LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, September 13, 2017

ஓவியாவின் மழை
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ஏதோவொரு தருணத்தில் மண்ணில் உதிர்ந்திருக்கலாகும் 
நிலவுகளையும் நட்சத்திரங்களையும் தேடியெடுக்கும் தவிப்பில்
தலைகுனிந்தபடியே,
ஒரு காலாதீதவெளியைக் காலால் கெந்தியபடி
போய்க்கொண்டிருக்கிறாள் ஓவியா.
அடிக்கொரு முகமூடி இடறுகிறது.
ஒன்றைக் கையிலெடுத்துச் சுழற்றி வீசியெறிகிறாள்.
அது போய்விழுந்த பள்ளத்தாக்கிலிருந்து
பொசுங்கும் நாற்றம் சுள்ளென்று கிளர்ந்தெழுகிறது.
இன்னொன்று பிடியில் அகப்படாமல் நழுவிப்போனபடியே
அவளைப் பார்த்து எள்ளிநகையாடுகிறது.
பகையென்ன என்னோடு என்று திகைப்போடு பார்த்துவிட்டுத்
தன் தேடலைத் தொடர்கிறாள்
வழிமறிக்கும் முகமூடி ஒன்றை 
ஒரே குதிகுதித்துத் தாண்டிச்சென்றுவிடுகிறாள்.
கனிவாய்ச் சிரித்தபடி கனலைக் கக்கும்
முகமூடியை மருட்சியோடு வெறித்துப்ப்பார்க்கிறாள்.
முகம் மட்டுமல்ல அவள்மனம்; ஆன்மா
அவளைச் சும்மா விடலாமா?
விடாமல் வழிமறித்துக்கொண்டேயிருக்கின்றன முகமூடிகள்.
ஒன்று அசந்த நேரம் அவள்மேல் ஏறிப்படர்ந்து
அவள் முகத்தை எட்டப்பார்க்கிறது.
தட்டிவிட்டு முன்னேறுகிறாள்.
குரங்கிலிருந்து வந்தவர்கள்தானே நாம் என்று
ஒரு முகமூடி இன்னொன்றை அணிந்துகாட்ட,
போலச் செய்யாமல், இரண்டு போலிகளையுமே மறுத்து
அப்பால் செல்கிறாள்.
ஒன்றை உருட்டுக்கட்டையால் ஒரே போடு போடுகிறாள்
ஒன்றை தனக்கேயுரிய புன்னகையால் கதிகலங்கச் செய்கிறாள்.
என்ன செய்தும் முகமூடிகள் விடுவதாயில்லை.
மூர்க்கமாய் அவளைத் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.
ஒருவேளை தானும் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டுவிடுவதுதான் தப்பிக்கும் வழியோ 
என்றெண்ணி ஒன்றை எடுக்கும்போதே
அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிடுகிறது.
தொப்பென்று போட்டுவிடுகிறாள்.
பொழுது போய்க்கொண்டிருக்கிறது - காலாதீதவெளியிலும்.
அழ நேரமில்லை.
மண்ணுள்ள நிலவுகளை விண்மீன்களை அவள் திரட்டி யாகவேண்டும்…..
நாளெல்லாம் நடந்து நடந்து அதிகம் களைத்துவிட்ட 
அவள் வண்ணச்சீரடிகள் இளைப்பாற ஏங்குகின்றன
இருந்தாற்போலிருந்து பெய்யும் மழையின்
மடிசாய்ந்துகொள்ளும் ஓவியாவை
மனநிலை பிறழ்ந்தவளாய்க் கொக்கரித்து
உதட்டளவில் வருத்தப்படுகின்றன முகமூடிகள்.
பாவம், முகமூடிகளால் பார்க்கவியலாது
விண்மீன்கள், நிலவுகள், கோள்கள்,மேகம், அணுக்கள், அந்தர சுந்தரதோடு
அவள் வசமாகிவிட்ட வானம்
அவளைக் கதகதப்பாக அடைகாத்துக்கொண்டிருப்பதை.


No comments:

Post a Comment