LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, November 18, 2019

மந்தைவெளி மரணக்கிணறுகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மந்தைவெளி மரணக்கிணறுகள்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)





கிணறு தரையில்தான் திறந்திருக்க
வேண்டுமென்பதில்லை.

இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில்
வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில்
விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம்
செய்பவர்களில்
முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள்
மாணாக்கர்கள் பல பருவங்களில்
மழலையை ஏந்திச்செல்பவர்கள்
எனப் பலதிறத்தார்…
கரணம் தப்பினால் மரணம் சம்பவிக்கும்
அந்த உருண்டோடும் கிணறுகளில்.
ஒருமுறை அப்படித்தான் சம்பவித்தது
கோர விபத்து.
உயிர்பலி ஒன்றோ இரண்டோ –
நினைவில்லை.
(வரம்போலும் சாபம் போலும்
மறதி வாழ்வில்)
உறுத்தும் மனசாட்சியை அடக்க
மந்தைவெளி பஸ் டெர்மினஸைச்
சுற்றியுள்ள நான்கு வீதிகளும்
‘ஒன் வே’ ஆக மாறின.
சிறிதுகாலம் சட்டப்படி நடந்து
கொண்டவர்கள்
மெல்லமெல்ல தம் இட்டப்படி
நடக்க ஆரம்பித்தார்கள்.
சரியாகச் சொல்வதென்றால்,
ஓட்ட ஆரம்பித்தார்கள்.
தொடக்கத்தில் அங்கங்கே
காவல்துறையினர் சிலர்
காட்சியளித்தார்கள்.
காலப்போக்கில் அவர்களும்
காணாமல் போனார்கள்.
காணக்கிடைக்காதவை
நடைபாதைகள்.
பெரியவர்கள் படித்தவர்கள்
அவரவர் வீடு கடைகளுக்கு
வாயிலாக நடைபாதைகளை
வெட்டிச்சாய்த்து, வேலியிட்டு
மாமாங்கமாகிவிட்டது.
இருக்கும் அற்பசொற்ப நடைபாதைகளை
பூக்கடை, காய்கறிக்கடை,
வத்தல் வடாம் கடை
வாகாய் அடைத்திருக்க _
வேகமாய்த் திரும்பும் பேருந்துகளையும்
பொருட்படுத்தாமல்
வீதியோரமாகவே நடக்கவேண்டும்
பாதசாரிகள்.
ஏழை வியாபாரிகளிடம் சட்டம் பேசினால்
ஏழை பாதசாரி ஏகாதிபத்தியவாதி
யாகிவிடுவார்.
அத்திபூத்தாற்போலிருக்குமொரு
பிளாட்பாரத்தின் பெருஞ்சதுரப்பகுதியில்
PRESS என்ற சொல்லைத் தாங்கிய
கார்வண்டியொன்று
காலங்காலமாக நின்றுகொண்
டிருக்கிறது.
பேருந்தை ஓவர்-டேக் செய்யும்
இருசக்கரவாகனம்
வீதியோரமாய்ப் போவோரை
வெட்டிச்சாய்க்காதிருந்தால்
அவருக்கு ஆயுள் கெட்டி.
மந்தைவெளி பேருந்துநிலையத்தினுள்
மின்னலெனப் புகுந்து வெளியேறும்
மோட்டோர்பைக்குகளும்
ஆட்டோரிக்ஷாக்களும்
முழுவேகத்தில்.
ஒன் -வே தானே என்று
வண்டிவரக்கூடாத பக்கம்
ஒதுங்கி நடந்துவந்தால்
கொன்றுவிடும் வேகத்தில்
ஒன் – வேயை டூ-வே ஆக்கி
எதிரே சட்டத்திற்குப் புறம்பாய்
சீறிக்கொண்டுவரும் வண்டியின் ஓட்டுநர்
முறைப்பார் நம்மை.
சமயத்தில் கெட்டவார்த்தையில்
திட்டவும் செய்வார்.
மதியழிந்தொரு கணம் தோன்றும்
நாம்தான் சரியில்லையோவென.
இம்மை மறுமை யென்பதான
வார்த்தைகளெல்லாம்
நம்மையும் மீறி நினைக்கப்படும்.
ஒன் – வே என்று தெரிந்தும்
இந்த வீதிகளில்
வரக்கூடாத வழியில் புகுந்து
புறப்படுபவர்கள்
முன்பெல்லாம் கள்ளனுக்கேயுரித்தான திருட்டுமுழியுடன்
செல்வார்கள் சற்று மெல்ல.
இன்றோ
இது சரியல்ல என்று நாம் சொல்வதைக்
கேட்டுப்
புத்தி பேதலித்துவிட்டதோ என்றொரு
பார்வை பார்த்து
பத்திரம் தொலைத்துச்
சீறிப் பாய்கிறார்கள்.
இன்றைய தலைமுறைக்குத் தெரியாத
அரசியல் ரகசியங்கள்போல் _
இன்னும் சரியாகச் சொல்வதென்றால்,
அரசியல்வாதிகள் சிலரின் அறியாத்
திரைமறைவுச் சரித்திரங்கள்போல் _
இந்த வீதிகள் ஒன் – வே என்றறியாத
ஒரு தலைமுறை உருவாகிவிட்டது
புரிகிறது.
கரணம் தப்பி யாரேனும்
நரபலியானால்
ஒருவேளை மீள்கவனம் பெறக்கூடும்
மந்தைவெளி ஒருவழிச்சாலைகள்.

பாவனைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பாவனைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


தான் அறிந்த எனில் அங்கீகரிக்க விரும்பாத நாலுபேர் சொல்லும் உலகத்தரமான படைப்புகளில் ஒன்றிரண்டை அரைகுறையாகப் படித்துவைத்து
அவ்வப்போது உங்களை நேராகவும் பக்கவாட்டிலுமாய்ப் பார்த்தபடி
அந்த எழுத்தாக்கங்கள் பற்றிச்
சில மேலோட்டமான கருத்துரைப்பார்.
அதிக வேலையிருப்பதால் விரிவாக எழுதமுடியவில்லை என்று
விளக்கம் தரக்கூடும்.
கவனமாகக் கேட்டுக்கொள்வதோடு
கண்டிப்பாக ‘லைக்’ போடவேண்டும் நீங்கள்.

நாளையே இதைச் செய்துவிட மாட்டார். அப்படிச் செய்தால் இன்னொருவரிடமிருந்து இரவல் வாங்கியிருப்பது தெரியவந்துவிடும்.
இன்னாரிடமிருந்து என்றுகூட.
அதுவே நான்கைந்து வாரங்களுக்குப் பின்
கூறினால்
அந்தக் கூற்றின் இரவல்தன்மை குறைந்துவிடுமென்பது
களநிலவரம்.

கலவரம் வேண்டாம்.
தரமான படைப்பாளியாவதற்கு
தரமான படைப்புகளைத் தரவேண்டும்
என்பதெல்லாம் சரிதான்.
ஆனால், அதுமட்டும்போதாது.
அதிக பாவனைகளைக் கைக்கொள்ளவேண்டும்.
ஷேக்ஸ்பியரே தன்னைக் கேட்டுக்கொண்டுதான் அத்தனை நாடகங்களையும் எழுதினார் என்று அடித்துக்கூறவேண்டும்.
அதெல்லாம் அத்துப்படி யவருக்கு.

அதை அவர் செய்யச்செய்ய
அதிக ’லைக்கு’களை நீங்கள் போட்டுப்போட்டு
போட்டிபோட்டு போட்டுப்போட்டு
கூட்டிக் கழித்து வகுத்துப் பெருக்கி எப்படிப்பார்த்தாலும்
அவர் அறிவுசாலிப் படைப்பாளியாகத்
தெரியும்படி
பீடத்தில் உயரே ஏற்றிப்
போற்றிப்பாடவேண்டும்.

படைப்பாளி பெரிய படைப்பாளியாக,
அவரைப் படிப்பவர்களும் பெரிய வாசகர்களாகிவிடுவார்கள்!

ஆனால் அவரையன்றி வேறு எந்தவொரு
அசலான பெரிய படைப்பாளியைக்
கொண்டாடினாலும்
அப்படிச் செய்யும் வாசகர்கள்
நரகத்திற்குத்தான் போவார்கள்
அங்கே யவர் பேயாக வந்து
உங்கள் ரத்தம் குடிப்பார்.

அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது;
ஆனால் பேய் பிசாசுகள் மீது நிறையவே உண்டு.
அதனால்தான் பகுத்தறிவின் தேவையைத் திரும்பத்திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்.

புரிந்தால் சரி.

விறுவிறுவென உங்கள் வலக்கர அல்லது இடக்கர ஆள்காட்டிவிரல் அல்லது மோதிரவிரலால்
’Like’ -ஐ அழுத்துங்கள்.
'Like - Love' இரண்டையும் ஒருசேர அழுத்த முடிந்தால்
இன்னும் நல்லது.

