின்
மார்க்கங்களைப் புரட்டிப் போட்டுப் பயனென்ன கூடும்
சொல் மனமே முருகனின் மயில் வாகனமெனில்
ஆறுமுகத்திற்கு எத்தனை தாகங்கள் எண்ண
சின்ன விழிப் பார்வையின் என்னென்ன வார்த்தைகளை
மொழியாக்கியதில் பழி சேர பிழை சேரப்
பீழை சேர்ந்துளதோ அன்பின் வழியில்
பிடரிபடும் இருகால் ஏகும் பொழுதில்
நடந்ததும் கடந்ததும் இடறிவிட இடறிவிட
தினங்கள் மாதங்களாகி வருடங்களாகிய பிறகும்
அதேயளவாய் பசுமையை உசாவுதல் மடமையோ
பன்னிப் பன்னி அறிவுறுத்திக் கொண்ட பின்னும்
இன்னும் ஏன் புண்பட்டுக் கசியும் அகம் தானும்
போனால் போகட்டும் போடா வா வா
அருகில் வா வந்த பின் விலகிப் போ
நித்தமும் தத்துவம் ஒப்பித்தல் உத்தமம்
அத்தனைக் கத்தனை சித்தம் கப்பிய இருளில்
தன்னைத் தான் குத்திக் கிழித்திருக்கும் பித்து மனம்
பத்தியம் பார்க்காது முள் விழுங்கி விழுங்கி யுள்
சேரும் சித்திரத் தன்ன காயம் உலரத்
தழும்புகள் அழியத் தான்
தன்னை நித்திரையில் பத்திரமாக்கும்
தாற்காலிக மரணத்திற்கென் தோத்திரம்.




No comments:

Post a Comment