LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 22, 2022

சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 1 - 5 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

   சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 1 - 5

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

.....................................................................................

1. பாரதி அறங்காவலர்கள்

...............................................................................
’பாரதியார் பாவி, அவர் இதைத்தான் நினைத்து
இப்படி எழுதினார்’, என்றவரும்
’பாரதியார் பாவம், அவர் இதைத்தான் நினைத்து
இப்படி எழுதினார்’ என்பவரும்
பாரதியின் வாரிசுகள் அல்லவே யல்ல
என்று சொல்லாமல் சொல்கிறது
இல்லாத அவரின் உயில்.


2. அறிவுடைமை
....................................................................................
உளறுவாய்களால் ஆனது உலகம்
உனக்கு நான் உளறுவாய்
எனக்கு நீ உளறுவாய்
உனதுளறல்களெல்லாம் உனக்குத்
திருவாய் மலர்ந்தருளலாய்.
எனதோ
பொருளற்ற வெறும்பேச்சாய்.
உனது பெருமூச்சும் வீரமுழக்கமாய்.
எனதோ
நோய்மையின் பலவீன முனகலாய்.
ஆயகலைகள் அறுபத்திநான்குக்கும்
நீயே அதிபதியாக இரு.
அதனாலென்ன?
அதற்கு மேலும் எண்களுண்டுதானே!




3. மென்வன்முறை
....................................................................................
மேடையில் முழங்கிக்கொண்டிருந்தவர்
மீண்டும் மீண்டும் மனதாரச் சொல்லிக்கொண்டிருந்தார்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் ஆணவம் பிடித்தவர்கள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அசிங்கம்பிடித்தவர்கள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அயோக்கியசிகாமணிகள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அப்பட்டமான கயவாளிகள்
அவர்கள் நல்லவர்கள்தான்
ஆனால் அவசியம் கொல்லப்படவேண்டியவர்கள்
அட அட என்னவொரு அரிய நடுநிலைப்பார்வை
என்று எண்ணியவாறே
தன்னிடமிருந்த அரிவாளை அல்லது அருவாமனையை
கூர்தீட்டத் தொடங்கினார்
உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தவர்.


4. விருந்துபசரிப்பு
.....................................................
உள்ளே மண்டிக்கிடக்கும் பகையுணர்வை
வெள்ளைவெளேரென ’விம்’ போட்டு விளக்கிய
பாத்திரத்திலிட்டு
உப்பு புளி மிளகாய் பெப்பர் கொஞ்சம் சர்க்கரை
வெல்லம் தேன் சேர்த்து
உகந்த வெப்பத்தில் கொதிக்கவைத்து
சிறிதே நெய்யூற்றி லவங்கப்பட்டையிட்டு
நறுமணமேற்றி
அலங்காரத்தட்டுகளில் பரப்பி
அழகிய கரண்டியோடு
ஆளுக்கொன்று தந்தால்
அதையும் சப்புக்கொட்டிச் சாப்பிட
ஆளிருக்க மாட்டார்களா என்ன?

5. செய்தித்தாள்
..........................................
இருவருமே செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார்கள்.
”நான் செய்தித்தாளைப் படிப்பவள்” என்றாள் ஒருத்தி.
”நானும்தான்” என்றாள் மற்றவள்.
”இல்லை, நீ செய்தித்தாளில் படம் பார்ப்பவள்;
செய்தித்தாளைப் பொட்டலம் கட்டப் பயன்படுத்துபவள்;
செய்தித்தாளைத் தரையில் பரப்பி அதன்மீது
படுத்து உறங்குபவள்;
செய்தித்தாளை உருண்டையாகச் சுருட்டிப் பந்து செய்து
பக்கத்துவீட்டுக் குழந்தையோடு விளையாடுபவள்;
செய்தித்தாளை சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து
அடுப்பங்கரையில் கையைத் துடைத்துக்கொள்பவள்….
என்று முதலாமவள் அடுக்கிக்கொண்டே போக
”இவற்றை விட்டுவிட்டாயே -
”விளம்பரங்களை மட்டுமே எழுத்துக்கூட்டிப் படிப்பவள்;
பழைய பேப்பர் கடையில் போடுவதற்கென்றே செய்தித்தாளை வாங்குபவள்;
மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் செய்தித்தாளால் விசிறிக்கொள்பவள்;
என்று புன்னகையோடு இன்னும் சில
தன்முனைப்பான எள்ளல்களை எடுத்துக்கொடுத்த மற்றவள்
செய்தித்தாள் வாசிப்பைத் தொடர்ந்தாள்.


சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 6 - 10 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

  சொல்லடி சிவசக்தி 

*************************

குக்குறுங்கவிதைக்கதைகள் 6 - 10

ரிஷி

*

6.தன்மானம்

………………………….........................

திடமாய் நடைபழகிக்கொண்டிருந்தவரை
தளர்நடை யிட்டுக்கொண்டிருக்கும்
குழந்தையாய் பாவித்து
தடுக்கிவிழுந்துவிடலாகாது என்று
தாங்கிப்பிடிக்க வந்தவளை
தள்ளிப்போகச் சொன்னவர்
'இதைவிட
திமிராய் நடக்கிறேன் என்று
வசைபாடுபவர்களே
இசைவானவரெனக்கு’ என்றார்.


7. அடிப்படைவாதம்
…………………………………….....................

அறியாமையிருள் நீக்கும் தன்னார்வலரொருவர்
வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
பாரதியெனும் கவிப்பெருவெளியை
அடிப்படைவாதமாகக் குறுக்கிவிடலாகாது என்று சொல்லப்புகாமல்
உயிருக்கு பயந்தும்
படைப்பியக்கம் அழியாமல் பாதுகாத்துக்கொள்ளவும்
கவிஞர் அடிப்படைவாதத்தை முன்வைத்தாரென
காரணகாரியங்களை
மனோதத்துவத் துறைக் குறிச்சொற்களைக் கொண்டு
விளக்க முற்பட்டதைக் கேட்டு
அறிவுத்துறையிலும், இலக்கியத்துறையிலும்கூட
அடிப்படைவாதிகள் இருப்பதை யறிந்து
மௌனமாய் அங்கிருந்து வெளியேறினார்கள் மாணாக்கர்கள்.


8. சூது
………………………………
அதுவொரு புதுமாதிரி சீட்டுக்கட்டு
அதிக அதிகமாய் இன்று விற்பனையாகிக்கொண்டிருப்பது
அதில் ராஜா ராணி மந்திரி இளவரசன் என எல்லோரும்
அன்றைய அரசியல் தலைவர்கள்.
அடங்கா ஆர்வத்தோடு
காசுவைத்தும் வைக்காமலும்
டயமண்ட் ஆர்ட்டின் இஸ்பேடு, க்ளாவர்
எல்லாவற்றிலும்
ACEம்
வேண்டாதவர்களை வெட்டிவீழ்த்தவும்
வேண்டியவர்களைக்கொண்டு வெற்றிபெற்றும்
வேண்டியவர் வேண்டாதவர் வேண்டும்போது வேண்டியவண்ணம் மாறி மாறி வந்துவிழும்படி
சீட்டுக்குலுக்குவதெப்படி என்று
கவனமாய் அவதானித்தபடி
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
அறிவுசாலிகளாய் நடுநிலையாளர்களாய் அறியப்படுபவர்களும்
தம்மைத்தாம் ’ஜோக்கரா’க பாவித்து.


9. மதம் பிடித்தவர்களும்
பிடிக்காதவர்களும்
……………………………………………………………
மதத்தைப் பற்றியே மேடைமேடையாய்
முழங்கிக்கொண்டிருப்பவர்
’மதப்பற்றுக்கும் மதவெறிக்கும்’ வித்தியாசமுண்டு
என்றார்.
'மதம் பிடித்தவருக்கும் மதம் பிடித்தவருக்கும் கூடத்தான்'
என்று முணுமுணுத்துக்கொண்டார் வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர்.
செவிமடுத்துவிட்ட பேச்சாளர் சீற்றத்தோடு
முறைத்துப் பார்த்து
’அரைகுறை அறிவில் கருத்துரைக்கிறாய்
அற்பப்பதரே
துணிவிருந்தால் உரக்கச் சொல்’ என்றார்.
தவறாய் ஏதும் சொல்லவில்லையே என்று
தான் சொன்னதை
திரும்பவும் உரக்கச் சொன்ன பார்வையாளர்
அவையோரால் முற்றுகையிடப்பட்டு
அங்கிருந்து குண்டுகட்டாய் அகற்றப்பட்டார்.


10. புத்துயிர்ப்பு
...............................................