இதோ அடுத்த உலகத்தரமான இன்னொரு எழுத்தாளரின் இரண்டு மூன்று வரிகளை வாசித்துமுடித்துவிட்டார் மேதகு படைப்பாளி்.
அவை குறித்த தனது மேலான பார்வையை
இன்றிரவுக்குள் பதிவேற்றிவிடுவாரோ…
இல்லை, இன்னும் இரண்டு மாதங்கள் பொறுத்திருப்பாரோ……

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


கர்ணனைத் தங்கள் தோழனாகத்
தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர்
வலது கை கொடுப்பதை
இடது கை யறியாமல்
தர விரும்புவதேயில்லை.
’கமர்கட்’ தானம் கொடுத்தாலும்
அதைக் கணக்கற்ற காமராக்களின்
ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள்.
இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய்
கொடுத்து
வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில்
துல்லியமாய் செல்ஃபியெடுத்துப்
பதிவேற்றிவிடுகிறார்கள்.
குட்டு வெளிப்பட்டதும்
துண்டைக் காணோம்
துணியைக் காணோம் என்று
கொஞ்சமே கொஞ்ச காலம்
அஞ்ஞாதவாசத்திலிருந்தவர்கள்
வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து
கவி பாடி
விட்ட இடத்திலிருந்து
தங்கள் தர்பாரைத் தொடங்குகிறார்கள்.
காணிநிலமென்று சில ஏக்கர்
நிலங்களைக்
கைவசம் வைத்திருக்கும்
நவீன ஏழைகள் சிலர்
ஒண்டுக்குடித்தனத்திலிருப்பவர்களைக்
கொடுங்கோலரசர்களாகக் காட்டி
செருப்பாலடிக்கிறார்கள்
திரும்பத்திரும்ப.
பேசும் பாம்புகளாக மெகாத்தொட
ரோட்டிக்கொண்டிருக்கும்
விஜய் தொலைக் காட்சி
‘நாங்கள் மூடநம்பிக்கைகளை ஆதரிக்க
வில்லை, மூடப்பழக்கவழக்கங்களை
ஊக்குவிக்கவில்லை' என்றெல்லாம்
பலவாறாய்
நீண்டு வளைந்துசெல்லும்
வாக்கியப் பாம்புகளை
திரையில் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு வேகவேகமாய்
ஊர்ந்துசெல்ல வைக்கிறது.
எல்லோரும் உண்மைதான் பேசுவார்கள்,
உண்மையாகத்தான் பேசுவார்கள்
என்று இன்னமும் எண்ணியவாறிருக்கும்
இத்தனை பெரிய மூடநம்பிக்கையிலிருந்து
மீளும் வழியறியாமல்
விக்கித்து நிற்கிறது என் பகுத்தறிவு.

கவிதையின் மெய் ’ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)

             கவிதையின் மெய்
’ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)

மெய்க் கவிஞர்
பொய்யாகக் குழைய மாட்டார்;
பொய்யாகப் பணிந்து் குனிய மாட்டார்
பொய்யாகப் புகழ மாட்டார்
பொய்யாக இகழ மாட்டார்
மெய்யாகப் பாராட்டுக்கு
அலைய மாட்டார்
மெய்யாகத் தலையை சிலுப்பிவிட்டுக்
கொள்ள மாட்டார்;
மெய்யாகக் கடலலைகளை
கணக்கிட்டுமுடித்துவிட்டதாய்
நம்பிக்கொண்டிருக்க மாட்டார்;
மெய்யாகவே எம்பிக் குதித்து
விண்ணைத் தொட்டுவிட்டதாய்
மனப்பால் குடித்துக்கொண்டிருக்க
மாட்டார்;
மெய்யாக மண்டியிடாத குறையாய்
முக்கியஸ்தர்களை அண்டிப்
பிழைக்க மாட்டார்.
அதீத அடக்கம் காட்ட மாட்டார்;
அதீத ஆணவமும்.
ஆக்ரோஷமாய் வாய்ச்சிலம்பம்
ஆட மாட்டார்;
கூடமாட ஒத்தாசைக்கு வரும் எடுபிடியாய்
வாசகரை பாவிக்க மாட்டார்;
அடிக்கடி தத்துவம் பேசியவாறே
அடுத்த அடுக்குமாடிவீடு கட்டுவதற்கு
வாகான இடம் தேட மாட்டார்.
மெய்யாகப் பொய்யையும்
பொய்யாக மெய்யையும்
முன்வைப்பாரேயல்லாமல்
தை தக்க தை என்று
அரங்கின்றி வட்டாடி யதை
அரியவகை நாட்டியமாய்
கவிதையில் எடுத்துக்காட்ட
பிரயத்தனம் செய்யமாட்டா
ரொருபோதும்
சிறுபத்திரிகை அங்கீகாரமும் வேண்டும்’
வெகுஜன ஊடக வெளிச்சமும் வேண்டும்
என்று சதா பரபரத்து
ஏங்கித் தவிக்கமாட்டார்;
அனைத்திற்கும் மேலாய்
தன்னை வழிநடத்திய இலக்கியத்தடம்
குறித்து
அறுபத்தியைந்து வயதுக்குமேல்
ஆங்காரமாய் அங்கலாய்த்துக்
கொண்டிருக்க மாட்டார்

