LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

PEEPING TOMகளும் பூமிஜா(சீதா)ப் பிராட்டியும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 PEEPING TOMகளும்

பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில்
ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில்
ஆன்றோரென அறியப்பட்டோர் அவைகளில்
அடுக்குமாடிக்கட்டிடத்தின் மொட்டைமாடிப் பந்தலில்
இலக்கியப் பெருமான்களுக்கிடையே
இணையவழிகளில் _
இன்னும்
ஆர்ட்டிக் அண்டார்ட்டிக் துருவப் பிரதேசங்களிலும்
புவியின் தென் அரைக்கோளப்பிரதேசங்களின்
பெங்குவின்களைப் பார்வையாளர்களாகக் கொண்டும்
‘சீதை இராவணனோடு உறவுகொண்டாளா?
கொண்டாள்!
கொண்டாளே !!
கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது
[அது பதிவு செய்யப்பட்ட கைத்தட்டல் என்பது
பாவம் நிறைய பேருக்குத் தெரியாது]
தன்மானத்திற்கு இழுக்கு என்றானபோது
காதலித்த ராமனையே உதறிவிட்டுச்சென்றவள்
கடத்தியவனையா வரிப்பாள்?
விஜய் Zee Sun இன்னும் நான் பார்க்காத சேனல்களின்
மெகாத்தொடர்களில்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
மாமியார் நாத்தனார், முதலாளி தொழிலாளி
மூத்த அண்ணன் இளைய அண்ணன்
வில்லியும் நல்லவளும்
ஐந்து வயதுச் சிறுமியும்
அடுத்த நாள் பிறக்கப்போகும் குறைப்பிரசவக் குழந்தையும்
மாறி மாறிச் செய்யும்
வகைவகையான சத்தியங்கள்
சடங்குகள் குறிபார்த்தல், சகுனம் பார்த்தல்
இத்தியாதிகளுக்கிடையிலிருந்து ஒரு பூக்குழியைத்
தேர்ந்தெடுத்து
கோயில் வாசலில் பரத்தி
அதில் நடந்து தன் பத்தினித்தனத்தை
நிரூபிக்கச் சொல்லும்
மெத்தப் படித்தவர்கள் மிட்டா மிராசுதாரர்கள்
மெகாத்தொடர் மாண்பாளர்களை
மெல்ல ஒரு பார்வை பார்த்து
மேலே நடக்கிறாள் பூமிஜா.
மனம்நிறை மணாளனுக்கு நிரூபிக்கவோ
மக்களுக்குப் புரியவைக்கவோ
-ஒரு முறை நெருப்பில் இறங்கி
மீண்டாயிற்று…..
முறைவைத்து மனம்பிளந்து பார்த்தவர்களாய்
மறுபடி மறுபடி
கடத்தியவனை மருவியவளாய்க்
காட்ட முனையும் குணக்கேடர்களுக்காய்
அவள் வனத்தில் தீ மூட்டினால்
அது தன்னை மட்டுமல்லாமல்
அன்னை நெருப்பையே அவமதிப்பதாகும்.
அவள் அறிவாள்தானே?
அடுத்த விளம்பரதாரர் யார் மாட்டுவார் என்று
ஆலோசித்தபடி
அய்யனார் சிலையின் காலடியில்
வில்லனும் நல்லவனும் சேர்ந்து
மெகாத்தொடர் கதாபாத்திரங்களில் ஒருவரை
(குத்துமதிப்பாக அந்தத் தங்கையாக இருக்கலாம்
அல்லது தாத்தாவாக இருக்கலாம்)
கொலைசெய்வது குறித்து காரசாரமாக
கீழ்ஸ்தாயியில் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருக்கும்
அரைத்தமாவுக் காட்சிகளைக்
கச்சிதமாய் வழித்தெடுத்துமுடித்துவிட்டு
வெளியேறும்போது படக்குழுவினர்
கன்னத்தில் போட்டுக்கொண்டபடி
அல்லது கிண்டலாய்ச் சிரித்தபடி
'பொறுப்புத்துறப்பு' என்ற நொறுக்குத்தீனியை
சுவைக்கத்தொடங்கியதைக் கண்டு
துன்பம் வரும் வேளையிலே சிரிக்கப் பழகியவளாய்
புன்னகைக்கிறாள் பூமிஜா.


