LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 25, 2022

பாடகனின் அநாதிகாலம்! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாடகனின் அநாதிகாலம்!

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 (சமர்ப்பணம்: சித் ஸ்ரீராமுக்கு)

எனை மாற்றும் காதலே எனை மாற்றும் காதலே

என்று பாடிக்கொண்டேயிருக்கிறான் அவன்

மேடையில்.....

காதல் என்று அவன் பாடுவது எனக்குக்

காலம் என்பதாய் குழம்புகிறது.

அவனை மாற்றியிருக்குமோ காதல்?

ஒரு தேவதையிடம் மனுஷி நான் எப்படிக் கேட்பது?

எதையும் மாற்றும் காதலை மாறாத ஒரே ராகத்தில்

மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேயிருக்கிறான்.

சமயங்களில் சுருதி பிசகுவதாய்த் தோன்றுகிறது.

குரலில் கரகரப்பு கூடுகிறது.

ஆனாலும் அவனுடைய ஆனந்தத் துள்ளலில்

கரடிக்குட்டியும் முயலும் சின்ன பப்பியும்

செல்லப் பாப்பாவும் வரக் காண்பது

சொல்லிலடங்கா சூட்சும தரிசனமாய்…!

இசையின் உன்மத்தநிலையில்

சூரிய சந்திரராய் சுடர்விடும் அந்த விழிகள்

அனந்தகோடிமுறை அருள்பாலிக்கின்றன!

'கண்ணான கண்ணே கண்ணான கண்ணே'

என்று அழைக்கும் அந்தக் குரல்

கண்ணனுடையதாக _

கிறங்கிக்கிடக்கும் கோபியர் கூட்டம்

பாலினங் கடந்து!

வியர்வையில் நனைந்த முதுகுப்புறச் சட்டையும்

முன்நெற்றி முடிச்சுருளுமாய்

அந்தப் பாடகனின் குரல்

அநாதி காலத்திலிருந்து கிளம்பி

அரங்கில் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது.

மேடையிலிருந்த வாத்தியக்காரர்களெல்லாம்

அவனுடைய பிரதிபிம்பங்களாய்….

அல்லது, அந்தப் பாடகன் அவர்களுடைய

விரல்களனைத்தின் ஒற்றைக்குரலாய்....

பாடலை எழுதிய, இசையமைத்த

கைகளும் மனங்களும்

தனி அடையாளம் இழந்து அந்தக் குரலில்

இரண்டறக் கலந்து

ஈரம் நிறைக்கும் இசையில்

அரங்கமெங்கும் க்வாண்ட்டம் அணுக்களாய்

விரவிய ரசிகர்களின்

காலம் இல்லாமலாகியது.

அன்பின் குறுக்குவழி அல்லது சுற்றுப்பாதையின்

அரூப ஓவியங்களைத் தீட்டிமுடித்து

அவன் விடைபெற்றுக்கொள்ளும்போது

அரங்கிலுள்ளோர் எழுந்து நின்று கைதட்டி

அவனை அத்தனை அன்போடு

வழியனுப்பிவைக்கிறார்கள்.

நான்கு சுவர்களுக்குள் ஒரு பிரபஞ்சவெளியை

உருவாக்கித்தந்தவனுக்கு

என்னவென்று நன்றிசொல்வது என்று தெரியாமல்

நீர் தளும்பி வழிகிறது கண்களிலிருந்து.

 

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

  கவிதையாதல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நாடுமல்ல காடுமல்ல நான் கவிதை
யென்றது;
நரி காகம் கதையல்ல நான் கவிதை
யென்றது;
நான்குவரித் துணுக்கல்ல நான் கவிதை
யென்றது;
நீள நீள மறுமொழியல்ல நான் கவிதை
யென்றது;
நிறையக் கேட்டுவிட்ட தத்துவமல்ல நான் கவிதை யென்றது;
நான்குமறைத் தீர்ப்பல்ல நான் கவிதை யென்றது;
நான்கு பழமொழிகளின் திரட்டல்ல நான்
கவிதை யென்றது;
நச்சென்ற எதிர்வினையல்ல நான் கவிதை யென்றது;
நாக்கால் மூக்கைத் தொடுவதல்ல நான் கவிதை
யென்றது;
நாய்வால் நிமிர்த்தலல்ல நான் கவிதை யென்றது;
நன்றியுணர்வோ நபும்சகமோ அல்ல நான் கவிதை யென்றது;
நகையின் இருபொருளுணர்த்தலல்ல நான் கவிதை யென்றது
நல்முத்துமணியணிக்கோலமல்ல நான் கவிதை
யென்றது
நவரத்தின மயிற்பீலியல்ல நான் கவிதை
யென்றது
நட்சத்திரங்களின் எண்ணிக்கையல்ல நான் கவிதை யென்றது
நிலவின் துண்டங்களல்ல நான் கவிதை யென்றது
நல்லது நல்லது சொல் சொல் இன்னும் சொல்
என்றதற்கு
’ந’விலேயே வரிகளெல்லாம் தொடங்குவதல்ல கவிதை யென்றது சொல்லிச் சென்றது.
நாணித் தலைகுனிந்தென் கவிதை (நற்)கதி யிழந்து நின்றது.

விளம்பர யுகம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 விளம்பர யுகம்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


அரதப்பழசுக் கதையை

அசல் புதுக்கதையைப்போலவே


ஆனமட்டும் எழுதப்பார்த்தும்


முடியாமல் போனதில்


மனமொடிந்துபோன ‘மகாமெகா’


எழுத்தாளரிடம்


ஒரு சகாவாய்


கனிவாய் பார்த்து


கண்சிமிட்டிச் சிரித்தபடி

சொன்னதொரு


அசரீரி:


அட, அழலாமா இதற்கெல்லாம்?


அன்றுமில்லை என்றுமில்லை


அதிபுதிய கதை இங்கே இன்று


என்று


ஆறு ஆள் உயர அல்லது அறுபது


ஆள் உயர


AD ஒன்று கொடுத்துவிட்டால்


போதுமே


அதன்பின் உன் கதையே புத்தம்புதி


தெப்போதுமே….


அது சரி அது சரி


ஆ சிரி சிரி சிரி சிரி….