நடுவில் பல பக்கங்கள் கத்தரிக்கப்பட்டு… ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

நடுவில் பல பக்கங்கள் கத்தரிக்கப்பட்டு…    

ரிஷி 
(லதா ராமகிருஷ்ணன்)

பாரிய பெருநிலத்தை
வாரிசுரிமையாய் வம்சச் சொத்தாய்
அரியணை யேறி யரசாண்டு துவம்சம் செய்த
கொடுங்கோலாட்சியாளர்களின் அநியாய
அக்கிரம
அநீதிகள் ஆக்கிரமிப்புகளையெல்லாம்
விரும்பி மறந்துவிடுபவர்கள் _
திரும்பத் திரும்ப மன்னித்துவிடுபவர்கள் _
வெகுசுலபமாய் கடந்துசெல்பவர்கள் _
வேகவேகமாய் தரைவிரிப்பின் கீழ்
மறைத்துவிடுபவர்கள் _
ஒரு புள்ளியிலிருந்து பார்க்கத்
தொடங்குகிறார்கள்
சகமனிதர்கள் அனுபவிக்கும்
சித்திரவதைகளை.
அதற்குமுன் அனுபவித்த
சாட்டையடிகளின்
ரத்தக்கசிவுகள் ரணகாயங்களின்
தழும்புகளைப் பார்க்க மறுக்கும் இவர்கள்
அவற்றைக் கணக்கிலெடுத்துக்
கொள்வதில்லை.
சென்ற பல வருடங்களில் சமத்துவம் பேசித்
தம் சொத்துமதிப்பைப்
பன்மடங்காகப் பெருக்கிக்கொண்டவர்களை சகமனிதநேயவாதிகளாகக்கூடப்
பார்க்கச் சித்தமாயிருக்கு
மிந்தச் சிந்தனையாளர்கள்
குறிப்பிட்ட ஒரு பகலிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள்
தம் பிரக்ஞையை.
அதுவே முதல் சூரியோதயமென
முழங்குகிறார்கள்.
இத்தனை காலம் சமத்துவம் போதித்த
வர்களதைச்சத்தியமாய்ப் பேசியிருந்தால்
இன்று அத்தனை மக்களுக்கும்
கிடைத்திருக்கும்
அடிப்படை வாழ்வுரிமைகள்.
இது புரியாதவர்களல்ல இவர்கள்;
பார்க்கமறுக்கும் அறிவுசாலிகளின்
விழிகளுக்கு அப்பால்
விரிந்துகிடக்கிறது பேருண்மை
வானம்போல்.
மொத்தமா யொரு தலையில் பழியைப் போட்டுவிடுவதே
பத்தரைமாற்று அறிவுசாலியாக உடனடி வழியென்றான பின்
சத்தமாய் இன்னும் சத்தமாய்
இன்னுமின்னும் சத்தமாய்ப்
போட்டுத் தாக்கி
குழிபறித்துப் புதைப்பதற்கென்றே
கிழிபடும் வரலாறு.