திரும்பத் திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி - ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)

 திரும்பத் திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி - 1


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள்.
அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த
பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச்
செய்கிறார்கள்.
துரியோதனன் விழுந்தபோது திரௌபதி சிரித்தாள்
என்று
அங்கங்கே அசரீரி ஒலிக்கிறது.
போயும் போயும் கிருஷ்ணனையா காப்பாற்றச்
சொல்லிக் கேட்கவேண்டும்
என்று முகத்தைச் சுளுக்கிக்கொள்கிறார்கள் சிலர்.
ஆயர்குலப் பெண்களின் ஆடைகளை
ஆற்றங்கரையிலிருந்து
கவர்ந்துசென்றவனல்லவா அவன்
என்று குறிபார்த்து அம்பெய்துவதாய்
திரௌபதியின் காதுகளில் விழும்படி
உரக்கப்பகர்ந்து
பகபகவென்று பரிகாசமாய் சிரிக்கிறார்கள் சிலர்…
பாவம், ஊடலுக்கும் Eve Torturing க்கும்வேறுபாடு
அறியாதவர்கள்.
இரு மனமொப்பிய கூடலுக்கும்
கேடுகெட்ட வன்புணர்வுக்கும்
இடையேயான வித்தியாசத்தை
எண்ணிப்பார்க்கத் தலைப்படாதவர்கள்.
இன்னும் சிலர் ’அரசகுலப்பெண் என்பதால்
ஆளாளுக்கு அங்கலாய்க்கிறார்கள்
இதுவே அடிமைப்பெண் என்றால்?’ என்று
நியாயம் பேசுகிறார்கள்.
இப்பொழுது நான் அரசியா அடிமையா’ என்று
தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள்
திரௌபதி.
அலையெனப் புரளும் கார்கூந்தலும்
எரியும் குரல்வளையுமாய்
தலை சுற்றச் சுற்ற
உற்ற மித்ரன் பெயரை உச்சாடனம் செய்துகொண்டேயிருக்கிறாள்.
கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா அபயம் கிருஷ்ணா
அபயம் கிருஷ்ணா……..
திரௌபதி இடையறாது கிருஷ்ணனை கூப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்
அது அவள் மனதின் நம்பிக்கை
அதற்கு முன்னான அவளுடைய நம்பிக்கைகளில் நிறைய பொய்த்துப்போய்விட்டன.
ஆனாலும் நம்பிக்கை பொய்க்காது
என்ற நம்பிக்கையே
வாழ்தலுக்கான நம்பிக்கை யென
நம்பிக்கொண்டிருப்பவள் அவள்.
பொய்க்கும் நம்பிக்கைகள்போல்
பொய்க்காத நம்பிக்கைகளும் உண்டுதானே
மார்பை மறைக்கும் சீலை இழுக்கும் இழுப்பில் விலகலாகாது என்று
இருகைகளையும் குறுக்கே இறுக்கித்
தடுத்திருப்பவள்
கை சோர மெய் சோர
சோரம் போகலாகாதென்ற தீராப்
பரிதவிப்பில் கிருஷ்ணனை யழைத்துக்கொண்டிருக்கிறாள்.
எங்கிருந்தேனும் ஒரு புல்லாங்குழல் பறந்துவந்து
பாதகர்களைத்
தன் துளைகளுக்குள் உறிஞ்சிவிடலாகாதா
எங்கிருந்தேனும் ஒரு மயிற்பீலி மிதந்துவந்து
கயவர்களின் கண்களில் சொருகிவிடலாகாதா…….
'ஐந்து கணவர்கள் பார்த்ததுதானே _
அவையோர் பார்ப்பதில் அப்படியென்ன வெட்கம்'
என்று கெக்கெலித்துக் கேட்கும் குரல்
நிச்சயம் ஒரு பெண்ணுடையதாக இருக்காது
என்பதொரு நம்பிக்கை.
நம்பிக்கையே வாழ்க்கை.
தாயுமானவன் தந்தையுமானவன்
வாயுரூபத்திலேனும் வந்தென்
மானங்காக்க மாட்டானா
என்றெண்ணியெண்ணி யோய்ந்துபோகும்
இதயத்தின் நம்பிக்கை
யிற்றுவிழும்போதில்
இழுக்க இழுக்க வளர்ந்துகொண்டே போகும்
சேலை
யிங்கே என் உன் எல்லோரது நம்பிக்கையாக.

