LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, April 23, 2016

குழந்தை கை மாயக்கோல்! - ரிஷி

ரிஷியின் நீள்கவிதை

குழந்தை கை மாயக்கோல்!
 ரிஷி
 
குச்சி ஐஸ்வேண்டுமென்று கேட்டு பிடிவாதம் பிடிக்கும் குழந்தையை
கொஞ்சம் அங்கேயிங்கே அலைந்துவாங்கித்தந்து
சமாதானப்படுத்திவிடமுடியும்.
பிச்சுத்தா மேலே தொங்கும் நட்சத்திரங்களை”, என்று கேட்டால்
என்ன செய்வது….?
எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கத் தொடங்க
கையிலுள்ள மாயக்கோல் கொண்டு
கண் துஞ்சாமல் இரவு முழுக்க விண்ணைத் தாண்டி யேகு மந்த
எழுத்தேணியைக் கட்டமைத்துக்கொண்டது குழந்தை.


v       


டங்காத் தாகத்துடன் தட்டுத்தடுமாறி யேறத் தொடங்கியது
அவ்வப்போது மூச்சு முட்டியது;
அங்கேயிங்கே மோதிக் காயம்பட்டது.
கீழே போய்க்கொண்டிருந்தவர்கள் அண்ணாந்துபார்த்து அங்கலாய்த்தார்கள்
அத்தனை ‘கொழுப்பு’ உடம்புக்கு ஆகாதென்று.
தங்களுக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளால் கண்டித்தார்கள்.
கெக்கெலித்தார்கள், கல்லெறிந்தார்கள்,
பின் வழி போனார்கள் பூனைக்கண்மூடி.
அந்தரவெளியின் அரவணைப்பில்
குழந்தை யனுபவித்துக்கொண்டிருந்த ஆனந்தப்பரவசம்
அதற்கு மட்டுமே தெரியும்.
யாராலும் பொருள்பெயர்க்கலாகா வாக்கியமொன்றின்மேல்
தன் வாழ்க்கையை நிறுவிக்கொண்டுவிடுவதென்று
காற்றிடமிருந்து கசடறக் கற்றுக்கொண்டுவிட்டது குழந்தை.

v       

நூலேணியில் மேலேறிச் செல்லச் செல்ல
மனதிலூறிய இன்பத்தில்
விண்மீன்களைக் கொய்துவரும் எண்ணம்
அறவே மறந்துபோக
அந்ந்தரத்தில் சுந்தரத்தைக் கண்டுணர்ந்து
கைகொட்டி மகிழ்ந்துகொண்டிருந்தது குழந்தை.
பூரிப்பில் மின்னிக்கொண்டிருந்த அதன் கண்களினூடாய்
வந்துசேர்ந்தன விண்ணின் இரண்டு புதிய நட்சத்திரங்கள்!

v       


ந்தரவெளியில் தொங்கிக்கொண்டிருக்கும் நூலேணி.
ஆரம்பமும் முடிவும் புலப்படவில்லையோ,
அல்லது இல்லையோ …..
சொல்வார் யார் உறுதியாய்.?
இறுதியில் எல்லாமே ஒரு கைத் தட்டலொலி தானோ ஏனோ
மானோ மயிலோ மல்லிகைச்சரமோவெனத்
தானோடிக் கொண்டிருக்கிறது குழந்தை தாவித்தாவி மேலே
வீணான கேள்விகளுக்கு விடையளிக்க நிற்காமல்.

 v       

ற்காமல் கைகூடாது அறிவு என்றே
கைகட்டி அமரச் சொன்னார்கள் வகுப்பறைக்குள்.
பொற்காசு பரிசளிப்பதாய் போட்டிவைத்தார்கள் –
சட்டாம்பிள்ளைத்தனமாய் வகுத்துரைத்தார்கள்
இப்படியிப்படி யிருக்கவேண்டும் கவிதை யென்று.
செல்வங் கொழிக்கும் இல்லில் பிறக்கவில்லை யானாலும்
சொல்செழிக்கும் உள் வாய்த்திருந்த குழந்தை
ஆயகவிதையை எழுதலாயிற்று முற்றுப்புள்ளியிலிருந்து.



v       

புள்ளிக்கு முன்னும் பின்னும்
கள்ளச்சிரிப்போடு துள்ளிக்கொண்டிருந்த எண்ணிறந்த வரிகளைக்
காணவியலாதார்
”போட்டிக்கு நீ லாயக்கில்லை போ” என்று பிரம்போடு வந்தனர்.
விருதுக்கல்லவே என் வரிகள் எனச் சொல்லியபடி
தான் எழுதியிருந்த வெல்லும் சொல் ஒன்றை
அவர்களுக்கு அன்பளிப்பாய் விட்டுவைத்து
அங்கிருந்து அகன்றது குழந்தை.
செய்வதறியாமல் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தபோதே
அந்தச் சொல்லிலிருந்து பல்கிப் பெருகலாயிற்று
நல்வினைப் பயன்களெல்லாம்!


v       


கோலிகுண்டு, கலைடாஸ்கோப்,
பறவையின் சிறகிழைகள்,
கடற்கரைக் கிளிஞ்சல்கள்,
காற்றின் திருவுருவங்கள்
கானக விலங்கினங்கள்,
கண்ணன் வேய்ங்குழல்,
காற்றாடி, கலர்ச்சட்டை
கார்வண்டி, கப்பல், ராக்கெட்
பாக்கெட் நிறைய சாக்லெட்டுகள்
மண்டை முழுக்க மூளை
பாலையில் சோலை
உறவில் பிரிவு
பிரிவில் உறவு யென்றாங்கு
உறுகி யிறுகிக் குறுகிப் பெருகிப்
பிள்ளைக்கு வல்வினை தீர்த்தும் நல்வினை சேர்த்தும்
எல்லாமாகி நிற்கும் சொல்.


v       

மின்மினியின் ஒளிர்வில் தட்டுப்படும் பாதையில்
தன்னந்தனியாய் தளர்நடை பழகிக்கொண்டிருந்த
குழந்தையின்
கன்னத்தில் முத்தமிட
அந்தரத்திலிருந்து மிதந்திறங்கிவந்த தேவதை
நெருங்கக் கண்டு புன்னகைக்கும் பிள்ளையின் கனிவில்
வாயெங்கும் பரவிய இதுவரை யறியாத தித்திப்பு
தெவிட்டத் தெவிட்ட
வந்தவழி திரும்பமாட்டாமல்
திக்குத் தெரியாத காட்டில்
இன்னுமின்னும் குழந்தையை உச்சிமோந்தவாறு.


v       






No comments:

Post a Comment