பொருளதிகாரம் _ 2 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பொருளதிகாரம் _ 2

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நவீன கவிதை நாட்குறிப்பேடு அல்ல
கவிஞர் என்ன நினைத்து எழுதினாரோ அதையே
வாசிப்போரும் வழிமொழிவதற்கு…
அதே சமயம் கவிதை கசங்கிக் கிழிந்த தாளல்ல -
பொருள்பெயர்த்தல் என்று கூறி யதைக்
கண்டபடி துண்டுதுண்டாய்ப்
பிய்த்துப்போடுவதற்கு;
சக வாசக மனதைக் குப்பைத்தொட்டியாக பாவித்து
அதில் கவிதையின் அர்த்தமெனச் சிலவற்றைச்
சுருட்டியெறிவதற்கு.
ஒற்றையர்த்தம் எனும் அதிகார மையத்தைச்
சிதறடிப்பதான போர்வையில்
குறிப்பிட்ட சில அர்த்தங்களைக் கவிதையின்
மேல் கைபோன போக்கில் பொதியேற்றிச்
சுமக்கவைக்கலாகாது
வாசகப்பிரதியென்ற பெயரில்.
கவிதை விரித்துவைக்கும் பல கொடுங்கோலாட்சிச்
சித்திரங்களை
ஒற்றைச் சக்கரவர்த்தியை சாணியடித்தலாய்
முடிந்த முடிவான வாசிப்பாக முன்வைத்தல்
வாசக வித்தகமா?
வன்மப் பித்தலாட்டமா?
பிரதியின் அர்த்தம் பற்பல என்று சொல்வதால்
பிரதிக்கு நான் விரும்பும் ஒற்றையர்த்தத்தைத்
தரவும் அதையே பரவலாக்கவும்
உரிமையுண்டு எனக்கு மட்டுமே என்பார்
வெறும் வாசிப்போர் அல்ல;
வாசிப்பு வன்முறையாளர்கள்.
வாசகப்பிரதிகள் பலப்பல வெனச் சொல்லியவாறே
கவிதையின் வரிகள் முன்வைக்கும் பிம்பங்களை
யொரு மொந்தையாக்கி
நிந்தனைக்கென்றே கட்டம்கட்டிவைத்திருக்கு
மொரு திருவைக்
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றமுடியவில்லையே
என்ற கோராமையோடு
நூறாயிரம்விதமா யொரேயொரு பொருளைக்
கவிதையின் வரிகள் வரியிடைவரிகளில்
வலிந்தேற்றிக் காட்டினா லது
வாசிப்பின் ரோகம்;
வாசிப்புக்குச் செய்யும் துரோகம்.
அப்படியே அதுதா னொரு கவிதையின்
மறைபொருளென்றாலும்
தனி யொரு கவிஞரின் வரிகள் தெரிவிப்பதெல்லாம்
கேள்விக்கப்பாற்பட்ட உண்மையென்று
கொள்ளத்தான் வேண்டுமா என்ன?
ஆபத்தானது ’ஆம்’ எனும் வாசக மனநிலை
கையடித்துச் சத்தியம் செய்தல்
கவிதைக்கு கைவரக்கூடாத கலை.
அவரவர் கேள்விகள் அவரவர் பதில்கள்
அவரவருக்கென்று விருப்புவெறுப்புகள்
பல்வகைப் பயன் கருதிக் கட்டும் பாட்டுக்கள்
பூட்டுகளுக்கேற்ற திறவுகோலா
கவிதையாக்கலும்
பொருள்கொளலும்?
அனைத்திற்கும் மேலா யொரு அடிப்படை உண்மை _
யதைக் கண்ணின் மணியெனக் கொள்வதே
மரபு நவீன மற்றெல்லா மெய்க் கவிஞர்களின்
மனத் தின்மையாக.

இலக்கிய இலக்கணங்கள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


இலக்கிய இலக்கணங்கள் - 1
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



கதை கவிதையெழுதுவதை விட
மொழிபெயர்ப்பாளராவதைவிட
வெகுஎளிதாய்
விமர்சகராகிவிட்டால் போச்சு!
விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம்
என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு.

Ø  
மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம்
இலக்கிய மைதானத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.
பந்தை உருட்டமுடிந்தவர்களெல்லாம்
பந்தாகிவிட முடியுமா என்ன ?
கேட்டால் கொடும்பாவியெரித்திடுவார்களோ -
ஒரே கலவரமாயிருக்கிறது.

Ø  
ஏன் அரசியல் கவிதையே எழுதுவதில்லை யென்று கேட்டா ரொருவர்
ஒரே யொருவரைப் பழிப்பதும் பகடி செய்வதும்
ஒரேயொரு குலத்தை மலமெனப் பேசுவதும்
நலங்கெட ஏசுவதும்
ஒரேயொரு மதத்தை விதவிதமாய் மதிப்பழிப்பதும்
வக்கிரமாய் நிந்திப்பதுமே
அரசியல் என்ற புரிதலோடு.