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எத்தனையெத்தனை அவலங்கள்
அலைச்சல்கள்
அஞ்ஞாதவாசங்கள்
மதிப்பழிப்புகள் மரணங்கள்
மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க
மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல்
கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து
நடந்துவந்த திரௌபதி
ஆங்கே யொரு கருங்கல்லில்
சாக்கட்டியால் வரையப்பட்டிருந்த
கோட்டோவியத்தில்
தன் கைகள் அண்ணாந்து
அபயம் தேடி உயர்ந்திருக்க
துகில் மறைக்காத மார்பகங்கள்
தொங்கிக்கொண்டிருக்கக் கண்டாள்
நிலைகுலைந்து குனிந்து பார்த்துக்கொண்டாள்
மார்பை மறைத்திருந்தது துகில்.
சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அது அரசவையில்லை.
கீழே சிதறிக்கிடந்த மனித உடலங்களை
யானை குதிரைச் சடலங்களைப்
பார்த்தாள்.
கண்ணீர் வழியத் தொடங்கியது.
தம் மக்கள் யார் மானத்தைக் காப்பாற்ற
உயிர்த்தியாகம் செய்தனரோ
அந்த மானம் அதோ கப்பலேற்றப்
பட்டிருக்கிறது.
தீட்டப்பட்டிருந்த கோடுகளின் வளைவும்
நெளிவும்
தீர்க்கமான நீட்டலும்
ஓவியனின் கைநேர்த்திக்குக் கட்டியங்கூறின.
ஆனாலுமென்ன
அவற்றில் உள்ளார்ந்து உணரக்கிடைத்த ஆணாதிக்கவெறி்
அவள் ஆன்மாவைப் பிளந்து பெருக்கிய வலி
யோலம் எட்டா வெளியில்
அதேபோல்
இன்னும் சில பாரிய ஓவியங்களுக்காகத்
தயாராகிக்கொண்டிருக்கும்
தூரிகைகள்.

வேண்டுகோள் - லதா ராமகிருஷ்ணன்

 வேண்டுகோள்

லதா ராமகிருஷ்ணன்




பத்து வருடங்களுக்கு முன்பிருக்கலாம். நான் தன்னார் வலத் தொண்ட ராக இளங்குற்றவாளிகள் மையமொன்றுக்கு சில காலம் போய் அங்கி ருந்த சிறார்களுக்கு கதை சொல்லி, அவர்களுடைய படைப்பார்வத்தை ஊக்கு விப்பதாய் அவர்களை கதை, கட்டுரை, கவிதை எழுதச் சொல்லி் அவற்றை ஒரு சிறு நூலாகப் பிரசுரித்தேன். அத்தனை ஆர்வமாக அந்தக் குழந்தைகள் கதை, கட்டுரை, கவிதை என்று எழுதித்தந்தார்கள். எங்கள் இதழுக்கு நம்பிக்கை என்று பெயரிட்டோம்.

அந்தக் குழந்தைகளில் 99.9% வறிய குடும்பங்க ளைச் சேர்ந்தவர்களே. அந்தக் குழந்தைகளில் பலர் சென்னையைச் சுற்றிப்பார்க்க டிக்கெட் இல்லாமல் வண்டியேறி மாட்டிக்கொண்டவர்கள். வறுமை காரணமாக சின்னச் சின்னக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள். தாய் வேலைக்குப் போக தகாத கூட்டாளிகளோடு சேர்ந்து கெட்டுப்போகிறார்கள் குழந்தைகள் என்பதற்காய் அந்த வறிய தாய்களே இளங்குற்றவாளிகளுக்கான இல்லத்தி லேயே - இந்த இல்லங்களில் சைவ அசைவ உணவும், கல்வியும் கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக் கையில் - தங்கள் குழந்தை இருக்கட்டும் என்று சேர்த்து விடப்பட்ட வர்கள்.

