LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, January 30, 2019

தனிமொழியின் உரையாடல்


தனிமொழியின் உரையாடல்
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் சமீபத்திய கவிதைத்தொகுப்பு.


பக்கங்கள் சுமார் 250
விலை: 200.
வெளியீடு: அநாமிகா ஆல்ஃப்பெட்ஸ்
விற்பனை உரிமை : புதுப்புனல் பதிப்பகம்
இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாகதனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என்குட்டிபதிப்பக முயற்சியாய் வெளியாகியுள்ளது. இதில் இடம்பெறும் முக்கால்வாசிக் கவிதைகள் நீங்கள் வாசித்தவையே. மொத்தம் 170 கவிதைகள்(அவற்றில் எவ்வளவு உண்மையான கவிதைகள் என்பது வாசகருக்கு வாசகர் மாறக்கூடிய கணக்கு!) 250போல் பக்கங்கள். விலை ரூ.200. விற்பனை உரிமை புதுப்புனல் பதிப்பகம்.

எத்தனை முயன்றும் அச்சுப்பிழைகள் இடம்பெற்றுள்ளன. 100 பிரதிகளே இப்போது அச்சிடப்பட்டுள்ளதால் ஒருவேளை கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதிக்கும் அதிசயமாய் அவை விற்றுவிட்டதென்றால் அடுத்த பதிப்பில் அச்சுக்குறைகளைக் களைந்துவிட எண்ணம்!
  
என் கவிதைத்தொகுப்பில் இடம்பெறும் எனது சுருக்கமான முன்னுரை கீழே தரப்பட்டுள்ளது.

சொல்லவேண்டிய சில….
- ‘
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)

இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என்னுடைய கவிதைகள் - எதிர்வினை, நிலை, வரியிடைவரிகள் என சில தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேன். அவை இப்பொழுது ஒரே தொகுப்பாகதனிமொழியின் உரையாடல்என்ற தலைப்பில் வெளியாகிறது. கவிதை ஒரு கவிமனதில் தனிமொழியாக உருவாகி பின்னரே அதை வாசிப்பவர்களிடம் உரையாடத் தொடங்குகிறது என்று எண்ணுகிறேன்.
ஒரு வாசகராக இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படிக்கும்போது சராசரி, சராசரிக்கும் மேல், சராசரிக்கும் கீழ் என்று இதிலுள்ள கவிதைகளைத் தரம்பிரிக்க முடிகிறது. என்னுடையஆகச்சிறந்தகவிதைகளை மட்டும் இத்தொகுப்பில் இடம்பெறச் செய்வது சரியல்ல என்று தோன்றியதால் அப்படிச் செய்யவில்லை. தவிர, ஒரு வாசகராக எனக்குப் பிடிக்காத என் கவிதைகளை வேறு வாசகர்களுக்குப் பிடித்திருப்பதும் இயல்பாக நிகழ்வது.
கவிதை எழுதும் ஆண்கள், பெண்கள் எல்லோருமே இங்கே ஒருவிதஅடையாளமற்றசூழலில்தான், கவிதை எழுதுவதில் கிடைக்கும் வடிகாலும், வலிநிவாரணமும் மனநிறைவுமே பிரதானமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, ‘பெண் கவிஞர்என்ற தனிப் பிரிவில் அணுகப்படுவதில் அடையாளங்காட்டப்படுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை. ‘இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் தற்காலத் தமிழ்க்கவிஞர்களுக்கான எந்த பொதுப்பட்டியலிலும் உங்களுக்கு இடம்கிடைக்காது. நந்தனார்போல் வெளியே நிறுத்தப்படுவீர்கள்என்று சாபமிடுவதாய் கவிதை எழுதும் பெண் ஒருவர் என்னைப் பற்றி எழுதியதும்இன்றும் நந்தனார்தான் பேசப்படுகிறாரே தவிர அவரை வெளியே நிறுத்தியவர்களல்லஎன்று அதுகுறித்து நான் பதிலளித்திருந்ததும் நினைவுக்கு வருகிறது. வேறு சிலர்இத்தனை வருடங்கள் எழுதிக்கொண்டிருகிறீர்கள், எட்டு பத்து கவிதைத்தொகுதிகள் வெளியிட்டிருக்கிறீர்கள். உங்கள் கவிதைகளைப் பற்றி யாரேனும் எங்கேனும் பேசுகிறார்களா?” என்று உள்ளடக்கிய இளக்காரமும் மேலோட்டமான ஆதங்கமுமாகக் கேட்டபோதுபல வருடங்களாக காத்திரமாக கதை, கவிதை, கட்டுரைகள் எழுதிவரும் எத்தனைப் பேரைப் பற்றி நான் பேசியிருக்கிறேன் - விரல்விட்டு எண்ணுமளவில்தானே எழுதியிருக்கிறேன்என்று நான் பதில் அளித்ததும் நினைவுக்கு வருகிறது. உண்மைநிலவரம் இதுதான்.
அதேபோல், வரலாறு என்பது முற்கால வரலாறு, தற்கால வரலாறு என்ற இரு அரைவட்டங் களாலானது. இதில் ஒரு அரைவட்டத்தை மட்டுமே வரலாறாகச் சித்தரிப்பது சரியல்ல. சிறுபத்திரிகையுலகக் கவிஞர்களுக்கான இடம், அங்கீகாரம் என்பது சமூக, கலாச்சார வெளியில் ஒரு ஓரத்திலிருப்பது. ஓரங்கட்டப்பட்டிருப்பது என்ற நிலை காலங்காலமாகத் தொடர்கிறது. இதில், அந்த வெளியில் இயங்கும் ஆண்களை ஆதிக்கவாதிகளாகப் பகுப்பதும், இந்த வெளியில் புதிதாக இயங்க ஆரம்பிக்கும் இளைஞர்களும் அந்தவிதமான கற்பனைப் பகுப்பில் தங்களைக் குற்றவாளிகளாக பாவித்துக்கொள்வதும் தேவையற்றது. தற்கால வரலாறு என்னும்போது கடந்த பத்திருபது வருடங்களில் நவீனத்தமிழ்க்கவிதையை பிரதிநிதித்துவப்படுத்துவதாய் கடல் கடந்து போய் அரங்கேறும் வாய்ப்புப் பெற்றவர்கள் யார் என்று பார்த்தாலே, இது விளங்கும். மிகச்சிறந்த சமகாலக் கவிஞர்கள் தமிழ்மண்ணில் மட்டுமே ஏதோ கொஞ்சம் அறியப்பட்டிருக்கும் நிலவரம் தெளிவாகும். இதில் ஆணென்ன, பெண்ணென்ன? இப்படி யெல்லாம் சொல்லி ஆண்களை impress செய்யப் பார்க்கிறீர்கள் என்று கூறுபவர்கள் உண்டு. அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இன்னொரு நாட்டில் அதிகப் பெண்கள் எழுத ஆரம்பித்ததைப் பார்த்துத் தான், அந்தத் தாக்கத்தில் தான் தமிழகத்தில் பெண்கள் எழுத அரம்பித்தார்கள் என்ற கருத்தும் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது. இதுவும் என்னளவில் சரியல்ல. அவரவருக்கான உள்வயத் தேவைகளே, அழுத்தங்களே ஒருவரை எழுதச்செய்கிறது, குறிப்பாக, கவிதைவெளியில் தொடர்ந்து இயங்கச்செய்கிறது என்று நான் திடமாக நம்புகிறேன்.
எனவே, பெண் கவிஞர் என்ற தனிப்பிரிவில் இந்தத் தொகுப்பை(என் மற்ற தொகுப்புகளும்) யாரும் அடையாளப்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அதைப்போலவே முனைவர் பட்டம் பெறுவதொன்றே முதலும் முடிவுமான குறிக்கோளாக, மேலோட்டமாக நவீன தமிழ்க்கவிதைகளை அணுகி, நான்கு வரிக் கவிதையொன்றின் நுழைவாயில்களை யெல்லாம் அடைத்துவிட்டு, அதில் தனக்குக் கிடைத்த அரைகுறை அர்த்தத்தையே அதன் ஒற்றையர்த்தமாய் நிறுவி, அதை இறந்த, இருக்கும் கவிஞர்களுக்குக் காட்டும் அளப்பெரும் சலுகையாய் எண்ணும் மனப்போக்குடையவர்கள் என் கவிதைகளையும் கவிதைத் தொகுப்புகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள அனுமதியில்லை என்பதையும் தெளிவுபடுத்திவிடுகிறேன். இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளை நான் பிரசுரத்திற்கு அனுப்பி வைக்காத எந்த அச்சுப்பத்திரிகையும் நான் அவற்றை அவர்களுடைய பத்திரிகைகளுக்குப் பிர்சுரத்திற்காகாக அனுப்பிவைத்ததான தோற்றத்தை உருவாக்கும் விதமாய் அவற்றைத் தம்போக்கில், பிரசுரிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதில் இடம்பெறும் கவிதைகளில் பெரும்பாலானவை திண்ணை இணைய இதழிலும், சிலபதிவுகள்இணைய இதழிலும், ஒரு சில மலைகள். காம் இணைய இதழிலும் வெளியானவை. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கவிதை எழுதுவதிலும், வாசிப்பதிலும் கிடைக்கும் வலிநிவாரணம், காலாதீத வெளி, -வயது வாழ்க்கைத்தருணங்கள், கூடுவிட்டுக் கூடுபாயக் கிடைக்கும் ‘open sesameகள் - இவையெல் லாம்தான் ஒரு கவிக்குக் கிடைக்கும் உண்மையான சன்மானங்கள். கவிதை எழுதுவது ‘an end in itself’.
பின் ஏன் பிரசுரிக்கிறோம்? கவிதை என்னும் தனிமொழி சில வாசக மனங்களில் (உரை நிகழ்த்தாமல்) உரையாடலாகும் கொடுப்பினைக்காகவா? நம் கவிதைகளை நாமே வாசகராகப் படிக்கக் கிடைக்கும் நல்வினைக்காகவா? தெரியவில்லை. கவிதை வாசிப்பதிலும், எழுதுவதிலும் எழுதியவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடுவதிலும் உணரக்கிடைக்கும் நிறைவு மிகவும் உண்மையானது என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. எனவே வாசிக்கிறேன், எழுதுகிறேன், வெளியிடுகிறேன்.
தோழமையுடன்
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)
09.01.2019