Ø  
அதிநேயமாய் சக படைப்பாளிகளைப் பேசுவதான
உத்தியைக் கையாண்டு
தன்னை யொரு அதிகாரமையமாய் கட்டமைத்துக்கொள்பவர்
புத்தியோடு அதைக் கண்டுபிடித்துவிடுபவர்களை
மதிகெட்டவர்களென்று முத்திரைக் குத்திவிடுகிறார்!

Ø  
கொஞ்சம் விட்டால் போதும்
னாவன்னா சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்;
மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கெழுத்தில்
மேதாவியாகிவிடப் பார்க்கிறார்கள் எப்போதும்.

Ø  

இலக்கிய இலக்கணங்கள் - 2
அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்கள்
குறட்டை விட்டுத் தூங்கியெழுந்தவர்கள்
பரட்டைத்தலையே வாரிமுடிந்த கூந்தலெனக் கொள்பவர்கள்
இரட்டை மூக்குகள் இருப்பதாக பாவனை செய்பவர்கள்
சிரட்டை தான் தேங்காயின் சாராம்சமெனக் கையடித்து
சத்தியம் செய்பவர்கள்
கரகரக் குரலில் அபஸ்வரமாய்ப் பாடி
இசையை வாழவைப்பவர்கள்
கத்திக்கத்தியே தன் கருத்தைச் சத்தானதாக்கும்
வித்தகம் பழகியவர்கள்
மொத்தமாய் குத்தகைக்குக்கு எடுக்கப் பார்த்தும்
இத்தனை காலமும் இனியும் தப்பித்து வாழும்
இலக்கியம்.
Ø  

கவிதையெழுதுதல் என்ற சமூகச்செயல்பாடு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கவிதையெழுதுதல் என்ற சமூகச்செயல்பாடு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



இந்த மாதமும் துண்டுவிழுவதில் வியப்பில்லை.
வரவு-செலவு பற்றாக்குறை வாடிக்கை.
(வீதியோரம் வெற்றுப்பார்வையுடன்
உள்ளொடுங்கிய வயிறுடன் படுத்திருப்பவரைப்
பார்க்க
நான் வெட்கங்கெட்ட வில்லி
விசித்திரகோடீஸ்வரி)
வங்கியிலுள்ள பூஜ்யசேமிப்பை
வர்ணமயமாக வெளிச்சமிட்டுக்
காட்டும் ஏடிஎம் மிஷின்
முகமூடிக்கொள்ளைக்காரர்கள்
என்னைச் சுற்றிவளைத்தால் என்னவாகும்?
அதாவது, அவர்களுக்கு
அத்தனை நிறைவளிக்காத ஒரு சிறு நூலை
இன்னும் பத்துநாட்களுக்குள் மொழிபெயர்த்துமுடித்தாகவேண்டும்.
மூவாயிரத்தி ஐந்நூறு ரூபாய் கிடைக்கும்.
முந்நூறு பக்க மொழிபெயர்ப்பை விட
முத்தான பத்து வரிக் கவிதை
அதிக சன்மானம் ஈட்டித்தரு மந்தப்
பொற்காலம்
என் வாழ்நாளுக்குள் வருமா?
(அப்படியே வந்தாலும்
யார் கேட்டாலும் தருவதற்கு
கவிதை யென்ன ஏழை வேசியின்
உடம்பா?)
அத்தனையையும் மீறி ஒரு கவிதை
இடைமறிக்கிறது
என்னை எழுதிவிடேன் என்று
மூச்சடைக்க இறைஞ்சுகிறது.
அது என்ன சுண்டுவிரலா?
கண்ணிமையா? சொப்புவாயா?
இன்னும் உருப்பெறவில்லை வடிவம்...
ஆனால், இளஞ்சூட்டில்
என்னமாய் சுவாசிக்கிறது அந்த உயிர்!
மையமா யொரு வரியிலிருந்து
துவங்கினால்
பின் மூன்று வரிகளோ
முன்னூறு வரிகளோ
அதில் நான் முயலோ முட்டுச்சந்தோ
முப்பரிமாண ஓவியமோ?
எங்கே ஒளிந்துகொண்டிருப்பேன்
என்னைநானே பார்த்தவாறு?
ஆறு மனமே ஆறு.....
ஆவியாகி மறையாம லொரு
கவிதையை அடைகாத்தல்
கைகூடினா லது
ஆகப் பெரும்பேறு.