தொலைவாயிருந்த காரணத்தால் (அது மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது) அங்கே தொடர்ந்து போக முடி யாத நிலை. ஒவ்வொரு முறை அந்தச் சிறார்க ளோடு சில மணிநேரங்கள் கழித்துவிட்டு வெளியே வரும்போது சில சிறுவர்கள் சின்னச்சின்ன காகிதத் துண்டு களில் அவர்கள் வீட்டுத் தொலைபேசி எண்களைத் தந்து “அம்மாவும் தம்பியும் நன்றாக இருக்கிறார் களா என்று கேட்டுச் சொல்லுங்கள் - என்னை வந்து பார்க்கச் சொல் லுங்கள்” என்று கேட்டுக்கொள்ளும் போது மனம் கனத்துப் போகும். அப்படிச் செய்வது சரியா சரியில்லையா என்ற கேள்வியெழும்.
அவர்களிடம் விடைபெற்றுக்கொள்ளாமலேயே அங்கே போவதை நிறுத்திக்கொண்டேன். ஏன் வரவில்லை என்று அவர்களுக்குள் கேட்டுக் கொண்டிருந்திருப்பார்கள். ஏமாற்றமடைந்திருப்பார்கள் என்று சமயங்க ளில் ஒரு குற்றவுணர்வு மனதில் எழும்.
16 - 18 வயதுகளிலிருப்பவர்களை தனியிடத்தில் வைத் திருப்பார்கள். அவர்களில் இரண்டு கொலை, மூன்று பாலியல் வன்கொடுமை செய்தவர் களும் உண்டு என்று விவரம் தெரிவிப்பார்கள் அங்கிருக்கும் காவல்துறை அதிகாரிகள். அவர்கள் மேஜரானதும் வெளியே வந்து விடமுடியும் என்ற அனுமானத்தில் அவர்களைக் குற்றச்செயல்களில் ஈடுபடச்செய்வோர் நிறையவே. இந்தக் கருப்பொருளை வைத்து உருவாகியிருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வழக்கமான ஹீரோ வர்ஷிப்’ படமாகவே உருக்கொண்டது அதி அவலம்.
எப்படி ஆறு வயதுக்குட்பட்ட சின்னக்குழந்தைகளின் கல்வி, பள்ளிச் சூழல், வளர்ப்பு குறித்து - அவர்கள் வாக்கு வங்கிகள் அல்ல என்ற காரணத்தால், உரிய கவனம் செலுத்தப்படு வதில்லையோ, அதுபோலவே வளரிளம் பருவத்தினர் குறித்தும் உரிய கவனம் செலுத்தப்படு வதில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
இந்த இரண்டு வளர்ச்சிக் கட்டங்களுமே மனித வாழ்வில் நிலைத்த தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை என்று உளவியலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக் கிறார்கள்; வலியுறுத் திக்கொண்டிருக்கிறார்கள். ) வளரிளம்பருவத்தினரிடம் வெறுப்பை விதைப்பதிலும், கற்பனாதீதங்க ளையும் வேண்டாத வீரசாகசப் போக்கு களை வளர்ப்பதிலுமே சுயலாபங் கருதி முனைப்பாகச் செயல்படுவோர் பலர்.
சில பணிகள் வருமானமீட்டித்தரும் தொழிலாய் மட்டும் பார்க்கப்படாமல், பற்றுறுதியோடு ஆத்மார்த்தமாய் செய்யவேண்டியவை. சமூகப் பணி அவற்றில் ஒன்று. (ஆசிரியப்பணிபோல்)
தன்னார்வல சமூகப்பணியாளரோ, தொழில்முறை சமூகப்பணியாளரோ - சமூகவுணர்வும், மனிதநேயமும் இந்தப் பணியில் மிக அவசியம்.
(வருமானமீட்டும் தொழிலாக மட்டும் சமூகப்பணியை பாவிக்கும் தொழில்முறை சமூகப்பணியாளர்களைப் பற்றி ‘கருத்தரங்கில் கணக்கில் கொள்ளப்பட்டவை என்ற தனது நீண்ட சிறுகதையில் எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் மனம் நொந்து அத்தனை கோபத்தோடு தொழில் முறை சமூகப்பணியாளராக இயங்கிய சமயம் தான் எதிர்கொண்ட அவலங் களைப் பற்றி எழுதியிருக்கிறார்)
தன்னார்வல சமூகப் பணி யாளராகவும், தொழில்முறை சமூகப்பணி யாளராகவும் சீரிய முறையில் பணியாற்றி யிருப்பவர், பணியாற்றி வருபவர் தோழர் மோகன் தாஸ். சுனாமி பேரழிவின் சமயம் இவர் ஆற்றிய தொண்டுகளை யும், பார்வையற்றவர்களுக்காக இவர் ஆற்றிய தொண்டுக ளையும் நான் பார்த்திருக்கிறேன். 1980 உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டபோது இவர் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு வாசித்துக்காட்ட ஆட்கள் தேவை என்று குமுதத் தில் தெரிவித்திருந்ததைப் படித்துத்தான் நான் இவரைத் தொடர்புகொண் டேன். முதன்முதலில் திரு.ரவிக்குமாருக்கு வாசித்துக்காண்பிக்கத் தொடங்கி னேன்.
இப்போது கணிணி தொழில்நுட்பம் மூலம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கள் பாடபுத்தகங்களோடு வேறு பல புனைவு, அ-புனைவு புத்தகங்களையும் தாமாகவே படிக்க முடிவது மிகவும் மனநிறைவளிக்கும் விஷயம்.
தற்போது திரு. மோகன் தாஸ் வடசென்னை குழந்தை கள் நலக் குழுமத் தின் தலைவராகச் செயல்படுகிறார். இளங்குற்றவாளிக ளுக்கான சீர்நோக்கு நலவாழ்வு மையங்களைச் சேர்ந்த 6 முதல் 18 வயது வரையான சிறார்களுக்குப் படிப்பதற்கு ஏற்ற புனைவு, அ-புனைபுப் புத்தகங்களை நன் கொடையாகக் கிடைத்தால் உதவி யாயிருக்கும் என்று தெரிவித்தார். முடிந்தவர்கள் உதவலாம். அவருடைய வேண்டுகோளும் விலாசமும் கீழே தரப்பட்டுள்ளன.
புத்தகங்களை ஒரே முகவரியில் சேகரித்து மொத்தமா கத் திரு.மோகன் தாசிடம் சேர்க்கலாம். அல்லது கீழ்க் காணும் விலாசத்திற்கு நேரடியாக அனுப்பலாம். அனுப்பும் புத்தகங்கள் சிறார்களுக்கு நேர்மறையான எண்ணங்களைத் தருமளவில் அமைந்தால் நல்லது.
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்
FROM
A. MOHAN DOSS
CHAIRPERSON
CHILD WELFARE COMMITTEE NORTH
CHENNAI
58, SURYANARAYARAN ROAD
ROYAPURAM
CHENNAI - 600013
Recently we had an interaction with some children in GOVT CHILDREN HOMES. JUVENILES. TO CHANGE THEIR ATTITUDE WE HAD A DISCUSSION ON READING BOOKS AND THE USE OF LIBRARY. THEY ARE WILLING TO READ BOOKS REGULARLY. A SUGGESTION CAME OUT FROM THE CHILDREN THAT THEY WANT MORE BOOKS ON TAMIL POEMS ESPECIALLY FOR CHILDREN. STORY BOOKS ARE ALSO NEEDED. AGE GROUP 5 TO 18 YEARS. SO WE ARE APPEALING TO THE BOOK LOVERS TO SEND THEIR USED BOOKS FOR THESE CHILDREN.
(சமீபத்தில் நாங்கள் இந்தக் குழந்தைகளோடு ஒரு கலந்துரையாடல் மேற்கொண்டோம். அப்போது அவர்கள் புத்தகம் படிப்பதில் தங்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். எனவே முடிந்தவர்கள் புத்தகங்கள் அனுப்பித் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மோகன் தாஸ்
தலைவர்
வட சென்னை குழந்தை நலக் குழுமம்
...............................................................................................................................
[*நான் பொருளாளராக இயங்கிவரும் WELFARE FOUNDATION OF THE BLIND சார்பாக நாங்கள் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் ஒவ்வொன்றின் இரு பிரதிகளை திரு.மோகன் தாசுக்கு அனுப்பிவைக்க முடிவெடுத்துள்ளோம் என்பதை இவண் தெரிவித்துக்கொள்கிறேன்].