‘பழிபாவத்திற்காளாக்குகிறார்கள் ஒருவரை,
படுகொலை செய்துகொண்டிருக்கிறார்கள்
என்று பரிந்து பேசினால்
புரிந்துகொள்ளாமல் அறிவுகெட்டதனமாக
எதிர்வினையாற்றுகிறீர்களே’ என்கிறவர்
என்றேனும் கேட்கக்கூடும்
எங்குமாய் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் அந்த அசரீரியை:
”இறப்பவருக்கேயாகுமாம் RESURRECTION


சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 11-15 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 11-15

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


11. சந்தைப் பொருளாதாரம்
……………………………………………………………

பெருவியாபாரிகளும் சிறுவியாபாரிகளும்
பெருகிக்கொண்டிருக்கும் வாங்குவோரும்
நிறைந்ததே சந்தையாக
அன்றாடம்
அரைப்படியை ஒரு படியாக
அளந்துகொண்டிருக்கும்
அரசியல் குத்தகையாளர்களின் வியாபாரம்
அமோகமாய் நடந்துகொண்டிருக்கிறது.


12. பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா….
………………………………………………………………………................................

”பச்சை என்றுதான் சொன்னார் அவர்”
இல்லை அவர் நீலம் என்று சொன்னார்"
”இல்லை பச்சையை பச்சை என்றுதான் சொன்னார் அவர்”
”இல்லவேயில்லை - அவர் பச்சை பச்சையாகப் பேச மாட்டார்”
பச்சை என்பதற்கும் பச்சை பச்சை என்பதற்கும்
பாரிய வித்தியாசம் உண்டென்பதை அறியாமல்
அல்லது அறிந்துகொள்ள விரும்பாமல்
இறந்துவிட்டவரின் பச்சையை
நீலமாக விரிப்பவர்
நிச்சயம் மனிதநேயவாதி தான் என்பதை நம்பித்தானாகவேண்டும்!
கொச்சைவசைக்குத் தப்ப
இச்சமயம் இஃதொன்றே கச்சிதமான வழி!


13. பிறழ்மரம்
............................................................................................................
பார்வைக்கு ஆலமரம்தான் என்றாலும்
கூர்முள் கிளைகளெங்கும்
கீழ்நோக்கித் தொங்கும் விழுதுகளெங்கும்
பசிய இலைகளெங்கும்
பரவியுள்ள நிழல்திட்டுகளெங்கும்
இளைப்பாற இடம் வேண்டுமா
முள்பழகிக்கொள் முதலில் என்ற மரத்தை நோக்கி
மெல்லச் சிரித்தவாறு கூறியது சிட்டுக்குருவி:
’முதலில் நீ மரத்தின் தன்மையை அறியப் பழகு.
நிழல் பூ காய் கனி யென்றாயிரம் மரங்கள்
இங்குண்டாமென அறிதலே அழகு’.

14. மறுவாசிப்பு
........................................
முதல் வாசிப்பில் ‘அ’ ’அ’வாகவே கண்டது.
அஃ, அஃகாக.
எஃகை பித்தளையாக்குவது எப்படி என்று புரியாமல்
சற்றே தத்தளித்த பின்
திடமனதுக்காரனை மடாக்குடியனாக்கி
’பாவம் தலைக்கேறிய போதையில் அவன்
கதைத்ததைக்
கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டாம்’.
என்பவரின் கருணைமனதை
அடிக்கோடிட்டுக் காட்டிப் பாராட்ட
ஆட்களை ’செட்டப்’ செய்வதும்
ஆய்வலசலின் திட்டப்படியான தொரு
நாட்பட்ட அம்சமாக…


15. கட்டுடைப்பு
.............................................................................
முண்டாசுக்கவியை முட்டி மோதி மிதித்த யானை
தானே யப்படி செய்யவில்லை
அதன் சின்ன வாலை முறுக்கிக் கோபமூட்ட
ஏவப்பட்டவர்கள்
ஆனான எட்டுபேர் என
மானே தேனேவை இடையிடையே கொண்டுவந்து
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாகச்
சொல்லப்பட்டதைக் கேட்டு
ஆட்டங்கண்ட
காட்டு யானைகளெல்லாம்
கதிகலங்கித்
தறிகெட்டோடத் தொடங்கின!





முதல் வாசிப்பில் ‘அ’ ’அ’வாகவே கண்டது.
அஃ, அஃகாக.
எஃகை பித்தளையாக்குவது எப்படி என்று புரியாமல்

சற்றே தத்தளித்த பின்
திடமனதுக்காரனை மடாக்குடியனாக்கி
’பாவம் தலைக்கேறிய போதையில் அவன்
கதைத்ததைக்
கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டாம்’.
என்பவரின் கருணைமனதை
அடிக்கோடிட்டுக் காட்டிப் பாராட்ட
ஆட்களை ’செட்டப்’ செய்வதும்
ஆய்வலசலின் திட்டப்படியான தொரு
நாட்பட்ட அம்சமாக….




சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 16-20 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 16-20

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


16. வெற்றுமுழக்கங்கள்
………………………………………………….....................................

’அறிவீலி’ என்றழைத்தார்
’ஆக்கங்கெட்ட அற்பப்பதரே’ என்று
ஆங்காரமாய் மொழிந்தார்
’அட, ஒரு மண்ணும் தெரியாது உனக்கு’ என்று
உரத்த குரலில் பிரகடனம் செய்தார்.
’அடி செருப்பாலே’ என்று
அத்தனை கண்ணியமாக முழங்கினார்
’அப்படியே போய்விடு அப்பாலுக்கப்பாலே’ என்று
அருங்கனிவோடு அடியாளின் குரலில் மிரட்டினார்
’அக்கக்கோ பறவையிடம் பாடம் கேட்டுவிட்டு வா பார்க்கலாம்’, என்று அந்த விரட்டு விரட்டினார்
‘வடிகட்டின முட்டாள்’ என்று அழகிய வழுவழுப்புத் தாளில்
நற்சான்றிதழ் வழங்கினார்”
அவ்வப்போது வார்த்தைகளற்று வெறுமே பழிப்புகாட்டிக்கொண்டிருந்தார்.
நடையெட்டிப் போட்டேன் என் வழியில்.
தெருவோர டீக்கடையிலிருந்து சந்திரபாபு பாடிக் கொண்டிருக்கிறார்:
”நானொரு முட்டாளுங்க
ரொம்ப நல்லாப் படிச்சவங்க நாலுபேரு சொன்னாங்க…”

17. விழல்
....................................
இருந்தவிடத்திலிருந்தே இரண்டாயிரங்
காததூரம் பிரயாணம் செய்து
பலகாலம் பழகியவருக்கு
மெய்யாகவே இரண்டு கிலோமீட்டர்கள்
பயணம் செய்வது
இடுப்பொடியச் செய்வது இயல்பு.
இரண்டு எட்டுவைத்தால்கூட
தடுக்கிவிழுவதில்
வியப்படைய என்ன இருக்கு?


18. சுழல்
………………………………………....................................

இல்லாத சுழலில் தத்தளித்துக்கொண்டிருக்காத
நல்லவர் ஒருவருக்கு
எல்லா நேரமும் உதவிக்கொண்டிருப்பதாக
எண்ணிக்கொண்டிருப்பவள்
இன்னரும் சமூகப்பணியாளராய்த்
தன்னைத்தான் உன்னியபடி
அல்பகலாய் சுழன்றோடிக்கொண்டேயிருக்கிறாள்
சொல்ல வல்ல கிளி 'தான்' மட்டுமே யென
மெல்ல உரக்க முன்னும் பின்னும்
பன்னிப் பன்னிச் சொன்னவாறே......


19. தழல்
........................................................................

தன்னால் சாதிக்கவியலாத சிறகடித்தலை
கண்முன்னே ஒரு இக்குணூண்டு பறவை
தன்போக்கில் செய்துகொண்டிருப்பதைக்
கண்டு
அறிவுசாலியின் மனதில்
பண்டுதொட்டுக் கிளர்ந்தெழும்
வன்முறைத்தீ
அன்றுமென்றும் அவரையே
தின்றுதீர்த்துக்கொண்டிருக்கிறது.


20. கருணை புரிதல்
.................................................................

”இல்லை நான் திருடவில்லை”யென
சொல்லிச்சொல்லிப் பார்த்தான் சிறுவன்
சல்லிப்பயலே பொய்யா சொல்கிறாய்
எனச் சொல்லிச்சொல்லி அடித்தார்கள்
வல்வினையாளர்கள்
நல்வினைப்பயனாளி அந்தச் சிறுவனை
யரவணைத்துச் சொன்னாள் –
'பாவம் பசிக்காகத் திருடியவனை யிப்படியா
வதைப்பது?'
இது என்ன கதையென்று
விதிர்த்து விலகிய சிறுவன் சொன்னான்:
’அவர்கள் சுமத்தும் குற்றத்தையே நீங்களும்
அன்பொழுக வழிமொழிகிறீர்கள்
நல்லவிதமாய்ச் சொன்னாலும்
பொய் பொய் தான்; பழி பழி தான்.
இதற்கு அவர்களே மேல்
திரும்பவும் சொல்கிறேன் நான் திருடனல்ல
மனிதாபிமானம்
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல்
இருப்பதல்ல’.