Tuesday, March 11, 2025

கலைடாஸ்கோப் கவிதைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கலைடாஸ்கோப்  கவிதைகள் 

 ‘ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)

1. அவரவர் உலகங்கள்

"செவ்வக வடிவம் உலகமெனில்
நாம் சிறிய கோடுகளா? பெரிய கோடுகளா?
இணைக்கும் புள்ளிகளா? வரையும் எழுதுகோலா?
வெள்ளைத்தாளா? விழிகளா? பார்க்குந்திறனா ?
விரல்களா? வேறு ஏதாவதா?" என்று
இருவருக்கிடையேயான இணைபிரியா நெருக்கத்தை அடிக்கோடிட்டுக்காட்டவேண்டிக் கேட்டவளிடம்
"உலகம் உருண்டை" என்று மட்டுமே
அறிவாளியாய் சொன்னவனுக்கு
அதைக் கேட்டு அவள் ஏன்
அப்படி உடைந்துபோனாள்
என்று இன்னமும் புரியவில்லை.


2அஷ்டாவதானம்
அன்பை ஒரு கையால் எழுதியவாறே
மண்டையையொன்றைப் பிளக்க
மறுகையால் கோடரியைத் தேடிக்கொண்டிருக்க,
வாழ்வின் நிலையாமையை வாய் போதிக்க
வகையாய் சிக்க ஏதேனும் பெண் கிடைப்பாளா
என்று கண் அலைய,
சமூகத்துத் துர்வாடைகளுக்கெல்லாம் எதிர்ப்புகாட்டுவதாய் மூக்கு சுளித்து,
காதுகள் கவனமாய் ஊர்வம்பை உள்வாங்கியபடி.....


3. புதிர்விளையாட்டு
காயம்பட்ட ஒருவரை
ஸ்ட்ரெச்சரில் ஏந்தி மருத்துவமனைக்குக்
கொண்டுசெல்வதற்கும்
பாடையில் தூக்கி சுடுகாட்டிற்குக்
கொண்டுசெல்வதற்கும்
இடையே
குறைந்தபட்சம் ஆறு வித்தியாசங்களாவது
உண்டுதானே...?


4. ஆபத்தானவர்கள்
அவரவர் கோபுரத்துள் அமர்ந்தபடி
அக்கிரமக் கருத்துரைத்து
அமைதியிழக்கும் ஊருக்காகவும்
அடிபட்டுச் சாவும் சகவுயிர்களுக்காகவும்
கவனமாய்
’க்ளோசப்’ பில் கண் கலங்குபவர்கள்.




5. ஊருக்கு உபதேசம்?
நாவடக்கம்
வேண்டும்
நம்மெல்லோருக்கும்.

No comments:

Post a Comment