கவிமன வேதியியல் மாற்றங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிமன வேதியியல் மாற்றங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
Dr. Jekyll ஆகவும் Mr.Hyde ஆகவும்
மாறிக்கொண்டேயிருப்பவர்கள்
முன்னவராக இருக்கும்போது
அன்பே சிவம் என்று பண்ணிசைக்கிறார்கள்....
பின்னவராக மாறி காது கூசுவதாய்
தங்களுக்குப் பிடிக்காதவர்களை வசைபாட
ஆரம்பித்துவிடுகிறார்கள்.
கொன்றழிக்கத்தோதாய்
சொற்களின் கூர்நுனியில் நஞ்சுதோய்த்து
அவர்கள் வைத்திருக்கும் கத்தி கபடா துப்பாக்கி
வெடிகுண்டு வகையறாக்கள்
வேகமாய் துடிக்கவைக்கின்றன
ஏற்கெனவே எதனாலெல்லாமோ
எந்நேரமும் படபடப்பாக உணரும்
பாழ் இதயத்தை.
முன்னவராக எண்ணி நட்புபாராட்டிக்
கொண்டிருந் தவர்கள்
காலடியின் கீழ் தரை நழுவுவதாய் உணர்ந்து
மூர்ச்சையாகிவிழும் தருணம்
மீண்டும் Dr. Jekyll முன்னால் வந்து
காசுவாங்காமல் மருந்துமாத்திரைகளை
அத்தனை அன்போடு
ஒரு கவிதையில் பொதிந்து
கையில் தந்துவிடுகி றார்கள்.
நம்பிக்கையிழப்பின் கொடும் அசதியிலிருந்து
மெல்ல எழ முயலும் மனதில்
பேயறை அறைகிறது நாராசக் கெக்கலிப்
பொலியும்
நாக்கூசா அவதூறுகளும்.
அத்தனை மனிதநேயத்தோடு கவியெழுதும் மனம்
இத்தனை மூர்க்கமாய் வெறுப்பைக்
கக்கவே கக்காது என்ற நம்பிக்கையை
சுக்குநூறாக்குவதாய்
அதே மனதிலிருந்து அந்த அளவே
வெறுப்பைக் கக்கும்
அதே வார்த்தைகள்
அதைவிட மோசமாகவும்
எதிரொலித்தவண்ணம்.
ஒரே செயல் ஒருவரின் அளவில்
வெறுப்பைக் கக்கவைப்பதும்
இன்னொருவரின் அளவில்
விருப்புக்குரியதாகவும் மாறும்
மருத்துவத்திற்கப்பாலான விந்தை புரியாமல்
Dr. Jekyll தன் மருத்துவப்பட்டத்தைத் துறக்க
முடிவுசெய்யும் நாளில்
Mr.Hyde தன்னையோ அவரையோ அல்லது
தங்களிருவரையும் கவிதையில் இனங்கண்டு
கொள்பவரையோ
எதுவும் செய்துவிடாமலிருக்க வேண்டும்
Dr. Jekyll Mr.Hyde ஆக மாற உதவும்
வேதியியல் சாறு தரும் அருவக்கைகளால்
_ அவர்களுடையதோ அடுத்தவரு
டையதோ....
அதைவிட முக்கியம்
Mr.Hyde களை Dr. Jekyll களாக மாற்றும் சாறு
கண்டுபிடிக்கப்படவேண்டியது.

சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் (அ) தீதும் நன்றும் பிறர் தர வாரா

 சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்

(அ)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
தீதும்அவரவருக்குள்ளிருக்கும் நிலக்கிழார்கள்
சக மனிதர்களை அடிமைகளாக பாவித்து
அவர்களது வாய்களை அச்சுறுத்தல்களாலும்
அசிங்க வார்த்தைகளாலும்
அடைமொழிகளாலும் அடைத்துவைத்து
அவர்களுக்காகப் பேசுவதாக செய்யும்
பாவனையில்
அடுத்தவரின் பேச்சுரிமை எழுத்துரிமை கருத்துரிமை
எல்லாவற்றையும் கொத்துபரோட்டாவாக்கிக் கொடுத்தவண்ணம்
தங்களுடைய குடும்பத்தோடு சர்வதேச தரத்திலிருக்கும் ஐம்பது நட்சத்திர ஹோட்டல்களில்
ஐரோப்பிய ஸ்பானிய ஜப்பானிய
அயர்லாந்து நெதர்லாந்து ஆஸ்திரேலிய அமெரிக்க ஜெர்மானிய உணவு தின்பண்ட வகையறாக்களை
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக ருசித்துக்கொண்டிருக்க
அவர்களுடைய அக்கறையின் இலக்காக ’சும்மனாங்காட்டிக்கு’ அடையாளங்காட்டப்படுவோர் கலாச்சாரக் காவலர்களாய் கூழையும் களியையும் உண்டவாறே
படகுவீட்டுப் புரவலர்களுக்காய் கையிலும் எழுத்திலுமாய் கொடியுயர்த்திப் பிடித்தபடி
அவர்கள் கைகாட்டும் இடத்தில் காறித்துப்பியபடி….
அறஞ்சார் விசுவாசத்தை யல்லாமல்
அரச விசுவாசத்தைக் காட்டுவதே புலவர்பெருமக்களின்
வேலையாகிவிட்டால்
வாழ்ந்துவிடுமா மொழி
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ தமிழில் எழுதப்பட்ட
தென்றாலும்
அது உலகப் பொது வழி.