LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, August 15, 2023

இதுவா ஊடக அறம்?

 இதுவா ஊடக அறம்?

 _ லதா ராமகிருஷ்ணன்

(*13.8.2023 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

 

தற்போது பரபரப்பாகக் காண்பிக்கப்படும் காணொளி மணிப்பூர் அவல நிகழ்வுக்குக் காரணமாகக் கைது செய்யப் பட்டிருக்கும் நபரின் வீட்டை அவனுடைய இனத்தைச் சார்ந்த பெண்களே அடித்து நொறுக்கும் காட்சிகள்.

மணிப்பூரில் நடந்திருக்கும் மிக அவலமான, அராஜகமான நிகழ்வு அனைவராலும் கண்டிக்கப்படவேண்டியது

அதை பகடைக்காயாக, துருப்புச்சீட்டாக, தங்களைப் பீடமேற்றிக் கொள்ளக் கிடைத்த பெருவாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் ஆழ்ந்த அனுதாபத்துக்கும், கண்டனத்திற்கும் உரியவர்கள்

மணிப்பூரில் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்ட கொடூர நிகழ்வு’’ குறித்து சில ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம் இப்படி யிருக்கிறது

//“யேய் அந்த ஆட்கள் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் காணொளிகளை முடிந்தவரை தெளிவாகக்காட்டப் பாருங்கப்பாஆனால், சட்டப்பிரச்சனையிலே சிக்காத அளவு கவனமாகக் காட்ட வேண்டும். //


***

மெயின் ஸ்ட்ரீம் ஊடகங்கள் மறந்துவிட்ட கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்புக் கலவரம்

ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியொன்றில் மாணவியொருவர் இறந்ததைத் தொடர்ந்து அந்தப் பள்ளி பட்டப்பகலில் எரிக்கப்பட்ட, சூறையாடப்பட்ட, தமிழ்நாட்டையே உலக அரங்கில் தலைகுனியச் செய்த கொடூர நிகழ்வு.

அது குறித்த வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இறந்த மாணவியின் தாய் விசாரணைக்கு ஆஜராகவில்லையென்றும், அவருடைய மகளின் அலைபேசியை மிகவும் தாமதமாகவே உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பித்தார் என்றும், கலவரத்தில் ஈடுபட்ட இரண்டாம் நிலை ஆட்களே சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்நிலைக் கலவரக்காரர்கள், அவர்கள் மாநில அரசின் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.

அது தற்கொலை என்று இரண்டு போஸ்ட் மார்ட்ட அறிக்கைகள் சொல்லியபிறகும் தொடர்ந்து அந்த மாணவியின் மரணத்தை RAPE & MURDER என்றே , எந்தவிதமான ஆதாரங்களையும் முன்வைக் காமல், பேசி வரும் மாணவியின் தாயார், அவருடைய ஆதரவாளர் கள், இறந்த மாணவி மானபங்கப்படுத்தப் பட்டதாய் இறப்பின் பின்னும் அவரை மதிப்பழித்துக்கொண்டிருக்கும் ஏராளமான யூட்யூபர்கள், சில அச்சிதழ்கள் – இவற்றின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? 

3500 மாணாக்கர்கள் படிக்கும் பள்ளி பட்டப்பகலில் சூறையாடப் பட்ட, தீக்கிரையாக்கப்பட்ட இத்தகைய நிகழ்வு உலக அளவிலேயே கூட நடந்ததாக நினைவில்லை. ஆனால், தமிழின் ‘மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள்’ இந்த நிகழ்வை விவாதப்பொருளாக்கவேயில்லை. அந்த வழக்கு குறித்த எந்தச் செய்தியையும் வெளியிட ஆர்வங் காட்டுவதில்லை. ஏன்? 

***

 கோர விபத்துகள், கொலைகள் போன்ற நிகழ்வுகளை  நேரடியாக காணொளி வடிவில் காட்டக் கூடாது என்ற சட்டவிதியிருக்கிறது. ஆனால் இந்த தமிழ் தொலைக்காட்சி சேனல்கள், யூட்யூப்கள் போன்ற சமூக ஊடகங்கள் இப்போதெல்லாம் இத்தகைய விபத்துகள், கொலைகளையே அதிகம் காட்டுகின்றன – ஏன்? 

***
கோயில்களை கொலைத்திட்டம் தீட்டுவதற்கான களமாக, ஆள்கடத்தல் செய்வ தற்கான இடமாக தமிழ் தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றன. சமூகத்தை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்கிறோம்’ என்பார்கள் இந்த ஊடகநாடகவியலாளர்கள். உண்மையில் இதுவரை இப்படி எந்தக் கோயிலி லும் நடந்ததில்லை. ’இப்படிச் செய்யலாமே’ என்று சொல்லிக்கொடுப்பதுபோல் இருக்கிறது. இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? 

இந்துமதம் என்றாலே மூட நம்பிக்கைகளும், வேண்டாத சடங்கு சம்பிர தாயங்களும் கொண் டது என்றவிதமான கண்ணோட்டத்தையே இந்த மெகா நாடகத்தொடர்கள்  முன்வைக்கின்றன. இதுவா ஊடக அறம்?

No comments:

Post a Comment