LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, August 30, 2018

எறிகுண்டுகளும் ஏவுகணைகளும் - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


எறிகுண்டுகளும் ஏவுகணைகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எல்லோரும் வரிசையில் காத்திருக்கிறார்கள்
ஒரே விஷயத்தைப் பற்றிக் கருத்துரைக்க…..
ஒரே மாதிரிக் கருத்துரைக்க……..

குறி பார்த்துத் தாக்கப்படுபவர்கள்
சகிப்புத்தன்மையோடு இருக்கவேண்டியதன்
அவசியத்தை விரித்துரைக்க………

ஒரு கை அல்லது ஒரு கால் போனால்
அதைப் பெரிதுபடுத்தாமல் இருக்கவேண்டியதன்
இன்றியமையாமையை எடுத்துரைக்க…….

அவர்களுடைய பொய்களை 
அப்படியே ஏற்றுக்கொண்டுவழிமொழியாதவர்களை
இடித்துரைக்க......

விறுவிறுவென வீரநடை பழகி
குரலை சரி செய்தபடி சிலர்;

விரலை ஈட்டியாய் சரேலென
எதிரில் இல்லாத முகத்துக்கு நேராய்
குற்றஞ்சாட்டுவதாய் நீட்டியபடி சிலர்;

சிலர் கைகளில்மைக் இருக்கிறது;

சிலர் கைகளில் கற்கள் இருக்கின்றன;
சிலர் முதுகுக்குப் பின் வீச்சரிவாள்
ஒளிந்துகொண்டிருக்கிறது…….

வரிசையில் நீ முந்தி நான் பிந்தியா
என்ற கடுஞ்சினத்தோடு
ஒரே சமயத்தில் அனைவருமாய்
ஓங்கிக்குரலெடுத்துக்கூவித் தாவும்போது
உங்கள் குழந்தைகள் மிதிபட்டால்
அதைத் தாங்கிக்கொண்டாகவேண்டும்;

பிச்சுவாக்கத்தி உங்கள் கழுத்தில்
கச்சிதமாய் நுழைக்கப்படலாம்
அதன் முனையில் நச்சு தடவப்படவில்லை
என்பதை
ஏன் பாராட்ட மனமில்லை உங்களுக்கு?

மிச்சம் மீதியில்லாமல்கெட்டவார்த்தைகள்
உங்கள் மேல்
எச்சிலைலைகளாகக் கொட்டப்படலாம்.
குப்பைத்தொட்டியாக்கப்படாததற்காய்
நன்றி சொல்ல ஏன்
தப்பித்தவறிக்கூட விரும்பவில்லை நீங்கள்?

வாளால் உங்கள் தலைகளையெல்லாம்
சீவியெறியும்போதும்
வாளாவிருந்தால் மேலோர் நீங்கள்;
வாயைத் திறந்தாலோ 
வெட்டிவிடுவோம் வெட்டி……
பேசிப்பாருங்கள்.

பட்டிதொட்டிகளிலெல்லாம்
இற்றுவிழலாகும் உடலங்களை
எண்ணியெண்ணிக்
கள்வெறி கொண்டு
சற்றும் குறையாத வன்மத்தோடு
சரசரவென்று எழுதிக்கொண்டே
விறுவிறுவென 
ஈட்டியெறிந்துகொண்டிருக்கும் கைகள்.....

அறிவுக்கண் திறந்தே 
அனைத்தும் செய்யப்படுவதுண்டு.

_ pricking, poking, piercing, 

peeling off the skin

pummeling the bones …..


Passionately measuring in litres 


the blood gushing forth……


Being in safe zones


Bulldozing hapless ones _


In more ways


these days _


Pen is not just mightier than the sword_


IT IS THE SWORD.

VIOLENCE IS THE WORD.



Wednesday, August 29, 2018

சரிநிகர்சமானம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


சரிநிகர்சமானம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

தொடர்ந்த இடைவெளிகளில் அந்த வாக்குறுதி
சாமான்யர்களுக்கு
அளிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

என் முன் எல்லோரும் சமம்.
இனியென்னாளும்
சரிசமம் சமத்துவம் வெறும் சொப்பனமல்ல - சத்தியம்

ஆனந்தப்படும் சாமான்யர் அறிவதில்லை
அரசர்களின் முன் அனைவரும்
அடிமைகளே என்பதை;

ஒருபோதும் அரசர்கள் அப்பிராணி மக்களுக்கு
சாமரம் வீசுவதில்லை யென்பதை;

குறிப்பிட்ட பொதுவெளிகளைத் தவிர
மற்றபடி
அரசர்களின் அரசகுடும்பத்தினரின்
பளபளக்கும் இருக்கைகளில்
தங்களுக்கு இடமில்லை யென்பதை;

கடையென்றாலும் தன்னுடையதும் அரசருடையதும்
சமமான சதுரமீட்டர் பரப்பளவு கொண்டதாக
இருப்பதில்லை யென்பதை.....

அரசரோ அரச குடும்பத்தினரோ அடித்தால்
சாமான்யர்களனைவரும்
சமமாக வாய்பொத்தி கைகட்டி
வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

அரசரின் அந்தப்புரப்பெண்டிரனைவரும்
சமமாக
சகித்துக்கொள்ளத்தான்வேண்டும் _
அரசர்களின் அரசகுடும்பத்தினரின்
அத்துமீறல்களை
அடியுதை ஆகாத்யங்களை.

அதேவயதொத்த பிள்ளைகள்
சாமான்யவீட்டிலிருந்து வந்தவர்கள்
இளவரசர்கள் ராஜகுமாரிகளின் விளையாட்டுக்
களிலெல்லாம் 
சமமாகப் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும்_
பந்துபொறுக்கிப்போடுபவர்களாய்;

அரச குடும்பத்தினரின் ’‘போங்காட்டத்தை
யெல்லாம்
ஆஹா! ஓஹோ !வாரே-வாவ்!’ என்று
ஆகாயமளாவ போற்றிப் புகழ்பவர்களாய்;

அரசவெற்றியைப்பாராட்டிப் பாட்டுப்படித்து
வறுமையில் வாடி
ஒருவேளை சோறு உண்டு ஈட்டிய
கைக்காசைப் போட்டு 
பதக்கம் வாங்கித் தருபவர்களாய்......

எல்லோரும் எப்போதும்
சமமாகவே பாவிக்கப்படுகிறார்கள்:
சோப்ளாங்கிகளாகக் கையாளப்படுவதில்....

எல்லோரும் எப்போதும்
சமமாகவே நடத்தப்படுகிறார்கள் _
சமமற்றவர்களாக.