LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, June 6, 2015

இன்மையின் இருப்பு {சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}காலத்தின் சில தோற்ற நிலைகள் - 10

கவிதை                
இன்மையின் இருப்பு
{சமர்ப்பணம் : தாத்தாவுக்கு}

காலத்தின் சில தோற்ற நிலைகள்
ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு


 வெளியீடு: காவ்யா பதிப்பகம். 2005



ஆறடி ஆகிருதியின் திடகாத்திரம்
1500 டிகிரி செண்டிகிரேட் நெருப்புப் பிழம்புக்குள் செலுத்தப்பட்டு
சிறிதுநேரம் வரை சலனமற்றிருந்தது ஆகாயம்.
பின், போக்கியின் வழியாய் சன்னமாகக் கிளம்பத் தொடங்கியது புகை.
உள்ளே உடல் இறுதியாக ஒருமுறை துடித்தெழுந்து
அடங்கிக்கொண்டிருக்கும்.
வெப்பத்தில் விரியும் எலும்புகள் வெளியே துருத்திக்கொண்டு வருவதுபோல்….
எங்கு இடம்பிடிக்கும் ஒரு நூறாண்டும், கூட மூன்றாண்டுகளுமான
அந்த வாழ்வின் நிலவறைகளிலிருந்த எல்லாமும்….?
திருத்தமாய் நினைவடுக்குகளில் வரிசைப்படுத்தி
வைத்திருந்த அந்தப் பள்ளிப்பாடல்கள்;
ஷேக்ஸ்பியர் வாசகங்கள்;
கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் புள்ளிவிவரங்கள்,
சில வார்த்தைகளால் வரவான தழும்புகள்,
சார்புநிலை கொண்டுவந்து சேர்த்த சலிப்பும் இழப்புகளும்,
உறவுகளின் மீது தேக்கிவைத்திருந்த பிரியம்,
ஒருபோது தாக்கியிருந்திருக்கலாகும் காமத் தினவு,
ஆட்கொண்ட வேட்கைகள், தேட்டங்கள்,
பல தலைமுறைகளின் ஞாபகப் பெருந்திரள்,
நனவோடை வண்டல், அக்கக்கோ பறவையின் தனிமை,
பொக்கைவாய்க்குள் புதைத்துவிட்ட சொல்லும் பொருளும்
பிறவும்….

ருள் மனம் மீட்சியற்று சிதறும்
இருளின் ஆழத்திலிருந்து எதிரொலிக்கிறது
“அக்கா” என்று அன்போடு என்னை அழைக்கும் குரல்….


0







No comments:

Post a Comment